நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்கள்
நாதமுனிகள் அருளிச் செய்தது
பக்தாம்ருதம் விஸ்வஜநாநுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீஸடகோப வாங்மயம்
ஸஹஸ்ரஸா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம்த்ராவிடவேத ஸாகரம்.
ஈஸ்வர முனிவர் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும்,-அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே* தெளிந்து.
சொட்டை நம்பிகள் அருளிச் செய்தது
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன்,-தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
அனந்தாழ்வான் அருளிச் செய்தது
ஏய்ந்தபெருங் கீர்த்தி யிராமா னுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்,-ஆய்ந்தபெருஞ்
சீரார் சடகோபன் செந்தமிழ்வே தந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
பட்டர் அருளிச் செய்தது
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்,
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்,-ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தா யிராமா னுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித்-தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்கட்குச்,
சொல்லும் பொருளுந் தொகுத்துரைத்தான்,-நல்ல
மணவாள மாமுனிவன் மாறன் மறைக்குத்,
தணவாநூற் றந்தாதி தான்.
மன்னு புகழ்சேர் மணவாளன் மாமுனிவன்,
தன்னருளா லுட்பொருள்கள் தம்முடனே-சொன்ன,
திருவாய் மொழிநூற்றந் தாதியாந் தேனை,
ஒருவா தருந்துநெஞ்சே* உற்று.
திருவாய்மொழி
முதற் பத்து
1. உயர்வு
(இது கோயில் திருவாய்மொழி)
எம்பெருமான் திருவடிகளிலே நிச்சலுமடிமை செய்ய ஆழ்வார் தம் திருவுள்ளத்துக்கு அறிவுறுத்தல்
கலிவிருத்தம்
2791
உயர்வற வுயர்நல முடையவன் யவனவன்,
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்,
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்,
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே*
1
2792
மன்னக மலமற மலர்மிசை யெழுதரும்,
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்,
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்,
இனனில னெனனுயிர் மிகுநரை யிலனே.
2
2793
இலனது வுடையனி தெனநினை வரியவன்,
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்,
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த,அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.
3
2794
நாமவ னிவனுவன் அவளிவ ளுவளெவள்,
தாமவ ரிவருவர் அதுவிது வுதுவெது,
வீமவை யிவையுவை யவைநலந் தீங்கவை,
ஆமவை யாயவை யாய்நின்ற அவரே.
4
2795
வரவர் தமதம தறிவறி வகைவகை,
அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்,
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்,
அவரவர் விதிவழி யடையநின் றனரே.
5
2796
நின்றன ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்,
நின்றில ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்,
என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்,
என்றுமொ ரியல்வொடு நின்றவெந் திடரே.
6
2797
திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை,
படர்பொள் முழுவது மாயவை யவைதொறும்,
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்,
சுடர்மிகு சுருதியு ளிவையுண்ட சுரனே.
7
2798
சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்,
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்,
புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து,
அரனய னெனவுல கழித்தமைத் துளனே.
8
2799
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்,
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்,
உளனென விலனென விவைகுண முடைமையில்,
உளனிரு தகைமையோ டொழிவிலன் பரந்தே.
9
2800
பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்,
பரந்தஅண் டமிதென நிலவிசும் பொழிவற,
கரந்தசி லிடந்தொறும் இடந்தமிழ் பொருடொறும்,
கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே.
10
2801
கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை,
வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற,
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்,
நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே.#
11
நேரிசை வெண்பா
(*)உயர்வே பரன்படியை யுள்ளதெல்லாந் தான்கண்டு,
உயர்வேத நேர்கொண் டுரைத்து,-மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன்சொல்,
வேராக வேவிளையும் வீடு.#

(*) இந்தப் பாடலும், இதைப் போலவே ஒவ்வொரு திருவாய்மொழிப் பகுதியின் ஈற்றில் காணப்படும் பாடல்களும் திருவாய்மொழி நூற்றந்தாதியின் பாடல்களாகும். ஸ்ரீமணவாள மாமுனிகள் பாடிய இவ்வந்தாதிப் பாடல்கள் நாலாயிரத்தின் எண்ணிக்கையில் சேராது.
1

2. வீடுமின்
(இது கோயில் திருவாய்மொழி)
பக்தியுடன் எம்பெருமானையடைய பிறர்க்கறிவுறுத்தல்
வஞ்சித்துறை
2802
வீடுமின் முற்றவும்,-வீடுசெய்து, உம்முயிர்
வீடுடை யானிடை,-வீடு செய்ம்மினே.#
1
2803
மின்னின் நிலையில்,-னுணி ராக்கைகள்,
என்னு மிடத்து,இறை-உன்னுமின் நீரே.
2
2804
நீர்நும தென்றிவை,-வேர்முதல் மாய்த்து,இறை
சேர்மின் உயிர்க்கு,அத-னேர்நிறை யில்லே.
3
2805
இல்லது முள்ளதும்,-அல்ல தவனுரு,
எல்லையி லந்நலம்,-புல்குபற் றற்றே.
4
2806
அற்றது பற்றெனில்,-உற்றது வீடுயிர்,
செற்றது மன்னுறில்,-அற்றிறை பற்றே.
5
2807
பற்றில னீசனும்,-முற்றவும் நின்றனன்,
பற்றிலை யாய்.அவன்-முற்றி லடங்கே.
6
2808
அடங்கெழில் சம்பத்து,-அடங்கக்கண்டு, ஈசன்
அடங்கெழி லஃதென்று,-அடங்குக வுள்ளே.
7
2809
உள்ளமு ரைசெயல்,-உள்ளவிம் மூன்றையும்,
உள்ளிக் கெடுத்து,இறை-யுள்ளிலொ டுங்கே.
8
2810
ஒடுங்க அவன்கண்,-ஒடுங்கலு மெல்லாம்,
விடும்பின்னு மாக்கை,-விடும்பொழு தெண்ணே.
9
2811
எண்பெருக் கந்நலத்து,-ஒண்பொரு ளீறில,
வண்புகழ் நாரணன்,-திண்கழல் சேரே.#
10
2812
சேர்த்தடத், தென்குரு-கூர்ச்சட கோபன்சொல்,
சீர்த்தொடை யாயிரத்து,-ஓர்த்தவிப் பத்தே.#
11
நேரிசை வெண்பா
வீடுசெய்து மற்றெவையும் மிக்கபுகழ் நாரணன்றாள்,
நாடுநலத் தாலடைய நன்குரைக்கும்,-நீடுபுகழ்
வண்குருகூர் மாறனிந்த மாநிலத்தோர் தாம்வாழப்,
பண்புடனே பாடியருள் பத்து.#
2

3. பத்துடை
எம்பெருமானது எளிமையை அருளிச் செய்தல்
கலிநிலைத்துறை
2813
பத்துடை யடியவர்க் கெளியவன்
    பிறர்களுக் கரிய
வித்தகன், மலர்மகள் விரும்பும்நம்
    அரும்பெற லடிகள்,
மத்துறு கடைவெண்ணெய் களவினில்
    உரவிடை யாப்புண்டு,
எத்திறம் உரலினோ டிணைந்திருந்
    தேங்கிய எளிவே*#
1
2814
எளிவரு மியல்வினன் நிலைவரம்
    பிலபல பிறப்பாய்,
ஒளிவரு முழுநலம் முதலில
    கேடில வீடாம்,
தெளிதரு நிலைமைய தொழிவிலன்
    முழுவது மிறையோன்,
அளிவரு மருளினோ டகத்தன்
    புறத்தன னமைந்தே.
2
2815
அமைவுடை யறநெறி முழுவது
    முயர்வற வுயர்ந்த,
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை
    யறநில மதுவாம்,
அமைவுடை யமரரும் யாவையும்
    யாவரும் தானாம்,
அமைவுடை நாரணன் மாயையை
    யறிபவர் யாரே?
3
2816
யாருமோர் நிலைமைய னெனவறி
    வரியவெம் பெருமான்,
யாருமோர் நிலைமைய னெனவறி
    வெளியவெம் பெருமான்,
பேருமோ ராயிரம் பிறபல
    வுடையவெம் பெருமான்,
பேருமோ ருருவமு முளதில்லை
    யலதில்லை பிணக்கே.
4
2817
பிணக்கற அறுவகைச் சமயமும்
    நெறியுள்ளி யுரைத்த,
கணக்கறு நலத்தனன் அந்தமி
    லாதியம் பகவன்,
வணக்குடைத் தவநெறி வழிநின்று
    புறநெறி களைகட்டு,
உணக்குமின் பசையற அவனுடை
    யுணர்வுகொண் டுணர்ந்தே.
5
2818
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு
    வியந்தவிந் நிலைமை,
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை
    யுணர்வரி துயிர்காள்,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய
    னரனென்னு மிவரை,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின்
    மனப்பட்ட தொன்றே.
6
2819
ஒன்றெனப் பலவென் அறிவரும்
    வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன்,
    அரனென்னு மிவரை,
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும்
    மிருபசை யறுத்து,
நன்றென நலஞ்செய்வ தவனிடை
    நம்முடை நாளே.
7
2820
நாளு நின்றடு நமபழ
    மையங்கொடு வினையுடனே
மாளும்,ஓர் குறைவில்லை மனனக
    மலமறக் கழுவி,
நாளுநந் திருவுடை யடிகள்தம்
    நலங்கழல் வணங்கி,
மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு
    மாள்வது வலமே.
8
2821
வலத்தனன் திரிபுர மெரித்தவ
    (*)னிடம்பெறுத் துந்தித்
தலத்து,எழு திசைமுகன் படைத்தநல்
    லுலகமும் தானும்
புலப்பட, பின்னும்தன் உலகத்தி
    லகத்தனன் தானே,
சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள
    இவையவன் துயக்கே.

(*) னிடம் பெறத் துந்தி என்றும் பாடம்.
9
2822
துயக்கறு மதியில்நல் ஞானத்துள்
    அமரரைத் துயக்கும்,
மயக்குடை மாயைகள் வானிலும்
    பெரியன வல்லன்,
புயற்கரு நிறத்தனன் பெருநிலங்
    கடந்தநல் லடிப்போது,
அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன்
    வணங்குவ னமர்ந்தே.
10
2823
அமரர்கள் தொழுதெழ அலைகடல்
    கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சட
    கோபன்குற் றேவல்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு
    ளிவைபத்தும் வல்லார்,
அமரரொ டுயர்விற்சென் றறுவர்தம்
    பிறவியஞ் சிறையே.#
11
நேரிசை வெண்பா
'பத்துடையோர்க் கென்றும் பரனெளிய னாம்பிறப்பால்,
முத்திதரு மாநிலத்தீர்* மூண்டவன்பால்,-பத்திசெயும்'
என்றுரைத்த மாறன்றன் இன்சொல்லாற் போம், நெடுகச்
சென்றபிறப் பாமஞ் சிறை.
3

4. அஞ்சிறை
எம்பெருமானது பிழைபொறுத்தலைப் பற்றாசாகக் கொண்டு தலைமகள் பறவை முதலியவற்றைத் தூதுசெல்ல வேண்டுதல்
கொச்சகக் கலிப்பா
2824
அஞ்சிறைய மடநாராய்*
    அளியத்தாய், நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய்
    ஆவாவென் றெனக்கருளி,
வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென்
    விடுதூதாய்ச் சென்றக்கால்,
வன்சிறையில் அவன்வைக்கில்
    வைப்புண்டா லென்செய்யுமோ?#
1
2825
என்செய்ய தாமரைக்கண்
    பெருமானார்க் கென்தூதாய்,
என்செய்யு முரைத்தக்கால்
    இனக்குயில்காள்* நீரலிரே?,
முன்செய்த முழுவினையால்
    திருவடிக்கீழ்க் குற்றேவல்,
முன்செய்ய முயலாதேன்
    அகல்வதுவோ விதியினமே?
2
2826
விதியினால் பெடைமணக்கும்
    மென்னடைய அன்னங்காள்,
மதியினால் குறள்மாணாய்
    உலகிரந்த கள்வற்கு,
'மதியிலேன் வல்வினையே
    மாளாதோ வென்று,ஒருத்தி
மதியெல்லா முள்கலங்கி
    மயங்குமால்' என்னீரே?
3
2827
என்நீர்மை கண்டிரங்கி
    யிதுதகா தென்னாத,
என்நீல முகில்வண்ணற்
    கென்சொலியான் சொல்லுகெனோ
நன்னீர்மை யினியவர்கண்
    தங்காதென் றொருவாய்ச்சொல்
நன்னீல மகன்றில்காள்*
    நல்குதிரோ நல்கீரோ?
4
2828
நல்கித்தான் காத்தளிக்கும்
    பொழிலேழும் வினையேற்கே,
நல்கத்தா னாகாதோ?
    நாரணனைக் கண்டக்கால்,
மல்குநீர்ப் புனற்படப்பை
    இரைதேர்வண் சிறுகுருகே,
மல்குநீர்க் கண்ணேற்கோர்
    வாசகங்கொண் டருளாயே.
5
2829
'அருளாத நீரருளி
    யவராவி துவராமுன்,
அருளாழிப் புட்கடவீர்
    அவர்வீதி யொருநாள்' என்று,
அருளாழி யம்மானைக்
    கண்டக்கா லிதுசொல்லி
யருள்,ஆழி வரிவண்டே*
    யாமுமென் பிழைத்தோமே?
6
2830
என்பிழைகோப் பதுபோலப்
    பனிவாடை யீர்கின்ற,
என்பிழையே நினைந்தருளி
    யருளாத திருமாலார்க்கு,
'என்பிழைத்தாள் திருவடியின்
    தகவினுக்கெ'ன் றொருவாய்ச்சொல்,
என்பிழைக்கு மிளங்கிளியே*
    யான்வளர்த்த நீயலையே?
7
2831
நீயலையே சிறுபூவாய்*
    நெடுமாலார்க் கென்தூதாய்,
நோயெனது நுவலென்ன
    நுவலாதே யிருந்தொழிந்தாய்?,
சாயலொடு மணிமாமை
    தளர்ந்தேன்நான், இனியுனது
வாயலகில் இன்னடிசில்
    வைப்பாரை நாடாயே.
8
2832
நாடாத மலர்நாடி
    நாடோறும் நாரணன்றன்,
வாடாத மலரடிக்கீழ்
    வைக்கவே வகுக்கின்று,
வீடாடி வீற்றிருத்தல்
    வினையற்ற தென்செய்வதோ?,
ஊடாடு பனிவாடாய்*
    உரைத்தீரா யெனதுடலே.
9
2833
உடலாழிப் பிறப்புவீ
    டுயிர்முதலா முற்றுமாய்,
கடலாழி நீர்தோற்றி
    யதனுள்ளே கண்வளரும்,
அடலாழி யம்மானைக்
    கண்டக்கா லிதுசொல்லி,
விடலாழி மடநெஞ்சே*
    வினையோமொன் றாமளவே.
10
2834
அளவியன்ற ஏழுலகத்
    தவர்பெருமான் கண்ணனை,
வளவயல்சூழ் வண்குருகூர்ச்
    சடகோபன் வாய்ந்துரைத்த,
அளவியன்ற அந்தாதி
    யாயிரத்துள் இப்பத்தின்,
வளவுரையால் பெறலாகும்
    வானோங்கு பெருவளமே.#
11
நேரிசை வெண்பா
அஞ்சிறைய புட்கடமை 'ஆழியா னுக்கு,நீர்
என்செயலைச் சொல்லும்' எனவிரந்து,-விஞ்ச
நலங்கியதும் மாறனிங்கே நாயகனைத் தேடி,
மலங்கியதும் பத்தி வளம்.
4

5. வளவேழ்
ஆழ்வார் எம்பெருமானது மேன்மையைக் கண்டு அகல, எம்பெருமான் தன்னுடைய நல்லியல்வாலே ஆழ்வாரைச் சேர்த்துக்கொள்ளுதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2835
வளவே ழுலகின் முதலாய்
    வானோ ரிறையே, அருவினையேன்
'களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட
    கள்வா*' என்பன் பின்னையும்,
'தளவேழ் முறுவல் பின்னைக்காய்
    வல்லா னாயர் தலைவனாய்,
இளவே றேழும் தழுவிய
    எந்தாய்*' என்பன் நினைந்துநைந்தே.#
1
2836
நினைந்து நைந்துள் கரைந்துருகி
    இமையோர் பலரும் முனிவரும்,
புனைந்த கண்ணி நீர்சாந்தம்
    புகையோ டேந்தி வணங்கினால்,
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
    வித்தாய் முதலில் சிதையாமே,
மனஞ்செய் ஞானத் துன்பெருமை
    மாசூ ணாதோ மாயோனே*
2
2837
மாயோ னிகளாய் நடைகற்ற
    வானோர் பலரும் முனிவரும்,
'நீயோ னிகளைப் படை' என்று
    நிறைநான் முகனைப் படைத்தவன்,
சேயோ னெல்லா அறிவுக்கும்
    திசைக ளெல்லாம் திருவடியால்
தாயோன், எல்லா வெவ்வுயிர்க்கும்
    தாயோன் தானோ ருருவனே.
3
2838
தானோ ருருவே தனிவித்தாய்த்
    தன்னில் மூவர் முதலாய,
வானோர் பலரும் முனிவரும்
    மற்றும் மற்றும் முற்றுமாய்,
தானோர் பெருநீர் தன்னுள்ளே
    தோற்றி யதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன்
    வைகுந் தன்எம் பெருமானே.
4
2839
மானேய் நோக்கி மடவாளை
    மார்வில் கொண்டாய்* மாதவா,
கூனே சிதைய வுண்டைவில்
    நிறத்தில் தெறித்தாய்* கோவிந்தா,
வானோர் சோதி மண்வண்ணா*
    மதுசூ தா*நீ யருளாய்,உன்
தேனே மலரும் திருப்பாதம்
    சேரு மாறு வினையேனே.
5
2840
வினையேன் வினைதீர் மருந்தானாய்*
    விண்ணோர் தலைவா* கேசவா,
மனைசே ராயர் குலமுதலே*
    மாமா யன்னே* மாதவா,
சினையேய் தழைய மராமரங்கள்
    ஏழும் எய்தாய் சிரீதரா,
இனையா யினைய பெயரினாய்
    என்று நைவன் அடியேனே.
6
2841
அடியேன் சிறிய ஞானத்தன்
    அறித லார்க்கு மரியானை,
கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி
    புனைந்தான் றன்னைக் கண்ணனை,
செடியார் ஆக்கை யடியாரைச்
    சேர்தல் தீர்க்கும் திருமாலை,
அடியேன் காண்பான் அலற்றுவன்
    இதனில் மிக்கோர் அயர்வுண்டே?
7
2842
உண்டா யுலகேழ் முன்னமே
    உமிழ்ந்து மாயை யால்புக்கு,
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்
    உவலை யாக்கை நிலையெய்தி,
மண்டான் சோர்ந்த துண்டேலும்
    மனிசர்க் காகும் பீர்,சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய
    நெய்யூண் மருந்தோ மாயோனே*
8
2843
மாயோம் தீய அலவலைப்
    பெருமா வஞ்சப் பேய்வீய,
தூய குழவி யாய்விடப்பால்
    அமுதா அமுது செய்திட்ட
மாயன், வானோர் தனித்தலைவன்
    மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்
தாயோன், தம்மா னென்னம்மான்
    அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே.
9
2844
சார்ந்த இருவல் வினகைளும்
    சரித்து மாயப் பற்றறுத்து,
தீர்ந்து தன்பால் மனம்வைக்கத்
    திருத்தி வீடு திருத்துவான்,
ஆர்ந்த ஞானச் சுடராகி
    அகலம் கீழ்மேல் அளவிறந்து,
நேர்ந்த வுருவாய் அருவாகும்
    இவற்றி னுயிராம் நெடுமாலே*
10
2845
'மாலே* மாயப் பெருமானே*
    மாமா யனே*' என்றென்று,
மாலே யேறி மாலருளால்
    மன்னு குருகூர்ச் சடகோபன்,
பாலேய் தமிழ ரிசைகாரர்
    பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே, பட்ட இவைபத்தும்
    வல்லார்க் கில்லை பரிவதே.#
11
நேரிசை வெண்பா
வளமிக்க மால்பெருமை மன்னுயிரின் றன்மை
உளமுற்றங் கூடுருவ வோர்ந்து,-தளர்வுற்று
நீங்கநின் மாறனைமால் நீடிலகு சீலத்தால்,
பாங்குடனே சேர்த்தான் பரிந்து.
5

மேலே செல்க

6. பரிவதில்
எம்பெருமான் எளிதாகத் தொழத்தக்கவன் என்று உபதேசித்தல்
வஞ்சி விருத்தம்
2846
பரிவதி லீசனைப் பாடி,
விரிவது மேவ லுறுவீர்,
பிரிவகை யின்றிநன் னீர்தூய்,
புரிவது வும்புகை பூவே.#
1
2847
மதுவார் தண்ணந் துழாயான்,
முதுவே தமுதல் வனுக்கு,
எதுவே தென்பணி என்னா,
ததுவே யாட்செய்யு மீடே.
2
2848
ஈடு மெடுப்புமி லீசன்,
மாடுவி டாதென் மனனே,
பாடுமென் நாவலன் பாடல்,
ஆடுமெ னங்கம ணங்கே.
3
2849
அணங்கென வாடுமெ னங்கம்,
வணங்கி வழிபடு மீசன்,
பிணங்கி யமரர் பிதற்றும்,
குணங்கெழு கொள்கையி னானே.
4
2850
கொள்கைகொ ளாமையி லாதான்,
எள்கலி ராகமி லாதான்,
விள்கைவிள் ளாமைவி ரும்பி,
உள்கலந் தார்க்கோ ரமுதே.
5
2851
அமுதம் அமரர்கட் கீந்த,
நிமிர்சுட ராழி நெடுமால்,
அமுதிலு மாற்ற இனியன்,
நிமிர்திரை நீள்கட லானே.
6
2852
நீள்கடல் சூழிலங் கைக்கோன்,
தோள்கள் தலைதுணி செய்தான்,
தாள்கள் தலையில் வணங்கி,
நாள்கள் தலைக்க ழிமினே.
7
2853
கழிமின்தொண் டீர்கள் கழித்துத்
தொழுமின், அவனைத் தொழுதால்,
வழிநின்ற வல்வினை மாள்வித்து,
அழிவின்றி யாக்கம் தருமே.
8
2854
தரும வரும்பய னாய,
திருமக ளார்தனிக் கேள்வர்,
பெருமை யுடைய பிரானார்,
இருமை வினைகடி வாரே.
9
2855
கடிவார் தீய வினைகள்,
நொடியா ருமள வைக்கண்,
கொடியா அடுபுள் ளுயர்த்த,
வடிவார் மாதவ னாரே.
10
2856
மாதவன் பால்சட கோபன்,
தீதவ மின்றி யுரைத்த,
ஏதமி லாயிரத் திப்பத்து,
ஓதவல் லார்பிற வாரே.#
11
நேரிசை வெண்பா
பரிவதிலீ சன்படியைப் பண்புடனே பேசி,
அரியனலன் ஆரா தனைக்கென்று,-உரிமையுடன்
ஓதியருள் மாறன் ஒழிவித்தா னிவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு.
6

7. பிறவித்துயர்
இறைவனை அடைவது பேரின்பமென்று அருளிச்செய்தல்
கலி விருத்தம்
2857
பிறவித் துயரற ஞானத்துள் நின்று,
துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்,
அறவனை யாழிப் படையந் தணனை,
மறவியை யின்றி மனத்துவைப் பாரே.#
1
2858
வைப்பாம் மருந்தாம் அடியரை, வல்வினைத்
துப்பாம் புலனைந்தும் துஞ்சக் கொடானவன்,
எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,
அப்பா லவனெங்க ளாயர் கொழுந்தே.
2
2859
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை,
தூய அமுதைப் பருகிப் பருகி,என்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே.
3
2860
மயர்வற என்மனத்தே மன்னினான் றன்னை,
உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை,
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை, என்
(*)இயைவினை யென்சொல்லி யான்விடு வேனோ?

(*) இசைவினை என்றும் பாடம்.
4
2861
விடுவே னோவென் விளக்கைஎன் னாவியை,
நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதனை,
தொடுவே செய்திள ஆய்ச்சியர் கண்ணினுள்,
விடவே செய்து விழிக்கும் பிரானையே?
5
2862
பிரான்பெ ருநிலங் கீண்டவன், பின்னும்
விராய்ம லர்த்துழாய் வேய்ந்த முடியன்,
மராமர மெய்த மாயவன். என்னுள்
இரானெனில் பின்னை யானொட்டு வேனோ?
6
2863
யானொட்டி யென்னுள் இருத்துவ மென்றிலன்,
தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து,
ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து,இயல்
வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே?
7
2864
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்
தன்னை, அகல்விக்கத் தானும்கில் லானினி,
பின்னை நெடும்பணைத் தோள்மிகழ் பீடுடை,
முன்னை யமரர் முழுமுத லானே.
8
2865
அமரர் முழுமுத லாகிய ஆதியை,
அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,
அமர அழும்பத் துழாவியென் னாவி,
அமரத் தழுவிற் றினிய கலுமோ?
9
2866
அகலில் அகலும் அணு[கில் அணுகும்,
புகலு மரியன் பொருவல்ல னெம்மான்,
நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்,
பகலு மிரவும் படிந்து குடைந்தே.
10
2867
குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,
அடைந்த தென்குரு கூர்ச்சட கோபன்,
மிடைந்த சொல்தொடை யாயிரத் திப்பத்து,
உடைந்து நோய்களை யோடு விக்குமே.#
11
நேரிசை வெண்பா
பிறவியற்று நீள்விசும்பிற் பேரின்ப முய்க்கும்
திறமளிக்குஞ் சீலத் திருமால்,-அறவினியன்
பற்றுமவர்க் கென்று பகர்மாறன் பாதமே,
உற்றதுணை யென்றுளமே* ஓடு.
7

8. ஓடும்புள்
இறைவன் யாவரிடத்திலும் வாசியில்லாமல் ஒரே தன்மையனென்று அருளிச்செய்தல்
வஞ்சித்துறை
2868
ஓடும் புள்ளேறி,-சூடும் தண்டுழாய்,
நீடு நின்றவை,-ஆடும் அம்மானே.#
1
2869
அம்மா னாய்ப்பின்னும்,-எம்மாண் புமானான்,
வெம்மா வாய்கீண்ட,-செம்மா கண்ணனே.
2
2870
கண்ணா வானென்றும்,-மண்ணோர் விண்ணோர்க்கு,
தண்ணார் வேங்கட,-விண்ணோர் வெற்பனே.
3
2871
வெற்பை யொன்றெடுத்து,-ஒற்க மின்றியே,
நிற்கும் அம்மான்சீர்,-கற்பன் வைகலே.
4
2872
வைக லும்வெண்ணெய்,-கைக லந்துண்டான்,
பொய்க லவாது,என்-மெய்க லந்தானே.
5
2873
கலந்தென் னாவி,-நலங்கொள் நாதன்,
புலன்கொள் மாணாய்,-நிலம்கொண் டானே.
6
2874
கொண்டா னேழ்விடை,-உண்டா னேழ்வையம்,
தண்டா மஞ்செய்து,என்,-எண்டா னானானே.
7
2875
ஆனா னானாயன்,-மீனோ டேனமும்,
தானா னானென்னில்,-தானா யசங்கே.
8
2876
சங்கு சக்கரம்,-அங்கை யில்கொண்டான்,
எங்கும் தானாய. நங்கள் நாதனே.
9
2877
நாதன் ஞாலங்கொள்-பாதன், என்னம்மான்,
ஓதம் போல்கிளர்,-வேத நீரனே.
10
2878
நீர்புரை வண்ணன்,-சீர்சட கோபன்,
நேர்த லாயிரத்து,-ஓர்த லிவையே.#
11
நேரிசை வெண்பா
ஓடுமனஞ் செய்கையுரை யொன்றினில்லா தாருடனே,
கூடிநெடு மாலடிமை கொள்ளுநிலை,-நாடறிய
ஓர்ந்தவன்றன் செம்மை யுரைசெய்த மாறனென,
ஏய்ந்துநின்றும் வாழ்வாம் இவை.
8

9. இவையும் அவையும்
எம்பெருமான் தம்மோடு கலந்து களித்த நிகழ்வை ஆழ்வார் அருளிச்செய்தல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
2879
இவையும் அவையும் உவையும்
    இவரும் அவரும் உவரும்,
அவையும் யவரும்தன் னுள்ளே
    ஆகியும் ஆக்கியும் காக்கும்,
அவையுள் தனிமுத லெம்மான்
    கண்ண பிரானென் னமுதம்,
சுவையன் திருவின் மணாளன்
    என்னுடைச் சூழலு ளானே.#
1
2880
சூழல் பலபல வல்லான்
    தொல்லையங் காலத் துலகை
கேழலொன் றாகியி டந்த
    கேசவ னென்னுடை யம்மான்,
வேழ மருப்பையொ சித்தான்
    விண்ணவர்க் கெண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான்
    அவனென் னருகலி லானே.
2
2881
அருகலி லாய பெருஞ்சீர்
    அமரர்கள் ஆதி முதல்வன்,
கருகிய நீலநன் மேனி
    வண்ணன்செந் தாமரைக் கண்ணன்,
பொருசிறைப் புள்ளுவந் தேறும்
    பூமக ளார்தனிக் கேள்வன்,
ஒருகதி யின்சுவை தந்திட்
    டொழிவில னென்னோ டுடனே.
3
2882
உடனமர் காதல் மகளிர்
    திருமகள் மண்மகள் ஆயர்
மடமகள், என்றிவர் மூவர்
    ஆளும் உலகமும் மூன்றே,
உடனவை யொக்க விழுங்கி
    ஆலிலைச் சேர்ந்தவ னெம்மான்,
கடல்மலி மாயப் பெருமான்
    கண்ணனென் ஒக்கலை யானே.
4
2883
ஒக்கலை வைத்து முலைப்பால்
    உண்ணென்று தந்திட வாங்கி,
செக்கஞ் செகவன் றவள்பால்
    உயிர்செக வுண்ட பெருமான்,
நக்க பிடிரானோ டயனும்
    இந்திர னும்முத லாக,
ஒக்கவும் தோற்றிய ஈசன்
    மாயனென் னெஞ்சினு ளானே.
5
2884
மாயனென் னெஞ்சி னுள்ளான்
    மற்றும் யவர்க்கும் அதுவே,
காயமும் சீவனும் தானே
    காலு மெரியும் அவனே,
சேயன் அணியன் யவர்க்கும்
    சிந்தைக்கும் கோசர மல்லன்,
தூயன் துயக்கன் மயக்கன்
    என்னுடைத் தோளிணை யானே.
6
2885
தோளிணை மேலும்நன் மார்பின்
    மேலும் சுடர்முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த
    தண்ணந் துழாயுடை யம்மான்,
கேளிணை யொன்றுமி லாதான்
    கிளரும் சுடரொளி மூர்த்தி,
நாளணைந் தொன்று மகலான்,
    என்னுடை நாவினு ளானே.
7
2886
நாவினுள் நின்று மலரும்
    ஞானக் கலைகளுக் கெல்லாம்,
ஆவியும் ஆக்கையும் தானே
    அழிப்போ டளிப்பவன் தானே,
பூவியல் நால்தடந் தோளன்
    பொருபடை யாழிசங் கேந்தும்,
காவிநன் மேனிக் கமலக்
    கண்ணனென் கண்ணினு ளானே.
8
2887
கமலக் கண்ணனென் கண்ணினுள்ளான்
    காண்பன் அவன்கண்க ளாலே,
அமலங்க ளாக விழிக்கும்
    ஐம்புல னுமவன் மூர்த்தி,
கமலத் தயன்நம்பி தன்னைக்
    கண்ணுத லானொடும் தோற்றி,
அமலத் தெய்வத்தோ டுலகம்
    ஆக்கியென் நெற்றியு ளானே.
9
2888
நெற்றியுள் நின்றென்னை யாளும்
    நிரைமலர்ப் பாதங்கள் சூடி,
கற்றைத் துழாய்முடிக் கோலக்
    கண்ண பிரானைத் தொழுவார்,
ஒற்றைப் பிறையணிந் தானும்
    நான்முக னும்இந் திரனும்,
மற்றை யமரரு மெல்லாம்
    வந்தென துச்சியு ளானே.
10
2889
உச்சியுள் ளேநிற்கும் தேவ
    தேவற்குக் கண்ண பிராற்கு,
இச்சையுள் செல்ல வுணர்த்தி
    வண்குரு கூர்ச்சட கோபன்,
இச்சொன்ன ஆயி ரத்துள்
    இவையுமோர் பத்தெம்பி ராற்கு,
நிச்சலும் விண்ணப்பம் செய்ய
    நீள்கழல் சென்னி பொருமே.#
11
நேரிசை வெண்பா
இவையறிந்தோர் தம்மளவி லீசனுவந் தாற்ற
அவயவங்க டோறு மணையும்-சுவையதனைப்
பெற்றார்வத் தால்மாறன் பேசினசொற் பேசமால்,
பொற்றாள்நஞ் சென்னி பொரும்.
9

10. பொருமாநீள்படை
இறைவனின் மாற்றுதவியற்ற உதவியை அருளிச்செய்தல்
கலி விருத்தம்
2890
பொருமா நீள்படை யாழிசங் கத்தொடு,
திருமா நீள்கழல் ஏழுல கும்தொழ,
ஒருமா ணிக்குற ளாகி நிமிர்ந்த.அக்
கருமா ணிக்கமென் கண்ணுள தாகுமே.#
1
2891
கண்ணுள் ளேநிற்கும் காதன்மை யால்தொழில்
எண்ணி லும்வரும் என்னினி வேண்டுவம்,
மண்ணும் நீரு மெரியும்நல் வாயுவும்,
விண்ணு மாய்விரி யுமெம்பி ரானையே?
2
2892
எம்பி ரானையெந் தைதந்தை தந்தைக்கும்
தம்பி ரானை,தண் டாமரைக் கண்ணனை,
கொம்ப ராவுநுண் ணேரிடை மார்வனை,
எம்பி ரானைத்தொ ழாய்மட நெஞ்சமே*
3
2893
நெஞ்ச மே*நல்லை நல்லை*உன் னைப்பெற்றால்
என்செய் யோம்?,இனி யென்ன குறைவினம்?,
மைந்த னைமல ராள்மண வாளனை,
துஞ்சும் போதும் விடாது தொடர்கண்டாய்.
4
2894
கண்டாயே நெஞ்சே* கருமங்கள் வாய்க்கின்று,ஓர்
எண்டானு மின்றியே வந்தி யலுமாறு
உண்டா னையுல கேழுமோர் மூவடி,
கொண்டா னை,கண்டு கொண்டனை நீயுமே.
5
2895
நீயும் நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,
நோயும் சார்கொடான் நெஞ்சமே* சொன்னேன்,
தாயும் தந்தையு மாயிவ் வுலகினில்
வாயு மீசன் மணிவண்ண னெந்தையே.
6
2896
எந்தை யேயென்றும் எம்பெருமா னென்றும்,
சிந்தை யுள்வைப்பன் சொல்லுவன் பாவியேன்,
எந்தை யெம்பெரு மானென்று வானவர்,
சிந்தை யுள்வைத்துச் சொல்லும்செல் வனையே.
7
2897
செல்வ நாரணன் என்றசொல் கேட்டலும்,
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே,
அல்லு நன்பக லுமிடை வீடின்றி,
நல்கி, என்னை விடான்நம்பி நம்பியே.
8
2898
நம்பி யைத்தென் குறுங்குடி நின்ற,அச்
செம்பொ னேதிக ழும்திரு மூர்த்தியை,
உம்பர் வானவ ராதியஞ் சோதியை,
எம்பி ரானையென் சொல்லி மறப்பனோ*#
9
2899
மறப்பும் ஞானமும் நானென் றுணர்ந்திலன்,
மறக்கு மென்றுசெந் தாமரைக் கண்ணொடு,
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,
மறப்ப னேவினி யானென் மணியையே?
10
2900
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை, தென்குரு கூர்ச்சட கோபன்,சொல்
பணிசெ யாயிரத் துள்ளிவை பத்துடன்,
தணிவி லர்கற்ப தேல்கல்வி வாயுமே.#
11
நேரிசை வெண்பா
பொருமாழி சங்குடையோன், பூதலத்தே வந்து,
தருமாறோ ரேதுவறத் தன்னை,-திரமாகப்
பார்த்துரைசெய் மாறன் பதம்பணிக என்சென்னி,
வாழ்த்திடுக என்னுடை வாய்.
10
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

இரண்டாம் பத்து
1. வாயுந்திரை
எம்பெருமான் மறையநிற்க, ஆழ்வார் ஒரு பிராட்டி நிலையையடைந்து பறவைகளும், வாடை போன்றவையும் தம்மோடிணைந்து துன்புறுவதாக எண்ணி வருந்துதல்
தரவு கொச்சகக் கலிப்பா
2901
வாயுந் திரையுகளும் கானல் மடநாராய்,
ஆயும் அமருலகும் துஞ்சிலும்நீ துஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூர எம்மேபோல்,
நீயும் திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே?#
1
2902
கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே?
2
2903
காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்,
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்ற துற்றாயோ? வாழி கனைகடலே*
3
2904
கடலும் மலையும் விசும்பும் துழாய்எம்போல்,
சுடர்கொ ளிராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய்,
அடல்கொள் படையாழி அம்மானைக் காண்பான்நீ,
உடலம்நோ யுற்றாயோ வூழிதோ றூழியே?
4
2905
ஊழிதோ றூழி யுலகுக்கு நீர்கொண்டு,
தோழியரும் யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற,
வாழிய வானமே* நீயும் மதுசூதன்,
பாழிமையிற் பட்டவன்கட் பாசத்தால் நைவாயே?
5
2906
நைவாய எம்மேபோல் நாண்மதியே* நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்து தேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப் பெருமானார்,
மெய்வாச கம்கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே?
6
2907
தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு,எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீநடுவே,
வேற்றோர் வகையில் கொடிதா யெனையூழி,
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனையிருளே*
7
2908
இருளின் திணிவண்ணம் மாநீர்க் கழியே*போய்,
மருளுற் றிராப்பகல் துஞ்சிலும்நீ துஞ்சாயால்,
உருளும் சகடம் உதைத்த பெருமானார்,
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?
8
2909
நொந்தாராக் காதல்நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த,
நந்தா விளக்கமே* நீயும் அளியத்தாய்,
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவா யெம்பெருமான்
அந்தாமத் தண்டுழாய் ஆசையால் வேவாயே?
9
2910
வேவாரா வேட்கைநோய் மெல்லாவி யுள்ளுலர்த்த,
ஓவாதி ராப்பகல் உன்பாலே வீழ்த்தொழிந்தாய்,
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த,
மூவா முதல்வா* இனியெம்மைச் சோரேலே.
10
2911
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே,
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்,
ஓரா யிரம்சொன்ன அவற்று ளிவைபத்தும்,
சோரார் விடார்கண்டீர் வைகுந்தம் திண்ணெனவே.#
11
நேரிசை வெண்பா
வாயுந் திருமால் மறையநிற்க, ஆற்றாமை
போய்விஞ்சி மிக்க புலம்புதலாய்,-ஆய
அறியாத வற்றோ டணைந்தழுத மாறன்,
செறிவாரை நோக்குந் திணிந்து.
11

2. திண்ணன் வீடு
எம்பெருமானுடைய மேன்மையை அவன் தோற்றங்களிலே பிறர்க்குணர்த்தல்
கலி விருத்தம்
2912
திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்,
எண்ணின் மீதியன் எம்பெரு மாயன்,
மண்ணும் விண்ணுமெல் லாமுட னுண்ட,நங்
கண்ணன் கண்ணல்ல தில்லையோர் கண்ணே.#
1
2913
ஏபா வம்*பர மே*ஏ ழுலகும்,
ஈபா வஞ்செய் தருளா லளிப்பாரார்,
மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்,
கோபால கோளரி யேறன் அன்றியே?
2
2914
ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை,
வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து,
மேல்தன்னை மீதிட நிமிர்ந்துமண் கொண்ட,
மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?
3
2915
தேவு மெப்பொரு ளும்ப டைக்க,
பூவில் நான்முக னைப்ப டைத்த,
தேவ னெம்பெரு மானுக் கல்லால்,
பூவும் பூச னையும் தகுமே?
4
2916
தகும்சீர்த் தன்தனி முதலி னுள்ளே,
மிகும்தே வும்எப் பொருளும் படைக்க,
தகும்கோ லத்தா மரைக்கண்ண னெம்மான்,
மிகும்சோ திமேல றிவார் யவரே?
5
2917
யவரும் யாவையு மெல்லாப் பொருளும்,
கவர்வின்றித் தன்னு ளொடுங்க நின்ற,
பவர்கொள் ஞானவெள் ளச்சுடர் மூர்த்தி,
அவரெம் ஆழியம் பள்ளி யாரே.
6
2918
பள்ளி யாலிலை யேழுல கும்கொள்ளும்,
வள்ளல் வல்வ யிற்றுப் பெருமான்,
உள்ளு ளாரறி வார்அ வன்றன்,
கள்ள மாய மனக்க ருத்தே?
7
2919
கருத்தில் தேவு மெல்லாப் பொருளும்,
வருத்தித்த மாயப் பிரானையன்றி, ஆரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும், தம்முள்
இருத்திக் காக்கு மியல்வி னாரே?
8
2920
காக்கு மியல்வினன் கண்ண பெருமான்,
சேர்க்கை செய்துதன் னுந்தி யுள்ளே,
வாய்த்த திசைமுக னிந்திரன் வானவர்,
ஆக்கி னான்தெய் வவுல குகளே.
9
2921
'கள்வா* எம்மையு மேழுல கும்,நின்
னுள்ளே தோற்றிய இறைவா*' என்று,
வெள்ளேறன் நான்முக னிந்திரன் வானவர்,
புள்ளூர் திகழல் பணிந்தேத் துவரே.
10
2922
ஏத்த வேழுல குங்கொண்ட கோலக்
கூத்த னை,குரு கூர்ச்சட கோபன்சொல்,
வாய்த்த வாயிரத் துள்ளிவை பத்துடன்,
ஏத்த வல்லவர்க் கில்லையோ ரூனமே.#
11
நேரிசை வெண்பா
திண்ணிதா மாறன் றிருமால் பரத்துவத்தை,
நண்ணியவ தாரத்தே நன்குரைத்த,-வண்ணமறிந்
தற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர்பால்,
உற்றாரை மேலிடா தூன்.
12

3. ஊனில்வாழ்
இறையின்பம் நுகர்ந்து, உசாத்துணையான வானடியார்களுடன் எப்போது கூடப்போகிறோமென்கிற வேண்டுகோளோடு தலைக்கட்டுதல்
கலி விருத்தம்
2923
ஊனில்வாழ் உயிரே*
    நல்லைபோ உன்னைப்பெற்று,
வானுளார் பெருமான்
    மதுசூத னென்னம்மான்,
தானும்யா னுமெல்லாம்
    தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,
தேனும்பா லும்நெய்யும்
    கன்னலும் அமுதுமொத்தே.#
1
2924
ஒத்தார்மிக் காரை
    இலையாய மாமாயா,
ஒத்தாயெப் பொருட்கு
    முயிராய்,என் னைப்பெற்ற
அத்தாயாய்த் தந்தையா
    யறியாதன அறிவித்த,
அத்தா,நீ செய்தன
    அடியே னறியேனே.
2
2925
அறியாக் காலத்துள்ளே
    யடிமைக்க ணன்புசெய்வித்து,
அறியா மாமாயத்
    தடியேனை வைத்தாயால்,
அறியா மைக்குறளாய்
    நிலம்மாவலி மூவடியென்று,
அறியாமை வஞ்சித்தா
    யெனதாவி யுள்கலந்தே.
3
2926
எனதாவியுள் கலந்தபெரு
    நல்லுதவிக் கைம்மாறு,
எனதா விதந்தொழிந்தே
    னினிமீள்வ தென்பதுண்டே,
எனதாவி யாவியும்நீ
    பொழிலேழு முண்டவெந்தாய்,
எனதாவி யார்?யானார்?
    தந்தநீகொண் டாக்கினையே.
4
2927
இனியார் ஞானங்களா
    லெடுக்க லெழாதவெந்தாய்,
கனிவார் வீட்டின்பமே
    யென்கடற் படாவமுதே,
தனியேன் வாழ்முதலே*
    பொழிலேழு மேனமொன்றாய்,
நுனியார் கோட்டில்வைத்தாய்
    உன்பாதம் சேர்ந்தேனே.
5
2928
சேர்ந்தார் தீவினைகட்
    கருநஞ்சைத் திண்மதியை,
தீர்ந்தார் தம்மனத்துப்
    பிரியா தவருயிரை,
சேர்ந்தே போகல்கொடாச்
    சுடரை அரக்கியைமூக்
கீர்ந்தா யை,அடியேன்
    அடைந்தேன் முதல்முன்னமே.
6
2929
முன்நல் யாழ்பயில்நூல்
    நரம்பின் முதிர்சுவையே,
பன்ன லார்பயிலும்
    பரனே* பவித்திரனே,
கன்ன லே*அமுதே*
    கார்முகிலே* என்கண்ணா,
நின்னலா லிலேன்கா
    ணென்னைநீ குறிக்கொள்ளே.
7
2930
குறிக்கொள் ஞானங்களா
    லெனையூழி செய்தவமும்,
கிறிக்கொண் டிப்பிறப்பே
    சிலநாளி லெய்தினன்யான்,
உறிக்கொண்ட வெண்ணெய்பா
    லொளித்துண்ணு மம்மான்பின்,
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்
    பிறவித் துயர்கடிந்தே.
8
2931
கடிவார் தண்ணந்துழாய்க்
    கண்ணன்விண் ணவர்பெருமான்,
படிவா னமிறந்த
    பரமன் பவித்திரன்சீர்,
செடியார் நோய்கள்கெடப்
    படிந்து குடைந்தாடி,
அடியேன் வாய்மடுத்துப்
    பருகிக் களித்தேனே.
9
2932
களிப்பும் கவர்வுமற்றுப்
    பிறப்புப்பிணி மூப்பிறப்பற்று,
ஒளிக்கொண்ட சோதியுமாய்
    உடன்கூடுவ தென்றுகொலோ,
துளிக்கின்ற வானிந்நிலம்
    சுடராழி சங்கேந்தி,
அளிக்கின்ற மாயப்பிரான்
    அடியார்கள் குழாங்களையே?
10
2933
குழாங்கொள் பேரரக்கன்
    குலம்வீய முனிந்தவனை,
குழாங்கொள் தென்குருகூர்ச்
    சடகோபன் தெரிந்துரைத்த,
குழாங்கொள் ஆயிரத்துள்
    இவைபத்து முடன்பாடி,
குழாங்களா யடியீருடன்
    கூடிநின் றாடுமினே.#
11
நேரிசை வெண்பா
ஊன மறவேவந் துள்கலந்த மாலினிமை
யானது, அனுபவித்தற் காந்துணையா,-வானில்
அடியார் குழாங்கூட ஆசையுற்ற மாறன்,
அடியா ருடன்செஞ்சே* ஆடு.
13

4. ஆடியாடி
தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கி இரங்கிக்கூறும் பாசுரம்
வஞ்சி விருத்தம்
2934
ஆடியாடி யகம்க ரைந்து,இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல் கி,எங்கும்
நாடிநாடி நரசிங்கா வென்று,
வாடி வாடுமிவ் வாணுதலே.#
1
2935
வாணுதலிம் மடவரல், உம்மைக்
காணுமாசையுள் நைகின் றாள்,விறல்
வாணணாயிரந் தோள்துணித் தீர்,உம்மைக்
காணநீ ரிரக்க மிலீரே.
2
2936
இரக்க மனத்தோ டெரியணை,
அரக்கு மெழுகுமொக் குமிவள்,
இரக்க மெழிரிதற் கென்செய்கேன்,
அரக்க னிலங்கைசெற் றீருக்கே.
3
2937
'இலங்கைசெற் றவனே*' என்னும்,பின்னும்
'வலங்கொள் புள்ளுயர்த்தாய்*' என்னும்,உள்ளம்
மலங்கவெவ் வுயிர்க்கும், கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும் நின்றிவனே.
4
2938
இவளிராப் பகல்வாய் வெரீஇ,தன
குவளையொண் கண்ணநீர் கொண்டாள்,வண்டு
திவளும்தண் ணந்துழாய் கொடீர்,என
தவள வண்ணர் தகவுகளே.
5
2939
'தகவுடை யவனே*' என்னும்,பின்னும்
'மிகவிரும் பும்பிரான்*' என்னும், 'என
தகவுயிர்க் கமுதே*' என்னும்,உள்ளம்
உகவு ருகிநின் றுள்ளுளே.
6
2940
உள்ளு ளாவி யுலர்ந்துலர்ந்து, 'என்
வள்ளலே* கண்ணனே*' என்னும்,பின்னும்
'வெள்ளநீர்க் கிடந்தாய்*' என்னும்,என்
கள்விதான் பட்ட வஞ்சனையே.
7
2941
'வஞ்சனே*' என்னும் கைதொழும்,தன்
நெஞ்சம்வே வநெடி துயிர்க்கும்,விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர்,உம்மைத்
தஞ்சமென் றிவள்பட் டனவே.
8
2942
பட்ட போதெழு போதறியாள்,'விரை
மட்டலர் தண்டுழாய்' என்னும்,சுடர்
வட்ட வாய்நுதி நேமியீர்,நும
திட்ட மென்கொலிவ் வேழைக்கே?
9
2943
ஏழை பேதை யிராப்பகல், தன
கேழிலொண் கண்ணநீர் கொண்டாள்,கிளர்
வாழ்வைவேவ இலங்கைசெற் றீர்,இவள்
மாழைநோக் கொன்றும் வாட்டேன்மினே.
10
2944
வாட்ட மில்புகழ் வாமனனை,இசை
கூட்டி வண்சட கோபன்சொல்,அமை
பாட்டோ ராயிரத் திப்பத்தால்,அடி
சூட்ட லாகும்மந் தாமமே.#
11
நேரிசை வெண்பா
ஆடிமகிழ் வானி லடியார் குழாங்களுடன்,
கூடியின்ப மெய்தாக் குறையதனால்,-வாடிமிக
அன்புற்றார் தந்நிலைமை யாய்ந்துரைக்க மோகித்துத்,
துன்புற்றான் மாறனந் தோ*
14

5. அந்தாமத்தன்பு
இறைவன் தனது அணிகள், படைகள், பொறிகள் இவைகளின் எழிலோடு கலக்க, அதனால் இன்புற்றதை ஆழ்வார் அருளிச்செய்தல்
தரவு கொச்சகக் கலிப்பா
2945
அந்தாமத் தன்புசெய்தென்
    னாவிசேர் அம்மானுக்கு,
அந்தாம வாழ்முடிசங்
    காழிநூ லாரமுள்,
செந்தா மரைத்தடங்கண்
    செங்கனிவாய் செங்கமலம்,
செந்தா மரையடிகள்
    செம்பொன் திருவுடம்பே.#
1
2946
திருவுடம்பு வான்சுடர்செந்
    தாமரகைண் கைகமலம்,
திருவிடமே மார்வம்
    அயனிடமே கொப்பூழ்,
ஒருவிடமு மெந்தை
    பெருமாற் கரனேயோ,
ஒருவிடமொன் றின்றியென்
    னுள்கலந் தானுக்கே?
2
2947
என்னுள் கலந்தவன்
    செங்கனிவாய் செங்கமலம்,
மின்னும் சுடர்மலைக்குக்
    கண்பாதம் கைகமலம்,
மன்னு முழுவே
    ழுலகும் வயிற்றினுள,
தன்னுள் கலவாத
    தெப்பொருளும் தானிலையே.
3
2948
எப்பொருளும் தானாய்
    மரதகக் குன்றமொக்கும்,
அப்பொழுதைத் தாமரைப்பூக்
    கண்பாதங் கைகமலம்,
எப்பொழுதும் நாள்திங்க
    ளாண்டூழி யூழிதொறும்,
அப்பொழுதைக் கப்பொழுதென்
    ஆரா அமுதமே.
4
2949
ஆரா அமுதமாய்
    அல்லாவி யுள்கலந்த,
காரார் கருமுகில்போல்
    என்னம்மான் கண்ணனுக்கு,
நேராவாய் செம்பவளம்
    கண்பாதம் கைகமலம்,
பேரார நீண்முடிநாண்
    பின்னும் இழைபலவே.
5
2950
பலபலவே யாபரணம்
    பேரும் பலபலவே,
பலபலவே சோதி
    வடிவுபண் பெண்ணில,
பலபல கண்டுண்டு
    கேட்டுற்று மோந்தின்பம்,
பலபலவே ஞானமும்
    பாம்பணைமே லாற்கேயோ*
6
2951
பாம்பணைமேல் பாற்கடலுள்
    பள்ளி யமர்ந்ததுவும்,
காம்பணைதோள் பின்னைக்கா
    ஏறுடனேழ் செற்றதுவும்,
தேம்பணைய சோலை
    மராமரமேழ் எய்ததுவும்,
பூம்பிணைய தண்டுழாய்ப்
    பொன்முடியும் போரேறே.
7
2952
பொன்முடியம் போரேற்றை
    யெம்மானை நால்தடந்தோள்,
தன்முடிவொன் றில்லாத
    தண்டுழாய் மாலையனை,
என்முடிவு காணாதே
    யென்னுள் கலந்தானை,
சொல்முடிவு காணேன்நான்
    சொல்லுவதென் சொல்லீரே.
8
2953
சொல்லீரென் அம்மானை
    என்னாவி யாவிதனை,
எல்லையில் சீரென்
    கருமாணிக் கச்சுடரை,
நல்ல அமுதம்
    பெற்றற்கரிய வீடுமாய்,
அல்லி மலர்விரையொத்
    தாணல்லன் பெண்ணல்லனே.
9
2954
ஆணல்லன் பெண்ணல்லன்
    அல்லா அலியுமல்லன்,
காணலு மாகான்
    உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால் பேணு
    முருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்
    பெம்மானைக் கூறுதலே.
10
2955
கூறுதலொன் றாராக்
    குடக்கூத்த அம்மானை,
கூறுதலே மேவிக்
    குருகூர்ச் சடகோபன்,
கூறினவந் தாதியோ
    ராயிரத்துள் இப்பத்தும்,
கூறுதல்வல் லாருளரேல்
    கூடுவர்வை குந்தமே.#
11
நேரிசை வெண்பா
அந்தாமத் தன்பால் அடியார்க ளோடிறைவன்,
வந்தாரத் தான்கலந்த வண்மையினால்,-சந்தாபம்
தீர்ந்தசட கோபன் திருவடிக்கே நெஞ்சமே,
வாய்ந்தஅன்பை நாடோறும் வை.
15

மேலே செல்க

6. வைகுந்தா
ஆழ்வாரது தாழ்மையுணர்ச்சியைக் கண்டு எம்பெருமான் இவரது பிரிவுக்கஞ்ச, அவ்வச்சத்தை போக்குதல்
ஆசிரியத்துறை
2956
வைகுந்தா* மணிவண்ணனே* என்பொல்லாத்
    திருக்குறளா* என்னுள் மன்னி,
வைகும் வைகல் தோறும்
    அமுதாய வானேறே,
செய்குந் தாவருந் தீமையுன் னடியார்க்குத்
    தீர்த்தசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா, உன்னைநான்
    பிடித்தேன்கொள் சிக்கெனவே.#
1
2957
சிக்கெனச் சிறிதோ ரிடமும்
    புறப்படாத் தன்னுள்ளே, உலகுகள்
ஒக்கவே விழுங்கிப்
    புகுந்தான் புகுந்ததற்பின்,
மிக்க ஞான வெள்ளச் சுடர்விளக்காய்த்
    துளக்கற் றமுதமாய், எங்கும்
பக்கநோக் கறியானென்
    பைந்தாமரைக் கண்ணனே.
2
2958
தாமரைக் கண்ணனை விண்ணோர்
    பரவும் தலைமகனை, துழாய்விரைப்
பூமருவு கண்ணியெம்
    பிரானைப் பொன்மலையை,
நாமருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி
    நாம்மகிழ்ந் தாட, நாவலர்
பாமருவி நிற்கத் தந்த
    பான்மையேய் வள்ளலே.
3
2959
வள்ளலே* மதுசூதனா* என்மரதக
    மலையே, உனைநினைந்
தெள்கல் தந்த எந்தாய்*
    உன்னை யெங்ஙனம் விடுகேன்,
வெள்ள மேபுரை நின்புகழ் குடைந்தாடிப்
    பாடிக் களித்து கந்துகந்து,
உள்ள நோய்க ளெல்லாம்
    துரந்துய்ந்து போந்திருந்தே?
4
2960
உய்ந்து போந்தென் உலப்பிலாத
    வெந்தீவினைகளை நாசஞ் செய்து,உன
தந்தமில் அடிமை
    அடைந்தேன் விடுவேனோ,
ஐந்து பைந்தலை யாடர வணைமேவிப்
    பாற்கடல் யோக நித்திரை,
சிந்தை செய்த எந்தாய்*
    உன்னைச் சிந்தை செய்து செய்தே.
5
2961
உன்னைச் சிந்தை செய்து செய்துன்
    நெடுமா மொழியிசை பாடியாடி,என்
முன்னைத் தீவினைகள்
    முழுவே ரரிந்தனன்யான்,
உன்னைச் சிந்தையினா லிகழ்ந்த
    இரணியன் அகல்மார்வங் கீண்ட,என்
முன்னைக் கோளரியே*
    முடியாத தென்னெனக்கே?
6
2962
முடியாத தென்னெனக் கேலினி முழுவே
    ழுலகு முண்டான், உகந்துவந்
தடியேனுள் புகுந்தான்
    அகல்வானும் அல்லனினி,
செடியார் நோய்க ளெல்லாம்
    துரந்தெமர் கீழ்மே லெழுபிறப்பும்,
விடியா வெந்நரகத் தென்றும்
    சேர்தல் மாறினாரே.
7
2963
மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்தடியை
    யடைந்துள்ளந் தேறி,
ஈறி லின்பத்
    திருவெள்ளம் யான்மூழ்கினன்,
பாறிப் பாறி யசுரர்தம் பல்குழாங்கள்
    நீறெழ, பாய்பறவையொன்
றேறி வீற்றிருந் தாய்*உன்னை
    யென்னுள் நீக்கேல் எந்தாய்*
8
2964
எந்தாய்* தண்திரு வேங்கடத்துள்
    நின்றாய், இலங்கை செற்றாய், மராமரம்
பைந்தா ளேழுருவ ஒருவாளி
    கோத்த வில்லா,
கொந்தார் தண்ணந் துழாயினாய்* அமுதே*
    உன்னை என்னுள்ளே குழைத்தவெம்
மைந்தா, வானேறே*
    இனியெங்குப் போகின்றதே?
9
2965
போகின்ற காலங்கள் போய காலங்கள்
    போகு காலங்கள், தாய்தந் தையுயிர்
ஆகின்றாய்* உன்னைநான்
    அடைந்தேன் விடுவேனோ,
பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும்
    நாதனே* பரமா, தண்வேங்கடம்
மேகின்றாய்* தண்டுழாய்
    விரைநாறு கண்ணியனே*
10
2966
கண்ணித் தண்ணந் துழாய்முடிக்
    கமலத் தடம்பெருங்
கண்ணனை, புகழ்நண்ணித் தென்குருகூர்ச்
    சடகோபன் மாறன்சொன்ன
எண்ணில் சோர்வி லந்தாதி யாயிரத்துள்
    இவையுமோர் பத்திசையொடும்
பண்ணில் பாட வல்லாரவர்
    கேசவன் தமரே.#
11
நேரிசை வெண்பா
வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ்மாறன்,
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து,-நைகின்ற
தன்மைதனைக் கண்டுன்னைத் தான்விடே னென்றுரைக்க,
வன்மையடைந் தான்கேச வன்.
16

7. கேசவன் தமர்
எம்பெருமானது திருவருளால் தமது ஏழேழு தலைமுறையோரும் பெருமை பெற்றாரென்று அருளிச்செய்தல்
கலி நிலைத்துறை
2967
கேச வன்தமர் கீழ்மேல்
    எமரே ழெழுபிறப்பும்,
மாசதி ரிதுபெற்று நம்முடை
    வாழ்வு வாய்க்கின்றவா,
ஈச னென்கரு மாணிக்கமென்
    செங்கோலக் கண்ணன்விண்ணோர்
நாயகன், எம்பிரா னெம்மான்
    நாரா யணனாலே.#
1
2968
நாரணன் முழுவே ழுலகுக்கும்
    நாதன் வேதமயன்,
காரணம் கிரிசை கரும
    மிவைமுதல்வ னெந்தை,
சீரணங் கமரர் பிறர்பல
    ரும்தொழு தேத்தநின்று,
வாரணத் தைமருப் பொசித்த
    பிரானென் மாதவனே.
2
2969
மாதவ னென்றதே கொண்டென்னை
    யினியிப்பால் பட்ட
யாத வங்களும் சேர்கொடே
    னென்றென்னுள் புகுந்திருந்து,
தீதவம் கெடுக்கும் அமுதம்
    செந்தாம ரைக்கட்குன்றம்,
கோதவ மிலென்கன்னற் கட்டியெம்
    மானென் கோவிந்தனே.
3
2970
கோவிந் தன்குடக் கூத்தன்
    கோவலனென் றென்றேகுனித்து,
தேவும் தன்னையும் பாடியாடத்
    திருத்தி,என் னைக்கொண்டென்
பாவந் தன்னையும் பாறக்கைத்
    தெமரே ழெழுபிறப்பும்,
மேவும் தன்மைய மாக்கினான்
    வல்லனெம் பிரான்விட்டுவே.
4
2971
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை
    பாதம் கைகள்கண்கள்,
விட்டிலங்கு கருஞ்சுடர்
    மலையே திருவுடம்பு,
விட்டிலங்கு மதியம் சீர்சங்கு
    சக்கரம் பரிதி,
விட்டிலங்கு முடியம்மான் மதுசூ
    தனன்த னக்கே.
5
2972
மதுசூ தனையன்றி மற்றிலேனென்
    றெத்தாலும் கருமமின்றி,
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட
    நின்றூழி யூழிதொறும்,
எதிர்சூழல் புக்கெனைத் தோர்பிறப்பு
    மெனக்கே யருள்கள்செய்ய
விதிசூழ்ந்த தாலெனக் கேலம்மான்
    திரிவிக் கிரமனையே.
6
2973
'திரிவிக் கிரமன் செந்தா மரைக்கணெம்
    மானென் செங்கனிவாய்
உருவில் பொலிந்த வெள்ளைப்
    பளிங்குநிறத்தனன்' என்றென்று, உள்ளிப்
பரவிப் பணிந்து பல்லூழி
    யூழிநின் பாத பங்கயமே,
மருவித் தொழும்மன மேதந்தாய்
    வல்லைகாணென் வாமனனே*
7
2974
'வாமனன்* என்மரதக வண்ணன்*
    தாமரைக் கண்ணினன்*
காமனைப் பயந்தாய்', என்றென்றுன்
    கழல்பாடி யேபணிந்து,
தூமனத் தனனாய்ப் பிறவித்
    துழதி நீங்க, என்னைத்
தீமனங் கெடுத்தா யுனக்கென்
    செய்கேனென் சிரீதரனே*
8
2975
சிரீதரன் செய்ய தாமரைக்
    கண்ணனென்றென் றிராப்பகல்வாய்
வெரீஇ,அல மந்து கண்கள்நீர்
    மல்கிவெவ் வுயிர்த்துயிர்த்து
மரீஇய தீவினை மாளவின்
    பம்வளர வைகல்வைகல்
இரீஇ, உன்னையென் னுள்வைத்
    தனையென் இருடீகேசனே*
9
2976
'இருடீ கேசன் எம்பிரான்
    இலங்கை யரக்கர்குலம்,
முருடு தீர்த்த பிரானெம்மான்
    அமரர்பெம்மான்' என்றென்று,
தெருடி யாகில் நெஞ்சே*
    வணங்குதிண்ணம் அறியறிந்து,
மருடி யேலும் விடேல்கண்டாய்
    நம்பிபற்ப நாபனையே.
10
2977
பற்ப நாபன் உயர்வற
    வுயரும் பெருந்திறலோன்,
எற்பர னென்னை யாக்கிக்கொண்
    டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம், என்னமுதம் கார்முகில்
    போலும் வேங்கடநல்
வெற்பன், விசும்போர் பிரானெந்தை
    தாமோ தரனே.
11
2978
தாமோ தரனைத் தனிமுதல்வனை
    ஞால முண்டவனை,
ஆமோ தரமறிய ஒருவர்க்
    கென்றே தொழுமவர்கள்,
தாமோ தரனுரு வாகிய
    சிவற்கும் திசைமுகற்கும்,
ஆமோ தரமறிய எம்மானை
    யென்னாழி வண்ணனையே?
12
2979
வண்ண மாமணிச் சோதியை
    அமரர் தலைமகனை,
கண்ணனை நெடுமாலைத் தென்குரு
    கூர்ச்சட கோபன்,
பண்ணிய தமிழ்மாலை யாயிரத்துள்
    ளிவைபன் னிரண்டும்,
பண்ணில் பன்னிரு நாமப்பாட்
    டண்ணல்தாள் அணைவிக்குமே.#
13
நேரிசை வெண்பா
'கேசவனா லெந்தமர்கள் கீழ்மே லெழுபிறப்பும்,
தேசடைந்தார்' என்று சிறந்துரைத்த,-வீசுபுகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல் லாமுய்கைக்கு,
ஆறென்று நெஞ்சே* அணை.
17

8. அணைவது
எம்பெருமான் வீடளிப்பானென்பதை உலகத்தார்க்கு அறிவுறுத்தல்
கொச்சகக் கலிப்பா
2980
அணைவது அரவணைமேல் பூம்பாவை யாகம்
புணர்வது, இருவ ரவர்முதலும் தானே,
இணைவனா மெப்பொருட்கும் வீடு முதலாம்,
புணைவன் பிறவிக் கடல்நீந்து வார்க்கே.#
1
2981
நீந்தும் துயர்ப்பிறவி யுட்படமற் றெவ்வெவையும்,
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்,
பூந்தண் புனல்பொய்கை யானை இடர்கடிந்த,
பூந்தண் டுழாயென் தனிநா யகன்புணர்ப்பே.
2
2982
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்,
புணர்த்ததன் உந்தியோ டாகத்து மன்னி,
புணர்த்த திருவாகித் தன்மார்வில் தான்சேர்
புணர்ப்பன் பெரும்புணர்ப் பெங்கும் புலனே.
3
2983
புலனைந்து மேயும் பொறியைந்தும் நீங்கி,
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்,
அலமந்து வீய அசுரரைச் செற்றான்,
பலமுந்து சீரில் படிமின்ஓ வாதே.
4
2984
ஓவாத் துயர்ப்பிறவி யுட்படமற் றெவ்வெவையும்,
மூவாத் தனிமுதலாய் மூவுலகும் காவலோன்,
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்,
தேவாதி தேவ பெருமானென் தீர்த்தனே.
5
2985
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்,
சேர்த்தி யவையே சிவன்முடிமேல் தான்கண்டு,
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழா யான்பெருமை,
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே?
6
2986
கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ்புக்
கிடந்திடும், தன்னுள் கரக்கும் உமிழும்,
தடம்பெருந்தோ ளாரத் தழுவும் பாரென்னும்
மடந்தையை,மால் செய்கின்ற மாலார்காண் பாரே?
7
2987
காண்பாரார் எம்மீசன் கண்ணனையென் காணுமாறு,
ஊண்பேசி லெல்லா வுலகுமோர் துற்றாற்றா,
சேண்பால வீடோ வுயிரோமற் றெப்பொருட்கும்,
ஏண்பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே.
8
2988
'எங்கும் உளன்கண்ணன்' என்றமக னைக்காய்ந்து,
'இங்கில்லை யால்'என் றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய,என்
சிங்கப் பிரான்பெருமை யாராயும் சீர்மைத்தே?
9
2989
சீர்மைகொள் வீடு சுவர்க்கம் நரகீறா,
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்,
வேர்முதலாய் முத்தாய்ப் பரந்து தனிநின்ற,
கார்முகில்போல் வண்ணனென் கண்ணனைநான் கண்டேனே.
10
2990
கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை,
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்,
பண்டலையில் சொன்னதமிழ் ஆயிரத்திப் பத்தும்வல்லார்,
விண்டலையில் வீற்றிருந் தாள்வரெம் மாவீடே.#
11
நேரிசை வெண்பா
அணைந்தவர்க டம்முடனே ஆயனருட் காளாம்,
குணந்தனையே கொண்டுலகைக் கூட்ட,-இணங்கிமிக
மாசிலுப தேசஞ்செய் மாறன் மலரடியே,
வீசு புகழெம்மா வீடு.
18

9. எம்மாவீடு
பேற்றின் உண்மையை உணர்த்துதல்
கலி விருத்தம்
2991
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்,நின்
செம்மா பாதபற்புத் தலைசேர்த் தொல்லை,
கைம்மா துன்பம் கடிந்த பிரானே,
அம்மா* அடியேன் வேண்டுவது ஈதே.#
1
2992
இதேயா னுன்னைக் கொள்வதெஞ் ஞான்றும்,என்
மைதோய் சோதி மணிவண்ண எந்தாய்,
எய்தா நின்கழல் யானெய்த, ஞானக்
கைதா காலக் கழிவுசெய் யேலே.
2
2993
செய்யேல் தீவினை யென்றருள் செய்யும்,என்
கையார் சக்கரக் கண்ண பிரானே,
ஐயார் கண்டம் அடைக்கிலும், நின்கழல்
எய்யா தேத்த அருள்செய் எனக்கே.
3
2994
'எனக்கேயாட் செய்யெக் காலத்தும்' என்று,என்
மனக்கே வந்திடை வீடின்றி மன்னி,
தனக்கே யாகவெ னைக்கொள்ளு மீதே,
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.
4
2995
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்,
இறப்பில் எய்துக எய்தற்க, யானும்
பிறப்பில் பல்பிற விப்பெரு மானை,
மறப்பொன் றின்றியென் றும்மகிழ் வேனே.
5
2996
மகிழ்கொள் தெய்வ முலோகம் அலோகம்,
மகிழ்கொள் சோதி மலர்ந்தவம் மானே,
மகிழ்கொள் சிந்தைசொல் செய்கைகொண்டு, என்றும்
மகிழ்வுற் றுன்னை வணங்கவா ராயே.
6
2997
வாராய் உன்திருப் பாத மலர்க்கீழ்,
பேரா தேயான் வந்தடை யும்படி
தாராதாய், உன்னை என்னுள் வைப்பிலென்றும்
ஆரா தாய்,எனக் கென்றுமெக் காலே.
7
2998
எக்காலத் தெந்தையாய் என்னுள் மன்னில்,மற்
றெக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன்,
மிக்கார் வேத விமலர் விழுங்கும்,என்
அக்காரக் கனியே* உன்னை யானே.
8
2999
யானே என்னை அறியகி லாதே,
யானே என்றன தேயென் றிருந்தேன்,
யானே நீயென் உடைமையும் நீயே,
வானே ஏத்துமெம் வானவ ரேறே*
9
3000
ஏறே லெழும்வென் றேர்கொள் இலங்கையை,
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி,
தேறேல் என்னையுன் பொன்னடிச் சேர்த்தொல்லை,
வேறே போகஎஞ் ஞான்றும் விடலே.
10
3001
விடலில் சக்கரத் தண்ணலை, மேவல்
விடலில் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கெடலில் ஆயிரத் துள்ளிவை பத்தும்,
கெடலில் வீடுசெய் யும்கிளர் வார்க்கே.
11
நேரிசை வெண்பா
'எம்மாவீ டும்வேண்டா என்றனக்குன் றாளிணையே,
அம்மா* அமையும்'என ஆய்ந்துரைத்த,-நம்முடைய
வாழ்முதலாம் மாறன் மலர்த்தாள் இணைசூடிக்,
கீழ்மையற்று நெஞ்சே* கிளர்.
19

10. கிளரொளி
(இது கோயில் திருவாய்மொழி)
கீழ் உணர்த்திய பேற்றை பெறும்பொருட்டுத் திருமாலிருஞ்சோலைமலையை அடைய அறிவுறுத்தல்
கலி விருத்தம்
3002
கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம்,
வளரொளி மாயோன் மருவிய கோயில்,
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ் சோலை,
தளர்வில ராகில் சார்வது சதிரே.
1
3003
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது,
அதிர்குரல் சங்கத் தழகர்தம் கோயில்,
மதிதவழ் குடுமி மாலிருஞ் சோலை,
பதியது ஏத்தி எழுவது பயனே.
2
3004
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே,
புயல்மழை வண்ணர் புரிந்துறை கோயில்,
மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ் சோலை,
அயன்மலை யடைவ ததுக ருமமே.
3
3005
கருமவன் பாசம் கழித்துழன் றுய்யவே,
பெருமலை யெடுத்தான் பீடுறை கோயில்,
வருமழை தவழும் மாலிருஞ் சோலை,
திருமலை யதுவே அடைவது திறமே.
4
3006
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது,
அறமுயல் ஆழிப் படையவன் கோயில்,
மறுவில்வண் சுனைசூழ் மாலிருஞ் சோலை,
புறமலை சாரப் போவது கிறியே.
5
3007
கிறியென நினைமின் கீழ்மைசெய் யாதே,
உறியமர் வெண்ணெய் உண்டவன் கோயில்,
மறியொடு பிணைசேர் மாலிருஞ் சோலை,
நெறிபட அதுவே நினைவது நலமே.
6
3008
நலமென நினைமின் நரகழுந் தாதே,
நிலமுனம் இடந்தான் நீடுறை கோயில்,
மலமறு மதிசேர் மாலிருஞ் சோலை,
வலமுறை யெய்தி மருவுதல் வலமே.
7
3009
வலம்செய்து வைகல் வலங்கழி யாதே,
வலம்செய்யும் ஆய மாயவன் கோயில்,
வலம்செய்யும் வானோர் மாலிருஞ் சோலை,
வலம்செய்து நாளும் மருவுதல் வழக்கே.
8
3010
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது,
அழக்கொடி யட்டான் அமர்பெருங் கோயில்,
மழக்களிற் றினஞ்சேர் மாலிருஞ் சோலை,
தொழக்கரு துவதே துணிவது சூதே.
9
3011
சூதென்று களவும் சூதும்செய் யாதே,
வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்,
மாதுறு மயில்சேர் மாலிருஞ் சோலை,
போதவிழ் மலையே புகுவது பொருளே.
10
3012
பொருளென்றிவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல்,
மருளில்வண் குருகூர் வண்சக கோபன்,
தெருள்கொள்ளச் சொன்னஓ ராயிரத்து ளிப்பத்து,
அருளுடை யவன்தாள் அணைவிக்கும் முடித்தே.#
11
நேரிசை வெண்பா
'கிளரொளிசேர் கீழுரைத்த பேறு கிடைக்க,
வளரொளிமால் சோலை மலைக்கே,-தளர்வறவே
நெஞ்சைவைத்துச் சேரும்'எனும் நீடுபுகழ் மாறன்றாள்,
முன்செலுத்து வோமெம் முடி.
20
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

மூன்றாம் பத்து
1. முடிச்சோதி
திருமாலிருஞ்சோலை அழகரது எழிலை அநுபவித்தல்
தரவு கொச்சகக் கலிப்பா
3013
முடிச்சோதி யாயுனது
    முகச்சோதி மலர்ந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற
    தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும்
    பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ?
    திருமாலே* கட்டுரையே.#
1
3014
கட்டுரைக்கில் தாமரைநின்
    கண்பாதம் கையொவ்வா,
சுட்டுரைத்த நன்பொன்னுள்
    திருமேனி ஒளிஒவ்வாது,
ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப்
    புகழ்வெல்லாம் பெரும்பாலும்,
பட்டுரையாய்ப் புற்கென்றே
    காட்டுமால் பரஞ்சோதீ*
2
3015
பரஞ்சோதி* நீபரமாய்
    நின்னிகழ்ந்து பின்,மற்றோர்
பரஞ்சோதி யின்மையில்
    படியோவி நிகழ்கின்ற,
பரஞ்சோதி நின்னுள்ளே
    படருலகம் படைத்த,எம்
பரஞ்சோதி கோவிந்தா*
    பண்புரைக்க மாட்டேனே.
3
3016
மாட்டாதே யாகிலுமிம்
    மலர்தலைமா ஞாலம்,நின்
மாட்டாய மலர்புரையும்
    திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய
    மதிகொடுத்தாய், மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தாய்
    மாஞாலம் வருந்தாதே?
4
3017
வருந்தாத அருந்தவத்த
    மலர்கதிரின் சுடருடம்பாய்,
வருந்தாத ஞானமாய்
    வரம்பின்றி முழுதியன்றாய்,
வருங்காலம் நிகழ்காலம்
    கழிகால மாய்,உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர்
    எங்குலக்க ஓதுவனே?
5
3018
ஓதுவார் ஒத்தெல்லாம்
    எவ்வுலகத் தெவ்வெவையும்,
சாதுவாய் நின்புகழின்
    தகையல்லால் பிறிதில்லை,
போதுவாழ் புனந்துழாய்
    முடியினாய், பூவின்மேல்
மாதுவாழ் மார்பினாய்*
    என்சொல்லியான் வாழ்த்துவனே?
6
3019
வாழ்த்துவார் பலராக
    நின்னுள்ளே நான்முகனை,
மூழ்த்தநீ ருலகெல்லாம்
    படையென்று முதல்படைத்தாய்,
கேழ்த்தசீ ரான்முதலாக்
    கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தாலுன்
    தொல்புகழ்மா சூணாதே?
7
3020
மாசூணாச் சுடருடம்பாய்
    மலராது குவியாது,
மாசூணா ஞானமாய்
    முழுதுமாய் முழுதியன்றாய்,
மாசூணா வான்கோலத்
    தமரர்கோன் வழிப்பட்டால்,
மாசூணா உன்பாத
    மலர்சோதி மழுங்காதே?
8
3021
மழுங்காத வைந்நுதிய
    சக்கரநல் வலத்தையாய்,
தொழுங்காதல் களிறளிப்பான்
    புள்ளூர்ந்து தோன்றினையே,
மழுங்காத ஞானமே
    படையாக, மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன்
    சுடர்ச்சோதி மறையாதே?
9
3022
மறையாய நால்வேதத்
    துள்நின்ற மலர்ச்சுடரே,
முறையாலிவ் வுலகெல்லாம்
    படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்,
பிறையேறு சடையானும்
    நான்முகனும் இந்திரனும்,
இறையாதல் அறிந்தேத்த
    வீற்றிருத்தல் அதுவியப்பே?
10
2907
வியப்பாய வியப்பில்லா
    மெய்ஞ்ஞான வேதியனை,
சயப்புகழார் பலர்வாழும்
    தடங்குருகூர்ச் சடகோபன்,
துயக்கின்றித் தொழுதுரைத்த
    ஆயிரத்து ளிப்பத்தும்,
உயக்கொண்டு பிறப்பறுக்கும்
    ஒலிமுந்நீர் ஞாலத்தே.#
11
நேரிசை வெண்பா
முடியார் திருமலையில் மூண்டுநின்ற மாறன்,
அடிவாரந் தன்னில் அழகர்-வடிவழகைப்
பற்றி, முடியும் அடியும் படிகலனும்,
முற்றும் அனுபவித்தான் முன்.
21

2. முந்நீர் ஞாலம்
ஆழ்வார் அழகரை முற்றும் அநுபவிக்க முடியாமல் வருந்த, எம்பெருமான் இவரது கலக்கத்தைத் தீர்த்தல்
கலி விருத்தம்
3024
முந்நீர் ஞாலம்
    படைத்தவெம் முகில்வண்ணனே,
அந்நாள்நீ தந்த
    ஆக்கையின் வழியுழல்வேன்,
வெந்நாள்நோய் வீய
    வினைகளைவேர் அறப்பாய்ந்து,
எந்நாள்யான் உன்னை
    இனிவந்து கூடுவனே?#
1
3025
வன்மா வையம்
    அளந்தஎம் வாமனா,நின்
பன்பா மாயப்
    பல்பிறவியில் படிகின்றயான்,
தொன்மா வல்வினைத்
    தொடர்களை முதலரிந்து,
நின்மாதாள் சேர்ந்து
    நிற்பதெஞ் ஞான்றுகொலோ?
2
3026
கொல்லா மாக்கோல்
    கொலைசெய்து பாரதப்போர்,
எல்லாச் சேனையும்
    இருநிலத் தவித்தவெந்தாய்,
பொல்லா ஆக்கையின்
    புணர்வினை அறுக்கலறா,
சொல்லாய்யா னுன்னைச்
    சார்வதோர் சூழ்ச்சியே.
3
3027
சூழ்ச்சி ஞானச்
    சுடரொளி யாகி,என்றும்
ஏழ்ச்சிக்கே டின்றி
    எங்கணும் நிறைந்தவெந்தாய்,
தாழ்ச்சிமற் றெங்கும்
    தவிர்ந்துநின் தாளிணைக்கீழ்
வாழ்ச்சி,யான் சேரும்
    வகையருளாய் வந்தே.
4
3028
வந்தாய்போ லேவந்தும்
    எம்மனத் தினைநீ
சிந்தாமல் செய்யாய்
    இதுவே யிதுவாகில்,
கொந்தார்கா யாவின்
    கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்,யா னுன்னை
    எங்குவந் தணுகிற்பனே?
5
3029
கிற்பன் கில்லேன்
    என்றிலன் முனநாளால்,
அற்பசா ரங்கள்
    அவைசுவைத் தகன்றொழிந்தேன்,
பற்பல் லாயிரம்
    உயிர்செய்த பரமா,நின்
நற்பொற்சோ தித்தாள்
    நணுகுவ தெஞ்ஞான்றே?
6
3030
எஞ்ஞான்று நாமிருந்
    திருந்திரங்கி நெஞ்சே*
மெய்ஞ்ஞான மின்றி
    வினையியல் பிறப்பழுந்தி,
எஞ்ஞான்றும் எங்கும்
    ஒழிவற நிறைந்துநின்ற,
மெய்ஞ்ஞானச் சோதிக்
    கண்ணனை மேவுதுமே?
7
3031
மேவு துன்ப
    வினைகளை விடுத்துமிலேன்,
ஓவுத லின்றி
    உன்கழல் வணங்கிற் றிலேன்,
பாவுதொல் சீர்க்கண்
    ணா*என் பரஞ்சுடரே,
கூவுகின்றேன் காண்பான்
    எங்கெய்தக் கூவுவனே?
8
3032
கூவிக்கூவிக் கொடுவினைத்
    தூற்றுள் நின்று,
பாவியேன் பலகாலம்
    வழிதிகைத் தலமர்கின்றேன்,
மேவியன் றாநிரை
    காத்தவ னுலகமெல்லாம்,
தாவிய அம்மானை
    எங்கினித் தலைப்பெய்வனே?
9
3033
தலைப்பெய் காலம்
    நமன்றமர் பாசம்விட்டால்,
அலைப்பூ ணுண்ணுமவ்
    வல்லலெல் லாமகல,
கலைப்பல் ஞானத்தென்
    கண்ணனைக் கண்டுகொண்டு,
நிலைப்பெற்றென் னெஞ்சம்
    பெற்றது நீடுயிரே.
10
3034
உயிர்க ளெல்லா
    உலகமு முடையவனை,
குயில்கொள் சோலைத்
    தென்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் இசைமாலை
    ஆயிரத்து ளிப்பத்தும்,
உயிரின்மே லாக்கை
    ஊனிடை ஒழிவிக்குமே.#
11
நேரிசை வெண்பா
முன்னம் அழகரெழில் மூழ்குங் குருகையர்கோன்,
இன்னஅள வென்ன எனக்கரிதாய்த்-தென்ன,
கரணக் குறையின் கலக்கத்தை, கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து.
22

3. ஒழிவில் காலம்
(இது கோயில் திருவாய்மொழி)
திருவேங்கடமுடையான் திருவடிகளில் ஒழிவிலாவடிமை செய்யப் பாரித்தல்
கலி விருத்தம்
3035
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி,
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே.#
1
3036
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே.
2
3037
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,
தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,
எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே.
3
3038
ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,
நீச னேன்நிறை வொன்றுமி லேன்,என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.
4
3039
சோதி யாகியெல் லாவுல கும்தொழும்,
ஆதி மூர்த்தியென் றாலள வாகுமோ?,
வேதி யர்முழு வேதத் தமுதத்தை,
தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே.
5
3040
வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,
வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன
லாங்க டமை,அ துசுமந் தார்கட்கே.
6
3041
சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.
7
3042
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.#
8
3043
ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,
வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்
தாயன், நாண்மல ராமடித் தாமரை,
வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே.
9
3044
வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,
எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,
மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே.
10
3045
தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை,
நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.#
11
நேரிசை வெண்பா
ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி,
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு,-எழுசிகர
வேங்கடத்தைப் பாரித்த மிக்கநலஞ் சேர்மாறன்,
பூங்கழலை நெஞ்சே* புகழ்.
23

4. புகழுநல் ஒருவன்
எம்பெருமானது எப்பொருட்குமுயிரான தன்மையைப் பேசி அடிமை செய்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3046
புகழுநல் ஒருவன் என்கோ*
    பொருவில்சீர்ப் பூமி யென்கோ,
திகழும்தண் பரவை என்கோ*
    தீயென்கோ* வாயு என்கோ,
நிகழும்ஆ காச மென்கோ*
    நீள்சுடர் இரண்டும் என்கோ,
இகழ்விலிவ் வனைத்தும் என்கோ
    கண்ணனைக் கூவு மாறே*#
1
3047
கூவுமா றரிய மாட்டேன்
    குன்றங்கள் அனைத்தும் என்கோ,
மேவுசீர் மாரி என்கோ*
    விளங்குதா ரகைகள் என்கோ,
நாவியல் கலைகள் என்கோ*
    ஞானநல் லாவி என்கோ,
பாவுசீர்க் கண்ணன் எம்மான்
    பங்கயக் கண்ண னையே*
2
3048
பங்கயக் கண்ணன் என்கோ*
    பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ*
    அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ*
    திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ*
    சாதிமா ணிக்கத் தையே*
3
3049
சாதிமா ணிக்கம் என்கோ*
    சவிகொள்பொன் முத்தம் என்கோ,
சாதிநல் வயிரம் என்கோ,
    தவிவில்சீர் விளக்கம் என்கோ,
ஆதியஞ் சோதி என்கோ*
    ஆதியம் புருடன் என்கோ,
ஆதுமில் காலத் தெந்தை
    அச்சுதன் அமல னையே*
4
3050
அச்சுதன் அமலன் என்கோ,
    அடியவர் வினைகெ டுக்கும்,
நச்சுமா மருந்தம் என்கோ*
    நலங்கடல் அமுதம் என்கோ,
அச்சுவைக் கட்டி என்கோ*
    அறுசுவை அடிசில் என்கோ,
நெய்ச்சுவைத் தேறல் என்கோ*
    கனியென்கோ* பாலென் கேனோ*
5
3051
பாலென்கோ* நான்கு வேதப்
    பயனென்கோ, சமய நீதி
நூலென்கோ* நுடங்கு கேள்வி
    இசையென்கோ, இவற்றுள் நல்ல
மேலென்கோ* வினையின் மிக்க
    பயனென்கோ, கண்ணன் என்கோ*
மாலென்கோ* மாயன் என்கோ
    வானவர் ஆதி யையே*
6
3052
வானவர் ஆதி என்கோ*
    வானவர் தெய்வம் என்கோ,
வானவர் போகம் என்கோ*
    வானவர் முற்றும் என்கோ,
ஊனமில் செல்வம் என்கோ*
    ஊனமில் கூவர்க்கம் என்கோ,
ஊனமில் மோக்கம் என்கோ*
    ஒளிமணி வண்ண னையே*
7
3053
ஒளிமணி வண்ணன் என்கோ*
    ஒருவனென் றேத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ*
    நான்முகக் கடவுள் என்கோ,
அளிமகிழ்ந் துலக மெல்லாம்
    படைத்தவை ஏத்த நின்ற,
களிமலர்த் துளவ னெம்மான்
    கண்ணனை மாய னையே*
8
3054
கண்ணனை மாயன் றன்னைக்
    கடல்கடைந் தமுதங் கொண்ட,
அண்ணலை அச்சு தன்னை
    அனந்தனை அனந்தன் றன்மேல்,
நண்ணிநன் குறைகின் றானை
    ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,
எண்ணுமா றரிய மாட்டேன்,
    யாவையும் யவரும் தானே.
9
3055
யாவையும் யவரும் தானாய்
    அவரவர் சமயந் தோறும்,
தோய்விலன் புலனைந் துக்கும்
    சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
ஆவிசேர் உயிரின் உள்ளால்
    ஆதுமோர் பற்றி லாத,
பாவனை அதனைக் கூடில்
    அவனையும் கூட லாமே.
10
3056
கூடிவண் டறையும் தண்டாரக்
    கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடலர் பொழில்கு ருகூர்
    வண்சட கோபன் சொன்ன,
பாடலோர் ஆயி ரத்துள்
    இவையும்ஓர் பத்தும் வல்லார்,
வீடில போக மெய்தி
    விரும்புவர் அமரர் மொய்த்தே.#
11
நேரிசை வெண்பா
புகழொன்று மாலெப் பெருள்களுந் தானாய்,
நிகழ்கின்ற நேர்காட்டி நிற்க-மகிழ்மாறன்,
எங்கும் அடிமைசெய இச்சித்து வாசிகமாய்,
அங்கடிமை செய்தான்மொய்ம் பால்.
24

5. மொய்ம்மாம்
திருமால்புகழ் பாடுவோரைக் கொண்டாடியும், அல்லாதாரை இகழ்ந்தும் அருளிச்செய்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3057
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை
    முதலைச் சிறைப்பட்டு நின்ற,
கைம்மா வுக்கருள் செய்த
    கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,
எம்மா னைச்சொல்லிப் பாடி
    எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,
தம்மால் கருமமென் சொல்லீர்
    தண்கடல் வட்டத்துள் ளீரே*#
1
3058
தண்கடல் வட்டத்துள் ளாரைத்
    தமக்கிரை யாத்தடிந் துண்ணும்,
திண்கழற் காலசு ரர்க்குத்
    தீங்கிழைக் கும்திரு மாலை,
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்
    பறந்தும் குனித்துழ லாதார்,
மண்கொள் உலகில் பிறப்பார்
    வல்வினை மோத மலைந்தே.
2
3059
மலையை யெடுத்துக்கல் மாரி
    காத்துப் பசுநிரை தன்னை,
தொலைவு தவிர்த்த பிரானைச்
    சொல்லிச்சொல் லிநின்றெப் போதும்,
தலையினோ டாதனம் தட்டத்
    தடுகுட்ட மாய்ப்பற வாதார்,
அலைகொள் நரகத் தழுந்திக்
    கிடந்துழைக் கின்ற வம்பரே.
3
3060
வம்பவிழ் கோதை பொருட்டா
    மால்விடை யேழும் அடர்த்த,
செம்பவ ளத்திரள் வாயன்
    சிரீதரன் தொல்புகழ் பாடி,
கும்பிடு நட்டமிட் டாடிக்
    கோகுகட் டுண்டுழ லாதார்,
தம்பிறப் பால்பய னென்னே
    சாது சனங்க ளிடையே?
4
3061
சாது சனத்தை நலியும்
    கஞ்சனைச் சாதிப்ப தற்கு,
ஆதியஞ் சோதி யுருவை
    அங்குவைத் திங்குப் பிறந்த,
வேத முதல்வனைப் பாடி
    வீதிகள் தோறும்துள் ளாதார்,
ஓதி யுணர்ந்தவர் முன்னா
    என்சவிப் பார்ம னிசரே?
5
3062
மனிசரும் மற்றும் முற்றுமாய்
    மாயப் பிறவி பிறந்த,
தனியன் பிறப்பிலி தன்னைத்
    தடங்கடல் சேர்ந்த பிரானை,
கனியைக் கரும்பினின் சாற்றைக்
    கட்டியைத் தேனை அமுதை,
முனிவின்றி ஏத்திக் குனிப்பார்
    முழுதுணர் நீர்மையி னாரே.
6
3063
நீர்மையில் நூற்றுவர் வீய
    ஐவர்க் கருள்செய்து நின்று,
பார்மல்கு சேனை அவித்த
    பரஞ்சுட ரைநினைந் தாடி,
நீர்மல்கு கண்ணின ராகி
    நெஞ்சம் குழைந்துநை யாதே,
ஊர்மல்கி மோடு பருப்பார்
    உத்தமர்கட் கென்செய் வாரே?
7
3064
வார்புனல் அந்தண் ணருவி
    வடதிரு வேங்கடத் தெந்தை,
பேர்பல சொல்லிப் பிதற்றிப்
    பித்தரென் றேபிறர் கூற,
ஊர்பல புக்கும் புகாதும்
    உலோகர் சிரிக்கநின் றாடி,
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
    அமரர் தொழப்படு வாரே.
8
3065
அமரர் தொழப்படு வானை
    அனைத்துல குக்கும் பிரானை,
அமரர் மனத்தினுள் யோகு
    புணர்ந்தவன் றன்னோடொன் றாக,
அமரத் துணியவல் லார்கள்
    ஒழியஅல் லாதவ ரெல்லாம்,
அமர நினைந்தெழுந் தாடி
    அலற்றுவ தேகரு மம்மே.
9
3066
கருமமும் கரும பலனும்
    ஆகிய காரணன் றன்னை,
திருமணி வண்ணனைச் செங்கண்
    மாலினைத் தேவ பிரானை,
ஒருமை மனத்தினுள் வைத்து
    உள்ளங் குழைந்தெழுந் தாடி,
பெருமையும் நாணும் தவிர்ந்து
    பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.
10
3067
தீர்ந்த அடியவர் தம்மைத்
    திருத்திப் பணிகொள்ள வல்ல,
ஆர்ந்த புகழச் சுதனை
    அமரர் பிரானையெம் மானை,
வாய்ந்த வளவயல் சூழ்தண்
    வளங்குரு கூர்ச்சட கோபன்,
நேர்ந்தவோ ராயிரத் திப்பத்
    தருவினை நீறு செய்யுமே.#
11
நேரிசை வெண்பா
மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்துவப்பால்,
அன்பாலாட் செய்பவரை யாதரித்தும்,-அன்பிலா
மூடரைநிந் தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்,
தேடரிய பத்திநெஞ்சே* செய்.
25

மேலே செல்க

6. செய்ய தாமரை
அர்ச்சாவதாரமே சுலப விஷயம் எனல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3068
செய்ய தாமரைக் கண்ண னாயுல
    கேழு முண்ட அவன்கண்டீர்,
வையம் வானம் மனிசேர் தெய்வம்
    மற்றும் மற்றும் முற்றுமாய்,
செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப்
    பட்டி வைபடைத் தான்பின்னும்,
மொய்கொள் சோதியொ டாயி னானொரு
    மூவ ராகிய மூர்த்தியே.#
1
3069
மூவ ராகிய மூர்த்தி யைமுதல்
    மூவர்க் குமுதல் வன்றன்னை,
சாவ முள்ளன நீக்கு வானைத்
    தடங்க டல்கிடந் தான்றன்னைத்,
தேவ தேவனைத் தென்னி லங்கை
    எரியெ ழச்செற்ற வில்லியை,
பாவ நாசனைப் பங்க யத்தடங்
    கண்ண னைப்பர வுமினோ.
2
3070
பரவி வானவ ரேத்த நின்ற
    பரம னைப்பரஞ் சோதியை,
குரவை கோத்த குழக னைமணி
    வண்ண னைக்குடக் கூத்தனை,
அரவ மேறி யலைக டலம
    ரும்து யில்கொண்ட அண்ணலை,
இரவும் நன்பக லும்வி டாதென்றும்
    ஏத்து தல்மனம் வைம்மினோ.
3
3071
'வைம்மின் நும்மனத் தெ'ன்று யானுரைக்
    கின்ற மாயவன் சீர்மையை,
எம்ம னோர்க ளுரைப்ப தென்?அது
    நிற்க நாடொறும், வானவர்
தம்மை யாளும் அவனும் நான்முக
    னும்ச டைமுடி அண்ணலும்,
செம்மை யாலவன் பாத பங்கயம்
    சிந்தித் தேத்தி திரிவரே.
4
3072
திரியும் காற்றோ டகல்வி சும்பு
    திணிந்த மண்கிடந் தகடல்,
எரியும் தீயொ டிருசு டர்தெய்வம்,
    மற்றும் மற்றும் முற்றுமாய்,
கரிய மேனியன் செய்ய தாமரைக்
    கண்ணன் கண்ணன்விண் ணோரிறை,
சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள்
    சுடர்மு டியண்ணல் தோற்றமே.
5
3073
தோற்றக் கேடவை யில்ல வனுடை
    யான வனொரு மூர்த்தியாய்,
சீற்றத் தோடருள் பெற்ற வனடிக்
    கீர்ப்பு கநின்ற செங்கண்மால்,
நாற்றத் தோற்றச் சுவையொ லிஊறல்
    ஆகி நின்ற,எம் வானவர்
ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை
    யானி லேனெழு மைக்குமே.
6
3074
எழுமைக் குமென தாவிக் கின்னமு
    தத்தி னைஎன தாருயிர்,
கெழுமி யகதிர்ச் சோதி யைமணி
    வண்ண னைக்குடக் கூத்தனை,
விழுமி யவம ரர்மு னிவர்வி
    ழுங்கும் கன்னல் கனியினை,
தொழுமின் தூயம னத்த ராயிறை
    யும்நில் லாதுய ரங்களே.
7
3075
துயர மேதரு துன்ப இன்ப
    வினைக ளாய்அவை அல்லனாய்,
உயர நின்றதோர் சோதி யாயுல
    கேழு முண்டுமிழந் தான்றன்னை,
அயர ஆங்கு நமன்ற மர்க்கரு
    நஞ்சி னையச்சு தன்றன்னை,
தயர தற்கும கன்றன் னையன்றி
    மற்றி லேன்தஞ்ச மாகவே.
8
3076
தஞ்ச மாகிய தந்தை தாயொடு
    தானு மாயவை அல்லனாய்,
எஞ்ச லிலம ரர்கு லமுதல்
    மூவர் தம்முள்ளு மாதியை,
அஞ்சி நீருல கத்துள் ளீர்கள்*
    அவனி வனென்று கூழேன்மின்,
நெஞ்சி னால்நினைப் பான்ய வனவன்
    ஆகும் நீள்கடல் வண்ணனே.
9
3077
கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்கரு
    மாணிக் கமென தாருயிர்
படவ ரவின ணைக்கி டந்த
    பரஞ்சு டர்பண்டு நூற்றுவர்,
அடவ ரும்படை மங்க ஐவர்கட்
    காகி வெஞ்சமத்து, அன்றுதேர்
கடவி யபெரு மான்க னைகழல்
    காண்ப தென்றுகொல் கண்களே?
10
3078
கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத்
    துக்கு நன்றுமெ ளியனாய்,
மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள்
    செய்யும் வானவ ரீசனை,
பண்கொள் சோலை வழுதி நாடன்
    குருகைக் கோன்சட கோபன்சொல்,
பண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த
    ராகக் கூடும் பயின்மினே.#
11
நேரிசை வெண்பா
செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்,
துய்ய விபவமுமாய்த் தோன்றிவற்றுள்,-எய்துமவர்க்
கிந்நிலத்தில் அர்ச்சாவ தாரம் எளிதென்றான்,
பன்னுதமிழ் மாறன் பயின்று.
26

7. பயிலும் சுடரொளி
திருமாலடியார்க்கடிமையை அருளிச்செய்தல்
கலி நிலைத்துறை
3079
பயிலும் சுடரொளி மூர்த்தியைப்
    பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல்
    சேர்ந்த பரமனை,
பயிலும் திருவுடை யார்யவ
    ரேலும் அவர்கண்டீர்,
பயிலும் பிறப்புடை தோறெம்மை
    யாளும் பரமரே.
1
3080
ஆளும் பரமனைக் கண்ணனை
    ஆழிப் பிரான்றன்னை,
தோளுமோர் நான்குடைத்ட தூமணி
    வண்ணனெம் மான்றன்னை
தாளும் தடக்கையும் கூப்பிப்
    பணியும் அவர்கண்டீர்,
நாளும் பிறப்பிடை தோறெம்மை
    யாளுடை நாதரே.
2
3081
நாதனை ஞாலமும் வானமும்
    ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனை, பொன்னெடுஞ் சக்கரத்
    தெந்தை பிரான்றன்னை
பாதம் பணியவல் லாரைப்
    பணியும் அவர்கண்டீர்,
ஓதும் பிறப்புடை தோறெம்மை
    யாளுடை யார்களே.
3
3082
உடையார்ந்த வாடையன் கண்டிகை
    யன்உடை நாணினன்
புடையார்பொன் னூலினன் பொன்முடி
    யன்மற்றும் பல்கலன்,
நடையா வுடைத்திரு நாரணன்
    தொண்டர்தொண் டர்கண்டீர்,
இடையார் பிறப்புடை தோறெமக்
    கெம்பெரு மக்களே.
4
3083
பெருமக்க ளுள்ளவர் தம்பெரு
    மானை, அமரர்கட்
கருமை யொழியஅன் றாரமு
    தூட்டிய அப்பனை,
பெருமை பிதற்றவல் லாரைப்
    பிதற்றும் அவர்கண்டீர்,
வருமையு மிம்மையும் நம்மை
    யளிக்கும் பிராக்களே.
5
3084
அளிக்கும் பரமனைக் கண்ணனை
    ஆழிப் பிரான்றன்னை,
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி
    வண்ணனெம் மான்றன்னை,
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக்
    கொள்ளும் அவர்கண்டீர்,
சலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன்
    மாந்தரங் காப்பரே.
6
3085
சன்சமன் மாந்தரங் காத்தடி
    யார்களைக் கொண்டுபோய்,
தன்மை பெறுத்தித்தன் தாளிணைக்
    கீழ்க்கொள்ளும் அப்பனை,
தொன்மை பிதற்றவல் லாறைப்
    பிதற்றும் அவர்கண்டீர்,
நம்மை பெறுத்தெம்மை நாளுய்யக்
    கொள்கின்ற நம்பரே.
7
3086
நம்பனை ஞாலம் படைத்தவ
    னைத்திரு மார்பனை,
உம்பர் உலகினில் யார்க்கும்
    உணர்வரி யான்றன்னைக்,
கும்பி நரகர்கள் ஏத்துவ
    ரேலும் அவர்கண்டீர்,
எம்பல் பிறப்பிடை தோறெம்
    தொழுகுலம் தாங்களே.
8
3087
குலந்தாங்கு சாதிகள் நாலிலும்
    கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண்
    டாளர்க ளாகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல்
    மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி
    யாரெம் மடிகளே.
9
3088
அடியார்ந்த வையமுண் டாலிலை
    யன்னவ சஞ்செய்யும்,
படியாது மில்குழ விப்படி
    யெந்தைபி ரான்றனக்கு,
அடியார் அடியார் தம்அடி
    யார்அடி யார்தமக்
கடியார் அடியார் தம்,அடி
    யாரடி யோங்களே.
10
3089
அடியோங்கு நூற்றவர் வீயஅன்
    றைவருக் கருள்செய்த
நெடியோனை, தென்குரு கூர்ச்சட
    கோபன்குற் றேவல்கள்,
அடியார்ந்த ஆயிரத் துள்ளிவை
    பத்தவன் தொண்டர்மேல்
முடிவு,ஆரக் கற்கில் சன்மம்செய்
    யாமை முடியுமே.#
11
நேரிசை வெண்பா
பயிலுந் திருமால் பதந்தன்னில், நெஞ்சம்
தயலுண்டு நிற்குந் ததியர்க்கு-இயல்வுடனே
ஆளானார்க் காளாகும் மாறன் அடியதனில்,
ஆளாகார் சன்மமுடி யா.
27

8. முடியானே
ஐம்புலன்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்
கலி விருத்தம்
3090
முடியானே* மூவுலகும் தொழுதேத் தும்சீர்
அடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய்* புள்ளூர்
கொடியானே, கொண்டல்வண் ணா*அண்டத் தும்பரில்
நெடியானே, என்று கிடக்குமென் நெஞ்சமே.#
1
3091
நெஞ்சமே* நீள்நக ராக இருந்தவென்
தஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற
நஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய
வஞ்சனே, என்னுமெப் போதுமென் வாசகமே.
2
3092
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்
நாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து,
வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்
தாயவனே, என்று தடவுமென் கைகளே.
3
3093
கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை,
வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி,
பைகொள் பாம்பேறி உறைபர னே,உன்னை
மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே.
4
3094
கண்களால் காண வருங்கொலைன் றாசையால்,
மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்,
பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து,
திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே.
5
3095
செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று,
புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே,
அவிவின்றி யாதரிக் கும்என தாவியே.
6
3096
ஆவியே* ஆதமு தே*என்னை ஆளுடை,
தூவியும் புள்ளுடை யாய்*சுடர் நேமியாய்,
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்,
கூவியும் காணப் பெறேனுன கோலமே.
7
3097
கோலமே* தாமரைக் கண்ணதோர் அஞ்சன
நீலமே, நின்றென தாவியை யீர்கின்ற
சீலமே, சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே, உன்னையெந் நாள்கண்டு கொள்வனே?
8
3098
'கொள்வன்நான் மாவலி மூவடி தா'என்ற
கள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓ ராயிரம் தோள்துணித்த
புள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே?
9
3099
பொருந்திய மாமரு தின்னிடை போயவெம்
பெருந்தகாய், உன்கழல் காணிய பேதுற்று,
வருந்திநான் வாசக மாலைகொண்டு, உன்னையே
இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே?
10
3100
புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை,
நலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்,சொல்
வலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்பத்து,
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே.#
11
நேரிசை வெண்பா
முடியாத ஆசைமிக முற்றுகர ணங்கள்,
அடியார்தம் மைவிட் டவன்பால்-படியா,ஒன்
றொன்றின் செயல்விரும்ப உள்ளதெல்லாந் தாம்விரும்பத்,
துன்னியதே மாறன்றன் சொல்.
28

9. சொன்னால்
மனிதரைப் புகழாது எம்பெருமானைப் புகழும்படி அறிவுறுத்தல்
கலி நிலைத்துறை
3101
சொன்னால் விரோதமிது ஆகிலும்
    சொல்லுவன் கேண்மினோ,
என்னாவில் இன்கவி யானொரு
    வர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனாவென்று வண்டு
    முரல்திரு வேங்கடத்து,
என்னானை என்னப்பன் எம்பெரு
    மானுள னாகவே.#
1
3102
உளனாக வேயெண்ணித் தன்னையொன்
    றாகத்தன் செல்வத்தை
வளனா மதிக்குமிம் மானிடத்
    தைக்கவி பாடியென்,
குளனார் கழனிசூழ் கண்ணன்
    குறுங்குடி மெய்ம்மையே,
உளனாய எந்தையை எந்தைபெம்
    மாலை ஒழியவே?
2
3103
ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோ
    றூழி நிலாவ,போம்
வழியைத் தரும்நங்கள் வானவர்
    ஈசனை நிற்கப்போய்,
கழிய மிகநல்ல வான்கவி
    கொண்டு புலவீர்காள்,
இழியக் கருதியோர் மானிடம்
    பாடலென் னாவதே?
3
3104
என்னாவ தெத்தனை நாளைக்குப்
    போதும் புலவீர்காள்,
மன்னா மனிசரைப் பாடிப்
    படைக்கும் பெரும்பொருள்?,
மின்னார் மணிமுடி விண்ணவர்
    தாதையைப் பாடினால்,
தன்னாக வேகொண்டு சன்மம்செய்
    யாமையும் கொள்ளுமே.
4
3105
கொள்ளும் பயனில்லைக் குப்பை
    கிளர்த்தன்ன செல்வத்தை,
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை
    இழக்கும் புலவீர்காள்,
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்
    லாம்தரும் கோதில்,என்
வள்ளல் மணிவண்ணன் றன்னைக்
    கவிசொல்ல வம்மினோ.
5
3106
வம்மின் புலவீர்*நும் மெய்வருத்
    திக்கைசெய் துய்ம்மினோ,
இம்மன் னுலகில் செல்வரிப்
    போதில்லை நோக்கினோம்,
நும்மின் கவிகொண்டு நும்நுமிட்
    டாதெய்வம் ஏத்தினால்,
செம்மின் சுடர்முடி என்திரு
    மாலுக்குச் சேருமே.
6
3107
சேரும் கொடைபுகழ் எல்லையி
    லானை,ஓ ராயிரம்
பேரும் உடைய பிரானையல்
    லால்மற்று யான்கிலேன்,
மாரி யனையகை மால்வரை
    யொக்கும்திண் டோளென்று,
பாரிலோர் பற்றையைப் பச்சைப்
    பசும்பொய்கள் (*)வேயவே.

(*) பேசவே என்பதும் பாடம்.
7
3108
வேயின் மலிபுரை தோளிபின்
    னைக்கு மணாளனை,
ஆய பெரும்புகழ் எல்லையி
    லாதன பாடிப்போய்,
காயம் கழித்துஅவன் தாளிணைக்
    கீழ்ப்புகுங் காதலன்,
மாய மனிசரை என்சொல்ல
    வல்லேனென் வாய்கொண்டே?
8
3109
வாய்கொண்டு மானிடம் பாடவந்
    தகவி யேனல்லேன்,
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பி
    ரானெனக் கேயுளன்,
'சாய்கொண்ட இம்மையும் சாதித்து
    வானவர் நாட்டையும்,
நீகண்டு கொள்' என்று வீடும்
    தரும்நின்று நின்றே*
9
3110
நின்றுநின் றுபல நாளுய்க்கும்
    இவ்வுடல் நீங்கிப்போய்,
சென்றுசென் றாகிலும் கண்டுசன்
    மங்கழிப் பானெண்ணி,
ஒன்றியொன் றியுல கம்படைத்
    தான்கவி யாயினேற்கு,
என்றுமென் றுமினி மற்றொரு
    வர்கவி யேற்குமே?
10
3111
ஏற்கும் பெரும்புகழ் வானவர்
    ஈசன்கண் ணன்றனக்கு,
ஏற்கும் பெரும்புகழ் வண்குரு
    கூர்ச்சட கோபன்சொல்,
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்
    துள்ளிவையும் ஓர்பத்து,
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்
    லார்க்கில்லை சன்மமே.#
11
நேரிசை வெண்பா
'சொன்னாவில் வாழ்புலவீர்* சோறுகூ றைக்காக,
மன்னாத மானிடரை வாழ்த்துதலால்,-என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும்' எனுங்குருகூர்,
மன்னருளான் மாறுஞ்சன் மம்.
29

10. சன்மம் பலபல
திருமாலைத் துதிக்கும் தமக்கு ஒரு குறையும் இல்லை எனல்
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
3112
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்
    சங்கொடு சக்கரம்வில்,
ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு
    கொண்டுபுள் ளூர்ந்து,உலகில்
வன்மை யுடைய அரக்கர் அசுரரை
    மாளப் படைபொருத,
நன்மை யுடையவன் சீர்பர வப்பெற்ற
    நானோர் குறைவிலனே.#
1
3113
குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்
    கோலச்செந் தாமரைக்கண்,
உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த
    ஒளிமணி வண்ணன்கண்ணன்,
கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி
    அசுரரைக் காய்ந்தவம்மான்,
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
    யானொரு முட்டிலனே.
2
3114
முட்டில்பல் போகத் தொருதனி நாயகன்
    மூவுல குக்குரிய,
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக்
    கனியைக் கரும்புதன்னை,
மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை
    வணங்கி அவன்திறத்துப்
பட்டபின் னை.இறை யாகிலும் யானென்
    மனத்துப் பரிவிலனே.
3
3115
'பரிவின்றி வாணனைக் காத்தும்'என் றன்று
    படையொடும் வந்தெதிர்ந்த
திரிபுரம் செற்றவ னும்மக னும்பின் னும்
    அங்கியும் போர்தொலைய,
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
    ஆயனைப் பொற்சக்கரத்
தரியினை, அச்சுத னைப்பற்றி யானிறை
    யேனும் இடரிலனே.
4
3116
இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல்
    லாவுல கும்கழிய,
படர்புகழ்ப் பார்த்தனும் வைதிய னுமுடன்
    ஏறத்திண் டேர்கடவி,
சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில்
    வைதிகன் பிள்ளைகளை,
உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி
    ஒன்றும் துயரிலனே.
5
3117
துயரில் சுடரொளி தன்னுடைச் சோதிநின்
    றவண்ணம் நிற்கவே,
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
    தோன்றிக்கண் காணவந்து,
துயரங்கள் செய்துநன் தெய்வ நிலையுல
    கில்புக வுய்க்குமம்மான்,
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற
    யானோர்து ன்பமிலனே.
6
3118
துன்பமும் இன்பமு மாகிய செய்வினை
    யாயுல கங்களுமாய்,
இன்பமில் வெந்நர காகி இனியநல்
    வான்சுவர்க் கங்களுமாய்,
மன்பல் லுயிர்களு மாகிப் பலபல
    மாய மயக்குகளால்,
இன்புறும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்
    றேதுமல் லலிலனே.
7
3119
அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும்
    அழகமர் சூழொளியன்,
அல்லி மலர்மகள் போக மயக்குகள்
    ஆகியும் நிற்குமம்மான்,
எல்லையில் ஞானத்தன் ஞானமஃ தேகொண்டெல்
    லாக்கரு மங்களும்செய்,
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி
    யானோர்துக் கமிலனே.
8
3120
துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி
    துழாயலங் கல்பெருமான்,
மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து
    வேண்டும் உருவுகொண்டு,
நக்கபி ரானோ டயன்முத லாகஎல்
    லாரும் எவையும்,தன்னுள்
ஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற்
    றொன்றும் தளர்விலனே.
9
3121
தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த
    தனிமுதல் ஞானமொன்றாய்,
அளவுடை யைம்புலன் களறி யாவகை
    யாலரு வாகிநிற்கும்,
வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள்
    ஐந்தை யிருசுடரை,
கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி
    யானென்றும் கேடிலனே.
10
3122
கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு
    கூர்ச்சட கோபன்சொன்ன,
பாடலோ ராயிரத் துளிவை பத்தும்
    பயிற்றவல் லார்கட்கு,அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண
    நலனிடை யூர்திபண்ணி,
வீடும்பெ றுத்தித்தன் மூவுல குக்கும்
    தருமொரு நாயகமே.#
11
நேரிசை வெண்பா
'சன்மம் பலசெய்து தானிவு வுலகளிக்கும்
நன்மையுடை மால்குணத்தை நாடோறும்,-இம்மையிலே
ஏத்துமின்பம் பெற்றேன்' எனுமா றனையுலகீர்,
நாத்தழும்ப ஏத்துமொரு நாள்.
30
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

நான்காம் பத்து
1. ஒரு நாயகம்
செல்வம் நிலையில்லாதது, நாரணன் அடிமையே நிலைபெற்றது எனல்
கலி விருத்தம்
3123
ஒருநா யகமாய் ஓட
    வுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர்
    சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையி
    லேபிச்சை தாம்கொள்வர்,
திருநா ரணன்தாள் காலம்
    பெறச்சிந்தித் துய்ம்மினோ.#
1
3124
உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுல
    காண்டவர், இம்மையே
தம்மின் சுவைமட வாரைப்
    பிறர்கொள்ளத் தாம்விட்டு,
வெம்மி னொளிவெயில் கானகம்
    போய்க்குமை தின்பர்கள்,
செம்மின் முடித்திரு மாலை
    விரைந்தடி சேர்மினோ.
2
3125
அடிசேர் முடியின ராகி
    யரசர்கள் தாம்தொழ,
இடிசேர் முரசங்கள் முற்றத்
    தியம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்கள்
    ஆதலின் நொக்கென,
கடிசேர் துழாய்முடிக் கண்ணன்
    கழல்கள் நினைமினோ.
3
3126
நினைப்பான் புகில்கடல் எக்கலின்
    நுண்மண லிற்பலர்,
எனைத்தோ ருகங்களும் இவ்வுல
    காண்டு கழிந்தவர்,
மனைப்பால் மருங்கற மாய்தலல்
    லால்மற்றுக் கண்டிலம்,
பனைத்தாள் மதகளி றட்டவன்
    பாதம் பணிமினோ.
4
3127
பணிமின் திருவருள் என்னும்அஞ்
    சீதப்பைம் பூம்பள்ளி,
அணிமென் குழலார் இன்பக்
    கலவி அமுதுண்டார்,
துணிமுன்பு நாலப்பல் லேழையர்
    தாமிழிப் பச்செல்வர்,
மணிமின்னு மேனிநம் மாயவன்
    பேர்சொல்லி வாழ்மினோ.
5
3128
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை
    மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று
    முதலின் றறுதியா,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென்
    பதில்லை நிற்குறில்,
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல்
    அடியவர் ஆமினோ.
6
3129
ஆமின் சுவையவை ஆறோ
    டடிசிலுண் டார்ந்தபின்,
தூமென் மொழிமட வாரிரக்
    கப்பின்னும் துற்றுவார்,
ஈமின் எமக்கொரு துற்றென்
    றிடறுவ ராதலின்,
கோமின் துழாய்முடி ஆதியஞ்
    சோதி குணங்களே.
7
3130
குணங்கொள் நிறைபுகழ் மன்னர்
    கொடைக்கடன் பூண்டிருந்து,
இணங்கி யுலகுட னாக்கிலும்
    ஆங்கிவ னையில்லார்,
மணங்கொண்ட கோபத்து மன்னியு
    மீள்வர்கள் மீள்வில்லை,
பணங்கொள் அரவணை யான்திரு
    நாமம் படிமினோ.
8
3131
படிமன்னு பல்கலன் பற்றோ
    டறுத்துஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற்
    றார்களு மாங்கவ னையில்லார்,
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியு
    மீள்வர்கள் மீள்வில்லை,
கொடிமன்னு புள்ளுடை அண்ணல்
    கழல்கள் குறுகுமினோ.
9
3132
குறுக மிகவுணர் வத்தொடு
    நோக்கியெல் லாம்விட்ட,
இறுக லிறப்பென்னும் ஞானிக்கும்
    அப்பய னில்லையேல்,
சிறுக நினைவதோர் பாசமுண்
    டாம்பின்னும் வீடில்லை,
மறுபகலில் ஈசனைப் பற்றி
    விடாவிடில் வீடஃதே.
10
3133
அஃதே உய்யப் புகுமாறென்று
    கண்ணன் கழல்கள்மேல்,
கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்
    சடகோபன் குற்றேவல்,
செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்
    பாடல் இவைபத்தும்,
அஃகாமற் கற்பவர் ஆழ்துயர்
    போயுய்யற் பாலரே.#
11
நேரிசை வெண்பா
ஒருநா யகமாய் உலகுக்கு, வானோர்
இருநாட்டில் ஏறியுய்க்கும் இன்பம்-திரமாகா,
மன்னுயிர்ப்போ கந்தீது மாலடிமை யேயினிதாம்,
பன்னியிவை மாறனுரைப் பால்.
31

2. பாலனாய்
தலைவியின் நிலை கண்டு தாய் இரங்கிக் கூறுதல்
கலி விருத்தம்
3134
பாலனா யேழுல குண்டு பரிவின்றி,
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,
தாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே
மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.#
1
3135
வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்,
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்,
நல்லடி மேலணி நாறு துழாயென்றே
சொல்லுமால், சூழ்வினை யாட்டியேன் பாவையே.
2
3136
பாவியல் வேதநன் மாலை பலகொண்டு,
தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற
சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே
கூவுமால், கோள்வினை யாட்டியேன் கோதையே.
3
3137
கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்,
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதுமால், ஊழ்வினை யேன்தடந் தோளியே.
4
3138
தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇக்
கோளியார் கோவல னார்குடக் கூத்தனார்,
தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே
நாளுநாள், நைகின்ற தால்என்றன் மாதரே.
5
3139
மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,
ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதும்மால், எய்தினள் என்றன் மடந்தையே.
6
3140
மடந்தையை வண்கம லத்திரு மாதினை,
தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்,
வடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்
மடங்குமால், வாணுத லீர்*என் மடக்கொம்பே.
7
3141
கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்,
அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி,
வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்
நம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர்*
8
3142
நங்கைமீர்* நீரும்ஓர் பெண்பெற்று நல்கினீர்,
எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை,
சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்,
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?
9
3143
என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம்,
என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்,
மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்,
பொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே.
10
3144
மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்,
மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,
ஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
மலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே.#
11
நேரிசை வெண்பா
பாலரைப்போற் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்,
காலத்தாற் றேசத்தாற் கைகழிந்த,-சால
அரிதான போகத்தில் ஆசையுற்று நைந்தான்,
குருகூரில் வந்துதித்த கோ.
32

3. கோவை வாயாள்
நாராயணன் சேர்க்கையால் அடைந்த இன்பம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3145
கோவை வாயாள் பொருட்டேற்றின்
    எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக்
கோவை வீயச் சிலைகுனித்தாய்*
    குலநல் யானை மருப்பொசித்தாய்,
பூவை வீயா நீர்தூவிப்
    போதால் வணங்கே னேலும்,நின்
பூவை வீயாம் மேனிக்குப்
    பூசும் சாந்தென் னெஞ்சமே.#
1
3146
பூசும் சாந்தென் னெஞ்சமே
    புனையும் கண்ணி எனதுடைய,
வாச கம்செய் மாலையே
    வான்பட் டாடை யுமஃதே,
தேச மான அணிகலனும்
    என்கை கூப்புச் செய்கையே,
ஈசன் ஞால முண்டுமிழ்ந்த
    எந்தை யேக மூர்த்திக்கே.
2
3147
ஏக மூர்த்தி இருமூர்த்தி
    மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி, ஐந்து பூதமாய்
    இரண்டு சுடராய் அருவாகி,
நாகம் ஏறி நடுக்கடலுள்
    துயின்ற நாரா யணனே,உன்
ஆகம் முற்றும் அகத்தடக்கி
    ஆவி யல்லல் மாய்த்ததே.
3
3148
மாய்த்தல் எண்ணி வாய்முலை
    தந்த மாயப் பேயுயிர்
மாய்த்த, ஆய மாயனே*
    வாம னனே மாதவா,
பூத்தண் மாலை கொண்டுன்னைப்
    போதால் வணங்கே னேலும்,நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப்
    புனையும் கண்ணி எனதுயிரே.
4
3149
கண்ணி யெனதுயிர் காதல்
    கனகச் சோதி முடிமுதலா,
எண்ணில் பல்க லன்களும்
    ஏலு மாடை யுமஃதே,
நண்ணி மூவு லகும்ந
    விற்றும் கீர்த்தி யுமஃதே,
கண்ண னெம்பி ரானெம்மான்
    கால சக்கரத் தானுக்கே.
5
3150
'கால சக்க ரத்தோடு
    வெண்சங் கம்கை யேந்தினாய்,
ஞால முற்று முண்டுமிழ்ந்த
    நாரா யணனே*' என்றென்று,
ஓல மிட்டு நானழைத்தால்
    ஒன்றும் வாரா யாகிலும்,
கோல மாமென் சென்னிக்குன்
    கமலம் அன்ன குரைகழலே.
6
3151
குரைக ழல்கள் நீட்டிமண்
    கொண்ட கோல வாமனா,
குரைக ழல்கை கூப்புவார்கள்
    கூட நின்ற மாயனே,
விரைகொள் பூவும் நீரும்கொண்
    டேத்த மாட்டே னேலும்,உன்
உரைகொள் சோதித் திருவுருவம்
    என்ன தாவி மேலதே.
7
3152
என்ன தாவி மேலையாய்
    ஏர்கொள் ஏழு லகமும்,
துன்னி முற்று மாகிநின்ற
    சோதி ஞான மூர்த்தியாய்,
உன்ன தென்ன தாவியும்
    என்ன துன்ன தாவியும்,
இன்ன வண்ண மேநின்றாய்
    என்று ரைக்க வல்லேனே?
8
3153
உரைக்க வல்லேன் அல்லேனுன்
    உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன்நான்?
    காதல் மையல் ஏறினேன்,
புரைப்பி லாத பரம்பரனே*
    பொய்யி லாத பரஞ்சுடரே,
இரைத்து நல்ல மேன்மக்கள்
    ஏத்த யானும் ஏத்தினேன்.
9
3154
யானும் ஏத்தி ஏழுலகும்
    முற்றும் ஏத்தி, பின்னையும்
தானும் ஏத்தி லும்தன்னை
    ஏத்த ஏத்த எங்கெய்தும்,
தேனும் பாலும் கன்னலும்
    அமுது மாகித் தித்திப்ப,
யானு மெம்பி ரானையே
    ஏத்தி னேன்யா னுய்வானே.
10
3155
உய்வு பாயம் மற்றின்மை
    தேறிக் கண்ணன் ஒண்கழல்மேல்
செய்ய தாம ரைப்பழனத்
    தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆரத்துள்
    இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து
    விண்ணும் ஆள்வர் மண்ணூடே.#
11
நேரிசை வெண்பா
கோவான ஈசன் குறைவெல்லாந் தீரவே,
ஓவாத காலத் துவாதிதனை,-மேவிக்
கழித்தடையக் காட்டிக் கலந்தகுண மாறன்,
வழுத்துதலால் வாழ்ந்ததிந்த மண்.
33

4. மண்ணை
பிரிவாற்றாத நிலையில் போலிகண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3156
மண்ணை யிருந்து துழாவி
    'வாமனன் மண்ணிது' என்னும்,
விண்ணைத் தொழுதவன் மேவு
    வைகுந்த மென்றுகை காட்டும்,
கண்ணையுள் நீர்மல்க நின்று
    'கடல்வண்ணன்' என்னும் அன்னே*என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்
    கென்செய்கேன் பெய்வளை யீரே.#
1
3157
பெய்வளைக் கைகளைக் கூப்பிப்
    'பிரான்கிடக் கும்கடல்' என்னும்,
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச்
    'சிரீதரன் மூர்த்தியீ தெ'ன்னும்,
நையும்கண் ணீர்மல்க நின்று
    'நாரணன்' என்னும்அன் னே,என்
தெய்வ வுருவில் சிறுமான்
    செய்கின்ற தொன்றறி யேனே.
2
3158
அறியும்செந் தீயைத் தழுவி
    'அச்சுதன்' என்னும்மெய் வேவாள்,
எறியும்தண் காற்றைத் தழுவி
    'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,
வெறிகொள் துழாய்மலர் நாறும்
    வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான்
    செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே.
3
3159
ஒன்றிய திங்களைக் காட்டி
    'ஒளிமணி வண்ணனே' என்னும்
நின்றகுன் றத்தினை நோக்கி
    'நெடுமாலே* வா'என்று கூவும்,
நன்றுபெய் யும்மழை காணில்
    'நாரணன் வந்தான்'என் றாலும்,
என்றின மையல்கள் செய்தார்
    என்னுடைக் கோமளத் தையே.
4
3160
கோமள வான்கன்றைப் புல்கிக்
    'கோவிந்தன் மேய்த்தன' என்னும்,
போமிள நாகத்தின் பின்போய்
    'அவன்கிடக் கையீ தெ'ன்னும்,
ஆமள வொன்றும் அறியேன்
    அருவினை யாட்டினேன் பெற்ற,
கோமள வல்லியை மாயோன்
    மால்செய்து செய்கின்ற கூத்தே.
5
3161
கூத்தர் குடமெடுத் தாடில்
    'கோவிந்த னாம்'எனா ஓடும்,
வாய்த்த குழலோசை கேட்கில்
    'மாயவன்' என்றுமை யாக்கும்,
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்
    'அவனுண்ட வெண்ணெயீ தெ'ன்னும்,
பேய்ச்சி முலைசுவைத் தாற்கென்
    பெண்கொடி யேறிய பித்தே*
6
3162
ஏறிய பித்தினோ 'டெல்லா
    வுலகும்கண் ணன்படைப் பெ'ன்னும்,
நீறுசெவ் வேயிடக் காணில்
    'நெடுமால் அடியார்'என் றோடும்,
நாறு துழாய்மலர் காணில்
    'நாரணன் கண்ணியீ தெ'ன்னும்,
தேறியும் தேறாது மாயோன்
    திறத்தன ளேயித் திருவே.
7
3163
திருவுடை மன்னரைக் காணில்
    'திருமாலைக் கண்டேனே' என்னும்,
உருவுடை வண்ணங்கள் காணில்
    'உலகளந் தான்'என்று துள்ளும்,
கருவுடைத் தேவில்க ளெல்லாம்
    'கடல்வண்ணன் கோயிலே' என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக்
    கண்ணன் கழல்கள் விரும்புமே.
8
3164
விரும்பிப் பகைவரைக் காணில்
    'வியலிடம் உண்டானே' என்னும்,
கரும்பெரு மேகங்கள் காணில்
    'கண்ணன்'என் றேறப் பறக்கும்,
பெரும்புல ஆநிரை காணில்
    'பிரானுளன்' என்றுபின் செல்லும்,
அரும்பெறல் பெண்ணினை மாயோன்
    அலற்றி அயர்ப்பிக்கின் றானே*
9
3165
அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும்
    அகலவே நீணோக்குக் கொள்ளும்,
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
    வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும்,
பெயர்த்தும்'கண் ணா*'என்று பேசும்
    'பெருமானே* வா'என்று கூவும்,
மயல்பெருங் காதலென் பேதைக்
    கென்செய்கேன் வல்வினை யேனே*
10
3166
வல்வினை தீர்க்கும் கண்ணனை
    வண்குரு கூர்ச்சட கோபன்,
சொல்வினை யால்சொன்ன பாடல்
    ஆயிரத் துள்ளிவை பத்தும்,
நல்வினை யென்றுகற் பார்கள்
    நலனிடை வைகுந்தம் நண்ணி,
தொல்வினை தீரவெல் லாரும்
    தொழுதெழ வீற்றிருப் பாரே.#
11
நேரிசை வெண்பா
மண்ணுலகில் முன்கலந்து மால்பிரிகை யால்.,மாறன்
பெண்ணிலைம யாய்க்காதற் பித்தேறி,-எண்ணிடில்முன்
போலிமுத லான பொருளையவ னாய்நினைந்து,
மேல்விழுந்தான் மையல்தனின் விறு.
34

5. வீற்றிருந்து
இறைவன் தனது பெருமையெல்லாம் தோன்ற வெளிப்பட ஆழ்வார் மங்களாசாசனம் செய்து இன்புறுதல்
கலி நிலைத்துறை
3167
வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல்
    செல்ல, வீவில்சீர்,
ஆற்றல்மிக் காளும் அம்மானை
    வெம்மா பிளந்தான்றன்னை,
போற்றி யென்றே கைகளாரத்
    தொழுது சொல்மாலைகள்,
ஏற்ற நோற்றேற் கினியென்
    னகுறை யெழமையுமே?#
1
3168
மைய கண்ணாள் மலர்மே
    லுறைவா ளுறைமார்பினன்,
செய்ய கோலத் தடங்கண்ணன்
    விண்ணோர் பெருமான்றன்னை
மொய்ய சொல்லா லிசைமாலைக
    ளேத்தி யுள்ளப்பெற்றேன்,
வெய்ய நோய்கள் முழுதும்
    வியன்ஞாலத்து வீயவே.
2
3169
வீவி லின்ப மிகஎல்லை
    நிகழ்ந்தநம் அச்சுதன்,
வீவில் சீரன் மலர்க்கண்ணன்
    விண்ணோர் பெருமான்றன்னை,
வீவில் காலம் இசைமாலைகள்
    ஏத்தி மேவப்பெற்றேன்,
வீவி லின்பமிக எல்லை
    நிகழ்ந்தனன் மேவியே.
3
3170
மேவி நின்று தொழுவார்
    வினைபோக மேவும்பிரான்,
தூவியம் புள்ளு டையான்
    அடலாழியம் மான்றன்னை,
நாவிய லாலிசை மாலைக
    அளத்திநண் ணப்பெற்றேன்,
ஆவியென் னாவியை யானறி
    யேன்செய்த வாற்றையே.
4
3171
ஆற்ற நல்ல வகைகாட்டும்
    அம்மானை, அமரர்தம்
ஏற்றை யெல்லாப் பொருளும்
    விரித்தானை எம்மான்றன்னை,
மாற்ற மாலை புனைந்தேத்தி
    நாளும் மகிழ்வெய்தினேன்,
காற்றின் முன்னம் கடுகி
    வினைநோய்கள் கரியவே.
5
3172
கரிய மேனிமிசை வெளிய
    நீறுசிறி தேயிடும்,
பெரிய கோலத் தடங்கண்ணன்
    விண்ணோர் பெருமான்றன்னை,
உரிய சொல்லா லிசைமாலைகள்
    ஏத்தியுள்ளப் பெற்றேற்கு,
அரிய துணடோ எனக்கின்று
    தொட்டுமினி யென்றுமே?
6
3173
என்றும் ஒன்றாகி யொத்தாரும்
    மிக்கார்களும், தன்றனக்
கின்றி நின்றானை யெல்லா
    வுலகும் உடையான் றன்னை,
குன்ற மொன்றால் மழைகாத்த
    பிரானைச்சொன் மாலைகள்,
நன்று சூட்டும் விதியெய்தினம்
    என்ன குறைநமக்கே?
7
3174
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்
    இன்பனை, ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும்
    பெருமானை, தண்டாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச்
    சொன்மாலைகள், சொல்லுமா
றமைக்க வல்லேற் கினியாவர்
    நிகரகல் வானத்தே?
8
3175
வானத்தும் வானத்துருள் ளும்பம்
    மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும், எண்டிசை யும்தவி
    ராதுநின் றான்றன்னை,
கூனற்சங் கத்தடக் கையவனைக்
    குடமாடியை வானக்
கோனைக், கவிசொல்ல வல்லேற்
    கினிமா றுண்டோ?
9
3176
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
    இடந்தும் கிடந்தும்நின்றும்,
கொண்ட கோலத் தொடுவீற்
    றிருந்தும் மணங்கூடியும்,
கண்ட வாற்றால் தனக்கே
    யுலகென நின்றான்றன்னை,
வண்டமிழ் நூற்க நோற்றேன்
    அடியார்க் கின்பமாரியே.
10
3177
மாரி மாறாத தண்ணம்மாலை
    வேங்கடத் தண்ணலை,
வாரி மாறாத பைம்பூம்
    பொழில்சூழ் குருகூர்நகர்,
காரி மாறன் சடகோபன்
    சொல்லாயிரத் திப்பத்தால்,
வேரி மாறாத பூமே
    லிருப்பாள் வினைதீர்க்குமே.#
11
நேரிசை வெண்பா
வீற்றிருக்கும் மால்விண்ணில் மிக்க மயல்தன்னை,
ஆற்றுதற்காத் தன்பெருமை யானதெல்லாம், தோற்றவந்து
நன்றுகலக் கப்போற்றி நன்குகந்து வீறுரைத்தான்,
சென்ற துயர்மாறன் தீர்ந்து.
35

மேலே செல்க

6. தீர்ப்பாரை
வெறிவிலக்கு
கலி நிலைத்துறை
3178
தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம்
    நாடுதும் அன்னைமீர்,
ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன்
    னோயிது தேறினோம்,
போர்ப்பாகு தான்செய்தன் றைவரை
    வெல்வித்த, மாயப்போர்த்
தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை
    துழாய்த்திசைக் கின்றதே.#
1
3179
திசைக்கின்ற தேயிவள் நோயிது
    மிக்க பெருந்தெய்வம்,
இசைப்பின்றி நீரணங் காடும்
    இளந்தெய்வம் அன்றிது,
திசைப்பின்றி யேசங்கு சக்கர
    மென்றிவள் கேட்க,நீர்
இசைக்கிற்றி ராகில்நன் றேயில்
    பெறுமிது காண்மினே.
2
3180
இதுகாண்மின் அன்னைமீர்* இக்கட்டு
    விச்சிசொற் கொண்டு,நீர்
எதுவானும் செய்தங்கோர் கள்ளும்
    இறைச்சியும் தூவேல்மின்,
மதுவார் துழாய்முடி மாயப்
    பிரான்கழல் வாழ்த்தினால்,
அதுவே யிவளுற்ற நோய்க்கும்
    அருமருந் தாகுமே.
3
3181
மருந்தாகும் என்றங்கோர் மாய
    வலவைசொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும்
    களனிழைத் தெய்பயன்?,
ஒருங்காக வேயுல கேழும்
    விழுங்கி உமிழ்ந்திட்ட,
பெருந்தேவன் பேர்சொல்ல கிற்கில்
    இவளைப் பெறுதிரே.
4
3182
இவளைப் பெறும்பரி சிவ்வணங்
    காடுதல் அன்றந்தோ,
குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்
    வாயும் பயந்தனள்,
கவளக் கடாக்களி றட்டபி
    ரான்திரு நாமத்தால்,
தவளப் பொடிக்கொண்டு நீரிட்
    டிடுமின் தணியுமே.
5
3183
தணியும் பொழுதில்லை நீரணங்
    காடுதிர் அன்னைமீர்,
பிணியும் ஒழிகின்ற தில்லை
    பெருகு மிதுவல்லால்,
மணியின் அணிநிற மாயன்
    தமரடி நீறுகொண்டு,
அணிய முயலின்மற் றில்லைகண்
    டீரிவ் வணங்குக்கே.
6
3184
அணங்குக் கருமருந் தென்றங்கோர்
    ஆடும்கள் ளும்பராய்,
துணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்
    கப்படும் அன்னைமீர்,
உணங்கல் கெடக்கழு தையுத
    டாட்டம்கண் டென்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர்
    வேதம்வல் லாரையே.
7
3185
வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்
    ணோர்பெரு மான்திருப்
பாதம் பணிந்து,இவள் நோயிது
    தீர்த்துக்கொள் ளாதுபோய்
ஏதம் பறைந்தல்ல செய்துகள்
    ளூடு கலாய்த்தூய்,
கீத முழவிட்டு நீர்அணங்
    காடுதல் கீழ்மையை.
8
3186
கீழ்மையி லங்கோர் கீழ்மக
    னிட்ட முழவின்கீழ்,
நாழ்மை பலசொல்லி நீரணங்
    காடும்பொய் காண்கிலேன்,
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந்
    நோய்க்குமீ தேமருந்து,
ஊழ்மையில் கண்ணபி ரான்கழல்
    வாழ்த்துமின் உன்னித்தே.
9
3187
உன்னித்து மற்றொரு தெய்வம்
    தொழாளவ னையல்லால்,
நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்
    கப்படும் அன்னைமீர்,
மன்னப் படும்மறை வாணனை
    வண்துவ ராபதி
மன்னனை, ஏத்துமின் ஏத்துத
    லும்தொழு தாடுமே.
10
3188
தொழுதாடித் தூமணி வண்ணனுக்
    காட்செய்து நோய்தீர்ந்த
வழுவாத தொல்புகழ் வண்குரு
    கூர்ச்சட கோபன்,சொல்
வழுவாத ஆயிரத் துள்ளிவை
    பத்து வெறிகளும்,
தொழுதாடிப் பாடவல் லார்துக்க
    சீலம் இலர்களே.#
11
நேரிசை வெண்பா
தீர்ப்பா ரிலாதமயல் தீரக் கலந்தமால்,
ஓர்ப்பாது மின்றி யுடன்பிரிய,-நேர்க்க
அறிவழிந்துற் றாரும் அறக்கலங்க, பேர்கேட்
டறிவுபெற்றான் மாறன்சீ லம்.
36

7. சீலம் இல்லா
ஆழ்வார் எம்பெருமானது திருமேனியைக் கண்டு மேவும்படி இரவு பகலாக வருந்திக் கூப்பிடுதல்
ஆசிரிய விருத்தம்
3189
'சீலம் இல்லாச் சிறிய னேலும்
    செய்வினை யோபெரிதால்,
ஞாலம் உண்டாய் ஞான
    மூர்த்தி நாராண னா*'என்றென்று,
காலந் தோறும் யானி
    ருந்து கைதலை பூசலிட்டால்
கோல மேனி காண
    வாராய் கூவியும் கொள்ளாயே.#
1
3190
'கொள்ளா மாளா இன்ப
    வெள்ளம் கோதில தந்திடும்,என்
வள்ள லேயோ* வையங் கொண்ட
    வாமனா வோ*'என்றென்று,
நள்ளி ராவும் நண்பகலும்
    நானிருந் தோல மிட்டால்,
கள்ள மாயா* உன்னை
    யென்கண் காணவந் தீயாயே.
2
3191
'ஈவி லாத தீவினைகள்
    எத்தனை செய்த னன்கொல்?
தாவி வையம் கொண்ட
    எந்தாய்* தாமோத ரா*'என்றென்று,
கூவிக் கூவி நெஞ்சுருகிக்
    கண்பனி சோர நின்றால்,
பாவி நீயென் றொன்று
    சொல்லாய் பாவியேன் காணவந்தே.
3
3192
'காண வந்தென் கண்மு
    கப்பே தாமரைக் கண்பிறழ,
ஆணி செம்பொன் மேனி
    எந்தாய்* நின்றருளாய்' என்றென்று,
நாண மில்லாச் சிறுத
    கையேன் நானிங் கலற்றுவதென்,
பேணி வானோர் காண
    மாட்டாப் பீடுடை யப்பனையே?
4
3193
அப்ப னே*அட லாழி யானே,
    ஆழ்கட லைக்கடைந்த
துப்ப னே,உன் தோள்கள்
    நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று,
எப்பொ ழுதும் கண்ண
    நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து,
இப்போ ழுதே வந்தி
    டாயென் றேழையேன் நோக்குவனே.
5
3194
நோக்கி நோக்கி உன்னைக்
    காண்பான் யானென தாவியுள்ளே,
நாக்கு நீள்வன் ஞான
    மில்லை நாடோறு மென்னுடைய,
ஆக்கை யுள்ளு மாவி
    யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்,
நீக்க மின்றி யெங்கும்
    நின்றாய்* நின்னை யறிந்தறிந்தே.
6
3195
அறிந்த றிந்து தேறித்
    தேறி யானென தாவியுள்ளே,
நிறைந்த ஞான மூர்த்தி
    யாயை நின்மல மாகவைத்து,
பிறந்தும் செத்தும் நின்றிடறும்
    பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்
நறுந்து ழாயின் கண்ணி
    யம்மா* நானுன்னைக் கண்டுகொண்டே.
7
3196
கண்டு கொண்டென் கைக ளார
    நின்திருப் பாதங்கள்மேல்,
எண்டி சையு முள்ள
    பூக்கொண் டேத்தி யுகந்துகந்து,
தொண்ட ரோங்கள் பாடி
    யாடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே,
வண்டு ழாயின் கண்ணி
    வேந்தே* வந்திட் கில்லாயே.
8
3197
இடகி லேனொன் றட்ட
    கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்,
கடவ னாகிக் காலந்
    தோறும் பூப்பறித் தேத்தகில்லேன்,
மடவன் நெஞ்சம் காதல்
    கூர வல்வினை யேன்அயர்ப்பாய்,
தடவு கின்றே னெங்குக்
    காண்பன் சக்கரத் தண்ணலையே?
9
3198
சக்க ரத்தண் ணலேயென்று
    தாழ்ந்து கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்ற
    லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்,
மிக்க ஞான மூர்த்தி
    யாய வேத விளக்கினை,என்
தக்க ஞானக் கண்க
    ளாலே கண்டு தழுவுவனே.
10
3199
தழுவி நின்ற காதல்
    தன்னால் தாமரைக் கண்ணன்றன்னை,
குழுவு மாடத் தென்குரு
    கூர்மா றன்சட கோபன்,சொல்
வழுவி லாத வொண்த
    மிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்,
தழுவப் பாடி யாட
    வல்லார் வைகுந்த மேறுவரே.#
11
நேரிசை வெண்பா
சீலமிகு கண்ணன் திருநாமத் தாலுணர்ந்து,
மேலவன்றன் மேனிகண்டு மேவுதற்குச்,-சால
வருந்தியிர வும்பகலும் மாறாமற் கூப்பிட்,
டிருந்தனனே தென்குருகூர் ஏறு.
37

8. ஏறாளும்
ஆழ்வார் எம்பெருமான் வேண்டாத தானும் தன்னுடையவையும் வேண்டா என்பதைத் தலைவி பாசுரத்தாற் பேசுதல்
கொச்சகக் கலிப்பா
3200
ஏறாளும் இறையோனும்
    திசைமுகனும் திருமகளும்,
கூறாளும் தனியுடம்பன்
    குலங்குலமா அசுரர்களை,
நீறாகும் படியாக
    நிருமித்துப் படைதொட்ட,
மாறாளன் கவராத
    மணிமாமை குறைவிலமே.#
1
3201
மணிமாமை குறைவில்லா
    மலர்மாதர் உறைமார்வன்,
அணிமானத் தடவரைத்தோள்
    அடலாழித் தடக்கையன்,
பணிமானம் பிழையாமே
    யடியேனைப் பணிகொண்ட,
மணிமாயன் கவராத
    மடநெஞ்சால் குறைவிலமே.
2
3202
மடநெஞ்சால் குறைவில்லா
    மகள்தாய்செய் தொருபேய்ச்சி,
விடநஞ்ச முலைசுவைத்த
    மிகுஞானச் சிறுகுழவி,
படநாகத் தணைக்கிடந்த
    பருவரைத்தோள் பரம்புருடன்,
நெடுமாயன் கவராத
    நிறையினால் குறைவிலமே.
3
3203
நிறையினாற் குறைவில்லா
    நெடும்பணைத்தோள் மடப்பின்னை,
பொறையினால் முலையணைவான்
    பொருவுடைஏழ் அடர்த்துகந்த,
கறையினார் துவருடுக்கை
    கடையாவின் கழிகோல்கை,
சறையினார் கவராத
    தளிர்நிறத்தால் குறைவிலமே.
4
3204
தளிர்நிறத்தால் குறைவில்லாத்
    தனிச்சிறையில் விளப்புற்ற,
கிளிமொழியாள் காரணமாக்
    கிளரரக்கன் நகரெரித்த,
களிமலர்த் துழாயலங்கல்
    கமழ்முடியன் கடல்ஞாலத்து,
அளிமிக்கான் கவராத
    அறிவினால் குறைவிலமே.
5
3205
அறிவினால் குறைவில்லா
    அகல்ஞாலத் தவரறிய,
நெறியெல்லா மெடுத்துரைத்த
    நிறைஞானத் தொருமூர்த்தி,
குறியமாண் உருவாகிக்
    கொடுங்கோளால் நிலங்கொண்,
கிறியம்மான் கவராத
    கிளரொளியால் குறைவிலமே.
6
3206
கிளரொளியால் குறைவில்லா
    அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து,
கிளரொளிய இரணியன
    தகல்மார்பம் கிழித்துகந்த,
வளரொளிய கனலாழி
    வலம்புரியன் மணிநீல,
வளரொளியான் கவராத
    வரிவளையால் குறைவிலமே.
7
3207
வரிவளையால் குறைவில்லாப்
    பெருமுழக்கால் அடங்காரை,
எரியழலம் புகவூதி
    யிருநிலமுன் துயர்தவிர்த்த,
தெரிவரிய சிவன்பிரமன்
    அமரர்கோன் பணிந்தேத்தும்,
விரிபுகழான் கவராத
    மேகலையால் குறைவிலமே.
8
3208
மேகலை யால் குறைவில்லா
    மெலிவுற்ற அகலல்குல்,
போகமகள் புகழ்த்தந்தை
    விறல்வாணன் புயம்துணித்து,
நாகமிசைத் துயில்வான்போல்
    உலகெல்லாம் நன்கொடுங்க,
யோகணைவான் கவராத
    வுடம்பினால் குறைவிலமே.
9
3209
உடம்பினால் குறைவில்லா
    உயிர்பிரிந்த மலைத்துண்டம்,
கிடந்தனபோல் துணிபலவா
    அசுரர்குழாம் துணித்துகந்த,
தடம்புனல சடைமுடியன்
    தனியொருகூ றமர்ந்துறையும்,
உடம்புடையான் கவராத
    உயிரினால் குறைவிலமே.
10
3210
உயிரினால் குறைவில்லா
    உலகேழ்தன் உள்ளொடுக்கி,
தயிர்வெண்ணெ யுண்டானைத்
    தடங்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் லிசைமாலை யாயிரத்து
    யாயிரத்து ளிப்பத்தால்
வயிரம்சேர் பிறப்பறுத்து
    வைகுந்தம் நண்ணுவரே.#
11
நேரிசை வெண்பா
'ஏறு திருருவுடைய ஈச னுகப்புக்கு,
வேறுபடி லென்னுடைமை மிக்கவுயிர்,-தேறுங்கால்
என்றனக்கும் வேண்டா' எனுமாறன் தாளைநெஞ்சே,
நண்தமக்குப் பேறாக நண்ணு.
38

9. நண்ணாதார்
ஆழ்வார் உலகவியற்கையில் வெறுப்புக்கொண்டு தம்மைத் திருவடியிற் சேர்த்துக்கொள்ளுமாறு எம்பெருமானை பிரார்த்தித்தல்
கொச்சகக் கலிப்பா
3211
நண்ணாதார் முறுவலிப்ப
    நல்லுற்றார் கரைந்தேங்க,
எண்ணாரத் துயர்விளைக்கும்
    இவையென்ன உலகியற்கை?,
கண்ணாளா* கடல்கடைந்தாய்*
    உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவா தடியேனைப்
    பணிகண்டாய் சாமாறே.#
1
3212
சாமாறும் கெடுமாறும்
    தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும்
    இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான்
    அரவணையாய்* அம்மானே,
கூமாறே விரைகண்டாய்
    அடியேனைக் குறிக்கொண்டே.
2
3213
கொண்டாட்டும் குலம்புனைவும்
    தமருற்றார் விழுநிதியும்,
வண்டார்பூங் குழலாளும்
    மனையொழிய வுயிர்மாய்தல்,
கண்டாற்றேன் உலகியற்கை
    கடல்வண்ணா* அடியேனைப்,
பண்டேபோல் கருதாதுன்
    அடிக்கேகூய்ப் பணிகொள்ளே.
3
3214
கொள்ளென்று கிளர்ந்தெழுந்த
    பெருஞ்செல்வம் நெருப்பாக,
கொள்ளென்று தமம்மூடும்
    இவையென்ன உலகியற்கை?,
வள்ளலே* மணிவண்ணா*
    உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல்செய் தடியேனை
    உனதருளால் வாங்காயே.
4
3215
வாங்குநீர் மலருலகில்
    நிற்பனவுமீ திரிவனவும்,
ஆங்குயிர்கள் பிறப்பிறப்புப்
    பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்,
ஈங்கிதன்மேல் வெந்நரகம்
    இவையென்ன உலகியற்கை?,
வாங்கெனைநீ மணிவண்ணா*
    அடியேனை மறுக்கேலே.
5
3216
மறுக்கிவல் வலைப்படுத்திக்
    குமைத்திட்டுக் கொன்றுண்பர்,
அறப்பொருளை யறிந்தோரார்
    இவையென்ன உலகியற்கை?,
வெறித்துவள முடியானே*
    வினையேனை யுனக்கடிமை
அறக்கொண்டாய், இனியென்னா
    ரமுதே*கூய் அருளாயே.
6
3217
ஆயே*இவ் வுலகத்து
    நிற்பனவும் திரிவனவும்,
நீயேமற் றொருபொருளும்
    இன்றிநீ நின்றமையால்,
நோயேமூப் பிறப்பிறப்புப்
    பிணியேயென் றிவையொழியக்,
கூயேகொள் அடியேனைக்
    கொடுவுலகம் காட்டேலே.
7
3218
காட்டிநீ கரந்துமிழும்
    நிலநீர்தீ விசும்புகால்,
ஈட்டிநீ வைத்தமைத்த
    இமையோர்வாழ் தனிமுட்டைக்,
கோட்டையினில் கழித்தெனையுன்
    கொழுஞ்சோதி யுயரத்து,
கூட்டரிய திருவடிக்க
    ளெஞ்ஞான்று கூட்டுதியே?
8
3219
கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும்
    தொழாவகை செய்து,
ஆட்டுதிநீ யரவணையாய்*
    அடியேனும் அஃதறிவன்,
வேட்கையெல்லாம் விடுத்தெனையுன்
    திருவடியே சுமந்துழல,
கூட்டரிய திருவடிக்கள்
    கூட்டினைநான் கண்டேனே.
9
3220
கண்டுகேட் டுற்றுமோந்
    துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம், தெரிவரிய
    அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண்டொடியாள் திருமகளும்
    நீயுமே நிலாநிற்பக்,
கண்டசதிர் கண்டொழிந்தேன்
    அடைந்தேனுன் திருவடியே.
10
3221
திருவடியை நாரணனைக்
    கேசவனைப் பரஞ்சுடரை,
திருவடிசேர் வதுகருதிச்
    செழுங்குருகூர்ச் சடகோபன்,
திருவடிமே லுரைத்ததமிழ்
    ஆயிரத்து ளிப்பத்தும்,
திருவடியே அடைவிக்கும்
    திருவடிசேர்ந் தொன்றுமினே.#
11
நேரிசை வெண்பா
நண்ணாது மாலடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள்,-தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமற் கண்கலங்கு மாறனருள்,
உண்டுநமக் குற்றதுணை யொன்று.
39

10. ஒன்றுந்தேவும்
(இது கோயில் திருவாய்மொழி)
ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருள், மற்றையோரை விட்டு அவனையே பற்றுங்கள் என்று மூதலித்து பேசுதல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
3222
ஒன்றுந் தேவு முலகும்
    உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று, நான்முகன் றன்னொடு
    தேவ ருலகோ டுயிர்படைத்தான்,
குன்றம் போல்மணி மாடம்
    நீடு திருக்குரு கூரதனுள்,
நின்ற ஆதிப்பி ரான்நிற்க
    மற்றைத் தெய்வம் நாடுதிரே.#
1
3223
நாடி நீர்வ ணங்கும்
    தெய்வமும் உம்மையு முன்படைத்தான்,
வீடில் சீர்ப்புக ழாதிப்பி
    ரானவன் மேவி யுறைகோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழ
    காய திருக்குரு கூரதனைப்,
பாடி யாடிப் பரவிச்
    செல்மின்கள் பல்லுல கீர்*பரந்தே.
2
3224
பரந்த தெய்வமும் பல்லுல
    கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்,
கரந்து மிழ்ந்து கடந்தி
    டந்தது கண்டும் தெளியகில்லீர்,
சிரங்க ளால்அ மரர்வ
    ணங்கும் திருக்குரு கூரதனுள்,
பரன்திற மன்றிப் பல்லுலகீர்*
    தெய்வம் மற்றில்லை பேசுமினே.
3
3225
பேச நின்ற சிவனுக்
    கும்பிர மன்றனக் கும்பிறர்க்கும்
நாய கனவ னே,க
    பாலநன் மோக்கத்துக் கண்டுகொள்மின்,
தேச மாமதிள் சூழ்ந்தழ
    காய திருக்குரு கூரதனுள்,
ஈசன் பாலோர் அவம்ப
    றைதலென் னாவதி லிங்கியர்க்கே?
4
3226
இலிங்கத் திட்ட புராணத்
    தீரும் சமணரும் சாக்கியரும்,
வலிந்து வாதுசெய் வீர்களும்
    மற்றுநுந் தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி
    வீசும் திருக்குரு கூரதனுள்,
பொலிந்து நின்றபி ரான்கண்டீ
    ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே.#
5
3227
போற்றி மற்றோர் தெய்வம்
    பேணப் புறத்திட்டு உம்மையின்னே
தேற்றி வைத்ததெல் லீரும்
    வீடு பெற்றாலுல கில்லையென்றே,
சேற்றில் செந்நெல் கமலம்
    ஓங்கு திருக்குரு கூரதனுள்,
ஆற்ற வல்லவன் மாயம்
    கண்டீரது அறிந்தறிந் தோடுமினே.
6
3228
ஓடி யோடிப் பல்வி
    றப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்,
பாடி யாடிப் பணிந்துபல்
    படிகால் வழியே றிக்கண்டீர்,
கூடி வானவ ரேத்த
    நின்ற திருக்குரு கூரதனுள்,
ஆடு புட்கொடி யாதி
    மூர்த்திக் கடிமை புகுவதுவே.
7
3229
புக்கடி மையினால் தன்னைக்
    கண்ட மார்க்கண் டேயனவனை,
நக்க பிரானுமன் றுய்யக்
    கொண்டது நாரா யணனருளே,
கொக்க லர்தடந் தாழை
    வேலித் திருக்குரு கூரதனுள்,
மிக்க ஆதிப்பி ரான்நிற்க
    மற்றைத் தெய்வம் விளம்புதிரே.
8
3230
விளம்பும் ஆறு சமய
    மும்அவை யாகியும் மற்றும்தன்பால்,
அளந்து காண்டற் கரிய
    னாகிய ஆதிப்பி ரானமரும்,
வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ
    காய திருக்குரு கூரதனை,
உளங்கொள் ஞானத்து வைம்மின்
    உம்மை யுய்யக்கொண்டு போகுறிலே.
9
3231
உறுவ தாவ தெத்தேவும்
    எவ்வுல கங்களும் மற்றும்தன்பால்,
மறுவில் மூர்த்தியோ டொத்தித்
    தனையும் நின்றவண் ணம்நிற்கவே,
செறுவில் செந்நெல் கரும்பொ
    டோங்கு திருக்குரு கூரதனுள்
குறிய மாணுரு வாகிய
    நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே.
10
3232
ஆட்செய் தாழிப்பி ரானைச்
    சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்
நாட்க மழ்மகிழ் மாலை
    மார்வினன் மாறன் சடகோபன்,
வேட்கை யால்சொன்ன பாடல்
    ஆயிரத் துளிப்பத் தும்வல்லார்,
மீட்சி யின்றி வைகுந்த
    மாநகர் மற்றது கையதுவே.#
11
நேரிசை வெண்பா
'ஒன்றுமிலைத் தேவிவ் வுலகம் படைத்தமால்,
அன்றி'என யாரு மறியவே,-நன்றாக
மூதலித்துப் பேசியருள் மொய்மகிழோன் தாள்தொழவே,
காதலிக்கு மென்னுடைய கை.
40
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

ஐந்தாம் பத்து
1. கையார்
எம்பெருமானது கருணைத் திறத்தை உரைத்தல்
கலி விருத்தம்
3233
'கையார் சக்கரத்தென்
    கருமாணிக்க மே*'என்றென்று,
பொய்யே கைம்மைசொல்லிப்
    புறமேபுற மேயாடி,
மெய்யே பெற்றொழிந்தேன்
    விதிவாய்க்கின்று காப்பாரார்,
ஐயோ கண்ணபிரான்*
    அறையோஇனிப் போனாலே.#
1
3234
'போனாய் மாமருதின்
    நடுவேயென்பொல் லாமணியே,
தேனே* இன்னமுதே*'
    என்றென்றேசில கூற்றுச்சொல்ல,
தானே லெம்பெருமான்
    அவனென்னா கியொழிந்தான்,
வானே மாநிலமே
    மற்றுமுற்றுமென் னுள்ளனவே.
2
3235
உள்ளன மற்றுளவாப்
    புறமேசில மாயஞ்சொல்லி,
வள்ளல் மணிவண்ணனே*
    எந்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்,
கள்ளம னம்தவிர்ந்தே
    யுனைக்கண்டுகொண் டுய்ந்தொழிந்தேன்,
வெள்ளத் தணைக்கிடந்தா
    யினியுன்னைவிட் டென்கொள்வனே?
3
3236
என்கொள்வ னுன்னைவிட்டென்
    னும்வாசகங் கள்சொல்லியும்,
வன்கள்வ னேன்மனத்தை
    வலித்துக்கண்ண நீர்கரந்து,
நின்க ணெருங்கவைத்தே
    எனதாவியை நீக்ககில்லேன்,
என்கண் மலினமறுத்
    தென்னைக்கூவி யருளாய்கண்ணனே*
4
3237
கண்ணபி ரானைவிண்ணோர்
    கருமாணிக்கத் தையமுதை,
நண்ணியும் நண்ணகில்லேன்
    நடுவேயோ ருடம்பிலிட்டு,
திண்ண மழுந்தக்கட்டிப்
    பலசெய்வினை வன்கயிற்றால்,
புண்ணை மறையவரிந்
    தெனைப்போரவைத் தாய்புறமே.
5
3238
புறமறக் கட்டிக்கொண்
    டிருவல்வினை யார்குமைக்கும்,
முறைமுறை யாக்கைபுக
    லொழியக்கண்டு கொண்டொழிந்தேன்,
நிறமுடை நால்தடந்தோள்
    செய்யவாய்செய்ய தாமரைக்கண்,
அறமுய லாழியங்கைக்
    கருமேனியம் மான்றன்னையே.
6
3239
அம்மா னாழிப்பிரான்
    அவனெவ்விடத் தான்?யானார்?,
எம்மா பாவியர்க்கும்
    விதிவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்,
'கைம்மா துன்பொழித்தாய்*'
    என்றுகைதலை பூசலிட்டே,
மெய்ம்மா லாயொழிந்தே
    னெம்பிரானுமென் மேலானே.
7
3240
மேலாத் தேவர்களும்
    நிலத்தேவரும் மேவித்தொழும்,
மாலார் வந்தினநாள்
    அடியேன்மனத் தேமன்னினார்,
சேலேய் கண்ணியரும்
    பெருஞ்செல்வமும் நன்மக்களும்,
மேலாத் தாய்தந்தையும்
    அவரேயினி யாவாரே.
8
3241
ஆவா ரார்துணையென்
    றலைநீர்க்கட லுளழுந்தும்
நாவாய் போல்,பிறவிக்
    கடலுள்நின்று நான்துளங்க
, தேவார் கோலத்தொடும்
    திருச்சக்கரம் சங்கினொடும்,
ஆவா வென்றருள்
    தடியேனொடு மானானே.
9
3242
ஆனான் ஆளுடையா
    னென்றஃதேகொண் டுகந்துவந்து,
தானே யின்னருள்செய்
    தென்னைமுற்றவும் தானானான்,
மீனா யாமையுமாய்
    நரசிங்கமு மாய்க்குறளாய்,
கானா ரேனமுமாய்க்
    கற்கியாமின்னம் கார்வண்ணனே.
10
3243
கார்வண்ணன் கண்ணபிரான்
    கமலத்தடங் கண்ணன்றன்னை,
ஏர்வள வொண்கழனிக்
    குருகூர்ச்சட கோபன்சொன்ன,
சீர்வண்ண வொண்டமிழ்கள்
    இவையாயிரத் துளிப்பத்தும்
ஆர்வண்ணத் தாலுரைப்பார்
    அடிக்கீழ்புகு வார்பொலிந்தே.#
11
நேரிசை வெண்பா
கையாரும் சக்கரத்தோன் காதலின்றிக் கேயிருக்கப்,
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு,-மெய்யான
பேற்றை யுபகரித்த பேரருளின் றன்மைதனைப்,
போற்றினனே மாறன் பொலிந்து.
41

2. பொலிக
திருமாலடியார் திரளைக் கண்டு வாழ்த்துதல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
3244
பொலிக பொலிக பொலிக*
    போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த
    நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின்
    கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி
    யாடி யுழிதரக் கண்டோம்.#
1
3245
கண்டோம் கண்டோம் கண்டோம்
    கண்ணுக் கினியன கண்டோம்,
தொண்டீர்* எல்லீரும் வாரீர்
    தொழுது தொழுதுநின் றார்த்தும்,
வண்டார் தண்ணந்து ழாயான்
    மாதவன் பூதங்கள் மண்மேல்,
பண்டான் பாடிநின் றாடிப்
    பரந்து திரிகின் றனவே.
2
3246
திரியும் கலியுகம் நீங்கித்
    தேவர்கள் தாமும் புகுந்து,
பெரிய கிதயுகம் பற்றிப்
    பேரின்ப வெள்ளம் பெருக,
கரிய முகில்வண்ண னெம்மான்
    கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
இரியப் புகுந்திசை பாடி
    எங்கும் இடங்கொண் டனவே.
3
3247
இடங்கொள் சமயத்தை யெல்லாம்
    எடுத்துக் களைவன போல,
தடங்கடல் பள்ளிப் பெருமான்
    றன்னுடைப் பூதங்க ளேயாய்,
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
    கீதம் பலபல பாடி,
நடந்தும் பறந்தும் குனித்தும்
    நாடகம் செய்கின் றனவே.
4
3248
செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே
    ஒக்கின்ற திவ்வுல கத்து,
வைகுந்தன் பூதங்க ளேயாய்
    மாயத்தி னாலெங்கும் மன்னி,
ஐயமொன் றில்லை யரக்கர்
    அசுரர் பிறந்தீருள் ளீரேல்,
உய்யும் வகையில்லை தொண்டீர்*
    ஊழி பெயர்த்திடும் கொன்றே.
5
3249
கொன்றுயி ருண்ணும் விசாதி
    பகைபசி தீயன வெல்லாம்,
நின்றிவ் வுலகில் கடிவான்
    நேமிப்பி ரான்தமர் போந்தார்,
நன்றிசை பாடியும் துள்ளி
    யாடியும் ஞாலம் பரந்தார்,
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்*
    சிந்தையைச் செந்நி றுத்தியே.
6
3250
நிறுத்திநும் உள்ளத்துக் கொள்ளும்
    தெய்வங்க ளும்மையுய் யக்கொள்,
மறுத்து மவனோடே கண்டீர்
    மார்க்கண் டேயனும் கரியே,
கறுத்த மனமொன்றும் வேண்டா
    கண்ணனல் லால்தெய்வ மில்லை,
இறுப்பதெல் லாமவன் மூர்த்தி
    யாயவர்க் கேயி றுமினே.
7
3251
இறுக்கு மிறையிறுத் துண்ண
    எவ்வுல குக்கும்தன் மூர்த்தி,
நிறுத்தினான் தெய்வங்க ளாக
    அத்தெய்வ நாயகன் றானே,
மறுத்திரு மார்வன் அவன்றன்
    பூதங்கள் கீதங்கள் பாடி,
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்
    மேவித் தொழுதுய்ம்மி னீரே.
8
3252
மேவித் தொழுதுய்ம்மி னீர்கள்
    வேதப் புனித இருக்கை,
நாவிற்கொண் டச்சுதன் றன்னை
    ஞான விதிபிழை யாமே,
பூவில் புகையும் விளக்கும்
    சாந்தமும் நீரும் மலிந்து,
மேவித் தொழுமடி யாரும்
    பகவரும் மிக்க துலகே.
9
3253
மிக்க வுலகுகள் தோறும்
    மேவிக்கண் ணன்திரு மூர்த்தி,
நக்கபி ரானோ டயனும்
    இந்திர னும்முத லாக,
தொக்க அமரர்கு ழாங்கள்
    எங்கும் பரந்தன தொண்டீர்,
ஒக்கத் தொழுகிற்றி ராகில்
    கலியுக மொன்றுமில் லையே.
10
3254
கலியுக மொன்றுமின் றிக்கே
    தன்னடி யார்க்கருள் செய்யும்,
மலியும் சுடரொளி மூர்த்தி
    மாயப்பி ரான்கண்ணன் றன்னை,
கலிவயல் தென்னன் குருகூர்க்
    காரிமா றன்சட கோபன்,
ஒலிபுக ழாயிரத் திப்பத்து
    உள்ளத்தை மாசறுக் கும்மே.#
11
நேரிசை வெண்பா
பொலிக பொலிகவென்று பூமகள்கோன் றொண்டர்,
மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி-உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திமா றன்சொல்,
மருந்தாகப் போகுமன மாசு.
42

3. மாசறு சோதி
காதல் மிகுதியால் தலைவி மடலூரத் துணிதல்
கலி நிலைத்துறை
3255
மாசறு சோதியென் செய்ய
    வாய்மணிக் குன்றத்தை,
ஆசறு சீலனை யாதி
    மூர்த்தியை நாடியே,
பாசற வெய்தி யறிவிழந்
    தெனைநா ளையம்?,
ஏசறு மூரவர் கவ்வை
    தோழீ* என்செய்யுமே?#
1
3256
என்செய்யு மூரவர் கவ்வை
    தோழீ* இனிநம்மை,
என்செய்ய தாமரைக் கண்ண
    னென்னை நிறைகொண்டான்,
முன்செய்ய மாமை யிழந்து
    மேனி மெலிவெய்தி,
என்செய்ய வாயும் கருங்கண்
    ணும்பயப் பூர்ந்தவே.
2
3257
ஊர்ந்த சகடம் உதைத்தபா
    தத்தன், பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன்
    என்னை நிறைகொண்டான்,
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோ
    டன்றியோர் சொல்லிலேன்,
தீர்ந்தவென் தோழீ* என்செய்யு
    மூரவர் கவ்வையே?
3
3258
ஊரவர் கவ்வை யெருவிட்
    டன்னைசொல் நீர்மடுத்து,
ஈரநெல் வித்தி முளைத்த
    நெஞ்சப் பெருஞ்செய்யுள்,
பேரமர் காதல் கடல்பு
    ரைய விளைவித்த,
காரமர் மேனிநங் கண்ணன்
    தோழீ* கடியனே.
4
3259
கடியன் கொடியன் நெடிய
    மாலுல கங்கொண்ட
அடியன், அறிவரு மேனிமா
    யத்தன், ஆகிலும்
கொடியவென் னெஞ்சம் அவனென்றே
    கிடக்கு மெல்லே,
துடிகொ ளிடைமடத் தோழீ*
    அன்னையென் செய்யுமே?
5
3260
அன்னையென் செய்யிலென் ஊரென்
    சொல்லிலென் தோழீமீர்,
என்னை யினியுமக் காசை
    யில்லை யகப்பட்டேன்,
முன்னை யமரர் முதல்வன்
    வண்துவ ராபதி
மன்னன், மணிவண் ணன்வாசு
    தேவன் வலையுளே.
6
3261
வலையுள் அகப்படுத் தென்னைநன்
    னெஞ்சம் கூவிக்கொண்டு,
அலைகடல் பள்ளி யம்மானை
    ஆழிப் பிரான்றன்னை,
கலைகொள் அகலல்குல் தோழீ*
    நம்கண்க ளால்கண்டு,
தலையில் வணங்கவு மாங்கொலோ
    தைய லார்முன்பே?
7
3262
பேய்முலை யுண்டு சகடம்
    பாய்ந்து மருதிடைப்
போய்முதல் சாய்த்து, புள்வாய்
    பிளந்து களிறட்ட,
தூமுறு வல்தொண்டை வாய்ப்பி
    ரானையெந் நாள்கொலோ,
யாமுறு கின்றது தோழீ*
    அன்னையர் நாணவே?
8
3263
நாணும் நிறையும் கவர்ந்தென்னை
    நன்னெஞ்சம் கூவிக்கொண்டு,
சேணுயர் வானத் திருக்கும்
    தேவபி ரான்றன்னை,
ஆணையென் தோழீ* உலகு
    தோறலர் தூற்றி,ஆம்
கோணைகள் செய்து குதிரி
    யாம்மட லூர்துமே.
9
3264
யாமட லூர்ந்தும் எம்மாழி
    யங்கைப் பிரானுடை,
தூமடல் தண்ணந் துழாய்மலர்
    கொண்டு சூடுவோம்,
யாமட மின்றித் தெருவு
    தோறயல் தையலார்,
நாமடங் காப்பழி தூற்றி
    நாடும் இரைக்கவே.
10
3265
இரைக்கும் கருங்கடல் வண்ணன்
    கண்ணபி ரான்றன்னை,
விரைக்கொள் பொழில்குரு கூர்ச்சட
    கோபன் சொன்ன,
நிரைக்கொளந் தாதி யோரா
    யிரத்து ளிப்பத்தும்,
உரைக்கவல் லார்க்கு வைகுந்த
    மாகும்தம் மூரெல்லாம்.#
11
நேரிசை வெண்பா
மாசறு சோதிகண்ணன் வந்துகல வாமையால்,
ஆசை மிகுந்துபழிக் கஞ்சாமல்,-ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்,
உண்ணடுங்கத் தான்பிறந்த ஊர்.
43

4. ஊரெல்லாம்
தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்
கொச்சகக் கலிப்பா
3266
ஊரெல்லாம் துஞ்சி
    யுலகெல்லாம் நள்ளிருளாய்,
நீரெல்லாம் தேறியோர்
    நீளிரவாய் நீண்டதால்,
பாரெல்லா முண்டநம்
    பாம்பணையான் வாரானால்,
ஆரெல்லே* வல்வினையேன்
    ஆவிகாப் பாரினியே?#
1
3267
ஆவிகாப் பாரினியார்?
    ஆழ்கடல்மண் பிண்மூடி,
மாவிகார மாயோர்
    வல்லிரவாய் நீண்டதால்,
காவிசேர் வண்ணனென்
    கண்ணனும் வாரானால்,
பாவியேன் நெஞ்சமே*
    நீயும்பாங் கல்லையே?
2
3268
நீயும்பாங் கல்லைகாண்
    நெஞ்சமே* நீளிரவும்,
ஓயும் பொழுதின்றி
    யூழியாய் நீண்டதால்,
காயும் கடுஞ்சிலையென்
    காகுத்தன் வாரானால்,
மாயும் வகையறியேன்
    வல்வினையேன் பெண்பிறந்தே.
3
3269
பெண்பிறந்தார் எய்தும்
    பெருந்துயர்காண் கிலேனென்று,
ஒண்சுடரோன் வாரா
    தொளித்தான்,இம் மண்ணளந்த
கண்பெரிய செவ்வாயெங்
    காரேறு வாரானால்,
எண்பெரிய சிந்தைநோய்
    தீர்ப்பாரார் என்னையே?
4
3270
ஆரென்னை யாராய்வார்?
    அன்னையரும் தோழியரும்,
'நீரென்னே?' என்னாதே
    நீளிரவும் துஞ்சுவரால்,
காரான்ன மேனிநங்
    கண்ணனும் வாரானால்,
பேரென்னை மாயாதால்
    வல்வினையேன் பின்நின்றே.
5
3271
பின்நின்ற காதல்நோய்
    நெஞ்சம் பெரிதடுமால்,
முன்நின் றிராவூழி
    கண்புதைய மூடிற்றால்,
மன்னின்ற சக்கரத்தெம்
    மாயவனும் வாரானால்,
இந்நின்ற நீளாவி
    காப்பாரார் இவ்விடத்தே?
6
3272
காப்பாரார் இவ்விடத்து?
    கங்கிருளின் நுண்துளியாய்,
சேட்பால தூழியாய்ச்
    செல்கின்ற கங்குல்வாய்,
தூப்பால வெண்சங்கு
    சக்கரத்தன் தோன்றானால்,
தீப்பால வல்வினையேன்
    தெய்வங்காள்* என்செய்கேன்?
7
3273
தெய்வங்காள்* என்செய்கேன்?
    ஓரிரவேழ் ஊழியாய்,
மெய்வந்து நின்றென
    தாவி மெலிவிக்கும்,
கைவந்த சக்கரத்தென்
    கண்ணனும் வாரானால்,
தைவந்த தண்தென்றல்
    வெஞ்சுடரில் தானடுமே.
8
3274
வெஞ்சுடரில் தானடுமால்
    வீங்கிருளின் நுண்டுளியாய்,
அஞ்சுடர வெய்யோன்
    அணிநெடுந்தேர் தோன்றாதால்,
செஞ்சுடர்த் தாமரைக்கண்
    செல்வனும் வாரானால்,
நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்?
    நின்றுருகு கின்றேனே*
9
3275
நின்றுருகு கின்றேனே
    போல நெடுவானம்,
சென்றுருகி நுண்டுளியாய்ச்
    செல்கின்ற கங்குல்வாய்,
அன்றொருகால் வையம்
    அளந்தபிரான் வாரானென்று,
ஒன்றொருகால் சொல்லா
    துலகோ உறங்குமே.
10
3276
உறங்குவான் போல்யோகு
    செய்த பெருமானை,
சிறந்தபொழில் சூழ்குரு
    கூர்ச்சட கோபன்சொல்,
நிறங்கிளர்ந்த அந்தாதி
    யாயிரத்து ளிப்பத்தால்,
இறந்துபோய் வைகுந்தம்
    சேராவா றெங்ஙனேயோ?#
11
நேரிசை வெண்பா
ஊர நினைந்துமட லூரவுமொண் ணாதபடி,
கூரிருள்சேர் கங்குலுடன் கூடிநின்று,-பேராமல்
தீதுசெய் மாறன் றிருவுளத்திற் சென்றதுயர்,
ஓதுவதிங் கெங்ஙனே யோ?
44

5. எங்ஙனேயோ
தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயை மறுத்துரைத்தல்
கலி நிலைத்துறை
3277
எங்ஙனேயோ அன்னை மீர்காள்*
    என்னை முனிவதுநீர்?,
நங்கள்கோலத் திருக் குறுங்குடி
    நம்பியை நான்கண்டபின்,
சங்கினோடும் நேமி யோடும்
    தாமரைக் கண்களொடும்,
செங்கனிவா யொன்றி னோடும்
    செல்கின்ற தென்நெஞ்சமே.#
1
3278
என்நெஞ்சி னால்நோக்கிக் காணீ
    ரென்னை முனியாதே,
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி
    நம்பியை நான்கண்டபின்
மின்னும் நூலும் குண்டலமும்
    மார்வில் திருமறுவும்,
மன்னு பூணும் நான்குதோளும்
    வந்தெங்கும் நின்றிடுமே.
2
3279
நின்றிடும் திசைக்கும் நையுமென்
    றன்னைய ரும்முனிதிர்,
குன்ற மாடத் திருக்குறுங்குடி
    நம்பியை நான்கண்டபின்,
வென்றி வில்லும் தண்டும்
    வாளும் சக்கரமும்சங்கமும்,
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா
    நெஞ்சுள்ளும் நீங்காவே.
3
3280
நீங்கநில்லாக் கண்ண நீர்களென்
    றன்னையரும் முனிதிர்,
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி
    நம்பியை நான்கண்டபின்,
பூந்தண் மாலைத் தண்டுழாயும்
    பொன்முடி யும்வடிவும்,
பாங்கு தோன்றும் பட்டும்நாணும்
    பாவியேன் பக்கத்தவே.
4
3281
பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்
    றன்னைய ரும்முனிதிர்,
தக்ககீர்த்தித் திருக்கு றுங்குடி
    நம்பியை நான்கண்டபின்,
தொக்கசோதித் தொண்டை வாயும்
    நீண்ட புருவங்களும்,
தக்கதாமரைக் கண்ணும் பாவியே
    னாவியின் மேலனவே.
5
3282
மேலும் வன்பழி நங்குடிக்கிவ
    ளென்றன்னை காணக்கொடாள்,
சோலைசூழ் தண்திருக் குறுங்குடி
    நம்பியை நான்கண்டபின்,
கோலநீள் கொடிமூக்கும் தாமரைக்
    கண்ணும் கனிவாயும்,
நீலமேனியும் நான்கு தோளுமென்
    னெஞ்சம் நிறைந்தனவே.
6
3283
நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள்
    என்றன்னை காணக்கொடாள்
சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி
    நம்பியை நான்கண்டபின்,
நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த
    நீண்டபொன் மேனியொடும்
நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான்
    நேமியங் கையுளதே.
7
3284
கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்
    றன்னைய ரும்முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி
    நம்பியை நான்கண்டபின்,
செய்யதாமரைக் கண்ணு மல்குலும்
    சிற்றிடை யும்வடிவும்,
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்
    பாவியேன் முன்னிற்குமே.
8
3285
முன்னின் றாயென்று தோழிமார்களும்
    அன்னைய ரும்முனிதிர்,
மன்னு மாடத் திருக்குறுங்குடி
    நம்பியை நான்கண்டபின்,
சென்னி நீண்முடி யாதியாய
    வுலப்பி லணிகலத்தன்,
கன்னல் பாலமு தாகிவந்தென்
    னெஞ்சம் கழியானே.
9
3286
கழியமிக்கதோர் காதல ளிவளென்
    றன்னை காணக்கொடாள்,
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி
    நம்பியை நான்கண்டபின்,
குழுமித் தேவர்கு ழாங்கள்தொழச்
    சோதிவெள் ளத்தினுள்ளே,
எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழு
    மார்க்கு மறிவரிதே.
10
3287
அறிவரிய பிரானை யாழியங்
    கையனை யேயலற்றி,
நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்
    சடகோபன் சொன்ன,
குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும்
    திருக்குறுங் குடியதன்மேல்
அறியக் கற்றுவல்லார் வைட்டணவ
    ராழ்கடல் ஞாலத்துள்ளே.#
11
நேரிசை வெண்பா
'எங்ஙனே நீர்முனிவ தென்னையினி? நம்பியழகு,
இங்ஙனே தோன்றுகின்ற தென்முன்'என,-அங்ஙன்
உருவெளிப் பாடா வுரைத்ததமிழ் மாறன்,
கருதுமவர்க் கின்பக் கடல்.
45

மேலே செல்க

6. கடல்
தலைவியின் நிலைகண்ட தாய், 'ஆவேசம் வந்ததோ' என்று நொந்து கூறும் பாசுரம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3288
'கடல்ஞாலம் செய்தேனும் யானே' என்னும்
    'கடல்ஞாலம் ஆவேனும் யானே' என்னும்,
'கடல்ஞாலம் கொண்டேனும் யானே' என்னும்
    'கடல்ஞாலம் கீண்டேனும் யானே' என்னும்,
'கடல்ஞாலம் முண்டேனும் யானே' என்னும்
    கடல்ஞாலத் தீசன்வந் தேறக் கொல்லோ?,
கடல்ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
    கடல்ஞா லத்தென் மகள்கற் கின்றவே?#
1
3289
'கற்கும்கல் விக்கெல்லை யிலனே' என்னும்
    'கற்கும்கல்வி யாவேனும் யானே' என்னும்,
'கற்கும்கல்வி செய்வேனும் யானே' என்னும்
    'கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே' என்னும்,
'கற்கும்கல்விச் சாரமும் யானே' என்னும்
    கற்கும்கல்வி நாதன்வந் தேறக் கொல்லோ?,
கற்கும் கல்வியீர்க் கிவையென் சொல்லுகேன்
    கற்கும் கல்வியென் மகள்காண் கின்றவே?
2
3290
'காண்கின்ற நிலமெல்லாம் யானே' என்னும்
    'காண்கின்ற விசும்பெல்லாம் யானே' என்னும்,
'காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே' என்னும்
    'காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே' என்னும்,
'காண்கின்ற கடலெல்லாம் யானே' என்னும்
    காண்கின்ற கடல்வண்ண னேறக் கொல்லோ?,
காண்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
    காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே?
3
3291
'செய்கின்ற கிதியெல்லாம் யானே' என்னும்
    'செய்வானின் றனகளும் யானே' என்னும்,
'செய்துமுன் னிறந்தவும் யானே' என்னும்
    'செய்கைப்பய னுண்பேனும் யானே' என்னும்,
'செய்வார்களைச் செய்வேனும் யானே' என்னும்
    செய்யகம லக்கண்ண னேறக் கொல்லோ?,
செய்யவுல கத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
    செய்ய கனிவா யிளமான் திறத்தே?
4
3292
'திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே' என்னும்
    'திறம்பாமல் மலையெடுத் தேனே' என்னும்
'திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே' என்னும்
    'திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே' என்னும்,
'திறம்பாமல் கடல்கடைந் தேனே' என்னும்
    திறம்பாத கடல்வண்ண னேறக் கொல்லோ?,
திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
    திறம்பா தென்திரு மகளெய் தினவே?
5
3293
'இனவேய்மலை யேந்தினேன் யானே' என்னும்
    'இனவேறுகள் செற்றேனும் யானே' என்னும்,
'இனவான்கன்று மேய்த்தேனும் யானே' என்னும்
    'இனவாநிரை காத்தேனும் யானே' என்னும்,
'இனவாயர் தலைவனும் யானே' என்னும்
    இனத்தேவர் தலைவன்வந் தேறக் கொல்லோ?,
இனவேற்கண் நல்லீர்க் கிவையென் சொல்லுகேன்
    இனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே?
6
3294
'உற்றார்க ளெனக்கில்லை யாரும்' என்னும்
    'உற்றார்க ளெனக்கிங்கெல் லாரும்' என்னும்,
'உற்றார்களைச் செய்வேனும் யானே' என்னும்
    'உற்றார்களை அழிப்பேனும் யானே' என்னும்,
'உற்றார்களுக் குற்றேனும் யானே' என்னும்
    உற்றாரிலி மாயன்வந் தேறக் கொல்லோ?,
உற்றீர்கட் கென்சொல்லிச் சொல்லு கேன்யான்
    உற்றென் னுடைப்பே தையுரைக் கின்றவே?
7
3295
'உரைக்கின்ற முக்கட்பிரான் யானே' என்னும்
    'உரைக்கின்ற திசைமுகன் யானே' என்னும்,
'உரைக்கின்ற அமரரும் யானே' என்னும்,
    'உரைக்கின்ற அமரர்கோன் யானே' என்னும்,
'உரைக்கின்ற முனிவரும் யானே' என்னும்,
    உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொல்லோ?,
உரைக்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
    உரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே?
8
3296
'கொடிய வினையாது மிலனே' என்னும்
    'கொடியவினை யாவேனும் யானே' என்னும்
'கொடியவினை செய்வேனும் யானே' என்னும்
    'கொடியவினை தீர்ப்பேனும் யானே' என்னும்,
'கொடியா னிலங்கைசெற் றேனே' என்னும்
    கொடியபுள் ளுடையவ னேறக் கொல்லோ?,
கொடிய வுலகத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
    கொடியேன் கொடியென் மகள்கோ லங்களே?
9
3297
'கோலங்கொள் சுவர்க்கமும் யானே' என்னும்
    'கோலமில் நரகமும் யானே' என்னும்,
'கோலம்திகழ் மோக்கமும் யானே' என்னும்
    'கோலங்கொ ளுயிர்களும் யானே' என்னும்,
'கோலங்கொள் தனிமுதல் யானே' என்னும்,
    கோலங்கொள் முகில்வண்ண னேறக் கொல்லோ?,
கோலங்கொ ளுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
    கோலந் திகழ்கோ தையென்கூந் தலுக்கே*
10
3298
கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும்
    குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் றன்னை,
வாய்ந்த வழுதிவள நாடன் மன்னு
    குருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து,
ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்
    இவையுமோர் பத்தும்வல் லார், உலகில்
ஏத்து பெருஞ்செல்வந் தாராய்த் திருமால்
    அடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே.#
11
நேரிசை வெண்பா
கடல்ஞாலத் தீசனைமுன் காணாமல் நொந்தே,
உடனா அனுசரிக்க லுற்றுத்,-திடமாக
வாய்ந்தவனாய்த் தான்பேசும் மாறன் உரையதனை,
ஆய்ந்துரைப்பா ராட்செயநோற் றார்.
46

7. நோற்ற நோன்பு
வானமாமலை எம்பெருமானிடத்தில் சரணம் புகுதல்
ஆசிரியத்துறை
3299
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனா
    கிலுமினி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர்
    சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய்* உனக்கு மிகையல்லே னங்கே.#
1
3300
அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன்
    உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து,நான்
எங்குற் றேனுமல் லேனிலங் கைசெற்ற அம்மானே,
திங்கள் சேர்மணி மாடம் நீடு
    சிரீவர மங்கல நகருறை,
சங்கு சக்கரத் தாய்*தமி யேனுக் கருளாயே.
2
3301
கருளப் புட்கொடி சக்க ரப்படை
    வான நாட*எங் கார்முகில் வண்ணா,
பொருளல் லாதஎன்னைப் பொருளாக்கி யடிமை கொண்டாய்,
தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்
    சிரீவர மங்கலநகர்க்கு,
அருள்செய் தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே.
3
3302
மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்
    காயன்று மாயப்போர் பண்ணி,
நீறு செய்த எந்தாய்* நிலங்கீண்ட அம்மானே,
தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச்
    சிரீவர மங்கலநகர்,
ஏறிவீற் றிருந்தாய்* உன்னை எங்கெய்தக் கூவுவனே?
4
3303
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?
    எவ்வதெவ் வத்து ளாயுமாய் நின்று,
கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே,
செய்த வேள்வியர் வையத் தேவரறாச்
    சிரீவர மங்கலநகர்,
கைதொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே.
5
3304
ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே*
    கண்ணா* என்று மென்னை யாளுடை,
வானநா யகனே* மணிமா ணிக்கச் சுடரே,
தேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கலத்
    தவர்கை தொழவுறை,
வான மாமலை யே*அடி யேன்தொழ வந்தருளே.
6
3305
வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர்
    கொழுந்தே, உலகுக்கோர்
முந்தைத் தாய்தந்தை யே*முழு ஏழுலகு முண்டாய்,
செந்தொ ழிலவர் வேத வேள்விஅறாச்
    சிரீவர மங்கலநகர்,
அந்தமில் புகழாய்* அடியேனை அகற்றேலே.
7
3306
அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலன்க
    ளாமவை நன்கறிந்தனன்,
அகற்றி யென்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய்,
பகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை
    வாணனே, என்றும்
புகற்கரிய எந்தாய்* புள்ளின்வாய் பிளந்தானே*
8
3307
புள்ளின்வாய் பிளந்தாய்* மருதிடை போயினாய்*
    எருதேழ் அடர்த்த,என்
கள்ள மாயவனே* கருமாணிக்கச் சுடரே,
தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார்
    மலிதண் சிரீவர மங்கை,
உள்ளிருந்த எந்தாய்* அருளாய் உய்யுமா றெனக்கே.
9
3308
ஆறெ னக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்
    தாய்,உனக் கோர்கைம்
மாறு நானென் றிலேனென தாவியு முனதே,
சேறு கொள்கரும் பும்பெருஞ் செந்நெலும்
    மலிதண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய்முடி யாய்*தெய்வ நாயகனே*
10
3309
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்
    கிரமன் அடியிணைமிசை,
கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்
செய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை
    மேய பத்துடன்,
வைகல் பாட வல்லார் வானோர்க் காரா அமுதே.#
11
நேரிசை வெண்பா
'நோற்றநோன் பாதியிலேன் நுன்றனைவிட் டாற்றகில்லேன்,
பேற்றுக் குபாயமுன்றன் பேரருளே-சாற்றுகின்றேன்,
இங்கென்னிலை' என்னும் எழில்மாறன் சொல்வல்லார்,
அங்கமரர்க் காரா அமுது.
47

8. ஆரா அமுதே
(இது கோயில் திருவாய்மொழி)
பேறுகிட்டாமையால் ஆராவமுதாழ்வாரிடத்தில் ஆழ்வார் ஆற்றாமை பேசி அலமருதல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
3310
ஆரா அமுதே* அடியேன் உடலம்
    நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்கு
    கின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும்
    செழுநீர்த் திருக்குடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்*
    கண்டேன் எம்மானே*#
1
3311
எம்மா னே*என் வெள்ளை மூர்த்தி*
    என்னை ஆள்வானே,
எம்மா வுருவும் வேண்டு மாற்றால்
    ஆவாய் எழிலேறே,
செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்
    மலரும் திருக்குடந்தை,
அம்மா மலர்க்கண் வளர்கின் றானே*
    என்நான் செய்கேனே*
2
3312
என்நான் செய்கேன்* யாரே களைகண்?
    என்னையென் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவ ராலும்
    ஒன்றும் குறைவேண்டேன்,
கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய்*
    அடியேன் அருவாணாள்,
சென்னா ளெந்நாள் அந்நா ளுனதாள்
    பிடித்தே செலக்காணே.
3
3313
செலக்காண் கிற்பார் காணும் அளவும்
    செல்லும் கீர்த்தியாய்,
உலப்பி லானே* எல்லா வுலகும்
    உடைய ஒருமூர்த்தி,
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்*
    உன்னைக் காண்பான்நான்
அலப்பாய்,ஆகா சத்தை நோக்கி
    அழுவன் தொழுவனே.
4
3314
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
    பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி
    நாணிக் கவிழ்ந்திருப்பன்,
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்*
    செந்தா மரைக்கண்ணா,
தொழுவ னேனை யுனதாள் சேரும்
    வகையே சூழ்கண்டாய்.
5
3315
சூழ்கண் டாயென் தொல்லை வினையை
    அறுத்துன் அடிசேரும்
ஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்
    தெனைநாள் அகன்றிருப்பன்?,
வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்*
    வானோர் கோமானே,
யாழி னிசையே* அமுதே* அறிவின்
    பயனே* அரியேறே*
6
3316
அரியே றே*என் அம்பொற் சுடரே*
    செங்கட் கருமுகிலே,
எரியே* பவளக் குன்றே* நான்றோள்
    எந்தாய்* உனதருளே,
பிரியா அடிமை யென்னைக் கொண்டாய்
    குடந்தைத் திருமாலே,
தரியே னினியுன் சரணந் தந்தென்
    சன்மம் களையாயே.
7
3317
களைவாய் துன்பம் களையா தொழிவாய்
    களைகண் மற்றிலேன்,
வளைவாய் நேமிப் படையாய்* குடந்தைக்
    கிடந்த மாமாயா,
தளரா வுடலம் என்ன தாவி
    சரிந்து போம்போது,
இளையா துனதாள் ஒருங்கப் பிடித்துப்
    போத இசைநீயே.#
8
3318
இசைவித் தென்னை யுன்தாள் இணைக்கீழ்
    இருந்தும் அம்மானே,
அசைவில் அமரர் தலைவர் தலைவா*
    ஆதிப் பெருமூர்த்தி,
திசைவில் வீசும் செழுமா மணிகள்
    சேரும் திருக்குடந்தை,
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்*
    காண வாராயே.
9
3319
வாரா வருவாய் வருமென் மாயா*
    மாயா மூர்த்தியாய்,
ஆரா அமுதாய் அடியேன் ஆவி
    அகமே தித்திப்பாய்,
தீரா வினைகள் தீர என்னை
    ஆண்டாய்* திருக்குடந்தை
ஊரா, உனக்காட் பட்டும் அடியேன்
    இன்னம் உழல்வேனோ?
10
3320
உழலை யென்பின் பேய்ச்சி முலையூ
    டவளை யுயிருண்டான்,
கழல்கள் அவையே சரணாக் கொண்ட
    குருகூர்ச் சடகோபன்,
குழலில் மலியச் சொன்ன ஓரா
    யிரத்து ளிப்பத்தும்,
மழலை தீர வல்லார் காமர்
    மானேய் நோக்கியர்க்கே.#
11
நேரிசை வெண்பா
ஆரா அமுதாழ்வார் ஆதரித்த பேறுகளைத்
தாராமை யாலே தளர்ந்துமிகத்,-தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்,
மாசறுசீர் மாறனெம் மான்.
48

9. மானேய் நோக்கு
திருவல்லவாழ் செல்ல ஒருப்பட்ட தலைவி கூறும் பாசுரம்
கலி விருத்தம்
3321
மானேய் நோக்குநல்லீர்*
    வைகலும்வினை யேன்மெலிய,
வானோர் வண்கமுகும்
    மதுமல்லிகை யுங்கமழும்,
தேனார் சோலைகள்சூழ்
    திருவல்ல வாழுறையும்
கோனா ரை,அடியேன்
    அடிகூடுவ தென்றுகொலோ?#
1
3322
என்றுகொல் தோழிமீர்காள்
    எம்மைநீர்நலிந் தென்செய்திரோ?
பொன்திகழ் புன்னைமகிழ்
    புதுமாதவி மீதணவி,
தென்றல் மணங்கமழும்
    திருவல்ல வாழ்நகருள்
நின்றபி ரான்,அடிநீ
    றடியோங்கொண்டு சூடுவதே?
2
3323
சூடும் மலர்க்குழலீர்*
    துயராட்டியே னைமெலிய,
பாடுநல் வேதவொலி
    பரவைத்திரை போல்முழங்க,
மாடுயர்ந் தோமப்புகை
    கமழும்தண் திருவல்லவாழ்
நீடுறை கின்றபிரான்
    கழல்காண்டுங்கொல் நிச்சலுமே?
3
3324
நிச்சலும் தோழிமீர்காள்*
    எம்மைநீர்நலிந் தென்செய்திரோ?
பச்சிலை நீள்கமுகும்
    பலவும்தெங்கும் வாழைகளும்,
மச்சணி மாடங்கள்மீ
    தணவும்தண் திருவல்லவாழ்,
நச்சர வினணைமேல்
    நம்பிரானது நன்னலமே.
4
3325
நன்னலத் தோழிமீர்காள்*
    நல்லவந்தணர் வேள்விப்புகை,
மைந்நலங் கொண்டுயர்விண்
    மறைக்கும்தண் திருவல்லவாழ்,
கன்னலங் கட்டிதன்னைக்
    கனியைபின் னமுதந்தன்னை,
என்னலங் கொள்சுடரை
    என்றுகொல்கண்கள் காண்பதுவே?
5
3326
காண்பதெஞ் ஞான்றுகொலோ
    வினையேன்கனி வாய்மடவீர்,
பாண்குரல் வண்டினொடு
    பசுந்தென்றலு மாகியெங்கும்,
சேண்சினை யோங்குமரச்
    செழுங்கானல் திருவல்லவாழ்,
மாண்குறள் கோலப்பிரான்
    மலர்த்தாமரைப் பாதங்களே?
6
3327
பாதங்கள் மேலணிபூத்
    தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர்,
ஓதநெ டுந்தடத்துள்
    உயர்தாமரை செங்கழுநீர்,
மாதர்கள் வாண்முகமும்
    கண்ணுமேந்தும் திருவல்லவாழ்,
நாதனிஞ் ஞாலமுண்ட
    நம்பிரான்றன்னை நாடோறுமே?
7
3328
நாடொறும் வீடின்றியே
    தொழக்கூடுங்கொல் நன்னுதலீர்,
ஆடுறு தீங்கரும்பும்
    விளைசெந்நெலு மாகியெங்கும்,
மாடுறு பூந்தடஞ்சேர்
    வயல்சூழ்தண் திருவல்லவாழ்,
நீடுறை கின்றபிரான்
    நிலந்தாவிய நீள்கழலே?
8
3329
கழல்வளை பூரிப்பயாம்
    கண்டுகைதொழக் கூடுங்கொலோ,
குழலென்ன யாழுமென்னக்
    குளிர்சோலையுள் தேனருந்தி,
மழலை வரிவண்டுகள்
    இசைபாடும் திருவல்லவாழ்,
சுழலின் மலிசக்கரப்
    பெருமானது தொல்லருளே?
9
3330
தொல்லருள் நல்வினையால்
    சொல்லக்கூடுங்கொல் தோழிமீர்காள்,
தொல்லருள் மண்ணும்விண்ணும்
    தொழநின்ற திருநகரம்,
நல்லரு ளாயிரவர்
    நலனேந்தும் திருவல்லவாழ்,
நல்லருள் நம்பெருமான்
    நாராயணன் நாமங்களே?
10
3331
நாமங்க ளாயிர
    முடையநம்பெரு மானடிமேல்,
சேமங்கொள் தென்குருகூர்ச்
    சடகோபன் தெரிந்துரைத்த,
நாமங்க ளாயிரத்துள்
    இவைபத்தும் திருவல்லவாழ்,
சேமங்கொள் தென்னகர்மேல்
    செப்புவார்சிறந் தார்பிறந்தே.#
11
நேரிசை வெண்பா
மாநலத்தால் மாறன் றிருவல்ல வாழ்புகப்போய்த்,
தானிளைத்து வீழ்ந்தவ்வூர் தன்னருகில்,-மேனலங்கித்
துன்பமுற்றுச் சொன்ன சொலவுகற்பார் தங்களுக்குப்,
பின்பிறக்க வேண்டா பிற.
49

10. பிறந்தவாறும்
எம்பெருமானை ஆழ்வார் வேண்டுதல்
ஆசிரியத்துறை
3332
பிறந்த வாறும் வளர்ந்த வாறும்
    பெரிய பாரதம் கைசெய்து, ஐவர்க்குத்
திறங்கள் சாட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்,
நிறந்த னூடுபுக் கெனதாவியை நின்றுநின்
    றுருக்கி யுண்கின்ற,இச்
சிறந்த வான்சுட ரே*உன்னை யென்றுகொல் சேர்வதுவே*#
1
3333
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்
    மாய மாவினை வாய்பி ளந்ததும்
மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும்,
அதுவிது உதுவென்ன லாவன வல்ல
    என்னையுன் செய்கை நைவிக்கும்,
முதுவைய முதல்வா* உன்னை யென்று தலைப்பெய்வனே?
2
3334
பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட
    பிள்ளைத் தேற்றமும், பேர்ந்தோர் சாடிறச்
செய்ய பாதமொன் றால்செய்த நின்சிறுச் சேவகமும்,
நெய்யுண் வார்த்தையுள், அன்னை கோல்கொள்ள
    நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க,
பையவே நிலையும் வந்தென் னெஞ்சை யுருக்குங்களே.
3
3335
கள்ள வேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்க
    வாறும், கலந்தசுரரை
உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும்,
வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை
    விளங்க நின்றதும்,
உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே.
4
3336
உண்ண வானவர் கோனுக் காயர்
    ஒருப்ப டுத்த அடிசி லுண்டதும்,
வண்ணமால் வரையை யெடுத்து மழைகாத்ததும்,
மண்ணை முன்படைத் துண்டு மிழ்ந்துக டந்தி டந்து
    மணந்த மாயங்கள்,
எண்ணுந் தோறுமென் னெஞ்செரி வாய்மெழு கொக்குநின்றே.
5
3337
நின்ற வாறு மிருந்த வாறும்
    கிடந்த வாறும் நினைப்பரியன,
ஒன்றலா வுருவாய் அருவாயநின் மாயங்கள்,
நின்று நின்று நினைக்கின் றேனுன்னை
    எங்ஙனம்நினை கிற்பன், பாவியேற்
கொன்றுநன் குரையாய் உலக முண்ட ஒண்சுடரே*
6
3338
ஒண்சுடரோ டிருளுமாய் நின்ற வாறும்
    உண்மையோ டின்மையாய் வந்து,என்
கண்கொ ளாவகை நீகரந் தென்னைச் செய்கின்றன,
எண்கொள் சிந்தையுள் நைகின்றேனென் கரிய
    மாணிக்க மே,என் கண்கட்குத்
திண்கொள்ள வொருநாள் அருளாயுன் திருவருவே.
7
3339
திருவுருவு கிடந்த வாறும் கொப்பூழ்ச்
    செந்தா மரைமேல், திசைமுகன்
கருவுள்வீற் றிருந்து படைத்திட்ட கருமங்களும்,
பொருவி லுன்தனி நாயகமவை கேட்குந்
    தோறுமென் னெஞ்சம் நின்றுநக்கு,
அருவி சோரும் கண்ணீ ரென்செய்கேன் அடியேனே*
8
3340
அடியை மூன்றை யிரந்த வாறும் அங்கேநின்
    றாம்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய, ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்,
நொடியு மாறவை கேட்குந் தோறுமென்
    னெஞ்சம் நின்றனக் கேக ரைந்துகும்,
கொடியவல் வினையேன் உன்னை யென்றுகொல் கூடுவதே?
9
3341
கூடி நீரைக் கடைந்த வாறும்
    அமுதம் தேவர் உண்ண, அசுரரை
வீடும் வண்ணங்க ளேசெய்து போன வித்தகமும்,
ஊடு புக்கென தாவியை யுருக்கி
    யுண்டிடு கின்ற, நின்றன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சுதா கணையானே*
10
3342
நாகணைமிசை நம்பிரான் சரணே
    சரண்நமக் கென்று, நாடொறும்
ஏக சிந்தைய னாய்க்குரு கூர்ச்சட கோபன் மாறன்,
ஆக நூற்றஅந் தாதி யாயிரத்துள்
    இவையுமோர் பத்தும் வல்லார்,
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே.#
11
நேரிசை வெண்பா
'பிறந்துலகங் காத்தளிக்கும் பேரருட்கண் ணா*உன்
சிறந்தகுணத் தாலுருகுஞ் சீலத்-திறந்தவிர்ந்து,
சேர்ந்தனுப விக்குநிலை செய்' என்ற சீர்மாறன்,
வாய்ந்தபதத் தேமனமே* வைகு.
50
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

ஆறாம் பத்து
1. வைகல் பூங்கழி
தலைவி பறவைகளைத் தூதுவிடல்
கலி விருத்தம்
3343
வைகல்பூங் கழிவாய் வந்து
    மேயும் குருகினங்காள்,
செய்கொள் செந்நெ லுயர்திரு
    வண்வண் டூருறையும்,
கைகொள் சக்கரத் தென்கனி
    வாய்பெரு மானைக்கண்டு,
கைகள் கூப்பிச் சொல்லீர்
    வினையாட்டியேன் காதன்மையே.#
1
3344
காதல் மென்பெடை யோடுடன்
    மேயும் கருநாராய்,
வேத வேள்வி யொலிமுழங்
    கும்தண் டிருவண்வண்டூர்,
நாதன் ஞாலமெல் லாமுண்ட
    நம்பெரு மானைக்கண்டு,
பாதம் கைதொழுது பணியீ
    ரடியேன் திறமே.
2
3345
திறங்க ளாகியெங் கும்செய்த
    ளூடுழல் புள்ளினங்காள்,
சிறந்த செல்வம் மல்கு
    திருவண்வண் டூருறையும்,
கறங்கு சக்கரக் கைக்கனி
    வாய்ப்பெரு மானைக்கண்டு,
இறங்கி நீர்தொழுது பணியீ
    ரடியே னிடரே.
3
3346
இடரில் போகம் மூழ்கி
    யிணைந்தாடும் மடவன்னங்காள்,
விடலில் வேத வொலிமுழங்
    கும்தண் திருவண்வண்டூர்,
கடலில் மேனிப் பிரான்கண்
    ணனைநெடு மாலைக்கண்டு,
'உடலம் நைந்தொருத் தியுரு கும்'
    என் றுணர்த்துமினே.
4
3347
உணர்த்த லூட லுணர்ந்துடன்
    மேயும் மடவன்னங்காள்,
திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு
    சேரும் திருவண்வண்டூர்,
புணர்த்த பூந்தண் டுழாய்முடி
    நம்பெரு மானைக்கண்டு,
புணர்த்த கையினரா யடியே
    னுக்கும் போற்றுமினே.
5
3348
போற்றி யானிரந் தேன்புன்னை
    மேலுறை பூங்குயில்காள்,
சேற்றில் வாளை துள்ளும்
    திருவண்வண் டூருறையும்,
ஆற்ற லாழியங் கையம
    ரர்பெரு மானைக்கண்டு,
மாற்றங் கொண்டரு ளீர்மையல்
    தீர்வ தொருவண்ணமே.
6
3349
ஒருவண் ணம்சென்று புக்கெனக்
    கொன்றுரை யொண்கிளியே,
செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர்
    வேலைத் திருவண்வண்டூர்,
கருவண்ணம் செய்யவாய் செய்யகண்
    செய்யகை செய்யகால்,
செருவொண் சக்கரம் சங்கடை
    யாளம் திருந்தக்கண்டே.
7
3350
திருந்தக் கண்டெனக் கொன்றுரை
    யாயொண் சிறுபூவாய்,
செருந்தி ஞாழல் மகிழ்புன்னை
    சூழ்தண் டிருவண்வண்டூர்,
பெருந்தண் தாமரைக் கண்பெரு
    நீண்முடி நால்தடந்தோள்,
கருந்திண் மாமுகில் போல்திரு
    மேனி யடிகளையே.
8
3351
அடிகள் கைதெழு தலர்மேல்
    அசையும் அன்னங்காள்,
விடிவை சங்கொலிக் கும்திரு
    வண்வண் டூருறையும்,
கடிய மாயன்தன் னைக்கண்ண
    னைநெடு மாலைக்கண்டு,
கொடிய வல்வினை யேன்திறம்
    கூறுமின் வேறுகொண்டே.
9
3352
வேறு கொண்டும்மை யானிரந்
    தேன்வெறி வண்டினங்காள்,
தேறு நீர்ப்பம் பைவட
    பாலைத் திருவண்வண்டூர்,
மாறில் போரரக் கன்மதிள்
    நீறெழச் செற்றுகந்த,
ஏறு சேவக னார்க்கென்னை
    யுமுளள் என்மின்களே.
10
3353
மின்கொள் சேர்புரி நூல்குற
    ளாயகல் ஞாலம்கொண்ட,
வன்கள் வனடி மேல்குரு
    கூர்ச்சட கோபன் சொன்ன,
பண்கொள் ஆயிரத் துள்ளிவை
    பத்தும் திருவண்வண்டூர்க்கு,
இன்கொள் பாடல் வல்லார்
    மதனர்மின் னிடை யவர்க்கே.#
11
நேரிசை வெண்பா
'வைகல்திரு வண்வண்டூர் வைகும் இராமனுக்கு,என்
செய்கைதனைப் புள்ளினங்காள்* செப்பும்'எனக்-கைகழிந்த
காதலுடன் தூதுவிடுங் காரிமா றன்கழலே,
மேதினியீர்* நீர்வணங்கு மின்.
51

2. மின்னிடை மடவார்
(இத்திருவாய்மொழி நாச்சிமார் பிரணய கலகத்தில் (ஊடல் காலத்தில்) சில தலங்களில் சேவிக்கப்படுகிறது.)
தலைவன் தாமதித்து வரக் கண்ட தலைவி ஊடி உரைத்தல்
ஆசிரியத்துறை
3354
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார்
    முன்புநா னதஞ்சுவன்,
மன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே,
உன்னுடைய சுண்டாயம் நானறிவ னினியது
    கொண்டு செய்வதென்,
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ*#
1
3355
போகுநம் பீ*உன் தாமரை புரைகண் ணிணையும்
    செவ்வாய் முறுவலும்,
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோ மேயாம்?,
தோகைமா மயிலார்கள் நின்னருள் சூடுவார்
    செவியோசை வைத்தெழ,
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.
2
3356
போயி ருந்தும்நின் புள்ளுவம் அறியாத
    வர்க்குரை நம்பி, நின்செய்ய
வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள்,
வேயி ருந்தடந் தோளினா ரித்திரு
    வருள்பெறு வார்யவர்கொல்
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?
3
3357
ஆலி னீளிலை யேழுலக முண்டன்று நீகிடந்
    தாய்,உன் மாயங்கள்
மேலை வானவரு மறியா ரினியெம் பரமே?
வேலி னேர்தடங் கண்ணினர் விளையாடு
    சூழலைச் சூழவே நின்று
காலி மேயக்கவல் லாய்*எம்மைநீ கழறேலே.
4
3358
கழறேல் நம்பீ*உன் கைதவம் மண்ணும் விண்ணும்
    நன்கறியும், திண்சக்கர
நிழறு தொல்படை யாய்*உனக் கொன்றுணர்ந் துவன்நான்,
மழறு தேன்மொழி யார்கள் நின்னருள்
    சூடுவார் மனம் வாடி நிற்க,எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.
5
3359
குழகி யெங்கள் குழமணன் கொண்டு
    கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,
பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?,
அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும்
    தேவிமை தகுவார் பலருளர்,
கழக மேறேல் நம்பீ*உனக்கும் இளைதே கன்மமே.
6
3360
கன்மமன் றெங்கள் கையில் பாவை பறிப்பது
    கடல்ஞால முண்டிட்ட,
நின்மலா* நெடியாய்* உனக்கேலும் பிழைபிழையே,
வன்மமே சொல்லி யெம்மைநீ விளையாடுதி
    அதுகேட்கில் என்னைமார்,
தன்ம பாவமென் னாரொரு நான்று தடிபிணக்கே.
7
3361
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல்
    பேதித்தும் பேதி யாதது,ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,
இணக்கி யெம்மையெந் தோழிமார் 'விளையாடப்
    போதுமின்' என்னப் போந்தோமை,
உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே?
8
3362
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி
    உன்தாமரைத் தடங்கண் விழிகளின்,
அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு
    சிறுசோறுங் கண்டு,நின்
முகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.
9
3363
நின்றிலங்கு முடியினாய்* இருபத் தோர்கால்
    அரசு களைகட்ட,
வென்றி நீண்மழுவா* வியன்ஞாலம் முன்படைத்தாய்,
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத்
    தோன்றிய கருமா ணிக்கச்சுடர்,
நின்றன்னால் நலிவேபடுவோ மென்றும் ஆய்ச்சி யோமே.
10
3364
ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய்
    வார்த்தையுள், சீற்ற முண்டழு
கூத்த அப்பன் றன்னைக் குருகூர்ச் சடகோபன்,
ஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையு
    மோர்பத் திசையொடும்,
நாத்தன்னால் நவில வுரைப்பார்க் கில்லை நல்குரவே.#
11
நேரிசை வெண்பா
மின்னிடையார் சேர்கண்ணன் மெத்தெனவந் தானென்று,
தன்னிலைபோய்ப் பெண்ணிலையாய்த் தான்றள்ளி,-'உன்னுடனே
கூடேன்?'என் றூடுங் குருகையர்கோன் தாள்தொழவே
நாடோறும் நெஞ்சமே* நல்கு.
52

3. நல்குரவும்
தம்மைக் கவர்ந்தவன் எம்பெருமான் எனல்
கலி விருத்தம்
3365
நல்குரவும் செவ்வும்
    நரகும் சுவர்க்கமுமாய்,
வெல்பகையும் நட்பும்
    விடமும் அமுதமுமாய்,
பல்வகையும் பரந்தபெரு
    மானென்னை யாள்வானை,
செல்வம்மல்கு குடித்திரு
    விண்ணகர்க் கண்டேனே.#
1
3366
கண்டவின்பம் துன்பம்
    கலக்கங்களும் தேற்ற முமாய்,
தண்டமும் தண்மையும்
    தழலும் நிழலுமாய்,
கண்டுகோ டற்கரிய
    பெருமானென்னை யாள்வானூர்,
தெண்டிரைப் புனல்சூழ்
    திருவிண்ணகர் நன்னகரே.
2
3367
நகரமும் நாடுகளும்
    ஞானமும் மூடமுமாய்,
நிகரில்சூழ் சுடராயிரு
    ளாய்நில னாய்விசும்பாய்,
சிகரமா டங்கள்சூழ்
    திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
புகர்கொள்கீர்த்தி யல்லாலில்லை
    யாவர்க்கும் புண்ணியமே.
3
3368
புண்ணியம் பாவம்
    புணர்ச்சிபிரி வென்றிவையாய்,
எண்ணமாய் மறப்பாயுண்
    மையாயின் மையாயல்லனாய்,
திண்ணமா டங்கள்சூழ்
    திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
கண்ணனின் னருளேகண்டு
    கொண்மின்கள் கைதவமே.
4
3369
கைதவம் செம்மை
    கருமை வெளுமையுமாய்,
மெய்பொய் யிளமை
    முதுமைபுதுமை பழமையுமாய்,
செய்யதிண் மதிள்சூழ்
    திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பெய்தகாவு கண்டீர்
    பெருந்தேவுடை மூவுலகே.
5
3370
மூவுலகங் களுமாய்
    அல்லனாயுகப் பாய்முனிவாய்,
பூவில்வாழ் மகளாய்த்
    தவ்வையாய்ப்புக ழாய்ப்பழியாய்,
தேவர்மே வித்தொழும்
    திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பாவியேன் மனத்தே
    யுறைகின்ற பரஞ்சுடரே.
6
3371
பரஞ்சுடர் உடம்பாய்
    அழுக்குப்பதித்த வுடம்பாய்,
கரந்தும்தோன் றியும்நின்றும்
    கைதவங்கள் செய்தும்,விண்ணோர்
சிரங்களால் வணங்கும்
    திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
வரங்கொள்பாத மல்லாலில்லை
    யாவர்க்கும் வன்சரணே.
7
3372
வன்சரண் சுரர்க்காய்
    அசுரர்க்குவெங் கூற்றமுமாய்,
தன்சரண் நிழற்கீ
    ழுலகம்வைத்தும் வையாதும்,
தென்சரண் திசைக்குத்
    திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
என்சரணென் கண்ணன்
    என்னையாளுடை என்னப்பனே.
8
3373
என்னப்பன் எனக்காயிகுளாய்
    என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன்
    முத்தப்பனென் அப்பனுமாய்
மின்னப்பொன் மதிள்சூழ்திரு
    விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன்
    தந்தனன்தன தாள்நிழலே.
9
3374
நிழல்வெயில் சிறுமைபெருமை
    குறுமை நெடுமையுமாய்,
சுழல்வனநிற் பனமற்று
    மாயவை அல்லனுமாய்,
மழலைவாய் வண்டுவாழ்
    திருவிண்ணகர் மன்னுபிரான்,
கழல்களன்றி மற்றோர்
    களைகணிலம் காண்மின்களே.
10
3375
'காண்மின்க ளுலகீர்*' என்று
    கண்முகப் பேநிமிர்ந்த,
(*)தாளிணையன் றன்னைக் குருகூர்ச்
    சடகோபன் சொன்ன,
ஆணையா யிரத்துத்திரு
    விண்ணகர்த் தும்வல்லார்,
கோணையின்றி விண்ணோர்க்
    கென்றுமாவர் குரவர்களே.#

(*) தாணையன் என்றும் பாடம்.
11
நேரிசை வெண்பா
நல்லவலத் தால்நம்மைச் சேர்த்தோன்முன் னண்ணாரை,
வெல்லும் விருத்த விபூதியனென்று,-எல்லையறத்
தானிருந்து வாழ்த்துந் தமிழ்மாறன் சொல்வல்லார்,
வானவர்க்கு வாய்த்தகுர வர்.
53

4. குரவையாய்ச்சியர்
கிருஷ்ணனின் லீலைகளைப் பேசக் கிடைத்தமைக்கு மகிழ்தல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
3376
குரவை யாய்ச்சிய ரோடு கோத்ததும்
    குன்றமொன் றேந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்
    உட்பட மற்றும்பல,
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய
    வினைகளை யேயலற்றி,
இரவும் நன்பக லும்த விர்கிலம்
    என்ன குறைவெமக்கே?#
1
3377
கேயத் தீங்குழ லூதிற்றும் நிரைமேய்த்த
    தும்,கெண்டை யொண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்
    மணந்ததும் மற்றும்பல,
மாயக் கோலப் பிரான்றன் செய்கை
    நினைந்து மனம்குழைந்து,
நேயத் தோடு கழிந்த போதெனக்
    கெவ்வுல கம்நிகரே?
2
3378
நிகரில் மல்லரைச் செற்ற தும்நிரை
    மேய்த்ததும் நீணெடுங்கைச்,
சிகர மாகளி றட்டதும் இவைபோல்
    வனவும் பிறவும்,
புகர்கொள் சோதிப் பிரான்றன் செய்கை
    நினைந்து புலம்பி,என்றும்
நுகர வைகல் வைகப்பெற் றேனெனக்
    கென்இனி நோவதுவே?
3
3379
நோவ ஆய்ச்சி யுரலோ டார்க்க
    இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்,
சாவப் பாலுண் டதும்ஊர் சகடம்
    இறச்சா டியதும்,
தேவக் கோலப் பிரான்றன் செய்கை
    நினைந்து மனம்குழைந்து,
மேவக் காலங்கள் கூடி னேன்எனக்
    கென்இனி வேண்டுவதே?
4
3380
வேண்டித் தேவ ரிரக்க வந்து
    பிறந்ததும் வீங்கிருள்வாய்,
பூண்டன் றன்னை புலம்பப் போயங்கோர்
    ஆய்க்குலம் புக்கதும்,
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத்
    துஞ்சவஞ் சம்செய்ததும்,
ஈண்டு நான்அலற் றப்பெற் றேன்எனக்
    கென்ன இகலுளதே?
5
3381
இகல்கொள் புள்ளைப் பிளந்த தும்இமில்
    ஏறுகள் செற்றதுவும்,
உயர்கொள் சோலைக் குருந்தொ சித்ததும்
    உட்பட மற்றும்பல,
அகல்கொள் வையம் அளந்த மாயனென்
    அப்பன்றன் மாயங்களே,
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன
    மனப்ப ரிப்பே?
6
3382
மனப்பரிப் போட ழுக்கு மானிட
    சாதியில் தான்பிறந்து,
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்றன
    சீற்ற த்தினை முடிக்கும்,
புனத்து ழாய்முடி மாலை மார்பனென்
    அப்பன்றன் மாயங்களே,
நினைக்கும் நெஞ்சுடை யேனெ னக்கினி
    யார்நிகர் நீணிலத்தே?
7
3383
நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும்
    போர்கள் செய்து,
வாண னாயிரம் தோள்து ணித்ததும்
    உட்பட மற்றும்பல,
மாணி யாய்நிலம் கொண்ட மாயனென்
    அப்பன்றன் மாயங்களே,
காணும் நெஞ்சுடை யேனெனக் கினியென
    கலக்க முண்டே?
8
3384
கலக்க வேழ்கட லேழ்மலை யுலகே
    ழும்கழி யக்கடாய்,
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்
    உட்பட மற்றும்பல,
வலக்கை யாழி யிடக்கைச் சங்கம்
    இவையுடை மால்வண்ணனை
மலக்குநா வுடையேற்கு மாறுள தோவிம்
    மண்ணின் மிசையே?
9
3385
மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர் பாரத
    மாபெ ரும்போர்,
பண்ணி, மாயங்கள் செய்து சேனையைப்
    பாழ்பட நூற்றிட்டுப்போய்,
விண்மி சைத்தன தாம மேபுக
    மேவிய சோதிதன்தாள்,
நண்ணி நான்வணங் கப்பெற் றேன்எனக்
    கார்பிறர் நாயகரே?
10
3386
நாய கன்முழு வேழுல குக்குமாய்
    முழுவே ழுலகும்,தன்
வாய கம்புக வைத்துமிழ்ந் தவையாய்
    அவையல் லனுமாம்,
கேசவன் அடியிணை மிசைக்குரு கூர்ச்சட
    கோபன் சொன்ன
தூய வாயிரத் திப்பத்தால் பத்த
    ராவர் துவளின்றியே.#
11
நேரிசை வெண்பா
'குரவைமுத லாங்கண்ணன் கோலச் செயல்கள்,
இரவுபக லென்னாம லென்றும்,-பரவுமனம்
பெற்றேன்*'என் றேகளித்துப் பேசும் பராங்குசன்றன்,
சொற்றேனில் நெஞ்சமே* துவள்.
54

5. துவளில்
தோழி தாயார்க்குக் கூறுதல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3387
துவளில் மாமணி மாட மோங்கு
    தொலைவில் லிமங்க லம்தொழும்
இவளை, நீரினி யன்னை மீர்*உமக்
    காசை யில்லை விடுமினோ,
தவள வொண்சங்கு சக்க ரமென்றும்
    தாம ரைத்தடங் கணென்றும்,
குவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க
    நின்று நின்று குமுறுமே.#
1
3388
குமுறு மோசை விழவொ லித்தொலை
    வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
அமுத மென்மொழி யாளை நீருமக்
    காசை யின்றி அகற்றினீர்,
திமிர்கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள்
    தேவ தேவபி ரானென்றே,
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க
    நெக்கோ சிந்து கரையுமே.
2
3389
கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை
    வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
உரைகொ ளின்மொழி யாளை நீருமக்
    காசை யின்றி அகற்றினீர்,
திரைகொள் பௌவத்துச் சேர்ந்த தும்திசை
    ஞாலம் தாவி யளந்ததும்
நிரைகள் மேயத்தது மேபி தற்றி
    நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே.
3
3390
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை
    வில்லி மங்கலங் கண்டபின்,
அற்க மொன்றும் அறிவு றாள்மலிந்
    தாள்கண் டீரிவள் அன்னைமீர்,
கற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல்
    வண்ணன் கண்ணபி ரானென்றே,
ஒற்க மொன்றுமி லள்உ கந்துகந்
    துள்ம கிழ்ந்து குழையுமே.
4
3391
குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை
    வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
இழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட்
    பிரானி ருந்தமை காட்டினீர்,
மழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொ
    டன்று தொட்டும்மை யாந்து,இவள்
நுழையும் சிந்தையள் அன்னை மீர்*தொழும்
    அத்தி சையுற்று நோக்கியே.
5
3392
நோக்கும் பக்கமெல் லாம்க ரும்பொடு
    செந்நெ லோங்குசெந் தாமரை,
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை
    வண்தொ லைவில்லி மங்கலம்,
நோக்கு மேல்அத் திசையல் லால்மறு
    நோக்கி லள்வைகல் நாடொறும்,
வாய்க்கொள் வாசக மும்ம ணிவண்ணன்
    நாம மேயிவள் அன்னைமீர்*
6
3393
அன்னை மீர்*அணி மாம யில்சிறு
    மானி வள்நம்மைக் கைவலிந்,
என்ன வார்த்தையும் கேட்கு றாள்தொலை
    வில்லி மங்கலம் என்றல்லால்,
முன்னம் நோற்ற விதிகொ லோமுகில்
    வண்ணன் மாயங்கொ லோ,அவன்
சின்ன மும்திரு நாம முமிவள்
    வாய னகள்தி ருந்தவே.
7
3394
திருந்து வேதமும் வேள்வி யும்திரு
    மாம களிரும் தாம்,மலிந்
திருந்து வாழ்பொரு நல்வ டகரை
    வண்தொ லைவில்லி மங்கலம்,
கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅந்
    நாள்தொ டங்கியிந் நாடொறும்,
இருந்தி ருந்தர விந்த லோசன*
    என்றென் றேநைந்தி ரங்குமே.
8
3395
இரங்கி நாடொறும் வாய்வெ ரீஇயிவள்
    கண்ண நீர்கள் அலமர,
மரங்க ளுமிரங் கும்வ கை'மணி
    வண்ண வோ*'என்று கூவுமால்,
துரங்கம் வாய்பிளந் தானு றைதொலை
    வில்லி மங்கல மென்று,தன்
கரங்கள் கூப்பித் தொழுமவ் வூர்த்திரு
    நாமங் கற்றதற் பின்னையே.
9
3396
பின்னை கொல்நில மாம கள்கொல்
    திரும கள்கொல் பிறந்திட்டாள்,
என்ன மாயங்கொ லோஇ வள்நெடு
    மாலென் றேநின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்றி ருந்துறை
    யும்தொ லைவில்லி மங்கலம்
சென்னி யால்வணங் கும்அவ் வூர்த்திரு
    நாமம் கேட்பது சிந்தையே.
10
3397
சிந்தை யாலும்சொல் லாலும் செய்கையி
    னாலும் தேவ பிரானையே,
தந்தை தாயென் றடைந்த வண்குரு
    கூர வர்சட கோபன்சொல்,
முந்தை யாயிரத் துள்ளி வைதொலை
    வில்லி மங்கலத் தைச்சொன்ன,
செந்த மிழ்பத்தும் வல்ல வரடி
    மைசெய் வார்திரு மாலுக்கே.#
11
நேரிசை வெண்பா
துவளறுசீர் மால்திறத்துத் தொன்னலத்தால், நாளும்
துவளறுதன் சீலமெல்லாஞ் சொன்னான்,-துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கிநின்ற மாறனதில்,
மன்னுமுவப் பால்வந்த மால்.
55

மேலே செல்க

6. மாலுக்கு
தலைவியைக் குறித்துத் தாய் இரங்கல்
கலி விருத்தம்
3398
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு,
நீலக் கருநிற மேக நியாயற்கு,
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு,என் கொங்கலர்
ஏலக் குழலி யிழந்தது சங்கே.#
1
3399
சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு,
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு,என்
மங்கை யிழந்தது மாமை நிறமே.
2
3400
நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட,
திறம்கிளர் வாய்ச்சிறுக் கள்ள னவற்கு,
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு,என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.
3
3401
பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு,
மாடுடை வையம் அளந்த மணாளற்கு,
நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.
4
3402
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு,
மண்புரை வையம் இடந்த வராகற்கு,
தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு,என்
கண்புனை கோதை இழந்தது கற்பே.
5
3403
கற்பகக் காவன நற்பல தோளற்கு,
பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு,
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு,என்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.
6
3404
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு,
பயைர வினணைப் பள்ளியி னானுக்கு,
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்கு,என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.
7
3405
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு,என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.
8
3406
மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு,
சேண்சுடுர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,
காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு,என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.
9
3407
பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு,
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு,
நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு,என்
கற்புடை யாட்டி யிழந்தது கட்டே.
10
3408
கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை,
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
கட்டெழில் வானவர் போகமுண் பாரே.#
11
நேரிசை வெண்பா
மாலுடனே தான்கலந்து வாழப் பெறாமையால்,
சாலநைந்து தன்னுடைமை தானடையக்-கோலியே,
தானிகழ வேண்டாமற் றன்னைவிடல் சொல்மாறன்,
ஊனமறு சீர்நெஞ்சே* உண்.
56

7. உண்ணுஞ்சோறு
தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைப் பற்றித் தாய் இரங்குதல்
கலி நிலைத்துறை
3409
உண்ணுஞ் சோறு பருகுநீர்
    தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமா னென்றென்
    றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக்
    கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு
    மூர்திருக் கோளூரே.#
1
3410
ஊரும் நாடும் உலகமும்
    தன்னைப்போல், அவனுடைய
பேரும் தார்களு மேபிதற்றக்
    கற்பு வானிடறி,
சேருநல் வளஞ்சேர் பழனத்
    திருகோ ளூர்க்கே,
போருங் கொலுரை யீர்கொடி
    யேன்கொடி பூவைகளே*
2
3411
பூவை பைங்கிளிகள் பந்து
    தூதைபூம் புட்டில்கள்,
யாவையும் திருமால் திருநாமங்
    களேகூவி யெழும்,என்
பாவை போயினித் தண்பழனத்
    திருக்கோ ளூர்க்கே,
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொ
    டென்செய் யுங்கொலோ?
3
3412
கொல்லை யென்பர்கொ லோகுணம்
    மிக்கனள் என்பர்கொலோ,
சில்லை வாய்ப்பெண் டுகளயற்
    சேரியுள் ளாருமெல்லே,
செல்வம் மல்கி யவன்கிடந்த
    திருக்கோ ளூர்க்கே,
மெல்லிடை நுடங்க இளமான்
    செல்ல மேவினளே.
4
3413
மேவி நைந்து நைந்துவிளை
    யாடலுறா ளென்சிறுத்
தேவிபோய், இனித்தன்
    திருமால் திருக்கோ ளூரில்,
பூவியல் பொழிலும் தடமும்
    அவன்கோ யிலுங்கண்டு,
ஆவியுள் குளிர எங்ஙனே
    யுகக்குங்கொல் இன்றே?
5
3414
இன்றெனக் குதவா தகன்ற
    இளமான் இனிப்போய்,
தென்திசைத் திலத மனைய
    திருக்கோ ளூர்க்கே
சென்று,தன் திருமால் திருக்கண்ணும்
    செவ்வாயும் கண்டு,
நின்று நின்று நையும்
    நெடுங்கண்கள் பனிமல்கவே.
6
3415
மல்குநீர் கண்ணொடு மைய
    லுற்ற மனத்தனளாய்,
அல்லுநன் பகலும் நெடுமா
    லென்றழைத் தினிப்போய்,
செல்வம் மல்கி அவன்கிடந்த
    திருக்கோ ளூர்க்கே,
ஒல்கி யொல்கி நடந்தெங்ஙனே
    புகுங்கொ லோசிந்தே?
7
3416
ஒசிந்த நுண்ணிடை மேல்கையை
    வைத்து நொந்துநொந்து,
கசிந்த நெஞ்சின யாள்க்கண்ண
    நீர்துளும்பச் செல்லுங்கொல்,
ஒசிந்த வொண்மல ராள்கொழுநன்
    திருக்கோ ளூர்க்கே,
கசிந்த நெஞ்சின ளாயெம்மை
    நீத்தஎம் காரிகையே?
8
3417
காரியம் நல்லன களவை காணிலென்
    கண்ணனுக்கென்று,
ஈரியா யிருப்பாளி தெல்லாம்
    கிடக்க இனிப்போய்,
சேரி பல்பழி தூயிரைப்பத்
    திருக்கோ ளூர்க்கே,
நேரிழை நடந்தா ளெம்மை
    யொன்றும் நினைத்திலளே.
9
3418
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண்
    இளமான் இனிப்போய்,
அனைத்து லகுமு டைய
    அரவிந்த லோசனனை,
தினைத்தனை யும்விடா ளவன்சேர்
    திருக்கோ ளூர்க்கே,
மனைக்கு வான்பழியும் நினையாள்
    செல்ல வைத்தனளே.
10
3419
வைத்த மாநிதி யாம்மது
    சூதனை யேயலற்றி,
கொத்த லர்பொழில் சூழ்குரு
    கூர்ச்சட கோபன்சொன்ன,
பத்து நூற்று ளிப்பத்
    தவன்சேர் திருக்கோளூர்க்கே,
சித்தம் வைத்து ரைப்பார்
    திகழ்பொன் னுலகாள்வாரே.#
11
நேரிசை வெண்பா
'உண்ணுஞ்சோ றாதி யொருமூன்றும் எம்பெருமான்
கண்ணன்'என்றே நீர்மல்கிக் கண்ணிணைகள்,-மண்ணுலகில்
மன்னுதிருக் கோளூரில் மாயன்பாற் போமாறன்,
பொன்னடியே நந்தமக்குப் பொன்.
57

8. பொன்னுலகு
தலைவி பறவைகளைத் தலைவனிடம் தூது விடுதல்
கலி விருத்தம்
3420
பொன்னுல காளீரோ
    புவனிமுழு தாளீரோ,
நன்னலப் புள்ளினங்காள்
    வினையாட்டியேன் நானிரந்தேன்,
முன்னுல கங்களெல்லாம்
    படைத்தமுகில் வண்ணன்கண்ணன்,
என்னலங் கொண்டபிரான்
    றனக்கென்னிலை மையுரைத்தே?#
1
3421
மையமர் வாள்நெடுங்கண்
    மங்கைமர்முன்பென் கையிருந்து,
நெய்யம ரின்னடிசில்
    நிச்சல்பாலொடு மேவீரோ,
கையமர் சக்கரத்தென்
    கனிவாய்ப்பெரு மானைக்கண்டு,
மெய்யமர் காதல்சொல்லிக்
    கிளிகாள்*விரைந் தோடிவந்தே?
2
3422
ஓடிவந் தென்குழல்மேல்
    ஒளிமாமல ரூதீரோ,
கூடிய வண்டினங்காள்*
    குருநாடுடை ஐவர்கட்காய்,
ஆடிய மாநெடுந்தேர்ப்
    படைநீறெழச் செற்றபிரான்,
சூடிய தண்டுளப
    முண்டதூமது வாய்கள்கொண்டே?
3
3423
தூமது வாய்கள்கொண்டு
    வந்தென்முல்லைகள் மேல்தும்பிகாள்,
பூமது வுண்ணச்செல்லில்
    வினையேனைப்பொய் செய்தகன்ற,
மாமது வார்தண்டுழாய்
    முடிவானவர் கோனைக்கண்டு,
யாமிது வோதக்கவா
    றென்னவேண்டும்கண் டீர்நுங்கட்கே.
4
3424
நுங்கட்கி யானுரைக்கேன்
    வம்மின்யான்வளர்த் தகிளிகாள்,
வெங்கட்புள் ளூர்ந்துவந்து
    வினையேனைநெஞ் சம்கவர்ந்த,
செங்கட் கருமுகிலைச்
    செய்யவாய்ச்செழுங் கற்பகத்தை,
எங்குச்சென் றாகிலும்கண்
    டிதுவோதக்க வாறென்மினே.
5
3425
என்மின்னு நூல்மார்வ
    னென்கரும்பெரு மானென்கண்ணன்,
தன்மன்னு நீள்கழல்மேல்
    தண்டுழாய்நமக் கன்றிநல்காள்,
கன்மின்க ளென்றும்மையான்
    கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,
சென்மின்கள் தீவினையேன்
    வளர்த்தசிறு பூவைகளே*
6
3426
பூவைகள் போல்நிறத்தன்
    புண்டரீகங்கள் போலும்கண்ணன்,
யாவையும் யாவருமாய்
    நின்றமாயனென் ஆழிப்பிரான்,
மாலைவல் வாய்பிளந்த
    மதுசூதற்கென் மாற்றம்சொல்லி,
பாவைகள்* தீர்க்கிற்றிரே
    வினையாட்டியேன் பாசறவே.
7
3427
பாசற வெய்தியின்னே
    வினையேனெனை யூழிநைவேன்?,
ஆசறு தூவிவெள்ளைக்
    குருகே*அருள் செய்யொருநாள்,
மாசறு நீலச்சுடர்
    முடிவானவர் கோனைக்கண்டு,
ஏசறும் நும்மையல்லால்
    மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.
8
3428
பேர்த்துமற் றோர்களைகண்
    விளையாட்டியேன் நானொன்றிலேன்,
நீர்த்திரை மேலுலவி
    யிரைதேரும்பு தாவினங்காள்,
கார்த்திரள் மாமுகில்போல்
    கண்ணன்விண்ணகர் கோனைக்கண்டு,
வார்த்தைகள் கொண்டருளி
    யுரையீர்வைகல் வந்திருந்தே.
9
3429
வந்திருந் தும்முடைய
    மணிச்சேவலும் நீருமெல்லாம்,
அந்தர மொன்றுமின்றி
    யலர்மேலசை யுமன்னங்காள்,
என்திரு மார்வற்கென்னை
    யின்னவாறிவள் காண்மினென்று,
மந்திரத் தொன்றுணர்த்தி
    யுரையீர்மறு மாற்றங்களே.
10
3430
மாற்றங்க ளாய்ந்துகொண்டு
    மதுசூதபி ரானடிமேல்,
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்
    குருகூர்ச்சட கோபன்சொன்ன,
தோற்றங்க ளாயிரத்துள்
    இவையுமொரு பத்தும்வல்லார்,
ஊற்றின்கண் நுண்மணல்போல்
    உருகாநிற்பர் நீராயே.#
11
நேரிசை வெண்பா
பொன்னுலகு பூமியெல்லாம் புள்ளினங்கட் கேவழங்கி,
'என்னிடரை மாலுக் கியம்பும்'என-மன்னுதிரு
நாடு முதற்றூது நல்கிவிடு மாறனையே,
நீடுலகீர்* போய்வணங்கும் நீர்.
58

9. நீராய் நிலனாய்
ஆழ்வார் எம்மானை உருக்கத்துடன் அழைத்தல்
கலி நிலைத்துறை
3431
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்,
சீரார் சுடர்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனானாய்,
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.#
1
3432
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி,
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே,
நண்ணி யுனைநான் கண்டு கந்து கூத்தாட,
நண்ணி யொருநாள் ஞாலத் தூடே நடவாயே.
2
3433
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்,
சாலப் பலநாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே,
கோலத் திருமா மகளோ டுன்னைக் கூடாதே,
சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ?
3
3434
தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரர் உடல்வேறா,
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே,
கிளர்ந்து பிரமன் சிவனிந் திரன்விண் ணவர்சூழ,
விளங்க வொருநாள் காண வாராய் விண்மீதே.
4
3435
விண்மீ திருப்பாய்*மலைமேல் நிற்பாய்*கடல்சேர்ப்பாய்,
மண்மீ துழல்வாய்* இவற்று ளெங்கும் மறைந்துறைவாய்,
எண்மீ தியன்ற புறவண் டத்தாய்* எனதாவி,
உண்மீ தாடி யுருக்காட் டாதே யொளிப்பாயோ?
5
3436
பாயோர் அடிவைத் ததன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாய்,ஓர் அடியாய் எல்லா வுலகும் தடவந்த
மாயோன், உன்னைக் காண்பான் வருந்தி யெனைநாளும்,
தீயோ டுடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?
6
3437
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்,
உலகுக் கேயோ ருயிரு மானாய் புறவண்டத்து,
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ,
அலகில் பொலிந்த அறிவி லேனுக் கருளாயே.
7
3438
அறிவி லேனுக் கருளாய் அறிவா ருயிரானாய்,
வெறிகொள் சோதி மூர்த்தி* அடியேன் நெடுமாலே,
கிறிசெய் தென்னைப் புறத்திட் டின்னம் கெடுப்பாயோ,
பிறிதொன் றறியா அடியே னாவி திகைக்கவே?
8
3439
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,
பாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ,
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே,
கூவிக் கொள்ளும் கால மின்னம் குறுகாதோ?
9
3440
குறுகா நீளா இறுதி கூடா எனையூழி,
சிறுகா பெருகா அளவி லின்பம் சேர்ந்தாலும்,
மறுகா லின்றி மாயோ னுனக்கே யாளாகும்,
சிறுகா லத்தை யுறுமோ அந்தோ தெரியிலே?
10
3441
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,
தெரியச் சொன்ன ஓரா யிரத்து ளிப்பத்தும்,
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.#
11
நேரிசை வெண்பா
நீராகிக் கேட்டவர்க ணெஞ்சழிய, மாலுக்கும்
ஏரார் விசும்பி லிருப்பரிதா,-ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரிமா றன்சொல்லை,
ஓதிடவே யுய்யும் உலகு.
59

10. உலகம் உண்ட
(இது கோயில் திருவாய்மொழி)
திருவேங்கடவன் திருவடிகளில் சரண் புகல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3442
உலகம் உண்ட பெருவாயா*
    உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி*
    நெடியாய்* அடியே னாருயிரே,
திலதம் உலகுக் காய்நின்ற
    திருவேங் கடத்தெம் பெருமானே,
குலதொல் லடியேன் உனபாதம்
    கூடு மாறு கூறாயே.#
1
3443
கூறாய் நீறாய் நிலனாகிக்
    கொடுவல் லசுரர் குலமெல்லாம்,
சீறா எறியும் திருநேமி
    வலவா* தெய்வக் கோமானே,
சேறார் சுனைத்தா மரைசெந்தீ
    மலரும் திருவேங் கடத்தானே,
ஆறா அன்பில் அடியேனுன்
    அடிசேர் வண்ணம் அருளாயே.
2
3444
வண்ண மருள்கொள் அணிமேக
    வண்ணா* மாய அம்மானே,
எண்ணம் புகுந்து தித்திக்கும்
    அமுதே* இமையோர் அதிபதியே,
தெண்ணல் அருவி மணிபொன்முத்
    தலைக்கும் திருவேங் கடத்தானே,
அண்ண லே*உன் அடிசேர
    அடியேற் காவா வென்னாயே*
3
3445
ஆவா வென்னா துலகத்தை
    அலைக்கும் அசுரர் வாணாள்மேல்,
தீவாய் வாளி மழைபொழிந்த
    சிலையா* திருமா மகள்கேள்வா,
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
    விரும்பும் திருவேங் கடத்தானே,
பூவார் கழல்கள் அருவினையேன்
    பொருந்து மாறு புணராயே.
4
3446
புணரா நின்ற மரமேழன்
    றெய்த வொருவில் வலவாவோ,
புணரேய் நின்ற மரமிரண்டின்
    நடுவே போன முதல்வாவோ,
திணரார் மேகம் எனக்களிறு
    சேரும் திருவேங் கடத்தானே,
திணரார் சார்ங்கத் துனபாதம்
    சேர்வ தடியே னெந்நாளே?
5
3447
'எந்நா ளேநாம் மண்ணளந்த
    இணைத்தா மரைகள் காண்பதற்கெ'ன்று,
எந்நா ளும்நின் றிமையோர்கள்
    ஏத்தி யிறைஞ்சி யினமினமாய்,
மெய்ந்நா மனத்தால் வழிபாடு
    செய்யும் திருவேங் கடத்தானே,
மெய்ந்நா னெய்தி யெந்நாளுன்
    அடிக்கண் அடியேன் மேவுவதே?
6
3448
அடியேன் மேவி யமர்கின்ற
    அமுதே* இமையோர் அதிபதியே,
கொடியா அடுபுள் ளுடையானே*
    கோலக் கனிவாய்ப் பெருமானே,
செடியார் வினைகள் தீர்மருந்தே*
    திருவேங் கடத்தெம் பெருமானே,
நொடியார் பொழுதும் உனபாதம்
    காண நோலா தாற்றேனே.
7
3449
நோலா தாற்றேன் நுனபாதம்
    காண வென்று நுண்ணுணர்வில்,
நீலார் கண்டத் தம்மானும்
    நிறைநான் முகனு மிந்திரனும்,
சேலேய் கண்ணார் பலர்சூழ
    விரும்பும் திருவேங் கடத்தானே,
மாலாய் மயக்கி யடியேன்பால்
    வந்தாய் போலே வாராயே.
8
3450
வந்தாய் போலே வாராதாய்*
    வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கட் செங்கனிவாய்
    நால்தோ ளமுதே* எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப்
    பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ* அடியேன் உனபாதம்
    அகல கில்லேன் இறையுமே.
9
3451
'அகல கில்லேன் இறையும்'என்
    றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய்* உலகமூன்
    றுடையாய்* என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
    விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன்
    அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே.#
10
3452
'அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர்*
    வாழ்மின்' என்றென் றருள்கொடுக்கும்
படிக்கே ழில்லாப் பெருமானைப்
    பழனக் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
    திருவேங் கடத்துக் கிவைபத்தும்,
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
    பெரிய வானுள் நிலாவுவரே.#
11
நேரிசை வெண்பா
உலகுயமால் நின்ற யுயர்வேங் கடத்தே,
அலர்மகளை முன்னிட் டவன்றன்,-மலரடியே
வன்சரணாய்ச் சேர்ந்த மகிழ்மாறன் றாளிணையே,
உன்சரணாய் நெஞ்சமே* உள்.#
60
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

ஏழாம் பத்து
1. உண்ணிலாவிய
ஐம்புலன்களால் எவ்வளவு நாட்கள் துன்புறுவேன் என்று வருந்துதல்
ஆசிரியத் துறை
3453
உண்ணி லாவிய ஐவ ரால்குமை
    தீற்றி யென்னையுன் பாத பங்கயம்,
நண்ணிலா வகையே நலிவா னின்ன மெண்ணு கின்றாய்,
எண்ணி லாப்பெரு மாயனே* இமையோர்கள்
    ஏத்து முலக மூன்றுடை,
அண்ண லே*அமு தே*அப்ப னே*என்னை யாள்வானே*#
1
3454
என்னை யாளும் வன்கோ வோரைந் திவைபெய்
    திராப்பகல் மோது வித்திட்டு,
உன்னை நானணு காவகை செய்து போதி கண்டாய்,
கன்ன லே*அமு தே*கார் முகில்வண்ண
    னே*கடல் ஞாலம் காக்கின்ற,
மின்னு நேமியி னாய்*வினை யேனுடை வேதியனே*
2
3455
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை
    மோது வித்து,உன் திருவடிச்
சாதி யாவகை நீதடுத் தென்பெறு தியந்தோ,
ஆதி யாகி யகலி டம்படைத் துண்டு மிழ்ந்து
    கடந்திடந் திட்ட,
சோதி நீண்முடி யாய்*தொண்ட னேன்மது சூதனனே*
3
3456
சூது நானறி யாவகை சுழற்றியோர்
    ஐவரைக் காட்டி,உன் அடிப்போது
நானணு காவகை செய்து போதி கண்டாய்,
யாதும் யாவரு மின்றிநின் னகம்பால்
    ஒடுக்கியோ ராலி னீளிலை,
மீது சேர்குழவி* வினையேன் வினைதீர் மருந்தே*
4
3457
தீர்மருந் தின்றி யைந்து நோயடும்
    செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,
நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பா னொக்கின்றாய்,
ஆர்ம ருந்தினி யாகுவார்? அடலாழி
    யேந்தி யசுரர் வன்குலம்,
வேர்ம ருங்கறுத் தாய்*விண்ணு ளார்பெரு மானேயோ*
5
3458
விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய்
    வாரை யும்செறும் ஐம்பு லனிவை,
மண்ணு ளென்னைப் பெற்றா லென்செய் யாமற்று
    நீயும்விட்டால்?
பண்ணு ளாய்*கவி தன்னு ளாய்*பத்தி
    யினுள் ளாய்*பர மீசனே, வந்தென்
கண்ணுளாய்* நெஞ்சுளாய்* சொல்லுளாய்* ஒன்று சொல்லாயே.
6
3459
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிதாத
    ஓரைவர் வன்கயவரை,
என்று யான்வெல் கிற்பனுன் திருவரு ளில்லையேல்?,
அன்று தேவர் அசுரர் வாங்க
    அலைகட லரவம் அளாவி,ஓர்
குன்றம் வைத்த எந்தாய்*கொடியேன் பருகின் னமுதே*
7
3460
இன்ன முதெனத் தோன்றி யோரைவர்
    யாவரையும் மயக்க, நீவைத்த
முன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன்
சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக்
    கைதொழ வேயரு ளெனக்கு,
என்னம் மா*என் கண்ணா* இமையோர்தம் குலமுதலே*
8
3461
குலமுத லடும்தீ வினைக்கொடு வன்குழியினில்
    வீழ்க்கும் ஐவரை
வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்,
நிலமுத லினிஎவ் வுலகுக்கும் நிற்பன
    செல்வன என,பொருள்
பலமுதல் படைத்தாய்*என் கண்ணா*என் பரஞ்சுடரே*
9
3462
'என்பரஞ் சுடரே*' என்றுன்னை அலற்றியுன்
    இணைத்தா மரைகட்கு,
அன்புருகி நிற்கும் அதுநிற்கச் சுமடு தந்தாய்,
வன்பரங்க ளெடுத்துஐவர் திசைதிசை
    வலித்தெற்று கின்றனர்,
முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ*
10
3463
கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள்
    படைத்தளித் துக்கெடுக் கும்,அப்
புண்ட ரீகக்கொப் பூழ்புனற் பள்ளி யப்பனுக்கே,
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
    சொல்லா யிரத்து ளிப்பதும்,
கண்டு பாடவல் லார்வினை போம்கங்கு லும்பகலே.#
11
நேரிசை வெண்பா
'உண்ணிலா வைவ ருடனிருத்தி யிவ்வுலகில்,
எண்ணிலா மாய னெனைநலிய,-எண்ணுகின்றான்'
என்றுநினைந் தோலமிட்ட இன்புகழ்சேர் மாறனெனக்
குன்றிவிடு மேபவக்கங் குல்.
61

2. கங்குலும் பகலும்
(இது கோயில் திருவாய்மொழி)
தலைவியின் தளர்ச்சி கண்ட தாய் தலைவனை வினாதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3464
கங்குலும் பகலும் கண்டுயி லறியாள்
    கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்
    'தாமரைக்கண்' என்றே தளரும்,
'எங்ஙனே தரிக்கே னுன்னைவிட் டெ'ன்னும்
    இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்*
    இவள்திறத் தென்செய்கின் றாயே?#
1
3465
'என்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா*'
    என்னும்கண் ணீர்மல்க இருக்கும்,
'என்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்?'
    என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்,
'முன்செய்த வினையே* முகப்படாய்' என்னும்
    'முகில்வண்ணா* தகுவதோ?' என்னும்,
முன்செய்திவ் வுலகம் உண்டுமிழ்ந் தளந்தாய்*
    என்கொலோ முடிகின்ற திவட்கே?
2
3466
வட்கிலள் இறையும் 'மணிவண்ணா*' என்னும்
    வானமே நோக்கும்மை யாக்கும்,
'உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட
    ஒருவனே*' என்னுள் ளுருகும்,
'கட்கிலீ* உன்னைக் காணுமா றருளாய்
    காகுத்தா* கண்ணனே*' என்னும்,
திட்கொடி மதிள்சூழ் திருவரங் கத்தாய்*
    இவள்திறத் தென்செய்திட் டாயே?
3
3467
இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும்
    எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,
'கட்டமே காதல்*' என்றுமூர்ச் சிக்கும்
    'கடல்வண்ணா* கடியைகாண்' என்னும்,
'வட்டவாய் நேமி வலங்கையா*' என்னும்
    'வந்திடாய்' என்றென்றே மயங்கும்,
சிட்டனே* செழுநீர்த் திருவரங் கத்தாய்*
    இவள்திறத் தென்சிந்தித் தாயே?
4
3468
சிந்திக்கும் திகைக்கும் தேறும்கை கூப்பும்
    'திருவரங் கத்துள்ளாய்*' என்னும்
வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க
    'வந்திடாய்' என்றென்றே மயங்கும்,
அந்திப்போ தவுணன் உடலிடந் தானே*
    அலைகடல் கடைந்தவா ரமுதே,
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
    தையலை மையல்செய் தானே*
5
3469
'மையல்செய் தென்னை மனம்கவர்ந் தானே*'
    என்னும்'மா மாயனே*' என்னும்,
'செய்யவாய் மணியே*' என்னும்'தண் புனல்சூழ்
    திருவரங் கத்துள்ளாய்*' என்னும்,
'வெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில்
    ஏந்தும்விண் ணோர்முதல்*' என்னும்,
பைகொள்பாம் பணையாய்* இவள்திறத் தருளாய்
    பாவியேன் செய்யற்பா லதுவே.
6
3470
'பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய்*
    பற்றிலார் பற்றநின் றானே,
காலசக் கரத்தாய்* கடலிடங் கொண்ட
    கடல்வண்ணா* கண்ணனே*' என்னும்,
'சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய்*'
    என்னும்'என் தீர்த்தனே*' என்னும்,
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்
    என்னுடைக் கோமளக் கொழுந்தே.
7
3471
'கொழுந்துவா னவர்கட் கெ'ன்னும்'குன் றேந்திக்
    கோநிரை காத்தவன்*' என்னும்,
அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும்
    'அஞ்சன வண்ணனே*' என்னும்,
எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும்
    'எங்ஙனே நோக்குகேன்?' என்னும்,
செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய்*
    என்செய்கேன் என்திரு மகட்கே?
8
3472
'என்திரு மகள்சேர் மார்வனே*' என்னும்
    'என்னுடை யாவியே*' என்னும்,
'நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட
    நிலமகள் கேள்வனே*' என்னும்,
'அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட
    ஆய்மகள் அன்பனே*' என்னும்,
தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே*
    தெளிகிலேன் முடிவிவள் தனக்கே.#
9
3473
'முடிவிவள் தனக்கொன் றறிகிலேன்' என்னும்
    'மூவுல காளியே*' என்னும்,
'கடிகமழ் கொன்றைச் சடையனே*' என்னும்
    'நான்முகக் கடவுளே*' என்னும்,
'வடிவுடை வானோர் தலைவனே*' என்னும்
    'வண்திரு வரங்கனே*' என்னும்,
அடியடை யாதாள் போலிவள் அணுகி
    அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.
10
3474
முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி
    உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண் பொழில்சூழ்
    வண்குரு கூர்ச்சட கோபன்,
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன் மாலை
    ஆயிரத் திப்பத்தும் வல்லார்,
முகில்வண்ண வானத் திமையவர் சூழ
    இருப்பர்பே ரின்பவெள் ளத்தே.#
11
நேரிசை வெண்பா
கங்குல் பகலரதி கைவிஞ்சி மோகமுற,
அங்கதனைக் கண்டோ ரரங்கரைப்பார்த்து,-'இங்கிவள்பால்
என்செயநீ ரெண்ணுகின்ற தென்னுநிலை சேர்மாறன்,
அஞ்சொலுற நெஞ்சுவெள்ளை யாம்.#
62

3. வெள்ளைச் சுரிசங்கு
யாவரும் தடுத்தும் தலைவி தலைவனைச் சேரத் துணிதல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3475
வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித்
    தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே,
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்
    என்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்,
வெள்ளச் சுகமவன் வீற்றி ருந்த
    தேவ வொலியும் விழா வொலியும்,
பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும்அறாத்
    திருப்பே ரையில் சேர்வன் நானே.#
1
3476
நானக் கருங்குழல் தோழி மீர்காள்*
    அன்னையர் காள்*அயற் சேரியீர்காள்,
நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்
    என்வசம் அன்றிதி ராப்ப கல்போய்,
தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ்
    தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,
வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன்
    செங்கனி வாயின் (*)திறத்த துவ்வே.

(*) திறத்த துவே என்றும் பாடம்.
2
3477
செங்கனி வாயின் திறத்த தாயும்
    செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும்,
சங்கொடு சக்கரம் கண்டு கந்தும்
    தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும்,
திங்களும் நாளும் விழாவ றாத
    தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,
நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ*
    நாணும் நிறையு மிழந்த துவ்வே.
3
3478
இழந்தவெம் மாமை திறத்துப் போன
    என்னெஞ்சி னாருமங் கேஒ ழிந்தார்,
உழந்தினி யாரைக்கொண் டென்உ சாகோ?
    ஓதக் கடலொலி போல எங்கும்,
எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு
    தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,
முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன்
    அன்னையர் காள்*என்னை யென்மு னிந்தே?
4
3479
முனிந்து சகடம் உதைத்து மாயப்
    பேய்முலை யுண்டு மருதி டைப்போய்,
கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த
    கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,
முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள்*
    முன்னி யவன்வந்து வீற்றி ருந்த,
கனிந்த பொழில்திருப் பேரை யிற்கே
    காலம் பெறவென்னைக் (*)காட்டு மின்னே.

(*) காட்டு மினே என்றும் பாடம்.
5
3480
காலம் பெறவென்னைக் காட்டு மின்கள்
    காதல் கடலின் மிகப் பெரிதால்,
நீல முகில்வண் ணத்தெம் பெருமான்
    நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,
ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த
    நான்மறை யாளரும் வேள்வி யோவா,
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
    கூடு புனல்திருப் பேரை யிற்கே.
6
3481
பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை
    செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த,
பேரையிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப்
    பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,
ஆரை யினியிங் குடையம் தோழி*
    என்னெஞ்சம் கூவவல் லாரு மில்லை,
ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது?
    என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே.
7
3482
கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக்
    கார்க்கடல் வண்ணனோ டென்தி றத்துக்
கொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக்
    கொண்டவென் காத லுரைக்கில் தோழீ,
மண்டினி ஞால மும்ஏழ் கடலும்
    நீள்வி சும்பும் கழியப் பெரிதால்,
தெண்டிரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த
    தென்திருப் பேரையில் சேர்வன் சென்றே.
8
3483
சேர்வன்சென் றென்னுடைத் தோழி மீர்காள்*
    அன்னையர் காள்*என்னைத் தேற்ற வேண்டா,
நீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு?
    நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை,
கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட
    கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த,
ஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத்
    தென்திருப் பேரை யின்மா நகரே.
9
3484
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
    நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்,
சிகரம் அணிநெடு மாடம் நீடு
    தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
    நூற்றுவ ரையன்று மங்க நூற்ற,
நிகரில் முகில்வண்ணன் நேமி யானென்
    னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே?
10
3485
ஊழிதோ றூழி யுருவும் பேரும்
    செய்கையும் வேறவன் வையங் காக்கும்,
ஆழிநீர் வண்ணனை யச்சு தன்னை
    அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன,
கேழிலந் தாதியோ ராயி ரத்துள்
    இவைதிருப் பேரையில் மேய பத்தும்,
ஆழியங் கையனை யேத்த வல்லார்
    அவரடி மைத்திறத் தாழி யாரே.#
11
நேரிசை வெண்பா
வெள்ளியநா மங்கேட்டு விட்டகன்ற பின்மோகம்,
தெள்ளியமால் தென்றிருப்பேர் சென்றுபுக,-உள்ளமங்கே
பற்றிநின்ற தன்மை பகருஞ் சடகோபற்கு,
அற்றவர்கள் தாமாழி யார்.
63

4. ஆழியெழ
(இது கோயில் திருவாய்மொழி அன்று. எனினும், சில கோயில்களில் நித்யாநுஸந்தான காலத்தில் சேவிக்கிறார்கள்.)
எம்பெருமானின் வெற்றிகளைக் கூறல்
கலி விருத்தம்
3486
ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்
மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே.#
1
3487
ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
மாறு சுழன்றழைக் கின்ற வொலி,அப்பன்
சாறு படவமு தங்கொண்ட நான்றே.
2
3488
நான்றில வேழ்மண்ணும் தானத்த வே,பின்னும்
நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்
நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்
ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே.
3
3489
நாளு மெழநில நீரு மெழ,விண்ணும்
கோளு மெழஎரி காலு மெழ,மலை
தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்
ஊளி யெழவுல கமுண்ட வூணே.
4
3490
ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கு மொலி,விண்ணுள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.
5
3491
போழ்து மெலிந்தபுன் செக்கரில், வான்திசை
சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை
கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்
ஆழ்துயர் செய்தசு ரரைக்கொல்லு மாறே.
6
3492
மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன
நூறு பிணம்மலை போல்புர ள,கடல்
ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்
நீறு படவிலங் கைசெற்ற நேரே.
7
3493
நேர்சரிந் தான்கொடிக் கோழிகொண் டான்,பின்னும்
நேர்சரிந் தானெரி யுமன லோன்,பின்னும்
நேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,அப்பன்
நேர்சரி வாணன்திண் டோள்கொண்ட அன்றே.
8
3494
அன்றுமண் நீரெரி கால்விண் மலைமுதல்,
அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்
அன்று மழையுயிர் தேவும்மற் றும்.,அப்பன்
அன்று முதலுல கம்செய் ததுமே.
9
3495
மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை
வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன
ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்
தீமழை காத்துக் குன்ற மெடுத்தானே.
10
3496
குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,
ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,
நன்றி புனைத்தஓ ராயிரத் துள்ளிவை,
வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே.#
11
நேரிசை வெண்பா
ஆழிவண்ணன் றன்விசய மானவைமுற் றுங்காட்டி,
'வாழிதனால்*' என்று மகிழ்ந்துநிற்க,-ஊழிலவை
தன்னையின்று போற்கண்டு தானுரைத்த மாறன்சொல்,
பன்னுவரே நல்லதுகற் பார்.
64

5. கற்பார்
எம்பிரானுக்கு அடிமையாகாதோரைப் பார்த்து இரங்குதல்
கலி நிலைத்துறை
3497
கற்பார் இராம பிரானையல்
    லால்மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்
    பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும்
    சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக
    னார்பெற்ற நாட்டுளே.#
1
3498
நாட்டில் பிறந்தவர் நாரணற்
    காளன்றி யாவரோ,
நாட்டில் பிறந்து படாதன
    பட்டு மனிசர்க்கா,
நாட்டை நலியும் அரக்கரை
    நாடித் தடிந்திட்டு,
நாட்டை யளித்துய்யச் செய்து
    நடந்தமை கேட்டுமே?
2
3499
கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல்
    லால்மற்றும் கேட்பரோ,
கேட்பார் செவிசுடு கீழ்மை
    வசுவுக ளேவையும்,
சேட்பால் பழம்பகை வன்சிசு
    பாலன், திருவடி
தாட்பால் அடைந்த தன்மை
    யறிவாரை யறிந்துமே?
3
3500
தன்மை யறிபவர் தாம்அவற்
    காளன்றி யாவரோ,
பன்மைப் படர்பொருள் ஆதுமில்
    பாழ்நெடுங் காலத்து,
நன்மைப் புனல்பண்ணி நான்முக
    னைப்பண்ணி, தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய
    சூழல்கள் சிந்தித்தே?
4
3501
சூழல்கள் சிந்திக்கில் மாயன்
    கழலன்றிச் சூழ்வரோ,
ஆழப் பெரும்புனல் தன்னுள்
    அழுந்திய ஞாலத்தை,
தாழப் படாமல்தன் பாலொரு
    கோட்டிடைத் தான்கொண்ட,
கேழல் திருவுரு வாயிற்றுக்
    கேட்டும் உணர்ந்துமே?
5
3502
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்
    காளன்றி யாவரோ,
வாட்டமி லாவண்கை மாவலி
    வாதிக்க வாதிப்புண்டு,
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந்
    தார்க்கிடர் நீக்கிய,
கோட்டங்கை வாமன னாய்ச்செய்த
    கூத்துகள் கண்டுமே?
6
3503
கண்டும் தெளிந்தும்கற் றார்கண்ணற்
    காளன்றி யாவரோ,
வண்டுண் மலர்த்தொங்கல் மார்க்கண்
    டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி யீச
    னுடன்கொண்டு சாச்சொல்ல,
கொண்டங்குத் தன்னொடும் கொண்டுடன்
    சென்ற துணர்ந்துமே?
7
3504
செல்ல வுணர்ந்தவர் செல்வன்றன்
    சீரன்றிக் கற்பரோ,
எல்லை யிலாத பெருந்தவத்
    தால்பல செய்மிறை,
அல்லல் அமரரைச் செய்யும்
    இரணிய னாகத்தை,
மல்லல் அரியுரு வாய்ச்செய்த
    மாயம் அறிந்துமே?
8
3505
மாயம் அறிபவர் மாயவற்
    காளன்றி யாவரோ,
தாயம் செறுமொரு நூற்றுவர்
    மங்கவோ ரைவர்க்காய்,
தேச மறியவோர் சாரதி
    யாய்ச்சென்று சேனையை
நாசம்செய் திட்டு, நடந்தநல்
    வார்த்தை யறிந்துமே?
9
3506
வார்த்தை யறிபவர் மாயவற்
    காளன்றி யாவரோ,
போர்த்த பிறப்பொடு நோயொடு
    மூப்பொடு இறப்பிவை
பேர்த்து, பெருந்துன்பம் வேரற
    நீக்கித்தன் தாளின்கீழ்ச்
சேர்த்து,அவன் செய்யும் சேமத்தை
    யெண்ணித் தெளிவுற்றே?#
10
3507
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்
    கின்பக் கதிசெய்யும்,
தெளிவுற்ற கண்ணனைத் தென்குரு
    கூர்ச்சட கோபன்சொல்,
தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை
    பத்தும்வல் லாரவர்,
தெளிவுற்ற சிந்தையர் பாமரு
    மூவுல கத்துள்ளே.ஷ#
11
நேரிசை வெண்பா
கற்றோர் கருதும் விசயங்க ளுக்கெல்லாம்,
பற்றாம் விபவகுணப் பண்புகளை,-உற்றுணர்ந்து
மண்ணிலுள்ளோர் தம்மிழவை வாய்ந்துரைத்த மாறன்சொல்,
பண்ணிலினி தானதமிழ்ப் பா.
65

மேலே செல்க

6. பாமரு மூவுலகும்
பெருமானைக் காண உருக்கத்துடன் அழைத்தல்
கலி நிலைத்துறை
3508
பாமரு மூவுலகும் படைத்த
    பற்ப நாபாவோ,
பாமரு மூவுலகும் அளந்த
    பற்ப பாதாவோ,
தாமரைக் கண்ணாவோ* தனியேன்
    தனியா ளாவோ,
தாமரைக் கையாவோ* உன்னை
    யென்றுகொல் சார்வதுவே?#
1
3509
என்றுகொல் சார்வதந் தோஅரன்
    நான்முக னேத்தும்,செய்ய
நின்திருப் பாதத்தை யான்நிலம்
    நீரெரி கால்,விண்ணுயிர்
என்றிவை தாம்முத லாமுற்று
    மாய்நின்ற எந்தாயோ,
குன்றெடுத் தாநிரை மேய்த்தவை
    காத்தவெங் கூத்தாவோ*
2
3510
காத்தவெங் கூத்தாவோ* மலையேந்திக்
    கன்மாரி தன்னை,
பூத்தண் டுழாய்முடி யாய்*புனை
    கொன்றையஞ் செஞ்சடையாய்,
வாய்த்தவென் நான்முக னே*வந்தென்
    னாருயிர் நீயானால்,
ஏத்தருங் கீர்த்தியி னாய்*உன்னை
    யெங்குத் தலைப்பெய்வனே?
3
3511
எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில்
    மூவுல கும்நீயே,
அங்குயர் முக்கட் பிரான்பிர
    மன்பெரு மானவன்நீ,
வெங்கதிர் வச்சிரக் கையிந்
    திரன்முத லாத்தெய்வம்நீ,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி
    யென்னுடைக் கோவலனே*
4
3512
என்னுடைக் கோவல னே*என்பொல்
    லாக்கரு மாணிக்கமே,
உன்னுடை யுந்தி மலர்உலக
    மவைமூன் றும்பரந்து,
உன்னுடைச் சோதிவெள் ளத்தகம்
    பாலுன்னைக் கண்டுகொண்டிட்டு,
என்னுடை யாருயிரார் எங்ங
    னேகொல்வந் தெய்துவரே?
5
3513
வந்தெய்து மாறறி யேன்மல்கு
    நீலச் சுடர்தழைப்ப,
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொரு
    மாணிக்கம் சேர்வதுபோல்,
அந்தர மேல்செம்பட் டோடடி
    யுந்திகை மார்வுகண்வாய்,
செஞ்சுடர்ச் சோதி விடவுறை
    என்திரு மார்பனையே.
6
3514
என்திரு மார்பன் றன்னையென்
    மலைமகள் கூறன்றன்னை,
என்றுமென் நாமக ளையகம்
    பால்கொண்ட நான்முகனை,
நின்ற சசிபதி யைநிலங்
    கீண்டெயில் மூன்றெரித்த,
வென்று புலம்துரந் தவிசும்
    பாளியைக் காணேனோ*
7
3515
ஆளியைக் காண்பரி யாய்அரி
    காண்நரி யாய்,அரக்கர்
ஊளையிட் டன்றிலங் கைடந்
    துபிலம் புக்கொளிப்ப,
மீளியம் புள்ளைக் கடாய்விறல்
    மாலியைக் கொன்று,பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்தடர்த்
    தானையும் காண்டுங்கொலோ?
8
3516
காண்டுங்கொ லோநெஞ்ச மே*கடி
    யவினை யேமுயலும்,
ஆண்டிறல் மீளிமொய்ம் பிலரக்
    கன்குலத் தைத்தடிந்து,
மீண்டு மவன்தம்பிக் கேவிரி
    நீரிலங் கையருளி,
ஆண்டுதன் சோதிபுக் கவம
    ரர்அரி யேற்றினையே?
9
3517
ஏற்றமரும் வைகுந்தத் தையரு
    ளும்நமக்கு, ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு
    மாயங்க ளேயியற்றி,
கூற்றியல் கஞ்சனைக் கொன்றுஐவர்க்
    காய்க்கொடுஞ் சேனைதடிந்து,
ஆற்றல்மிக் கான்பெரி யபரஞ்
    சோதிபுக் கஅரியே.
10
3518
புக்க அரியுரு வாயவு
    ணனுடல் கீண்டுகந்த,
சக்கரச் செல்வன்றன் னைக்குரு
    கூர்ச்சட கோபன்சொன்ன,
மிக்கவோ ராயிரத் துளிவை
    பத்தும்வல் லாரவரை,
தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி
    செய்வ ரேழையரே.#
11
நேரிசை வெண்பா
பாமருவு வேதம் பகர்மால் குணங்களுடன்,
ஆமழகு வேண்டற்பா டாமவற்றைத்,-தூமனத்தால்
நண்ணியவ னைக்காண நன்குருகிக் கூப்பிட்ட,
அண்ணலைநண் ணார்ஏழை யர்.
66

7. ஏழையர் ஆவி
தலைவனின் அழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி ஏங்கியுரைத்தல்
கலி நிலைத்துறை
3519
ஏழையர் ஆவியுண் ணுமிணைக்
    கூற்றங்கொ லோவறியேன்,
ஆழியங் கண்ண பிரான்திருக்
    கண்கள்கொ லோவறியேன்,
சூழவும் தாமரை நாண்மலர்
    போல்வந்து தோன்றும்கண்டீர்,
தோழியர் காள்*அன்னை மீர்*என்செய்
    கேன்துய ராட்டியேனே?#
1
3520
ஆட்டியும் தூற்றியும் நின்றன்னை
    மீர்என்னை நீர்நலிந்தென்?
மாட்டுயர் கற்பகத் தின்வல்லி
    யோகொழுந் தோ?அறியேன்,
ஈட்டிய வெண்ணெயுண் டான்திரு
    மூக்கென தாவியுள்ளே,
மாட்டிய வல்விளைக் கின்சுட
    ராய்நிற்கும் வாலியதே.
2
3520
வாலிய தோர்கனி கொல்வினை
    யாட்டியேன் வல்வினைகொல்,
கோலம் திரள்பவ ளக்கொழுந்
    துண்டங்கொ லோவறியேன்,
நீல நெடுமுகில் போல்திரு
    மேனியம் மான்தொண்டைவாய்,
ஏலும் திசையுளெல் லால்வந்து
    தோன்றுமென் னின்னுயிர்க்கே.
3
3522
இன்னுயிர்க் கேழையர் மேல்வளை
    யுமிணை நீலவிற்கொல்,
மன்னிய சீர்மத னன்கருப்
    புச்சிலை கொல்,மதனன்
தன்னுயிர்த் தாதைகண் ணபெரு
    மான்புரு வமவையே,
என்னுயிர் மேலன வாயடு
    கின்றன என்றும் நின்றே.
4
3523
என்றும்நின் றேதிக ழும்செய்ய
    வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,
அன்றியென் னாவி யடுமணி
    முத்தங்கொ லோவறியேன்
குன்றம் எடுத்தபி ரான்முறு
    வலென தாவியடும்,
ஒன்றும் அறிகின்றி லேனன்னை
    மீர்*எனக் குய்விடமே.
5
3524
'உய்விடம் ஏழையர்க் குமசு
    ரர்க்கும் அரக்கர்கட்கும்,
எவ்விடம்?' என்றிலங் கிமக
    ரம்தழைக் கும்தரளிர்கொல்,
பைவிடப் பாம்பணை யான்திருக்
    குண்டலக் காதுகளே?
கைவிட லொன்றுமின்ட றியடு
    கின்றன காண்மின்களே.
6
3525
காண்மின்கள் அன்னையர் காள்*என்று
    காட்டும் வகையறியேன்,
நாண்மன்னு வெண்திங்கள் கொல்*நயந்
    தார்கட்கு நச்சிலைகொல்,
சேண்மன்னு நால்தடந் தோள்பெரு
    மான்றன் திருநுதலே?
கோள்மன்னி யாவி யடும்கொடி
    யேனுயிர் கோளிழைத்தே.
7
3526
கோளிழைத் தாமரை யும்கொடி
    யும்பவ ளமும்வில்லும்,
கோளிழைத் தண்முத் தமும்தளி
    ரும்குளிர் வான்பிறையும்,
கோளிழை யாவுடை யகொழுஞ்
    சோதிவட் டங்கொல்,கண்ணன்,
கோளிழை வாள்முக மாய்க்கொடி
    யேனுயிர் கொள்கின்றதே?
8
3527
கொள்கின்ற கோளிரு ளைச்சுகிர்ந்
    திட்ட கொழுஞ்சுருளின்,
உள்கொண்ட நீலநன் னூல்தழை
    கொல்?அன்று மாயன்குழல்,
விள்கின்ற பூந்தண் டுழாய்விரை
    நாறவந் தென்னுயிரை,
கள்கின்ற வாறறி யீரன்னை
    மீர்*கழ றாநிற்றிரே.
9
3528
'நிற்றிமுற் றத்துள்'என் றுநெரித்
    தகைய ராய்என்னைநீர்
சுற்றியும் சூழந்தும் வைதிர்சுடர்ச்
    சோதி மணிநிறமாய்,
முற்றவிம் மூவுல கும்விரி
    கின்ற சுடர்முடிக்கே,
ஒற்றுமைக் கொண்டதுள் ளம்அன்னை
    மீர்*நசை யென்நுங்கட்கே?
10
3529
கட்கரி யபிர மன்சிவன்
    இந்திரன் என்றிவர்க்கும்,
கட்கரி யகண்ண னைக்குரு
    கூர்ச்சட கோபன்சொன்ன,
உட்குடை யாயிரத் ளிவை
    யுமொரு பத்தும்வல்லார்,
உட்குடை வானவ ரோடுட
    னாயென்றும் மாயாரே.#
11
நேரிசை வெண்பா
ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு,
சூழவந்து தோன்றித் துயர்விளைக்க,-ஆழுமனம்
தன்னுடனே அவ்வழகைத் தானுரைத்த மாறன்பால்,
மன்னுமவர் தீவினைபோம் மாய்ந்து.
67

8. மாயா* வாமனனே*
எம்பெருமானின் விசித்திர விபூதி கண்டு வியத்தல்
கலி நிலைத்துறை
3530
மாயா* வாமன னே*மது
    சூதா* நீயருளாய்,
தீயாய் நீராய் நிலனாய்
    விசும்பாய்க் காலாய்,
தாயாய்த் தந்தையாய் மக்களாய்
    மற்றுமாய் முற்றுமாய்,
நீயாய் நீநின்ற வாறிவை
    யென்ன நியாயங்கேள*#
1
3531
அங்கண் மலர்த்தண் டுழாய்முடி
    அச்சுத னே*அருளாய்,
திங்களும் ஞாயிறு மாய்ச்செழும்
    பல்சுட ராய்இருளாய்,
பொங்கு பொழிமழை யாய்ப்புக
    ழாய்ப்பழி யாய்ப்பின்னும்நீ,
வெங்கண்வெங் கூற்றமு மாமிவை
    யென்ன விசித்திரமே*
2
3532
சித்திரத் தேர்வல வா*திருச்
    சக்கரத் தாய்*அருளாய்,
எத்தனை யோகரு முமவை
    யாயவற் றுள்ளியலும்,
ஒத்தவொண் பல்பொருள் களுலப்
    பில்லன வாய்வியவாய்,
வித்தகத் தாய்நிற்றி நீயிவை
    யென்ன விடமங்களே*
3
3533
கள்ளவிழ் தாமரைக் கட்கண்ண
    னே*எனக் கொன்றருளாய்,
உள்ளது மில்லது மாயுலப்
    பில்லன வாய்வியவாய்,
வெள்ளத் தடங்கட லுள்விட
    நாகணை மேல்மருவி,
உள்ளப்பல் யோகுசெய் தியிவை
    யென்ன உபாயங்களே*
4
3534
பாசங்கள் நீக்கியென் னையுனக்
    கேயறக் கொண்டிட்டு,நீ
வாச மலர்த்தண் டுழாய்முடி
    மாயவ னே*அருளாய்,
காயமும் சீவனு மாய்க்கழி
    வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ,
மாயங்கள் செய்துவைத் தியிவை
    யென்ன மயக்குகளே*
5
3535
மயக்கா* வாமன னே*மதி
    யாம்வண்ணம் ஒன்றருளாய்,
அயர்ப்பாய்த் தேற்றமு மாயழ
    லாய்க்குளி ராய்வியவாய்,
வியப்பாய் வென்றிக ளாய்வினை
    யாய்ப்பய னாய்ப்பின்னும்நீ,
துயக்காய் நீநின்ற வாறிவை
    யென்ன துயரங்களே*
6
3536
துயரங்கள் செய்யுங்கண்ணா*சுடர்
    நீண்முடி யாய்அருளாய்,
துயரம்செய் மானங்க ளாய்மத
    னாகி உகவைகளாய்,
துயரம்செய் காமங்க ளாய்த்துலை
    யாய்நிலை யாய்நடையாய்,
துயரங்கள் செய்துவைத் தியிவை
    யென்னசுண் டாயங்களே.
7
3537
என்னசுண் டாயங்க ளால்நின்றிட்
    டாயென்னை யாளும்கண்ணா,
இன்னதோர் தன்மையை என்றுன்னை
    யாவர்க்கும் தேற்றரியை,
முன்னிய மூவுல குமவை
    யாயவற் றைப்படைத்து,
பின்னுமுள் ளாய்*புறத் தாய்*இவை
    யென்ன இயற்கைகளே*
8
3538
என்ன இயற்கைக ளால்எங்ங
    னேநின்றிட் டாயென்கண்ணா,
துன்னு கரசர ணம்முத
    லாகவெல் லாவுறுப்பும்,
உன்னு சுவையொளி யூறொலி
    நாற்றம் முற்றும்நீயே,
உன்னை யுணர வுறிலுலப்
    பில்லை நுணுக்கங்களே.
9
3539
இல்லை நுணுக்கங்க ளேயித
    னில்பிறி தென்னும்வண்ணம்,
தொல்லைநன் னூலில் சொன்ன
    வுருவும் அருவும்நீயே,
அல்லித் துழாயலங் கலணி
    மார்ப*என் அச்சுதனே,
வல்லதோர் வண்ணம்சொன் னாலது
    வேயுனக் காம்வண்ணமே.
10
3540
ஆம்வண்ண மின்னதொன் றென்றறி
    வதரி யஅரியை,
ஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட
    கோபன் அறிந்துரைத்த,
ஆம்வண்ண வொண்டமிழ் களிவை
    யாயிரத் துளிப்பத்தும்,
ஆம்வண்ணத் தாலுரைப் பாரமைந்
    தார்தமக் கென்றைக்குமே.#
11
நேரிசை வெண்பா
மாயாமல் தன்னைவைத்த வைசித் திரியாலே,
தீயா விசித்திரமாச் சேர்பொருளோ-டோயாமல்,
வாய்ந்துநிற்கும் மாயன் வளமுரைத்த மாறனைநாம்,
ஏய்ந்துரைத்து வாழும்நாள் என்று?
68

9. என்றைக்கும்
தனக்குக் கவி பாடும் பேறு தந்தமைக்குப் பதிலுதவி இல்லை எனல்
கலி விருத்தம்
3541
என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
நின்றவென் சோதியை, என்சொல்லி நிற்பனோ?#
1
3542
என்சொல்லி நிற்பனென் இன்னுயி ரின்றொன்றாய்,
என்சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து,
தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,என்
முன்சொல்லும் மூவுரு வாகும் முதல்வனே.
2
3543
ஆம்முதல் வனிவ னென்றுதற் றேற்றி,என்
நாமுதல் வந்து புகுந்துநல் லின்கவி,
தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன,என்
வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?
3
3544
அப்பனை யென்று மறப்பனென் னாகியே,
தப்புத லின்றித் தனைக்கவி தான்சொல்லி,
ஒப்பிலாத் தீவினை யேனையுய் யக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே?
4
3545
சீர்கண்டு கொண்டு திருந்துநல் லின்கவி,
நேர்பட யான்சொல்லும் நீர்மை யிலாமையில்,
ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
பார்பரவு இன்கவி பாடும் பரமரே.
5
3546
இன்கவி பாடும் பரமரே கவிகளால்,
தன்கவி தான்தன்னைப் பாடுவி யாது,இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை,
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.
6
3547
வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச்,
செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை,
வைகுந்த னாகப் புகழவண் தீங்கவி,
செய்குந்தன் றன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ*
7
3548
ஆர்வனோ ஆழியங் கையெம்பி ரான்புகழ்,
பார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும்,
ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே?
8
3549
திறத்துக்கே துப்புர வாம்திரு மாலின்சீர்,
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ,
மறப்பிலா வென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
உறப்பல இன்கவி சொன்ன வுதவிக்கே?
9
3550
உதவிக்கைம் மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில்,
அதுவுமற் றாங்கவன் றன்னதென் னால்தன்னை,
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,
எதுவுமொன் றுமில்லை செய்வதிங் குமங்கே.
10
3551
இங்குமங் கும்திரு மாலன்றி இன்மைகண்டு,
அங்ஙனே வண்குரு கூர்ச்சட (*)கோபன்சொல்,
இங்ஙனே சொன்னவோ ராயிரத் திப்பத்தும்,
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.#

(*) கோபன் என்று நிறுத்துவதும் பாடம்.
11
நேரிசை வெண்பா
'என்றனைநீ யிங்குவைத்த தேதுக் கெ'ன, மாலும்
'என்றனக்கு மென்றமர்க்கு மின்பமதா,-நன்றுகவி
பாட'எனக் கைம்மா றிலாமை, பகர்மாறன்
பாடணைவார்க் குண்டாமின் பம்.
69

10. இன்பம் பயக்க
திருவாறன்விளையில் அடிமை செய்ய நினைத்தல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
3552
இன்பம் பயக்க எழில்மலர்
    மாதரும் தானும்இவ் வேழுலகை,
இன்பம் பயக்க இனிதுடன்
    வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
அன்புற் றமர்ந்துறை கின்ற
    அணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
அன்புற் றமர்ந்து வலம்செய்து
    கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ*#
1
3553
ஆகுங்கொல் ஐயமொன் றின்றி
    அகலிடம் முற்றவும், ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த
    திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,
மாகம் திகழ்கொடி மாடங்கள்
    நீடும் மதிள்திரு வாறன்விளை,
மாகந்த நீர்கொண்டு தூவி
    வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ*
2
3554
கூடுங்கொல் வைகலும் கோவிந்த
    னைமது சூதனைக் கோளரியை,
ஆடும் பறவை மிசைக்கண்டு
    கைதொழு தன்றி யவனுறையும்,
பாடும் பெரும்புகழ் நான்மறை
    வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்,
நீடு பொழில்திரு வாறன்
    விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே*
3
3555
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு
    தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற,
வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந்
    நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை,
வாய்க்கும் பெரும்புகழ் மூவுல
    கீசன் வடமது ரைப்பிறந்த,
வாய்க்கும் மணிநிறக் கண்ணபி
    ரான்றன் மலரடிப் போதுகளே.
4
3556
மலரடிப் போதுகள் என்னெஞ்சத்
    தெப்பொழு துமிருத் திவணங்க,
பலரடி யார்முன் பருளிய
    பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்,
மலரில் மணிநெடு மாடங்கள்
    நீடு மதிள்திரு வாறன்விளை,
உலகம் மலிபுகழ் பாடநம்
    மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே.
5
3557
ஒன்றும்நில் லாகெடும் முற்றவும்
    தீவினை யுள்ளித் தொழுமின்தொண்டீர்,
அன்றங் கமர்வென் றுருப்பிணி
    நங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்,
என்றுமெப் போதுமென் னெஞ்சம்
    துதிப்பவுள் ளேயிருக் கின்றிபிரான்,
நின்ற அணிதிரு வாறன்
    விளையென்னும் நீணக ரமதுவே.
6
3558
நீணக ரமது வேமலர்ச்
    சோலைகள் சூழ்திரு வாறன்விளை,
நீணக லத்துறை கின்றபி
    ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்,
வாண புரம்புக்கு முக்கட்பி
    ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,
வாணனை யாயிரந் தோள்துணித்
    தான்சரண் அன்றிமற் றொன்றிலமே.
7
3559
'அன்றிமற் றொன்றிலம் நின்சர
    ணே*'என் றகலிரும் பொய்கையின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய
    ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான்,
சென்றங் கினிதுறை கின்ற
    செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?
    தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே.
8
3560
தீவினை யுள்ளத்தின் சார்வல்ல
    வாகித் தெளிவிசும் பேறலுற்றால்,
நாவினுள் ளுமுள்ளத் துள்ளும்
    அமைந்த தொழிலினுள் ளும்நவின்று,
யாவரும் வந்து வணங்கும்
    பொழில்திரு வாறன் விளையதனை,
மேவி வலஞ்செய்து கைதொழக்
    கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே.
9
3561
சிந்தைமற் றொன்றின் திறத்ததல்
    லாத்தன்மை தேவபி ரானறியும்,
சிந்தையி னால்செய்வ தானறி
    யாதன மாயங்கள் ஒன்றுமில்லை,
சிந்தையி னால்சொல்லி னால்செய்கை
    யால்நிலத் தேவர் குழுவணங்கும்,
சிந்தை மகிழ்திரு வாறன்
    விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே.
10
3562
தீர்த்தனுக் கற்றபின் மற்றோர்
    சரணில்லை யென்றெண்ணி, தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச்
    செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,
தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை
    பத்தும்வல் லார்களை, தேவர்வைகல்
தீர்த்தங்க ளேயென்று பூசித்து
    நல்கி யுரைப்பர்தம் தேவியர்க்கே.#
11
நேரிசை வெண்பா
இன்பக் கவிபாடு வித்தோனை யிந்திரையோடு,
அன்புற்று வாழ்திருவா றன்விளையில்,-துன்பமறக்
கண்டடிமை செய்யக் கருதியமா றன்கழலே,
திண்டிறலோர் யாவர்க்குந் தேவு.
70
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

எட்டாம் பத்து
1. தேவிமாராவார்
ஆழ்வார் தம் சந்தேகம் தெளிதல்
எழுசீர் ஆசிரிய விருத்தம்
3563
தேவிமா ராவார் திருமகள் பூமி
    யேவமற் றமரராட் செய்வார்,
மேவுய வுலகம் மூன்றவை யாட்சி
    வேண்டுவேண் டுருவம்நின் னுருவம்,
பாவியேன் றன்னை யடுகின்ற கமலக்
    கண்ணதோர் பவளவாய் மணியே,
ஆவியே* அமுதே* அலைகடல் கடைந்த
    அப்பனே* காணுமா றருளாய்.#
1
3564
'காணுமா றருளாய்' என்றென்றே கலங்கிக்
    கண்ணநீர் அலமர, வினையேன்
பேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே
    பிதற்றுமா றருளெனக் கந்தோ,
காணுமா றருளாய் காகுத்தா* கண்ணா*
    தொண்டனேன் கற்பகக் கனியே,
பேணுவார் அமுதே* பெரியதண் புனல்சூழ்
    பெருநிலம் எடுத்தபே ராளா*
2
3565
எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன்
    இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக்
கடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே*
    அடியனேன் பெரியவம் மானே,
கடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக்
    கையுகி ராண்டவெங் கடலே,
அடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய்
    எங்ஙனம் தேறுவர் உமரே?
3
3566
உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம்
    ஆகியுன் றனக்கன்ப ரானார்
அவர்,உகந் தமர்ந்த செய்கையுன் மாயை
    அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,
அமரது பண்ணி அகலிடம் புடைசூழ்
    அடுபடை அவித்தஅம் மானே,
அமரர்தம் அமுதே* அசுரர்கள் நஞ்சே*
    என்னுடை ஆருயி ரேயோ*
4
3567
ஆருயி ரேயோ* அகலிடம் முழுதும்
    படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த,
பேருயி ரேயோ* பெரியநீர் படைத்தங்
    குறைந்தது கடைந்தடைத் துடைத்த,
சீரிய ரேயோ* மனிசர்க்குத் தேவர்
    போலத்தே வர்க்கும்தே வாவோ,
ஓருயி ரேயோ* உலகங் கெல்லாம்
    உன்னைநான் எங்குவந் துறுகோ?
5
3568
எங்குவந் துறுகோ என்னையாள் வானே*
    ஏழுல கங்களும் நீயே,
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே
    அவற்றவை கருமமும் நீயே,
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும்
    அவையுமோ நீயின்னே யானால்,
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
    வான்புலன் இறந்ததும் நீயே.
6
3569
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
    நிகழ்வதோ நீயின்னே யானால்,
சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென்
    றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,
கறந்தபால் நெய்யே* நெய்யினின் சுவையே*
    கடலினுள் அமுதமே, அமுதில்
பிறந்தவின் சுவையே* சுவையது பயனே*
    பின்னைதோள் மணந்தபே ராயா*
7
3454
3570 மணந்தபே ராயா* மாயத்தால் முழுதும்
    வல்வினை யேனையீர் கின்ற,
குணங்களை யுடையாய்* அசுரர்வன் கையர்
    கூற்றமே* கொடியபுள் ளுயர்த்தாய்,
பணங்களா யிரமும் உடையபைந் நாகப்
    பள்ளியாய்* பாற்கடல் சேர்ப்பா,
வணங்குமா றறியேன் மனமும் வா சகமும்
    செய்கையும் யானும்நீ தானே.
8
3571
யானும்நீ தானே யாவதோ மெய்யே
    அருநர கiவுயம் யானால்,
வானுய ரின்பம் எய்திலென் மற்றை
    நரகமே யெய்திலென்? எனிலும்,
யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
    அஞ்சுவன் நரகம்நா னடைதல்,
வானுய ரின்பம் மன்னிவீற் றிருந்தாய்*
    அருளுநின் தாள்களை யெனக்கே.
9
3572
தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத்
    தந்தபே ருதவிக்கைம் மாறா,
தோள்களை யாரத் தழுவிதென் னுயிரை
    அறவிலை செய்தனன் சோதீ,
தோள்களா யிரத்தாய்* முடிகளா யிரத்தாய்*
    துணைமலர்க் கண்களா யிரத்தாய்,
தாள்களா யிரத்தாய்* பேர்களா யிரத்தாய்*
    தமியனேன் பெரிய அப்பனே*
10
3573
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை
    உருத்திரன் அப்பனை, முனிவர்க்
குரிய அப்பனை அமரர் அப்பனை
    உலகுக்கோர் தனியப்பன் றன்னை,
பெரியவண் குருகூர் வண்சட கோபன்
    பேணின ஆயிரத் துள்ளும்,
உரியசொல் மாலை இவையும்பத் திவற்றால்
    உய்யலாம் தொண்டீர்*நங் கட்கே.#
11
நேரிசை வெண்பா
தேவ னுறைபதியிற் சேரப் பெறாமையால்,
மேவுமடி யார்வசனாம் மெய்ந்நிலையும்,-யாவையுந்தான்
ஆம்நிலையுஞ் சங்கித் தவைதெளிந்த மாறன்பால்,
மாநிலத்தீர்* நங்கள் மனம்.
71

2. நங்கள் வரிவளை
தலைவனிடம் செல்லக் கருதிய தலைவி கூற்று
எண்சீர் ஆசிரிய விருத்தம்
3574
நங்கள் வரிவளை யாயங் காளோ*
    நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கு மாற்றம்
    நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன்
    தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன்
    வேங்கட வாணனை வேண்டிச் சென்றே.#
1
3575
வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில்
    என்னுடைத் தோழியர் நுங்கட் கேலும்,
ஈண்டிது ரைக்கும் படியை யந்தோ*
    காண்கின்றி லேனிட ராட்டி யேன்நான்,
காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன்
    விண்ணவர் கோன்நங்கள் கோனைக் கண்டால்,
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
    எத்தனை காலம் இளைக்கின் றேனே*
2
3576
காலம் இளைக்கிலல் லால்வி னையேன்
    நானிளைக் கின்றிலன் கண்டு கொண்மின்,
ஞாலம் அறியப் பழிசு மந்தேன்
    நன்னுத லீர்*இனி நாணித் தானென்,
நீல மலர்நெடுஞ் சோதி சூழ்ந்த
    நீண்ட முகில்வண்ணன் கண்ணன் கொண்ட,
கோல வளையொடு மாமை கொள்வான்
    எத்தனை காலம்கூ டச்சென்றே?
3
3577
கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்?
    கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்,
பாடற் றொழிய இழந்து வைகல்
    பல்வளை யார்முன் பரிச ழிந்தேன்,
மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை
    வண்குடு பால்நின்ற மாயக் கூத்தன்,
ஆடல் பறவை உயர்த்த வெல்போர்
    ஆழி வலவனை யாதரித்தே.
4
3578
ஆழி வலவனை ஆதரிப்பும் ஆங்கவன்
    நம்மில் வரவும் எல்லாம்,
தோழியர் காள்*நம் முடைய மேதான்?
    சொல்லுவ தோவிங் கரியதுதான்,
ஊழிதோ றூழி ஒருவ னாக
    நன்குணர் வார்க்கும் உணர லாகா,
சூழ லுடைய சுடர்கொ ளாதித்
    தொல்லையஞ் சோதி நினைக்குங் காலே.
5
3579
தொல்லையஞ் சோதி நினைக்குங் காலென்
    சொல்லள வன்றிமை யோர்த மக்கும்,
எல்லையி லாதன கூழ்ப்புச் செய்யும்
    அத்திறம் நிற்கவெம் மாமை கொண்டான்,
அல்லி மலர்த்தண் டுழாயும் தாரான்
    ஆர்க்கிடு கோவினிப் பூசல் சொல்லீர்,
வல்லி வளவயல் சூழ்கு டந்தை
    மாலரக் கண்வளர் கின்ற மாலே.
6
3580
'மாலரி கேசவன் நார ணன்சீ
    மாதவன் கோவிந்தன் கோவிந்தன்' என்றென்று,
ஓல மிடவென்னைப் பண்ணி விட்டிட்
    டொன்று முருவும் சுவடும் காட்டான்,
ஏல மலர்க்குழல் அன்னை மீர்காள்*
    என்னுடைத் தோழியர் காள்*என் செய்கேன்?
காலம் பலசென்றும் காண்ப தாணை
    உங்களோ டெங்க ளிடையில் லையே.
7
3581
இடையில் லையான் வளர்த்த கிளிகாள்*
    பூவை காள்*குயில் காள்*ம யில்கள்,
உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும்
    ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான்,
அடையும் வைகுந்த மும்பாற் கடலும்
    அஞ்சன வெற்பும் அவைந ணிய,
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை
    அன்றி யவனவை காண்கொ டானே.
8
3582
காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக்
    கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,
மாண்குறள் கோல வடிவு காட்டி
    மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த
    தேவ பிராற்கென் நிறைவி னோடு,
நாண்கொடுத் தேனினி யென்கொ டுக்கேன்
    என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.
9
3583
என்னுடைய நன்னுதல் நங்கை மீர்காள்*
    யானினிச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
'நின்னிடை யேனல்லேன்' என்று நீங்கி
    நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு
    பான்மதி ஏந்திஓர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான்
    நாண்ம லர்ப்பா தம்அடைந் ததுவே.
10
3584
பாதம் அடைவதன் பாசத் தாலே
    மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு,
கோதில் புகழ்க்கண் ணன்றன் னடிமேல்
    வண்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,
தீதிலந் தாயியோ ராயி ரத்துள்
    இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்,
ஆதுமோர் தீதில ராகி யிங்கும்
    அங்குமெல் லாமமை வார்கள் தாமே.#
11
நேரிசை வெண்பா
நங்கருத்தை நன்றாக நாடிநிற்கும் மாலறிய,
இங்கிவற்றி லாசை யெமக்குளதென்?-சங்கையினால்,
தன்னுயிரின் மற்றினசை தானொழிந்த மாறன்றான்,
அந்நிலையை யாய்ந்துரைத்தான் அங்கு.
72

3. அங்குமிங்கும்
உலகில் பக்தர்கள் இருத்தலால் அச்சம் தீர்தல்
கலி நிலைத்துறை
3585
அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும்,
எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி,
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்,
சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே.#
1
3586
சரண மாகிய நான்மறை நூல்களும் சாராதே,
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென் றிவைமாய்த்தோம்,
கரணப் பல்படை பற்றா வோடும் கனலாழி,
அரணத் திண்படை யேந்திய ஈசற் காளாயே.
2
3587
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்,
வாளும் வில்லுங் கொண்டுபின் செல்வார் மாற்றில்லை,
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக்காணேன்,
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே.
3
3588
ஞாலம் போனகம் பற்றியோர் முற்றா வுருவாகி,
ஆலம் பேரிலை யன்னவ சஞ்செய்யும் அம்மானே,
காலம் பேர்வதோர் காரிரு ளுழியொத் துளதால்,உன்
கோலங் காரேழில் காணலுற் றாழும் கொடியேற்கே.
4
3589
கொடியார் மாடக் கோளூ ரகத்தும் புளிங்குடியும்,
மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,இப்
படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே.
5
3590
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,
அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,
தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல
மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே.
6
3591
வருவார் செல்வார் வண்பா சாரத் திருந்த,என்
திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென்,
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு,
ஒருபா டுழல்வா னோரடி யானு முளனென்றே?
7
3592
என்றே யென்னையுன் ஏரார் கோலத் திருந்தடிக்கீழ்,
நின்றே யாட்செய்ய நீகொண் டருள நினைப்பதுதான்,
குன்றேழ் பாரேழ் சூழ்கடல் ஞாலம் முழுவேழும்,
நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே*
8
3593
திருமால் நான்முகன் செஞ்சடை யானென் றிவர்கள்,எம்
பெருமான் தன்மையை யாரறி கிற்பார் பேசியென்,
ஒருமா முதல்வா* ஊழிப் பிரானென் னையாளுடை,
கருமா மேனியன் என்பனென்காதல் கலக்கவே.
9
3594
கலக்க மில்லா நல்தவ முனிவர் கரைகண்டோர்,
துளக்க மில்லா வானவ ரெல்லாம் தொழுவார்கள்,
மலக்க மெய்த மாகடல் தன்னைக் கடைந்தானை,
உலக்க நாம்புகழ் கிற்பதென் செய்வ துரையீரே.
10
3595
உரையா வெந்நோய் தவிர அருள்நீண் முடியானை,
வரையார் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்,
உரையேய் சொல்தொடை ஓரா யிரத்து ளிப்பத்தும்,
நிரையே வல்லார் நீடுல கத்துப் பிறவாரே.#
11
நேரிசை வெண்பா
அங்கமரர் பேண அவர்நடுவே வாழ்திருமாற்கு,
இங்கோர் பரிவரிலை யென்றஞ்ச,-எங்கும்,
பரிவருள ரென்னப் பயந்தீர்ந்த மாறன்,
வரிகழற்றாள் சேர்ந்தவர்வாழ் வார்.
73

4. வார்கடா அருவி
திருச்செங்குன்றூரில் கண்ணனைத் தரிசித்து மகிழ்தல்
எழுசீர் ஆசிரிய விருத்தம்
3596
வார்கடா அருவி யானைமா மலையின்
    மருப்பிணைக் குவடிறுத் துருட்டி,
ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின்
    மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல்,
போர்கடா வரசர் புறக்கிட மாட
    மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த,
சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில்
    திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே.#
1
3597
எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம்
    இமையவர் அப்பனென் அப்பன்,
பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும்
    பொருந்துமூ வுருவனெம் அருவன்,
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ்
    திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால்
    யாவர்மற் றென்அமர் துணையே?
2
3598
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
    இருநிலம் இடந்தவெம் பெருமான்,
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள
    என்னையாள் கின்றஎம் பெருமான்,
தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில்
    திருச்சிற்றாற் றங்கரை மீபால்
நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம்
    நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே.
3
3599
பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும்
    நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த,
குறியமாண் எம்மான் குரைகடல் கடைந்த
    கோலமா ணிக்கமென் எம்மான்,
செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ்
    திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான்
    அடியிணை யல்லதோர் அரணே.
4
3600
அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை
    அதுபொரு ளாகிலும், அவனை
அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா
    தாதலால் அவனுறை கின்ற,
நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த
    நறும்புகை விசும்பொளி மறைக்கும்,
நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில்
    திருச்சிற்றா றெனக்குநல் லரணே.
5
3601
எனக்குநல் லரணை எனதா ருயிரை
    இமையவர் தந்தைதாய் தன்னை,
தனக்குந்தன் தன்மை அறிவரி யானைத்
    தடங்கடல் பள்ளியம் மானை,
மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும்
    அயனும் தானுமொப் பார்வாழ்,
கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில்
    திருச்சிற்றா றதனுள்கண் டேனே.
6
3602
திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்
    கண்டவத் திருவடி யென்றும்,
திருச்செய்ய கமலக் கண்ணும்செவ் வாயும்
    செவ்வடி யும்செய்ய கையும்,
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய
    கமலமார் பும்செய்ய வுடையும்,
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும்
    திகழவென் சிந்தையு ளானே.
7
3603
திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச்
    செழுநிலத் தேவர்நான் மறையோர்,
திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில்
    திருச்சிற்றாற் றங்கரை யானை,
புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை
    அசுரர்வன் கையர்வெங் கூற்றை,
புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும்
    படைப்பொடு கெடுப்புக்காப் பவனே*
8
3604
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம
    பரம்பரன் சிவபிரான் அவனே,
இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே
    புகழ்வில்லை யாவையும் தானே,
கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார்
    கூரிய விச்சையோ டொழுக்கம்,
நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில்
    திருச்சிற்றா றமர்ந்த நாதனே.
9
3605
அமர்ந்த நாதனை யவரவ ராகி
    அவர்க்கருள் அருளுமம் மானை
அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில்
    திருச்சிற்றாற் றங்கரை யானை,
அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள்
    தம்பதி யவனிதே வர்வாழ்வு,
அமர்ந்தமா யோனை முக்கணம் மானை
    நான்முக னையமர்ந் தேனே.
10
3606
தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத்
    திருந்துல குண்டவம் மானை,
வானநான் முகனை மலர்ந்ததண் கொப்பூழ்
    மலர்மிசைப் படைத்தமா யோனை,
கோனைவண் குருகூர் வண்சட கோபன்
    சொன்னவா யிரத்துளிப் பத்தும்,
வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும்
    பிறவிமா மாயக்கூத் தினையே.#
11
நேரிசை வெண்பா
வாராமல் அச்சமினி மால்தன் வலியினையும்,
சீரார் பரிவருடன் சேர்த்தியையும்,-பாருமெனத்
தானுகந்த மாறன்றாள் சார்நெஞ்சே* சாராயேல்,
மானிடவ ரைச்சார்ந்து மாய்.
74

5. மாயக்கூத்தா
ஆர்வம் மிகுதியால் ஆழ்வார் அழுது புலம்பல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
3607
மாயக் கூத்தா* வாமனா*
    வினையேன் கண்ணா* கண்கைகால்,
தூய செய்ய மலர்களாச்
    சோதிச் செவ்வாய் முகிழதா,
சாயல் சாமத் திருமேனி
    தண்பா சடையா, தாமரைநீள்
வாசத் தடம்போல் வருவானே*
    ஒருநாள் காண வாராயே.#
1
3608
'காண வாராய்' என்றென்று
    கண்ணும் வாயும் துவர்ந்து,அடியேன்
நாணி நன்னாட் டலமந்தால்
    இரங்கி யொருநாள் நீயந்தோ,
காண வாராய் கருநாயி
    றுதிக்கும் கருமா மாணிக்க,
நாணல் மலைபோல் சுடர்ச்சோதி
    முடிசேர் சென்னி யம்மானே*
2
3609
'முடிசேர் சென்னி யம்மா*நின்
    மொய்பூந் தாமத் தண்டுழாய்,
கடிசேர் கண்ணிப் பெருமானே*'
    என்றென் றேங்கி யழுதக்கால்,
படிசேர் மகரக் குழைகளும்
    பவள வாயும் நால்தோளும்,
துடிநே ரிடையும் அமைந்ததோர்
    தூநீர் முகில்போல் தோன்றாயே.
3
3610
தூநீர் முகில்போல் தோன்றும்நின்
    சுடர்கொள் வடிவும் கனிவாயும்,
தேநீர்க் கமலக் கண்களும்
    வந்தென் சிந்தை நிறைந்தவா,
மாநீர் வெள்ளி மலைதன்மேல்
    வண்கார் நீல முகில்போல,
தூநீர்க் கடலுள் துயில்வானே*
    எந்தாய்* சொல்ல மாட்டேனே.
4
3611
சொல்ல மாட்டேன் அடியேனுன்
    துளங்கு சோதித் திருப்பாதம்,
எல்லை யில்சீ ரிளஞாயி
    றிரண்டு போலென் னுள்ளவா*,
அல்லல் என்னும் இருள்சேர்தற்
    குபாயம் என்னே?, ஆழிசூழ்
மல்லல் ஞால முழுதுண்ட
    மாநீர்க் கொண்டல் வண்ணனே*
5
3612
'கொண்டல் வண்ணா* குடக்கூத்தா*
    வினையேன் கண்ணா* கண்ணா,என்
அண்ட வாணா*' என்றென்னை
    ஆளக் கூப்பிட் டழைத்தக்கால்,
விண்டன் மேல்தான் மண்மேல்தான்
    விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்,
தொண்ட னேனுன் கழல்காண
    ஒருநாள் வந்து தோன்றாயே.
6
3613
வந்து தோன்றா யன்றேலுன்
    வையம் தாய மலரடிக்கீழ்,
முந்தி வந்து யான்நிற்ப
    முகப்பே கூவிப் பணிகொள்ளாய்,
செந்தண் கமலக் கண்கைகால்,
    சிவந்த வாயோர் கருநாயிறு,
அந்த மில்லாக் கதிர்பரப்பி
    அலர்ந்த தொக்கும் அம்மானே*
7
3614
ஒக்கும் அம்மா னுருவமென்
    றுள்ளம் குழைந்து நாணாளும்,
தொக்க மேகப் பல்குழாங்கள்
    காணுந் தோறும் தொலைவன்நான்,
தக்க ஐவர் தமக்காயன்
    றீரைம் பதின்மர் தாள்சாய,
புக்க நல்தேர்த் தனிப்பாதகா*
    வாராய் இதுவோ பொருத்தமே?
8
3615
'இதுவோ பொருந்தம் மின்னாழிப்
    படையாய்* ஏறும் இருஞ்சிறைப்புள்,
அதுவே கொடியா வுயர்த்தானே*'
    என்றென் றேங்கி யழுதக்கால்,
எதுவே யாகக் கருதுங்கொல்
    இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,
மதுவார் சோலை யுத்தர
    மதுரைப் பிறந்த மாயனே?
9
3616
பிறந்த மாயா* பாரதம்
    பொருத மாயா* நீயின்னே,
சிறந்த கால்தீ நீர்வான்மண்
    பிறவு மாய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல்
    இவற்று ளெங்கும் கண்டுகொள்,
இறந்து நின்ற பெருமாயா*
    உன்னை எங்கே காண்கேனே?
10
3617
'எங்கே காண்கேன் ஈன்துழாய்
    அம்மான் றன்னை யான்?' என்றென்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
    அந்தண் குருகூர்ச் சடகோபன்,
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
    இவையும் பத்தும் வல்லார்கள்,
இங்கே காண இப்பிறப்பே
    மகிழ்வர் எல்லியும் காலையே.#
11
நேரிசை வெண்பா
மாயன் வடிவழகைக் காணாத வல்விடா
யாய்,அதற விஞ்சி அழுதலற்றும்-தூயபுகழ்
உற்றசட கோபனைநம் ஒன்றிநிற்கும் போதுபகல்,
அற்றபொழு தானதெல்லி யாம்.
75

மேலே செல்க

6. எல்லியும்
தமக்கு அருள் செய்தற்காக எம்பெருமான் திருக்கடித்தானத்தில் இருந்த பான்மையைக் கூறல்
கலி விருத்தம்
3618
எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,
நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,
அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்,
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே.#
1
3619
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்,
ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர்,
செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை,
உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே.
2
3620
ஒரவ ரிருவரோர் மூவ ரெனநின்று,
உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,
திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,
மருவி யுறைகின்ற மாயப் பிரானே.
3
3621
மாயப் பிரானென் வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே.
4
3622
கோயில்கொண் டான்றன் திருக்கடித் தானத்தை,
கோயில்கொண் டானத னோடுமென் னெஞ்சகம்,
கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ, வைகுந்தம்
கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே.
5
3623
கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும்,
மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை,
பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை,
ஏத்தநில் லாகுறிக் கொண்மின் இடரே.
6
3624
கொண்மின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன்,
மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை,
மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து,
நண்ணு திருக்கடித் தான நகரே.
7
3625
தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும்,
வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே,
ஆன விடத்துமென் னெஞ்சும் திருக்கடித்
தான நகரும், தனதாயப் பதியே.
8
3626
தாயப் பதிகள் தலைசிறந் தெங்கெங்கும்,
மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை,
தேயத் தமரர் திருக்கடித் தானத்துள்,
ஆயர்க் கதிபதி அற்புதன் தானே.
9
3627
அற்புதன் நாரா யணன்அரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே.
10
3628
சோலைத் திருக்கடித் தானத் துறைதிரு
மாலை, மதிள்குரு கூர்ச்சட கோபன்சொல்,
பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும்,
மேலைவை குந்தத் திருத்தும் வியந்தே.#
11
நேரிசை வெண்பா
'எல்லி பகல்நடந்த இந்தவிடாய் தீருகைக்கு,
மெல்லவந்து தான்கலக்க வேணும்'என,-நல்லவர்கள்
மன்னுகடித் தானத்தே மாலிருக்க மாறன்கண்டு,
இந்நிலையைச் சொன்னான் இருந்து.
76

7. இருத்தும் வியந்து
தமது நெஞ்சத்தில் விமலன் வீற்றிருக்கும் பான்மையை ஆழ்வார் மகிழ்ந்து கூறல்
கலி விருத்தம்
3629
இருத்தும் வியந்தென்னைத் தன்பொன் னடிக்கீழென்று,
அருத்தித் தெனைத்தோ பலநாள் அழைத்தேற்கு,
பொருத்த முடைவா மனன்றான் புகுந்து,என்றன்
கருத்தை யுறவீற் றிருந்தான் கண்டுகொண்டே.#
1
3630
இருந்தான் கண்டுகொண் டெனதேழை நெஞ்சாளும்,
திருந்தாத வோரைவ ரைத்தேய்ந் தறமன்னி,
பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,
தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே.
2
3631
அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள்,
இருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால்,
பொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல,
மருள்தானீ தோ?மாய மயக்கு மயக்கே.
3
3632
மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்,
ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்,
தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான்,
தேயம் திகழும்தன் திருவருள் செய்தே.
4
3633
திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார்,
புகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள்
திகழும் மணிக்குன்ற மொன்றே யொத்துநின்றான்,
புகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே?
5
3634
பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத்
தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?,
கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்,
திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே.
6
3635
செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோ
டெவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள,
செவ்வாய் முறுவலோ எனதுள்ளத் திருந்த,
அவ்வா யன்றியான் அறியென்மற் றருளே.
7
3636
அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார்,
வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து,
சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம்
நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே.
8
3637
வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும்,
வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம்
வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை,
வயிற்றிற்கொண்டு மன்னவைத் தேன்மதி யாலே.
9
3638
வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,
எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்போதும்,
மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,
பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே.
10
3639
சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை,
அடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம்,
விடதேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே.#
11
நேரிசை வெண்பா
இருந்தவன்றான் வந்திங் கிவரெண்ண மெல்லாம்,
திருந்தஇவர் தந்திறத்தே செய்து,-பொருந்தக்
கலந்தினிய னாய்நிற்கக் கண்டசட கோபன்,
கலந்தநெறி கட்டுரைத்தான் கண்டு.
77

8. கண்கள் சிவந்து
ஆத்மாவின் உயர்வை அறிந்த ஆழ்வாரின் உரை
அறுசீர் ஆசிரிய விருத்தம்
3640
கண்கள் சிவந்து பெரியவாய்
    வாயும் சிவந்து கனிந்து,உள்ளே
வெண்பல் இலகு சுடரிலகு
    விலகு மகர குண்டலத்தன்,
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்
    நான்கு தோளன் குனிசார்ங்கன்,
ஒண்சங் கதைவா ளாழியான்
    ஒருவன் அடியே னுள்ளானே.#
1
3641
அடியே னுள்ளான் உடலுள்ளான்
    அண்டத் தகத்தான் புறத்துள்ளான்,
படியே யிதுவென் றுரைக்கலாம்
    படியன் அல்லன் பரம்பரன்,
கடிசேர் நாற்றத் துள்ளாலை
    இன்பத் துன்பக் கழிநேர்மை,
ஒடியா இன்பப் பெருமையோன்
    உணர்வி லும்ப ரொருவனே.
2
3642
உணர்வி லும்ப ரொருவனை
    அவன தருளா லுறல்பொருட்டு,என்
உணர்வி னுள்ளே யிருத்தினேன்
    அதுவும் அவன தின்னருளே,
உணர்வும் உயிரும் உடம்பும்மற்
    றுலப்பி னவும் பழுதேயாம்,
உணர்வைப் பெறவூர்ந் திறவேறி
    யானும் தானா யொழிந்தானே.
3
3643
யானும் தானா யொழிந்தானை
    யாதும் யவர்க்கும் முன்னோனை,
தானும் சிவனும் பிரமனும்
    ஆகிப் பணைத்த தனிமுதலை,
தேனும் பாலும் கன்னலும்
    அமுதும் ஆகித் தித்தித்து,என்
ஊனி லுயிரி லுணர்வினில்
    நின்ற வொன்றை யுணர்ந்தேனே.
4
3644
நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக்
    கதனுள் நேர்மை அதுவிதுவென்று,
ஒன்றும் ஒருவர்க் குணரலாகா
    துணர்ந்து மேலும் காண்பரிது,
சென்று சென்று பரம்பரமாய்
    யாது மின்றித் தேய்ந்தற்று,
நன்று தீதென் றறிவரிதாய்
    நன்றாய் ஞானம் கடந்ததே.
5
3645
நன்றாய் ஞானம் கடந்துபோய்
    நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்
    உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,
சென்றாங் கின்ப துன்பங்கள்
    செற்றுக் களைந்து பசையற்றால்,
அன்றே யப்போ தேவீடு
    அதுவே வீடு வீடாமே.
6
3646
அதுவே வீடு வீடுபேற்
    றின்பந் தானும் அதுதேறி,
எதுவே தானும் பற்றின்றி
    யாது மிலிக ளாகிற்கில்,
அதுவே வீடு வீடுபேற்
    றின்பந் தானும் அதுதேறாது,
'எதுவே வீடே தின்பம்?'என்
    றெய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரே.
7
3647
எய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரென்
    றில்லத் தாரும் புறத்தாரும்
மொய்த்து,ஆங் கலறி முயங்கத்தாம்
    போகும் போது,உன் மத்தர்போல்
பித்தே யேறி யனுராகம்
    பொழியும் போதெம் பெம்மானோ
டொத்தே சென்று,அங் குளம்கூடக்
    கூடிற் றாகில் நல்லுறைப்பே.
8
3648
கூடிற் றாகில் நல்லுறைப்புக்
    கூடா மையைக் கூடினால்,
ஆடல் பறவை யுயர்கொடியெம்
    ஆய னாவ ததுவதுவே,
வீடைப் பண்ணி யொருபரிசே
    எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்,
ஓடித் திரியும் யோகிகளும்
    உளரு மில்லை யல்லரே.
9
3649
உளரும் இல்லை யல்லராய்
    உளரா யில்லை யாகியே,
உளரெம் மொருவர் அவர்வந்தென்
    உள்ளத் துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும்
    போல அசைவும் ஆக்கமும்,
வளரும் சுடரும் இருளும்போல்
    தெருளும் மருளும் மாய்த்தோமே.
10
3650
தெருளும் மருளும் மாய்த்துத்தன்
    திருந்து செம்பொற் கழலடிக்கீழ்
அருளி யிருத்தும் அம்மானாம்
    அயனாம் சிவனாம்,திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
    ஓரா யிரத்து ளிப்பத்தால்,
அருளி யடிக்கீ ழிருத்தும்நம்
    அண்ணல் கருமா ணிக்கமே.#
11
நேரிசை வெண்பா
கண்ணிறைய வந்து கலந்தமால் இக்கலவி,
திண்ணிலையா வேணுமெனச் சிந்தித்துத்,-தண்ணிதெனும்
ஆருயிரி னேற்றம் அதுகாட்ட ஆய்ந்துரைத்தான்,
காரிமா றன்றன் கருத்து.
78

9. கருமாணிக்கமலை
தலைவியின் உண்மையான காதலை உரைத்துத் தோழி அயல் மணம் விலக்குதல்
கலி நிலைத்துறை
3651
கருமா ணிக்க மலைமேல்மணித்
    தடந்தாமரைக் காடுகள்போல்,
திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை
    யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்வயல்
    குட்டநாட்டுத் திருப்புலியூர்,
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
    அன்னைமீரிதற் கென்செய்கேனோ.#
1
3652
அன்னைமீ ரிதற்கென் செய்கேன்?
    அணிமேருவின் மீதுலவும்,
துன்னு சூழ்சுடர் ஞாயிறும்
    அன்றியும்பல் சுடர்களும்போல்,
மின்னு நீண்முடி யாரம்பல்கலன்
    றானுடை யெம்பெருமான்,
புன்னை யம்பொழில் சூழ்திருப்
    புலியூர் புகழுமிவளே.
2
3653
புகழு மிவள்நின் றிராப்பகல்
    பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும்
திகழு மொரியொடு செல்வதொப்பச்
    செழுங்கதி ராழிமுதல்
புகழும் பொருபடை யேந்திப்போர்
    புக்கசுரரைப் பொன்றுவித்தான்
திகழு மணிநெடு மாடம்நீடு
    திருப்புலி யூர்வளமே.
3
3654
ஊர்வ ளம்கிளர் சோலையும்
    கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து
ஏர்வ ளம்கிளர் தண்பணைக்
    குட்டநாட்டுத் திருப்புலியூர்,
சீர்வ ளம்கிளர் மூவுல
    குண்டுமிழ் தேவபிரான்
பேர்வ ளம்கிளர்ந் தன்றிப்பேச்
    சிலளின்றிப் புனையிழையே.
4
3655
புனையிழைகள் அணிவும் ஆடையுடையும்
    புதுக்க ணிப்பும்,
நினையும் நீர்மைய தன்றிவட்கிது
    நின்று நினைக்கப்புக்கால்,
சுனையி னுள்தடந் தாமரை
    மலரும்தண் திருப்புலியூர்,
முனைவன் மூவுல காளிஅப்பன்
    திருவருள் மூழ்கினளே.
5
3656
திருவருள் மூழ்கி வைகலும்
    செழுநீர்நிறக் கண்ணபிரான்,
திருவருள் களும்சேர்ந் தமைக்கடை
    யாளம் திருந்தவுள,
திருவருள் அருளால் அவன்சென்று
    சேர்தண் திருப்புலியூர்,
திருவருள் கமுகொண் பழத்தது
    மெல்லியல் செவ்விதழே.
6
3657
மெல்லிலைச் செல்வவண் கொடிபுல்க
    வீங்கிளந் தாள்கமுகின்,
மல்லிலை மடல்வாழை யீன்கனி
    சூழ்ந்து மணம்கமழ்ந்து,
புல்லிலைத் தெங்கி னூடுகால்
    உலவும்தண் திருப்புலியூர்,
மல்லலம் செல்வக் கண்ணன்தாள்
    அடைந்தாள்இம் மடவரலே.
7
3658
மடவரல் அன்னைமீர்கட் கென்சொல்லிச்
    சொல்லுகேன்? மல்லைச்செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள்
    நெய்யழல் வான்புகைபோய்
திடவிசும் பிலமரர் நாட்டை
    மறைக்கும்தண் திருப்புலியூர்,
படவர வணையான் றன்நாமம்
    அல்லால் பரவா ளிவளே.
8
3659
பரவா ளிவள்நின் றிராப்பகல்
    பனிநீர்நிறக் கண்ணபிரான்,
விரவா ரிசைமறை வேதியரொலி
    வேலையின் நின்றொலிப்ப,
கரவார் தடந்தொறும் தாமரைக்
    கயந்தீவிகை நின்றலரும்,
புரவார் கழனிகள் சூழ்திருப்
    புலியூர்ப்புக ழன்றிமற்றே.
9
3660
அன்றிமற் றோருபாய மென்னிவ
    ளந்தண்டு ழாய்கமழ்தல்,
குன்ற மாமணி மாடமாளிகைக்
    கோலக்கு ழாங்கள்மல்கி,
தென்தி சைத்தில தம்புரைக்
    குட்டநாட்டுத் திருப்புலியூர்,
நின்ற மாயப்பி ரான்திரு
    வருளாமிவள் நேர்பட்டதே.
10
3661
நேர்பட்ட நிறைமூ வுலகுக்கும்
    நாயகன் றன்னடிமை,
நேர்பட்ட தொண்டர்தொண்டர்
    தொண்டர்தொண்டன் சடகோ பன்,சொல்
நேர்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள்
    (*)இவையு மோர்பத்தும்
நேர்பட் டாரவர், நேர்பட்டார்
    நெடுமாற்கடி மைசெய்யவே.#

(*) இவையோர் பத்தும், இவை பத்தும் என்றும் பாடங்கள்.
11
நேரிசை வெண்பா
கருமால் திறத்திலொரு கன்னிகையாம் மாறன்,
ஒருமா கலவி யுரைப்பால்-திரமாக
அந்நியருக் காகா தவன்றனக்கே யாகுமுயிர்,
இந்நிலையை யோர்நெடி தா.
79

10. நெடுமாற்கடிமை
(இது கோயில் திருவாய்மொழி)
பாகவத கைங்கர்யம்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
3662
நெடுமாற் கடிமை செய்வேன்போல்
    அவனைக் கருத வஞ்சித்து,
தடுமாற் றற்ற தீக்கதிகள்,
    முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்,
கொடுமா வினையேன் அவனடியார்
    அடியே கூடும் இதுவல்லால்,
விடுமா றென்ப தென்னந்தோ*
    வியன்மூ வுலகு பெறினுமே?#
1
3663
வியன்மூ வுலகு பெறினும்போய்த்
    தானே தானே யானாலும்,
புயல்மே கம்போல் திருமேனி
    அம்மான் புனைபூங் கழலடிக்கீழ்,
சயமே யடிமை தலைநின்றார்
    திருத்தாள் வணங்கி, இம்மையே
பயனே யின்பம் யான்பெற்ற
    துறுமோ பாவி யேனுக்கே?
2
3664
உறுமோ பாவி யேனுக்கிவ்
    வுலகம் மூன்றும் உடன்நிறைய,
சிறுமா மேனி நிமிர்த்தவென்
    செந்தா மரைக்கண் திருக்குறளன்
நறுமா விரைநாண் மலரடிக்கீழ்ப்
    புகுதல் அன்றி அவனடியார்,
சிறுமா மனிச ராயென்னை
    ஆண்டா ரிங்கே திரியவே.
3
3665
இங்கே திரிந்தேற் கிழுக்குற்றென்*
    இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த,
செங்கோ லத்த பவளவாய்ச்
    செந்தா மரைக்க ணென்னம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப்
    புலன்கொள் வடிவென் மனத்ததாய்
அங்கேய் மலர்கள் கையவாய்
    வழிபட் டோட அருளிலே?
4
3666
வழிபட் டோடஅருள்பெற்று
    மாயன் கோல மலரடிக்கீழ்,
சுழிபட் டோடும் சுடர்ச்சோதி
    வெள்ளத் தின்புற் றிருந்தாலும்,
இழிபட் டோடும் உடலினிற்
    பிறந்து தன்சீர் யான்கற்று,
மொழிபட் டோடும் கவியமுத
    நுகர்ச்சி யுறுமோ முழுதுமே?
5
3667
நுகர்ச்சி யுறுமோ மூவுலகின்
    வீடு பேறு தன்கேழில்,
புகர்ச்செம் முகத்த களிறட்ட
    பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நிகர்ச்செம் பங்கி யெரிவிழிகள்
    நீண்ட அசுர ருயிரெல்லாம்,
தகர்த்துண் டுழலும் புட்பாகன்
    பெரிய தனிமாப் புகழே?
6
3668
தனிமாப் புகழே யெஞ்ஞான்றும்
    நிற்கும் படியாத் தான்தோன்றி,
முனிமாப் பிரம முதல்வித்தாய்
    உலகம் மூன்றும் முளைப்பித்த,
தனிமாத் தெய்வத் தளிரடிக்கீழ்ப்
    புகுதல் அன்றி அவனடியார்,
நனிமாக் கலவி யின்பமே
    நாளும் வாய்க்க நங்கட்கே.
7
3669
நாளும் வாய்க்க நங்கட்கு
    நளிர்நீர்க் கடலைப் படைத்து,தன்
தாளும் தோளும் முடிகளும்
    சமனி லாத பலபரப்பி,
நீளும் படர்பூங் கற்பகக்
    காவும் நிறைபன் னாயிற்றின்,
கோளு முடைய மண்மலைபோல்
    கிடந்தான் தமர்கள் கூட்டமே.
8
3670
தமர்கள் கூட்ட வல்வினையை
    நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி
அமர்கொள் ஆழி சங்குவாள்
    வில்தண் டாதி பல்படையன்,
குமரன் கோல ஐங்கணைவேள்
    தாதை கோதில் அடியார்தம்,
தமர்கள் தமர்கள் தமர்களாம்
    சதிரே வாய்க்க தமியேற்கே.
9
3671
வாய்க்க தமியேற் கூழிதோ
    றூழி யூழி, மாகாயாம்
பூக்கொள் மேனி நான்குதோள்
    பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நீக்க மில்லா அடியார்தம்
    அடியார் அடியார் அடியாரெங்
கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச்
    செல்லும் நல்ல கோட்பாடே.
10
3672
நல்ல கோட்பாட் டுலகங்கள்
    மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,
அல்லிக் கமலக் கண்ணனை
    அந்தண் குருகூர்ச் சடகோபன்,
சொல்லப் பட்ட ஆயிரத்துள்
    இவையும் பத்தும் வல்லார்கள்,
நல்ல பதத்தால் மனைவாழ்வர்
    கொண்ட பெண்டிர் மக்களே.#
11
நேரிசை வெண்பா
நெடுமா லழகுதனில் நீள்குணத்தில், ஈடு
படுமா நிலையுடைய பத்தர்,-அடிமைதனில்
எந்லைநிலந் தானாக எண்ணினான் மாறன்,அது
கொல்லைநில மானநிலை கொண்டு.
80
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

ஒன்பதாம் பத்து
1. கொண்ட பெண்டிர்
திருமாலையே சேருங்கள் எனல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
3673
கொண்ட பெண்டிர் மக்க
    ளுற்றார் சுற்றத் தவர்பிறரும்,
கண்ட தோடு பட்ட
    தல்லால் காதல்மற் றியாதுமில்லை,
எண்டி சையும் கீழும்
    மேலும் முற்றவு முண்டபிரான்,
தொண்ட ரோமா யுய்ய
    லல்லா லில்லைகண் டீர்துணையே.#
1
3674
துணையும் சார்வு மாகு
    வார்போல் சுற்றத் தவர்பிறரும்,
அணைய வந்த ஆக்க
    முண்டேல் அட்டைகள் போல்சுவைப்பர்,
கணையொன் றாலே யேழ்மா
    மரமு மெய்தஎங் கார்முகிலை,
புணையென் றுய்யப் போகி
    லல்லா லில்லைகண் டீர்பொருளே.
2
3675
பொருள்கை யுண்டாய்ச் செல்லக்
    காணில் போற்றியென் றேற்றெழுவர்,
இருள்கொள் துன்பத் தின்மை
    காணில் என்னேஎன் பாருமில்லை,
மருள்கொள் செய்கை யசுரர்
    மங்க வடமது ரைப்பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல்
    அல்லல் இல்லைகண் டீரரணே.
3
3676
அரணம் ஆவர் அற்ற
    காலைக் கென்றென் றமைக்கப்பட்டார்,
இரணம் கொண்ட தெப்பர்
    ஆவர் இன்றியிட் டாலுமஃதே,
வருணித் தென்னே வடமது
    ரைப்பி றந்தவன் வண்புகழே,
சரணென் றுய்யப் போகல்
    அல்லால் இல்லைகண் டீர்சதிரே.
4
3677
சதிரம் என்று தம்மைத்
    தாமே சம்மதித் தின்மொழியார்,
மதுர போக மதுவுற்
    றவரே வைகிமற் றொன்றுறுவர்,
அதிர்கொள் செய்கை யசுரர்
    மங்க வடமது ரைப்பிறந்தாற்கு,
எதிர்கொள் ஆளாய் உய்யல்
    அல்லால் இல்லைகண் டீரின்பமே.
5
3678
இல்லை கண்டீர் இன்பம்
    அந்தோ* உள்ளது நினையாதே,
தொல்லை யார்க ளெத்த னைவர்
    தோன்றிக் கழிந்தொழிந்தார்?
மல்லை மூதூர் வடம
    துரைப்பி றந்தவன் வண்புகழே.
சொல்லி யுய்யப் போகல்
    அல்லால் மற்றொன்றில் லைசுருக்கே.
6
3679
மற்றொன் றில்லை சுருங்கச்
    சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும்,
சிற்ற வேண்டா சிந்திப்
    பேயமை யும்கண் டீர்களந்தோ*
குற்றமன் றெங்கள் பெற்றத்
    தாயன் வடமது ரைப்பிறந்தான்,
குற்ற மில்சீர் கற்று
    வைகல் வாழ்தல்கண் டீர்குணமே.
7
3680
வாழ்தல் கண்டீர் குணமி
    தந்தோ* மாயவன் அடிபரவி,
போழ்து போக வுள்ள
    கிற்கும் புன்மையி லாதவர்க்கு,
வாழ்து ணையா வடம
    துரைப்பி றந்தவன் வண்புகழே,
வீழ்து ணையாய்ப் போமி
    தனில்யா துமில்லை மிக்கதே.
8
3681
யாது மில்லை மிக்க
    தனிலென் றன்ற துகருதி,
காது செய்வான் கூதை
    செய்து கடைமுறை வாழ்கையும்போம்,
மாது கிலின்கொ டிக்கொள்
    மாட வடமது ரைப்பிறந்த,
தாது சேர்தோள் கண்ணன்
    அல்லால் இல்லைகண் டீர்சரணே.
9
3682
கண்ணன் அல்லால் இல்லை
    கண்டீர் சரணது நிற்கவந்து,
மண்ணின் பாரம் நீக்கு
    தற்கே வடமது ரைப்பிறந்தான்,
திண்ண மாநும் முடைமை
    யுண்டேன் அவனடி சேர்ந்துய்ம்மினோ,
எண்ண வேண்டா நும்ம
    தாதும் அவனன்றி மற்றில்லையே.
10
3683
ஆதும் இல்லை மற்ற
    வனிலென் றதுவே துணிந்து,
தாது சேர்தோள் கண்ண
    னைக்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
தீதி லாத வொண்டமிழ்
    கள்இவை ஆயிரத்து ளிப்பத்தும்,
ஓத வல்ல பிராக்கள்
    நம்மை யாளுடை யார்கள்பண்டே.#
11
நேரிசை வெண்பா
'கொண்டபெண்டிர் தாம்முதலாக் கூறுமுற்றார், கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரைவிட்டுத்,-தொண்டருடன்
சேர்க்குந் திருமாலைச் சேரும்'என்றான், ஆர்க்கும்இதம்
பார்க்கும் புகழ்மாறன் பண்டு.
81

2. பண்டைநாளாலே
தமக்கு அருள் செய்யுமாறு ஆழ்வார் பரமனை வேண்டல்
எழுசீர் ஆசிரிய விருத்தம்
3684
பண்டைநா ளாலே நின்திரு வருளும்
    பங்கயத் தாள்திரு வருளும்
கொண்டு,நின் கோயில் சீய்த்துப்பல் படிகால்
    குடிகுடி வழிவந்தாட் செய்யும்,
தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்துன்
    தாமரைக் கண்களால் நோக்காய்,
தெண்டிரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த
    திருப்புளிங் குடிக்கிடந் தானே*#
1
3685
குடிக்கிடந் தாக்கஞ் செய்துநின் தீர்த்த
    அடிமைக்குற் றேவல்செய்து, உன்பொன்
அடிக்கட வாதே வழிவரு கின்ற
    அடியரோர்க் கருளி.நீ யொருநாள்
படிக்கள வாக நிமிர்த்தநின் பாத
    பங்கய மேதலைக் கணியாய்,
கொடிக்கொள்பொன் மதிள்சூழ் குளிர்வயல்சோலைத்
    திருப்புளிங் குடிக்கிடந் தானே*
2
3686
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்
    கிடத்தியுன் திருவுடம் பசைய,
தொடர்ந்துகுற் றேவல் செய்துதொல் லடிமை
    வழிவரும் தொண்டரோர்க் கருளி,
தடங்கொள்தா மரைக்கண் விழித்துநீ யெழுந்துன்
    தாமரை மங்கையும் நீயும்,
இடங்கொள்மூ வுலகும் தொழவிருந் தருளாய்,
    திருப்புளிங் குடிக்கிடந் தானே*
3
3687
புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை
    இருந்துவை குந்தத்துள் நின்று,
தெளிந்தவென் சிந்தை அகங்கி யாதே
    என்னையாள் வாயெனக் கருளி,
நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப
    நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப,
பளிங்குநீர் முகிலின் பவளம் போல்கனிவாய்
    சிவப்பநீ காணவா ராயே.
4
3688
பவளம்போல் கனிவாய் சிவப்பநீ காண
    வந்துநின் பன்னிலா முத்தம்,
தவழ்கதிர் முறுவல் செய்துநின் திருக்கண்
    டாமரை தயங்குநின் றருளாய்,
பவளநன் படர்க்கீழ்ச் சங்குறை பொருநல்
    தன்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,
கவளமா களிற்றி னிடர்கெடத் தடத்துக்
    காய்சினப் பறவையூர்ந் தானே*
5
3689
காய்சினப் பறவை யூர்ந்துபொன் மலையின்
    மீமிசைக் கார்முகில் போல,
மாசின மாலி மாலிமான் என்றங்
    கவர்படக் கனன்றுமுன் னின்ற,
காய்சின வேந்தே* கதிர்முடி யானே*
    கலிவயல் திருப்புளிங் குடியாய்,
காய்சினஆழி சங்குவாள் வில்தண்
    டேந்தியெம் இடர்கடி வானே*
6
3690
எம்மிடர் கடிந்திங் கென்னையாள் வானே*
    இமையவர் தமக்குமாங் கனையாய்,
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
    தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,
நம்முடை யடியர் கவ்வைகண் டுகந்து
    நாம்களித் துளநலம் கூர,
இம்மட வுலகர் காணநீ யொருநாள்
    இருந்திடாய் எங்கள்கண் முகப்பே.
7
3691
எங்கள்கண் முகப்பே உலகர்கள் எல்லாம்
    இணையடி தொழுதெழுந் திறைஞ்சி,
தங்களன் பாரத் தமதுசொல் வலத்தால்,
    தலைத்தலைச் சிறந்துபூ சிப்ப,
திங்கள்சேர் மாடத் திருப்புளிங் குடியாய்*
    திருவைகுந் தத்துள்ளாய்* தேவா,
இங்கண்மா ஞாலத் திதனுளு மொருநாள்
    இருந்திடாய் வீற்றிடங் கொண்டே.
8
3692
வீற்றிடங் கொண்டு வியன்கொள்மா ஞாலத்
    திதனுளு மிருந்திடாய், அடியோம்
போற்றியோ வாதே கண்ணிணை குளிரப்
    புதுமலர் ஆகத்தைப் பருக,
சேற்றிள வாளை செந்நெலூ டுகளும்
    செழும்பணைத் திருப்புளிங் குடியாய்,
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த
    கொடுவினைப் படைகள்வல் லானே*
9
3693
கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்
    கிடர்கெட அசுரர்கட் கிடர்செய்,
கடுவினை நஞ்சே* என்னுடை அமுதே*
    கலிவயல் திருப்புளிங் குடியாய்,
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை
    நிலமகள் பிடிக்கும்மெல் லடியை,
கொடுவினை யேனும் பிடிக்கநீ ஒருநாள்
    கூவுதல் வருதல்செய் யாயே.
10
3694
'கூவுதல் வருதல் செய்திடாய்' என்று
    குரைகடல் கடைந்தவன் றன்னை,
மேவிநன் கமர்ந்த வியன்புனல் பொருநல்
    வழுதிநா டன்சட கோபன்,
நாவியல் பாடல் ஆயிரத் துள்ளும்
    இவையுமோர் பத்தும்வல் லார்கள்,
ஓவுத லின்றி யுலகம்மூன் றளந்தான்
    அடியிணை யுள்ளத்தோர் வாரே.#
11
நேரிசை வெண்பா
பண்டையுற வான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு, 'எனக்கெல் லாவுறவின் காரியமும்,-தண்டறநீ
செய்தருள்'என் றேயிரந்த சீர்மாறன் றாளிணையை,
உய்துணையென் றுள்ளமே* ஓர்.
82

3. ஓராயிரமாய்
பகவானின் சீலத்தில் ஆழ்வார் ஈடுபட்டுரைத்தல்
கலி விருத்தம்
3695
ஓரா யிரமாய் உலகேழ் அளிக்கும்
பேரா யிரம்கொண் டதோர்பீ டுடையன்
காரா யினகா ளநன்மே னியினன்,
நாரா யணன்நங் கள்பிரான் அவனே.#
1
3696
அவனே அகல்ஞா லம்படைத் திடந்தான்,
அவனே யஃதுண் டுமிழ்ந்தான் அளந்தான்,
அவனே யவனும் அவனும் அவனும்,
அவனே மற்றெல்லா மும்அறிந் தனமே.
2
3697
அறிந்தன வேத அரும்பொருள் நூல்கள்,
அறிந்தன கொள்க அரும்பொருள் ஆதல்,
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி,
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே.
3
3698
மருந்தே நங்கள் போகம கிழ்ச்சிக்கென்று,
பெருந்தே வர்குழாங் கள்பிதற் றும்பிரான்
கருந்தேவ னெம்மான் கண்ணன் விண்ணுலகம்,
தரும்தே வனைச்சோ ரேல்கண்டாய் மனமே*
4
3699
மனமே* உன்னைவல் வினையேன் இரந்து,
கனமே சொல்லினேன் இதுசோ ரேல்கண்டாய்,
புனமே வியபூந் தண்டுழாய் அலங்கல்,
இனமே துமிலா னையடை வதுமே.
5
3700
அடைவ தும்அணி யார்மலர் மங்கைதோள்,
மிடைவ தும்அசு ரர்க்குவெம் போர்களே,
கடைவ தும்கட லுள்அமுது, என்மனம்
உடைவ தும்அவற் கேயொருங் காகவே.
6
3701
ஆகம் சேர்நர சிங்கம தாகி,ஓர்
ஆகங் வள்ளுகி ரால்பிளந் தானுறை,
மாக வைகுந்தம் காண்பதற்கு, என்மனம்
ஏக மெண்ணும் இராப்பக லின்றியே.
7
3702
இன்றிப் போக இருவினை யும்கெடுத்து,
ஒன்றி யாக்கை புகாமையுய் யக்கொள்வான்,
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளது,
சென்று தேவர்கள் கைதொழு வார்களே.
8
3703
தொழுது மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு,
எழுது மென்னும் இதுமிகை யாதலில்,
பழுதில் தொல்புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்,
தழுவு மாறறி யேனுன தாள்களே.
9
3704
தாள தாமரை யானுன துந்தியான்,
வாள்கொள் நீள்மழு வாளியுன் ஆகத்தான்,
ஆள ராய்த்தொழு வாரும் அமரர்கள்,
நாளும் என்புகழ் கோவுன சீலமே?
10
3705
சீல மெல்லயி லானடி மேல்,அணி
கோல நீள்குரு கூர்ச்சட கோபன்சொல்,
மாலை யாயிரத் துள்ளிவை பத்தினின்
பாலர், வைகுந்த மேறுதல் பான்மையே.#
11
நேரிசை வெண்பா
'ஓராநீர் வேண்டினவை யுள்ளதெல்லாஞ் செய்கின்றேன்,
நாரா யணன்றோ நான்?'என்று,-பேருறவைக்
காட்டவவன் சீலத்திற் கால்தாழ்ந்த மாறனருள்,
மாட்டிவிடும் நம்மனத்து மை.
83

4. மையார்
ஆழ்வார் பகவானைத் தரிசித்து மகிழ்தல்
கலி விருத்தம்
3706
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள், திருமார் வினில்சேர் திருமாலே,
வெய்யார் சுடராழி சுரிசங்க மேந்தும்
கையா, உனைக்காணக் கருதுமென் கண்ணே.#
1
3707
கண்ணே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றியம்பும்,
விண்ணோர் முனிவர்க் கென்றும்காண் பரியாயை,
நண்ணா தொழியே னென்றுநான் அழைப்பனே.
2
3708
அழைக்கின்ற வடிநாயேன் நாய்கூழை வாலால்,
குழைக்கின் றதுபோல என்னுள்ளம் குழையும்,
மழைக்கன்று குன்றமெடுத் தாநிரை காத்தாய்,
பிழைக்கின்ற தருளென்று பேதுறு வேனே.
3
3709
உறுவதிது வென்றுனக் காட்பட்டு, நின்கண்
பெறுவ தெதுகொலேன்று பேதையேன் நெஞ்சம்,
மறுகல்செய்யும் வானவர் தானவர்க் கென்றும்,
அறிவ தரிய அரியாய அம்மானே*
4
3710
அரியாய அம்மானை அமரர் பிரானை,
பெரியானைப் பிரமனை முன்படைத் தானை,
வரிவாள் அரவின் அணைப்பள்ளி கொள்கின்ற,
கரியான் கழல்காணக் கருதும் கருத்தே.
5
3711
கருத்தே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சத்
திருத்தாக இருத்தினேன் தேவர்கட் கெல்லாம்
விருத்தா, விளங்கும் சுடர்ச்சோதி யுயரத்
தொருத்தா, உனையுள்ளும் என்னுள்ளம் உகந்தே.
6
3712
உகந்தே யுனையுள்ளு மென்னுள்ளத்து, அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட அமலா,
மிகுந்தான வன்மார் வகலம் இருகூறா
நகந்தாய், நரசிங் கமதாய வுருவே*
7
3713
உருவா கியஆறு சமயங்கட் கெல்லாம்,
பொருவாகி நின்றான் அவனெல்லாப் பொருட்கும்,
அருவாகிய ஆதியைத் தேவர்கட் கெல்லாம்,
கருவாகிய கண்ணனைக் கண்டுகொண் டேனே.
8
3714
கண்டுகொண் டென்கண் ணிணையாரக் களித்து,
பண்டை வினையாயின பற்றோ டறுத்து,
தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,
அண்டத் தமரர் பெருமான்* அடியேனே.
9
3715
அடியா னிவனென் றெனக்கா ரருள்செய்யும்
நெடியானை, நிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின்
கொடியானை, குன்றாமல் உலகம் அளந்த
அடியானை, அடைந்தடி யேனுய்ந்த வாறே.
10
3716
ஆறா மதயானை அடர்த்தவன் றன்னை,
சேறார் வயல்தென் குருகூர்ச் சடகோபன்,
நூறே சொன்னவோ ராயிரத்து ளிப்பத்தும்,
ஏறே தரும்வா னவர்தமின் னுயிர்க்கே.#
11
நேரிசை வெண்பா
மையார்கண் மாமார்பின் மன்னுந் திருமாலைக்,
கையாழி சங்குடனே காணவெண்ணி,-மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டுகந்த மாறன்பேர்,
ஓதவுய்யு மேயின் னுயிர்.
84

5. இன்னுயிர்ச்சேவல்
தலைவன் நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்தல்
கலி நிலைத்துறை
3717
இன்னுயிர்ச் சேவலும் நீரும்
    கூவிக்கொண்டுஇங் கெத்தனை,
என்னுயிர் நோவ மிழற்றேன்
    மின்குயில் பேடைகாள்,
என்னுயிர்க் கண்ண பிரானை
    நீர்வரக் கூவுகிலீர்,
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
    இத்தனை வேண்டுமோ?#
1
3718
இத்தனை வேண்டுவ தன்றந்தோ*
    அன்றில் பேடைகாள்,
எத்தனை நீரும் நுஞ்சே
    வலும்கரைந் தேங்குதிர்,
வித்தகன் கோவிந்தன் மெய்ய
    னல்ல னொருவர்க்கும்,
அத்தனை யாமினி யென்னு
    யிரவன் கையதே.
2
3719
அவன்கைய தேயென தாருயிர்
    அன்றில் பேடைகாள்,
எவம்சொல்லி நீர்குடைந் தாடு
    திர்புடை சூழவே,
தவம்செய் தில்லா வினையாட்டி
    யேனுயி ரிங்குண்டோ,
எவம்சொல்லி நிற்றும்நும் ஏங்கு
    கூக்குரல் கேட்டுமே.
3
3720
கூக்குரல் கேட்டும்நங் கண்ணன்
    மாயன் வெளிப்படான்,
மேற்கிளை கொள்ளேன்மின் நீரும்
    சேவலும் கோழிகாள்,
வாக்கும் மனமும் கரும
    முமநமக் காங்கதே,
ஆக்கையு மாவியும் அந்தரம்
    நின்று ழலுமே.
4
3721
அந்தரம் நின்றுழல் கின்ற
    யானுடைப் பூவைகாள்,
நுந்திரத் தேது மிடையில்
    லைகுழ றேன்மினோ,
இந்திர ஞாலங்கள் காட்டியிவ
    வேழுல கும்கொண்ட,
நந்திரு மார்பன் நம்மாவி
    யுண்ணநன் கெண்ணினான்.
5
3722
நன்கெண்ணி நான்வ ளர்த்த
    சிறுகிளிப் பைதலே,
இன்குரல் நீமிழற் றேலென்
    னாருயிர்க் காகுத்தன்,
நின்செய்ய வாயொக்கும் வாயன்கண்
    ணன்கை காலினன்,
நின்பசுஞ் சாம நிறத்தன்
    கூட்டுண்டு நீங்கினான்.
6
3723
கூட்டுண்டு நீங்கிய கோலத்
    தாமரைக் கட்செவ்வாய்,
வாட்டமி லென்கரு மாணிக்கம்
    கண்ணன் மாயன்போல்,
கோட்டிய வில்லொடு மின்னும்
    மேகக் குழாங்கள்காள்,
காட்டேன் மின்நும் முருஎன்
    னுயிர்க்கது காலனே.
7
3724
உயிர்க்கது காலனென் றும்மை
    யானிரந் தேற்கு,நீர்
குயிற்பைதல் காள்*கண்ணன் நாம
    மேகுழ றிக்கொன்றீர்,
தயிர்ப்ப ழஞ்சோற் றொடுபா
    லடிசிலும் தந்து,சொல்
பயிற்றிய நல்வள மூட்டினீர்
    பண்புடை யீரே*
8
3725
பண்புடை வண்டொடு தும்பிகாள்*
    பண்மிழற் றேன்மின்,
புண்புரை வேல்கொடு குத்தாலொக்
    கும்நும் இன்குரல்,
தண்பெரு நீர்த்தடந் தாமரை
    மலர்ந்தா லொக்கும்
கண்பெருங் கண்ணன், நம்மாவி
    யுண்டெழ நண்ணினான்.
9
3726
எழநண்ணி நாமும் நம்வான
    நாடனோ டொன்றினோம்,
பழனநன் னாரைக் குழாங்கள்
    காள்*பயின் றென்னினி,
இழைநல்ல வாக்கை யும்பைய
    வேபுயக் கற்றது,
தழைநல்ல இன்பம் தலைப்பெய்
    தெங்கும் தழைக்கவே.
10
3727
இன்பம் தலைப்பெய் தெங்கும்
    தழைத்தபல் லூழிக்கு,
தண்புக ழேத்தத் தனக்கருள்
    செய்த மாயனை,
தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
    லாயிரத் துள்ளிவை,
ஒன்பதோ டொன்றுக் கும்மூ
    வுலகு முருகுமே.#
11
நேரிசை வெண்பா
'இன்னுயிர்மால் தோற்றினதிங் கென்னெஞ்சில்' என்று,கண்ணால்
அன்றவனைக் காணவெண்ணி ஆண்பெண்ணாய்ப், பின்னையவன்
தன்னைநினை விப்பவற்றால் தான்தளர்ந்த மாறனருள்,
உன்னுமவர்க் குள்ளமுரு கும்.
85

மேலே செல்க

6. உருகுமால்
பகவானின் சிறப்பை ஆழ்வார் ஏக்கத்துடன் கூறுதல்
கலி விருத்தம்
3728
உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,
பெருகுமால் வேட்கையும் என்செய்கேன் தொண்டனேன்,
தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை,
மருவிய மாயன்றன் மாயம் நினைதொறே.#
1
3729
நினைதொறும் சொல்லுந் தொறும்நெஞ் சிடிந்துகும்,
வினைகொள்சீர் பாடிலும் வேமென தாருயிர்,
சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை யென்னப்பா,
நினைகிலேன் நானுனக் காட்செய்யும் நீர்மையே.
2
3730
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து,என்னை
ஈர்மைசெய் தென்னுயி ராயென் னுயிருண்டான்,
சீர்மல்கு சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,
கார்முகில் வண்ணன்றன் கள்வம் அறிகிலேன்.
3
3731
அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க,
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்,
வெறிகமழ் சோலைத்தென் காட்கரை என்னப்பன்,
சிறியவென் னாருயி ருண்ட திருவருளே.
4
3732
திருவருள் செய்பவன் போலவென் னுள்புகுந்து,
உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான்,
திருவளர் சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,
கருவளர் மேனிஎன் கண்ணன்கள் வங்களே.
5
3733
என்கண்ணன் கள்வம் எனக்குச்செம் மாய்நிற்கும்,
அங்கண்ண னுண்டவென் னாருயிர்க் கோதிது,
புன்கண்மை யெய்திப் புலம்பி யிராப்பகல்,
என்கண்ண னென்றவன் காட்கரை யேத்துமே.
6
3734
காட்கரை யேத்தும் அதனுள்கண் ணாவென்னும்,
வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும்,
ஆட்கொள் வானொத்தென் னுயிருண்ட மாயனால்,
கோட்குறை பட்டதென் னாருயிர் கோளுண்டே.
7
3735
கோளுண்டான் அன்றிவந் தென்னுயிர் தானுண்டான்,
நாளுநாள் வந்தென்னை முற்றவும் தானுண்டான்,
காளநீர் மேகத்தென் காட்கரை யென்னப்பற்கு,
ஆளன்றே பட்டதென் ஆருயிர் பட்டதே.
8
3736
ஆருயிர் பட்ட தெனதுயிர் பட்டது,
பேரிதழ்த் தாமரைக் கண்கனி வாயதோர்,
காரெழில் மேகத்தென் காட்கரைக் கோயில்கொள்,
சீரெழில் நால்தடந் தோள்தெய்வ வாரிக்கே.
9
3737
'வாரிக்கொண் டுன்னை விழுங்குவன் காணில்'என்று,
ஆர்வுற்ற என்னை யொழியவென் னில்முன்னம்
பாரித்து, தானென்னை முற்றப் பருகினான்,
காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே.
10
3738
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்றன்னை,
கொடிமதிள் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,
வடிவமை யாயிரத் திப்பத்தி னால்,சன்மம்
முடிவெய்தி நாசங்கண் டீர்களெங் கானலே.#
11
நேரிசை வெண்பா
'உருகுமால் என்னெஞ்சம் உன்செயல்க ளெண்ணிப்,
பெருகுமால் வேட்கை'எனப் பேசி,-மருவுகின்ற
இன்னாப் புடனவன்சீர் ஏய்ந்துரைத்த மாறன்சொல்,
என்னாச்சொல் லாதிருப்ப தெங்கு?
86

7. எங்கானல்
தலைவி பறவை முதலியவற்றை தூது விடுதல்
நாலடித் தாழிசை
3739
எங்கானல் அகங்கழிவாய்
    இரைதேர்ந்திங் கினிதமரும்,
செங்கால மடநாராய்*
    திருமூழிக் களத்துறையும்,
கொங்கார்பூந் துழாய்முடியெங்
    குடக்கூத்தர்க் கென்தூதாய்,
நுங்கால்க ளென்தலைமேல்
    கெழுமீரோ நுமரோடே.#
1
3740
நுமரோடும் பிரியாதே
    நீரும்நும் சேவலுமாய்,
அமர்காதல் குருகினங்காள்*
    அணிமூழிக் களத்துறையும்,
எமராலும் பழிப்புண்டிங்
    கென்*தம்மால் இழிப்புண்டு,
தமரோடங் குறைவார்க்குத்
    தக்கிலமே* கேளீரே.
2
3741
தக்கிலமே கேளீர்கள்
    தடம்புனல்வாய் இரைதேரும்,
கொக்கினங்காள்* குருகினங்காள்*
    குளிர்மூழிக் களத்துறையும்,
செக்கமலத் தலர்போலும்
    கண்கைகால் செங்கனிவாய்,
அக்கமலத் திலைபோலும்
    திருமேனி யடிகளுக்கே.
3
3742
திருமேனி யடிகளுக்குத்
    தீவினையேன் விடுதூதாய்,
திருமூழிக் களமென்னும்
    செழுநகர்வாய் அணிமுகல்காள்,
திருமேனி யவட்கருளீர்
    என்றக்கால், உம்மைத்தன்
திருமேனி யொளியகற்றித்
    தெளிவிசும்பு கடியுமே?
4
3743
தெளிவிசும்பு கடிதோடித்
    தீவளைத்து மின்னிலகும்,
ஒளிமுகில்காள் திருமூழிக்
    களத்துறையும் ஒண்சுடர்க்கு,
தெளிவிசும்பு திருநாடாத்
    தீவினையேன் மனத்துறையும்,
துளிவார்கட் குழலார்க்கென்
    தூதுரைத்தல் செப்புமினே.
5
3744
தூதுரைத்தல் செப்புமின்கள்
    தூமொழிவாய் வண்டினங்காள்,
போதிரைத்து மதிநுகரும்
    பொழில்மூழிக் களத்துறையும்,
மாதரைத்தம் மார்வகத்தே
    வைத்தார்க்கென் வாய்மாற்றம்,
தூதுரைத்தல் செப்புதிரேல்
    சுடர்வளையும் கலையுமே.
6
3745
சுடர்வளையும் கலையுங்கொண்
    டருவினையேன் தோள்துறந்த,
படர்புகழான் திருமூழிக்
    களத்துறையும் பங்கயக்கட்,
கூடர்பவள வாயனைக்கண்
    டொருநாளோர் தூய்மாற்றம்,
படர்பொழில்வாய்க் குருகினங்காள்*
    எனக்கொன்று பணியீரே.
7
3746
எனக்கொன்று பணியீர்காள்
    இரும்பொழில்வாய் இரைதேர்ந்து,
மனக்கின்பம் படமேவும்
    வண்டினங்காள்* தும்பிகாள்,
கனக்கொள்திண் மதிள்புடைசூழ்
    திருமூழிக் களத்துறையும்,
புனக்கொள்கா யாமேனிப்
    பூந்துழாய் முடியார்க்கே.
8
3747
பூந்துழாய் முடியார்க்குப்
    பொன்னாழிக் கையார்க்கு,
ஏந்துநீ ரிளங்குருகே*
    திருமூழிக் களத்தார்க்கு,
ஏந்துபூண் முலைபயந்தென்
    இணைமலர்க்கண் ணீர்ததும்ப,
தாம்தம்மைக் கொண்டகல்தல்
    தகவன்றென் றுரையீரே.
9
3748
தகவன்றென் றுரையீர்கள்
    தடம்புனல்வாய் இரைதேர்ந்து,
மிகவின்பம் படமேவும்
    மென்னடைய அன்னங்காள்,
மிகமேனி மெலிவெய்தி
    மேகலையும் ஈடழிந்து,என்
அகமேனி யொழியாமே
    திருமூழிக் களத்தார்க்கே.
10
3749
ஒழிவின்றித் திருமூழிக்
    களத்துறையும் ஒண்சுடரை,
ஒழிவில்லா அணிமழலைக்
    கிளிமொழியாள் அலற்றியசொல்,
வழுவில்லா வண்குருகூர்ச்
    சடகோபன் வாய்ந்துரைத்த,
அழிவில்லா ஆயிரத்திப்
    பத்தும்நோய் அறுக்குமே.#
11
நேரிசை வெண்பா
'எங்காத லுக்கடிமால் ஏய்ந்த வடிவழகெ'ன்று
அங்காது பற்றாசா ஆங்கவன்பால்,-எங்குமுள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போகவிடும் மாறன்றாள்,
உள்ளினர்க்குத் தீங்கையறுக் கும்.
78

8. அறுக்கும் வினை
தலைவனது திருநாவாய் செல்லத் தலைவி நினைத்தல்
கலி விருத்தம்
3750
அறுக்கும் வினையா யினஆ கத்தவனை,
நிறுத்தும் மனத்தொன் றியசிந் தையினார்க்கு,
வெறித்தண் மலர்ச்சோ லைகள்சூழ் திருநாவாய்,
குறுக்கும் வகையுண்டு கொலோகொடி யேற்கே?#
1
3751
கொடியே ரிடைக்கோ கனகத் தவள்கேள்வன்,
வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன்,
நெடியா னுறைசோ லைகள்சூழ் திருநாவாய்,
அடியேன் அணுகப் பெறும்நாள் எவைகொலோ*
2
3752
'எவைகொல் அணுகப் பெறுநாள்?'என் றெப்போதும்,
கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்,
நவையில் திருநா ராணன்சேர் திருநாவாய்,
அவையுள் புகலாவ தோர்நாள் அறியேனே.
3
3753
நாளேல் அறியேன் எனக்குள் ளன,நானும்
மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்,
நீளார் மலர்சோ லைகள்சூழ் திருநாவாய்,
வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா*
4
3754
மணாளன் மலர்மங் கைக்கும்மண் மடந்தைக்கும்,
கண்ணாளன் உலகத் துயிர்தேவர் கட்கெல்லாம்,
விண்ணாளன் விரும்பி யுறையும் திருநாவாய்,
கண்ணாரக் களிக்கின்ற திங்கென்று கொல்கண்டே?
5
3755
கண்டே களிக்கின்ற திங்கென்று கொல்கண்கள்,
தொண்டே யுனக்கா யொழிந்தேன் துரிசின்றி,
வண்டார் மலர்ச்சோ லைகள்சூழ் திருநாவாய்,
கொண்டே யுறைகின்ற எங்கோ வலர்கோவே*
6
3756
கோவா கியமா வலியை நிலங்கொண்டாய்,
தேவா சுரம்செற் றவனே* திருமாலே,
நாவா யுறைகின்ற என்நா ரணநம்பீ,
'ஆவா அடியா னிவன்'என் றருளாயே.
7
3757
அருளா தொழிவாய் அருள்செய்து, அடியேனைப்
பொருளாக்கி யுன்பொன் னடிக்கீழ்ப் புகவைப்பாய்,
மருளே யின்றிஉன்னை என்னெஞ்சத் திருத்தும்,
தெருளே தருதென் திருநாவாய் என்தேவே*
8
3758
தேவர் முனிவர்க் கென்றும்காண் டற்கரியன்,
மூவர் முதல்வன் ஒருமூ வுலகாளி,
தேவன் விரும்பி யுறையும் திருநாவாய்,
யாவர் அணுகப் பெறுவார் இனியந்தோ*
9
3759
அந்தோ* அணுகப் பெறுநாளென் றெப்போதும்,
சிந்தை கலங்கித் திருமாலென் றழைப்பன்,
கொந்தார் மலர்ச்சோ லைகள்சூழ் திருநாவாய்,
வந்தே யுறைகின்ற எம்மா மணிவண்ணா*
10
3760
வண்ணம் மணிமாட நன்னாவாய் உள்ளானை,
திண்ணம் மதிள்தென் குருகூர்ச் சடகோபன்,
பண்ணார் தமிழா யிரத்திப்பத் தும்வல்லார்,
மண்ணாண்டு மணம்கமழ் வர்மல் லிகையே.#
11
நேரிசை வெண்பா
அறுக்குமிடர் என்றவன்பால் ஆங்குவிட்ட தூதர்,
மறித்துவரப் பற்றா மனத்தால்,-அறப்பதறிச்
செய்யதிரு நாவாயிற் செல்லநினைந் தான்,மாறன்
மையலினாற் செய்வறியா மல்.
88

9. மல்லிகை கமழ்
மாலை நேரம் கண்டு தலைவி இரங்கல்
எண்சீர் ஆசிரிய விருத்தம்
3761
மல்லிகை கம்தென்றல் ஈரு மாலோ*
    வண்குறிஞ் சியிசை தவழு மாலோ,
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ*
    செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ,
அல்லியந் தாமரைக் கண்ணன் எம்மான்
    ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்,
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
    புகலிடம் அறிகிலம் தமிய மாலோ*#
1
3762
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ*
    புலம்புறும் அணிதென்றல் ஆம்ப லாலோ,
பகலடு மாலைவண் சாந்த மாலோ*
    பஞ்சமம் முல்லைதண் வாடை யாலோ,
அகலிடம் படைத்திடந் துண்டு மிழ்ந்து
    அளந்தெங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்,
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
    இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்?
2
3763
இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்
    இணைமுலை நமுகநுண் ணிடைது டங்க,
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து
    துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்,
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்
    தாமரைக் கண்ணும்செவ் வாயும்,நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளும்
    பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ*
3
3764
பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ*
    வாடைதண் வாடைவெவ் வாடை யாலோ,
மேவுதண் மதியம்வெம் மதிய மாலோ*
    மென்மலர்ப் பள்ளிவெம் பள்ளி யாலோ,
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு
    துதைந்தஎம் பெண்மையம் பூவி தாலோ,
ஆவியின் பரமல்ல அகைக ளாலோ*
    யாமுடை நெஞ்சமும் துணையென் றாலோ*
4
3765
யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ*
    ஆபுகும் மாலையும் ஆகின் றாலோ,
யாமுடை ஆயன்றன் மனம்கல் லாலோ*
    அவனுடைத் தீங்குழ லீரு மாலோ,
யாமுடைத் துணையென்னும் தோழி மாரும்
    எம்மின்முன் னவனுக்கு மாய்வ ராலோ,
யாமுடை ஆருயிர் காக்கு மாறென்?
    அவனுடை யருள்பெ றும்போது அரிதே.
5
3766
அவனுடை யருள்பெ றும்போ தரிதால்
    அவ்வருள் அல்லன அருளும் அல்ல,
அவனருள் பெறுமள வாவி நில்லாது
    அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்,
சிவனொடு பிரமன்வண் திரும டந்தை
    சேர்திரு வாகமெம் மாவி யீரும்,
எவனினிப் புகுமிடம்? எவன்செய் கேனோ?
    ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள்*
6
3767
ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள்*
    ஆருயிர் அளவன்றிக் கூர்தண் வாடை,
காரொக்கும் மேனிநங் கண்ணன் கள்வம்
    கவர்ந்தவத் தனிநெஞ்சம் அவன்க ணஃதே,
சீருற்ற அகிற்புகை யாழ்ந ரம்பு
    பஞ்சமம் தண்பசுஞ் சாந்த ணைந்து,
போருற்ற வாடைதண் மல்லி கைப்பூப்
    புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ*
7
3768
புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ*
    பொங்கிள வாடைபுன் செக்க ராலோ,
அதுமணந் தகன்றநங் கண்ணன் கள்வம்
    கண்ணினிற் கொடிதினி அதனி லும்பர்,
மதுமண மல்லிகை மந்தக் கோவை
    வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து,
அதுமணந் தின்னருள் ஆய்ச்சி யர்க்கே
    ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான்*
8
3769
ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான்
    அதுமொழிந் திடையிடைத் தன்செய் கோலத்,
தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித்
    தூமொழி யிசைகள்கொண் டொன்று நோக்கி,
பேதுறும் முகம்செய்து நொந்து நொந்து
    பேதைநெஞ் சறவறப் பாடும் பாட்டை,
யாமுமொன் றறிகிலம் அம்ம அம்ம*
    மாலையும் வந்தது மாயன் வாரான்.
9
3770
மாலையும் வந்தது மாயன் வாரான்
    மாமணி புலம்பவல் லேற ணைந்த,
கோலநன் னாகுகள் உகளு மாலோ*
    கொடியன குழல்களும் குழறுமாலோ,
வாலொளி வளர்முல்லை கருமு கைகள்
    மல்லிகை யலம்பிவண் டாலு மாலோ,
வேலையும் விசம்பில்விண் டலறு மாலோ*
    என்சொல்லி யுய்வனிங் கவனை விட்டே?
10
3771
அவனைவிட் டகன்றுயிர் ஆற்ற கில்லா
    அணியிழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்,
அவனைவிட் டகல்வதற் கேயி ரங்கி
    அணிகுரு கூர்ச்சட கோபன் மாறன்,
அவனியுண் டுமிழ்ந்தவன் மேலு ரைத்த
    ஆயிரத் துள்ளிவை பத்தும் கொண்டு,
அவனியுள் அலற்றிநின் றுய்ம்மின் தொண்டீர்*
    அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே.#
11
நேரிசை வெண்பா
மல்லடிமை செய்யும்நாள் மால்தன்னைக் கேட்க,அவன்
சொல்லுமள வும்பற்றாத் தொன்னலத்தால்,-செல்கின்ற
ஆற்றாம பேசி அலமந்த மாறனருள்,
மாற்றாகப் போகுமென்றன் மால்.
89

10. மாலை நண்ணி
(இது கோயில் திருவாய்மொழி)
திருக்கண்ணபுரத்தை அடையுமாறு உபதேசித்தல்
கலி விருத்தம்
3772
மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட,
காலைமா லைகம லமலர் இட்டுநீர்,
வேலைமோ தும்மதிள் சூழ்திருக் கணபுரத்து,
ஆலின்மே லால்அமர்ந் தான்அடி யிணைகளே.#
1
3773
கள்ளவி ழும்மலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,
நள்ளிசே ரும்வயல் சூழ்கிடங் கின்புடை,
வெள்ளியேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்
உள்ள,நா ளும்தொழு தெழுமினோ தொண்டரே*
2
3774
தொண்டர்*நுந் தந்துயர் போகநீர் ஏகமாய்,
விண்டுவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,
வண்டுபா டும்பொழில் சூழ்திருக் கணபுரத்
தண்டவா ணன்,அம ரர்பெரு மானையே.
3
3775
மானைநோக் கிமடப் பின்னைதன் கேள்வனை,
தேனைவா டாமலர் இட்டுநீர் ரிறைஞ்சுமின்,
வானையுந் தும்மதிள் சூழ்திருக் கணபுரம்,
தானயந் தபெரு மான்சர ணாகுமே.
4
3776
சரணமா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
மரணமா னால்வைகுந் தம்கொடுக் கும்பிரான்,
அரணமைந் தமதிள் சூழ்திருக் கணபுரத்
தரணியா ளன்.தன தன்பர்க்கன் பாகுமே.
5
3777
அன்பனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
செம்பொனா கத்தவு ணனுடல் கீண்டவன்,
நன்பொனேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரத்
தன்பன்,நா ளும்தன மெய்யர்க்கு மெய்யனே.
6
3778
மெய்யனா கும்விரும் பித்தொழு வார்க்கெலாம்,
பொய்யனா கும்புற மேதொழு வார்க்கெலாம்,
செய்யில்வா ளையுக ளும்திருக் கணபுரத்
தையன்,ஆ கத்தணைப் பார்கட் கணியனே.
7
3779
அணியனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும்,
மணிபொனேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்
பணிமின்,நா ளும்பர மேட்டிதன் பாதமே.
8
3780
பாதநா ளும்பணி யத்தணி யும்பிணி,
ஏதம்சா ராஎனக் கேலினி யென்குறை?,
வேதநா வர்விரும் பும்திருக் கணபுரத்
தாதியா னை,அடைந் தார்க்கல்லல் இல்லையே.
9
3781
இல்லையல் லலெனக் கேலினி யென்குறை?
அல்லிமா தர்அம ரும்திரு மார்பினன்,
கல்லிலேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்
சொல்ல,நா ளும்,துயர் பாடுசா ராவே.
10
3782
பாடுசா ராவினை பற்றா வேண்டுவீர்,
மாடநீ டுகுரு கூர்ச்சட கோபன்சொல்,
பாடலா னதமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்
பாடியா டிப்,பணி மினவன் தாள்களே.#
11
நேரிசை வெண்பா
'மாலுமது வாஞ்சைமுற்றும் மன்னுமுடம் பின்முடிவில்
சாலநண்ணிச் செய்வன்' எனத் தானுகந்து-'மேலவனைச்
சீரார் கணபுரத்தே சேரும்'எனுஞ் சீர்மாறன்,
தாரானோ நந்தமக்குத் தாள்?
90
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

பத்தாம் பத்து
1. தாள தாமரை
பரமபதம் அடையக் கருதிய ஆழ்வார் திருமோகூர் பெருமானைச் சரணடைதல்
கலி நிலைத்துறை
3783
தாள தாமரைத் தடமணி
    வயற்றிரு மோகூர்,
நாளும் மேவிநன் கமர்ந்துநின்
    றசுரரைத் தகர்க்கும்,
தோளும் நான்குடைச் சுரிகுழல்
    கமலக்கண் கனிவாய்,
காள மேகத்தை யன்றிமற்
    றொன்றிலம் கதியே.#
1
3784
இலங்கதி மற்றொன் றெம்மைக்கும்
    ஈன்தண் டுழாயின்,
அலங்கலங் கண்ணி ஆயிரம்
    பேருடை அம்மான்,
நலங்கொள் நான்மறை வாணர்கள்
    வாழ்திரு மோகூர்,
நலங்க ழலவன் அடிநிழல்
    தடமன்றி யாமே.
2
3785
'அன்றி யாமொரு புகலிடம்
    இலம்'என்றென் றலற்றி,
நின்று நான்முகன் அரனொடு
    தேவர்கள் நாட,
வென்றிம் மூவுல களித்துழல்
    வான்திரு மோகூர்,
நன்று நாமினி நணுகுதும்
    நமதிடர் கெடவே.
3
3786
'இடர்கெட எம்மைப் போந்தளி
    யாய்'என்றென் றேத்தி,
சுடர்கொள் சோதியைத் தேவரும்
    முனிவரும் தொடர,
படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள்
    வான்திரு மோகூர்,
இடர்கெ டவடி பரவதும்
    தொண்டீர்* வம்மினே.
4
3787
தொண்டீர்* வம்மின்நம் சுடரொளி
    யொருதனி முதல்வன்,
அண்ட மூவுல களந்தவன்
    அணிதிரு மோகூர்,
எண்டி சையும்ஈன் கரும்பொடு
    பெருஞ்செந்நெல் விளைய,
கொண்ட கோயிலை வலஞ்செய்திங்
    காடுதும் கூத்தே.
5
3788
கூத்தன் கோவலன் குதற்றுவல்
    லசுரர்கள் கூற்றம்,
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும்
    முனிவர்க்கும் இன்பன்,
வாய்த்த தண்பணை வளவயல்
    சூழ்திரு மோகூர்
ஆத்தன், தாமரை யடியன்றி
    மற்றிலம் அரணே.
6
3789
மற்றி லம்அரண் வான்பெரும்
    பாழ்தனி முதலா,
சுற்று நீர்படைத் ததன்வழித்
    தொன்முனி முதலா,
முற்றும் தேவரோ டுலகுசெய்
    வான்திரு மோகூர்,
சுற்றி நாம்வலஞ் செய்யநம்
    துயர்கெடும் கடிதே.
7
3790
துயர்கெ டும்கெடி தடைந்துவந்
    தடியவர் தொழுமின்,
உயர்கொள் சோலையொண் தடமணி
    யொளிதிரு மோகூர்,
பெயர்கள் ஆயிர முடையவல்
    லரக்கர்புக் கழுந்த,
தயர தன்பெற்ற மரதக
    மணித்தடத் தினையே.
8
3791
மணித்த டத்தடி மலர்க்கண்கள்
    பவளச் செவ்வாய்,
அணிக்கொள் நால்தடந் தோள்தெய்வம்
    அசுரரை யென்றும்,
துணிக்கும் வல்லரட் டனுறை
    பொழில்திரு மோகூர்,
நணித்து நம்முடை நல்லரண்
    நாமடைந் தனமே.
9
3792
'நாம டைந்தநல் லரண்நமக்
    கெ'ன்றுநல் லமரர்,
தீமை செய்யும்வல் லசுரரை
    யஞ்சிக்சென் றடைந்தால்,
காம ரூபம்கொண் டெழுந்தளிப்
    பான்திரு மோகூர்,
நாம மேநவின் றெண்ணுமின்
    ஏத்துமின் நமர்காள்*
10
3793
'ஏத்து மின்நமர் காள்*'என்று
    தான்குட மாடு
கூத்த னை,குரு கூர்ச்சட
    கோபன்குற் றேவல்,
வாய்த்த ஆயிரத் துள்ளிவை
    வண்திரு மோகூர்க்கு,
ஈத்த பத்திவை யேத்தவல்
    லார்க்கிடர் கெடுமே.#
11
நேரிசை வெண்பா
தாளடைந்தோர் தங்கட்குத் தானே வழித்துணையாம்,
காளமே கத்தைக் கதியாக்கி,-மீளதலாம்
ஏதமிலா விண்ணுலகி லேகவெண்ணும் மாறனென,
தேகமுள்ள தெல்லாம் கெடும்.
91

2. கெடுமிடர்
திருவனந்தபுரத்தில் தொண்டு செய்யலாம் எனல்
கலி விருத்தம்
3794
கெடுமிட ராயவெல்லாம்
    கேசவா வென்ன,நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின்
    தமர்களும் குறுககில்லார்,
விடமுடை யரவில்பள்ளி
    விரும்பினான் சுரும்பலற்றும்,
தடமுடை வயலனந்த
    புரநகர்ப் புகுதுமின்றே.#
1
3795
இன்றுபோய்ப் புகுதிராகி
    லெழுமையும் ஏதம்சாரா,
குன்றுநேர் மாடமாடே
    குருந்துசேர் செருந்திபுன்னை,
மன்றலர் பொழிலனந்த
    புரநகர் மாயன்நாமம்,
ஒன்றுமோ ராயிரமாம்
    உள்ளுவார்க் கும்பரூரே.
2
3796
ஊரும்புட் கொடியுமஃதே
    யுலகெல்லா முண்டுமிழ்ந்தான்,
சேரும்தண் ணனந்தபுரம்
    சிக்கெனப் புகுதிராகில்,
தீரும்நோய் வினைகளெல்லாம்
    திண்ணநாம் அறியச்சொன்னோம்
பேரும்ஓ ராயிரத்துள்
    ஒன்றுநீர் பேசுமினோ.
3
3797
பேசுமின் கூசமின்றிப்
    பெரியநீர் வேலைசூழ்ந்து,
வாசமே கமழுஞ்சோலை
    வயலணி யனந்தபுரம்,
நேசம்செய் துறைகின்றானை
    நெறிமையால் மலர்கள்தூவி,
பூசனை செய்கின்றார்கள்
    புண்ணியம் செய்தவாறே.
4
3798
புண்ணியம் செய்துநல்ல
    புனலொடு மலர்கள்தூவி,
எண்ணுமி னெந்தைநாமம்
    இப்பிறப் பறுக்குமப்பால்,
திண்ணம்நாம் அறியச்சொன்னோம்
    செறிபொழில் அனந்தபுரத்து,
அண்ணலார் கமலபாதம்
    அணுகுவார் அமரராவார்.
5
3799
அமரராய்த் திரிகின்றார்கட்
    காதிசேர் அனந்தபுரத்து,
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங்
    ககப்பணி செய்வர்விண்ணோர்,
நமர்களோ* சொல்லக்கேண்மின்
    நாமும்போய் நணுகவேண்டும்,
குமரனார் தாதைதுன்பம்
    துடைத்தகோ விந்தனாரே.
6
3800
துடைத்தகோ விந்தனாரே
    யுலகுயிர் தேவும்மற்றும்,
படைத்தவெம் பரமமூர்த்தி
    பாம்பணைப் பள்ளிகொண்டான்,
மடைத்தலை வாளைபாயும்
    வயலணி யனந்தபுரம்,
கடைத்தலை சீய்க்கப்பெற்றால்
    கடுவினை களையலாமே.
7
3801
கடுவினை களையலாகும்
    காமனைப் பயந்தகாளை,
இடவகை கொண்டதென்பர்
    எழிலணி யனந்தபுரம்,
படமுடை யரவில்பள்ளி
    பயின்றவன் பாதம்காண,
நடமினோ நமர்களுள்ளீர்*
    நாமுமக் கறியச்சொன்னோம்.
8
3802
நாமுமக் கறியச்சொன்ன
    நாள்களும் நணியவான,
சேமநன் குடைத்துக்கண்டீர்
    செறிபொழி லனந்தபுரம்,
தூமநல் விரைமலர்கள்
    துவளற ஆய்ந்துகொண்டு,
வாமனன் அடிக்கென்றேத்த
    மாய்ந்தறும் வினைகள்தாமே.
9
3803
மாய்ந்தறும் வினைகள்தாமே
    மாதவா என்ன,நாளும்
ஏய்ந்தபொன் மதிளனந்த
    புரநக ரெந்தைக்கென்று,
சாந்தொடு விளக்கம்தூபம்
    தாமரை மலர்கள்நல்ல,
ஆய்ந்துகொண் டேத்தவல்லார்
    அந்தமில் புகழினாரே.
10
3804
அந்தமில் புகழனந்த
    புரநகர் ஆதிதன்னை,
கொந்தலர் பொழில்குருகூர்
    மாறன்சொல் லாயிரத்துள்,
ஐந்தினோ டைந்தும்வல்லார்
    அணைவர்போய் அமருலகில்,
பைந்தொடி மடந்தையர்தம்
    வேய்மரு தோளிணையே.#
11
நேரிசை வெண்பா
கெடுமிடர் வைகுந்தத் தைக்கிட்டி னாற்போல்,
தடமுடைய னந்தபுரந் தன்னில்,-படவரவில்
கண்டுயில்மாற் காட்செய்யக் காதலித்தான் மாறன்,உயர்
விண்டனிலுள் ளோர்வியப்ப வே.
92

3. வேய் மருதோள்
ஆநிலை மேய்க்கச் செல்லுதலைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டல்
எண்சீர் ஆசிரிய விருத்தம்
3805
வேய்மரு தோளிணை மெலியு மாலோ*
    மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்கா,
காமரு குயில்களும் கூவு மாலோ*
    கணமயில் அவைகலந் தாலு மாலோ,
ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்
    கொருபக லாயிர மூழி யாலோ,
தாமரைக் கண்கள்கொண் டீர்தி யாலோ*
    தகவிலை தகவிலை யேநீ கண்ணா*#
1
3806
தகவிலை தகவிலை யேநீ கண்ணா*
    தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக் காரா,
சுகவெள்ளம் விசும்பிறந் தறிவை மூழ்க்கச்
    சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே,
அகவுயிர் அகமகந் தோறும் உள்புக்
    காவியின் பரமல்ல வேட்கை யந்தோ,
மிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால்
    வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.
2
3807
வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு
    வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்,
யாவரும் துணையில்லை யானி ருந்துன்
    அஞ்சன மேனியை யாட்டம் காணேன்,
போவதன் றொருபகல் நீய கன்றால்
    பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா,
சாவதிவ் வாய்க்குலத் தாய்ச்சி யோமாய்ப்
    பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே.
3
3808
தொழுத்தையோம் தனிமையும் துணைபி ரிந்தார்
    துயரமும் நினைகிலை கோவிந் தா,நின்
தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித்
    துறந்தெம்மை விட்டவை மேய்க்கப் போதி,
பழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம்
    பாவியேன் மனமகந் தோறு முள்புக்
கழுத்த,நின் செங்கனி வாயின் கள்வப்
    பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்.
4
3809
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்
    பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா,
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்
    பெருமத மாலையும் வந்தின் றாலோ,
மணிமிகு மார்வினில் முல்லைப் போதென்
    வனமுலை கமழ்வித்துன் வாயமு தந்தந்து,
அணிமிகு தாமரைக் கையை யந்தோ*
    அடிச்சி யோந்தலை மிசைநீ யணியாய்.
5
3810
அடிச்சி யோந்தலை மிசைநீ யணியாய்
    ஆழியங் கண்ணா*உன் கோலப் பாதம்,
பிடித்தது நடுவுனக் கரிவை மாரும்
    பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம்,
வடித்தடங் கண்ணினை நீரும் நில்லா
    மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே,
வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு
    மேமெம துயிரழல் மெழுகில் உக்கே.
6
3811
மேமெம துயிரழல் மெழுகில் உக்கு
    வெள்வளை மேகலை கழன்று வீழ,
தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத்
    துணைமுலை பயந்தென தோள்கள் வாட,
மாமணி வண்ண உன்செங் கமல
    வண்ணமென் மலரடி நோவ நீபோய்,
ஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோ
    டசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கே?
7
3812
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்
    றாழுமென் னாருயிர் ஆன்பின் போகேல்,
கசிகையும் வேட்கையும் உள்க லந்து
    கலவியும் நலியுமென் கைகழி யேல்,
வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும்
    கைகளும் பீதக வுடையும் காட்டி,
ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ
    உகக்குநல் லவரொடும் உழித ராயே.
8
3813
உகக்குநல் லவரொடும் உழிதந் துன்றன்
    திருவுள்ளம் இடர்கெடுந் தோறும், நாங்கள்
வியக்கவின் புறுதுமெம்-பெண்மை யாற்றோம்
    எம்பெரு மான்*பசு மேய்க்கப் போகேல்,
மிகப்பல அசுரர்கள் வேண்டு உருவங்
    கொண்டுநின் றுழிதருவர் கஞ்ச னேவ,
அகப்படில் அவரொடும் நின்னொ டாங்கே
    அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ*
9
3814
அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ*
    அசுரர்கள் வன்கையர் கஞ்ச னேவத்,
தவத்தவர் மறுக நின்றுழி தருவர்
    தனிமையும் பெரிதுனக் கிராம னையும்
உவர்த்தலை, உடன்திரி கிலையு மென்றென்
    றூடுற வென்னுடை யாவி வேமால்,
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி
    செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே*
10
3815
செங்கனி வாயெங்கள் ஆயர் தேவத்
    திருவடி திருவடி மேல்,பொ ருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
    வண்சட கோபன்சொல் லாயி ரத்துள்,
மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை
    அவனொடும் பிரிவதற் கிரங்கி, தையல்
அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான்
    உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே.#
11
நேரிசை வெண்பா
வேய்மருதோள் இந்திரைகோன் மேவுகின்ற தேசத்தைத்,
தான்மருவாத் தன்மையினால் தன்னையின்னம்-பூமியிலே
வைக்குமெனச் சங்கித்து மால்தெளிவிக் கத்தெளிந்த,
தக்கபுகழ் மாறனெங்கள் சார்வு.
93

4. சார்வே தவநெறி
தமது பக்தி பலித்தமையை ஆழ்வார் அருளிச் செய்தல்
கலி விருத்தம்
3816
சார்வே தவநெறிக்குத் தாமோ தரன்தாள்கள்,
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்,
நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நேமியான்,
பேர்வா னவர்கள் பிதற்றும் பெருமையனே.#
1
3817
பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற்
கருமையனே, ஆகத் தணையாதார்க்கு, என்றும்
திருமெய் யுறைகின்ற செங்கண்மால், நாளும்
இருமை வினைகடிந்திங் கென்னையாள் கின்றானே.
2
3818
ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்?,
மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர்கடிந்தோம,
வாள்கெண்டை யொண்கண் மடப்பின்னை தன்கேள்வன்,
தாள்கண்டு கொண்டேன் தலைமேல் புனைந்தேனே.
3
3819
தலைமேல் புனைந்தேன் சரணங்கள், ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க,
மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை,
நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே.
4
3820
நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை,
கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன்,
மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன்,
நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே.
5
3821
நாகத் தணையானை நாடோறும் ஞானத்தால்,
ஆகத் தணைப்பார்க் கருள்செய்யும் அம்மானை,
மாகத் திளமதியம் சேரும் சடையானை,
பாகத்து வைத்தான்றன் பாதம் பணிந்தேனே.
6
3822
பணிநெஞ்சே* நாளும் பரம பரம்பரனை,
பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்,
மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான்,
அணிநின்ற செம்பொன் அடலாழி யானே.
7
3823
ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான்,
ஊழியா னூழி படைத்தான் நிரைமேய்த்தான்,
பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள்,
வாழியென் னெஞ்சே* மறவாது வாழ்கண்டாய்.
8
3824
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே,
விண்டே யொழிந்த வினையா யினவெல்லாம்,
தொண்டேசெய் தென்றும் தொழுது வழியொழுக,
பண்டே பரமன் பணித்த பணிவகையே.
9
3825
வகையால் மனமொன்றி மாதவனை, நாளும்
புகையால் விளக்கால் புதுமலரால் நீரால்,
திகைதோ றமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற,
தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே.
10
3826
பற்றென்று பற்றிப் பரம பரம்பரனை,
மற்றிண்டோள் மாலை வழுதி வளநாடன்,
சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்,
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே.#
11
நேரிசை வெண்பா
சார்வாக வேயடியிற் றானுரைத்த பத்திதான்,
சீரார் பலத்துடனே சேர்ந்ததனைச்,-சோராமல்
கண்டுரைத்த மாறன் கழலிணையே நாடோறும்,
கண்டுகக்கு மென்னுடைய கண்.
94

5. கண்ணன் கழலிணை
பக்தி செலுத்தும் விதங்கள்
வஞ்சித்துறை
3827
கண்ணன் கழலினை,-நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம்,-திண்ணம் நாரணமே.#
1
3828
நாரண னெம்மான்,-பாரணங் காளன்,
வாரணம் தொலைத்த,-காரணன் தானே.
2
3829
தானே யுலகெலாம்,-தானே படைத்திடந்து,
தானே யுண்டுமிழ்ந்து,-தானே யாள்வானே.
3
3830
ஆள்வா னாழிநீர்,-கோள்வா யரவணையான்,
தாள்வாய் மலரிட்டு,-நாள்வாய் நாடீரே.
4
3831
நாடீர் நாடோறும்,-வாடா மலர்கொண்டு,
பாடீர் அவன்நாமம்,-வீடே பெறலாமே.
5
3832
மேயான் வேங்கடம்,-காயா மலர்வண்ணன்,
பேயார் முலையுண்ட,-வாயான் மாதவனே.#
6
3833
மாதவ னென்றென்று,-ஓத வல்லீரேல்,
தீதொன் றுமடையா,-ஏதம் சாராவே.
7
3834
சாரா ஏதங்கள்,-நீரார் முகில்வண்ணன்,
பேரா ரோதுவார்,-ஆரார் அமரரே.
8
3835
அமரர்க் கரியானை,-தமர்கட் கெளியானை,
அமரத் தொழுவார்கட்கு,-அமரா வினைகளே.
9
3836
வினைவல் லிருளென்னும்,-முனைகள் வெருவிப்போம்,
சுனைநன் மலரிட்டு,-நினைமின் நெடியானே.
10
3837
நெடியான் அருள்சூடும்,-படியான் சடகோபன்,
நொடியா யிரத்திப்பத்து,-அடியார்க் கருள்பேறே.#
11
நேரிசை வெண்பா
கண்ணன் அடியிணையிற் காதலுறு வார்செயலைத்
திண்ணமுற வேசுருங்கச் செப்பியே,-மண்ணவர்க்குத்
தானுபதே சிக்கை தலைக்கட்டி னான்மாறன்,
ஆனபுகழ் சேர்தன் அருள்.
95

மேலே செல்க

6. அருள் பெறுவார்
பரமன் அருளைப் பாராட்டி நெஞ்சோடு கூறல்
கொச்சகக் கலிப்பா
3838
அருள்பெறுவார் அடியார்தம்
    அடியனேற்கு, ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான்
    அதுநமது விதிவகையே,
இருள்தருமா ஞாலத்துள்
    இனிப்பிறவி யான்வேண்டேன்,
மருளொழிநீ மடநெஞ்சே*
    வாட்டாற்றான் அடிவணங்கே.#
1
3839
வாட்டாற்றா னடிவணங்கி
    மாஞாலப் பிறப்பறுப்பான்,
கேட்டாயே மடநெஞ்சே*
    கேசவனெம் பெருமானை,
பாட்டாய பலபாடிப்
    பழவினைகள் பற்றறுத்து,
நாட்டாரோ டயல்வொழிந்து
    நாரணனை நண்ணினமே.
2
3840
நண்ணினம் நாரணனை
    நாமங்கள் பலசொல்லி,
மண்ணுலகில் வளம்மிக்க
    வாட்டாற்றான் வந்தின்று,
விண்ணுலகம் தருவானாய்
    விரைகின்றான் விதிவகையே,
எண்ணினவா றாகாவிக்
    கருமங்க ளென்னெஞ்சே*
3
3841
என்னெஞ்சத் துள்ளிருந்திங்
    கிருந்தமிழ்நூ லிவைமொழிந்து,
வன்னெஞ்சத் திரணியனை
    மார்விடந்த வாட்டாற்றான்,
மன்னஞ்சப் பாரதத்துப்
    பாண்டவர்க்காய்ப் படைதொட்டான்,
நன்னெஞ்சே* நம்பெருமான்
    நமக்கருள்தான் செய்வானே.
4
3842
வானேற வழிதந்த
    வாட்டாற்றான் பணிவகையே,
நானேறப் பெறுகின்றேன்
    நரகத்தை நகுநெஞ்சே,
தேனேறு மலர்த்துளவம்
    திகழ்பாதன், செழும்பறவை
தானேறித் திரிவான
    தாளிணையென் தலைமேலே.
5
3843
தலைமேல தாளிணைகள்
    தாமரைக்கண் என்னம்மான்,
நிலைபேரான் என்நெஞ்சத்
    தெப்பொழுதும் எம்பெருமான்,
மலைமாடத் தரவணைமேல்
    வாட்டாற்றான், மதமிக்க
கொலையானை மருப்பொசித்தான்
    குரைகழல்கள் குறுகினமே.
6
3844
குரைகழல்கள் குறுகினம்நங்
    கோவிந்தன் குடிகொண்டான்,
திரைகுழுவு கடல்புடைசூழ்
    தென்னாட்டுத் திலைதமன்ன,
வரைகுழுவும் மணிமாட
    வாட்டாற்றான் மலரடிமேல்,
விரைகுழுவும் நறுந்துவளம்
    மெய்ந்நின்று கமழுமே.
7
3845
மெய்ந்நின்று கமழ்துவள
    விரையேறு திருமுடியன்,
கைந்நின்ற சக்கரத்தன்
    கருதுமிடம் பொருதுபுனல்,
மைந்நின்ற வரைபோலும்
    திருவுருவ வாட்டாற்றாற்கு,
எந்நன்றி செய்தேனோ
    என்னெஞ்சில் திகழ்வதுவே?
8
3846
திகழ்கின்ற திருமார்பில்
    திருமங்கை தன்னோடும்,
திகழ்கின்ற திருமாலார்
    சேர்விடம்தண் வாட்டாறு,
புகழ்கின்ற புள்ளூர்தி
    போரரக்கர் குலம்கெடுத்தான்,
இகழ்வின்றி என்னெஞ்சத்
    தெப்பொழுதும் பிரியானே.
9
3847
பிரியாதாட் செய்யென்று
    பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்,
அரியாகிடி இரணியனை
    ஆகங்கீண் டானன்று,
பெரியார்க்காட் பட்டக்கால்
    பெறாதபயன் பெறுமாறு,
வரிவாள்வாய் அரவணைமேல்
    வாட்டாற்றான் காட்டினனே.
10
3848
காட்டித்தன் கனைகழல்கள்
    கடுநரகம் புகலொழித்த,
வாட்டாற்றெம் பெருமானை
    வளங்குருகூர்ச் சடகோபன்,
பாட்டாய தமிழ்மாலை
    யாயிரத்துள் இப்பத்தும்
கேட்டு,ஆரார் வானவர்கள்
    செவிக்கினிய செஞ்சொல்லே.#
11
நேரிசை வெண்பா
அருளா லடியி லெடுத்தமா லன்பால்,
இருளார்ந்த தம்முடம்பை யிச்சித்து,-இருவிசும்பில்
இத்துடன்கொண் டேகவிவ ரிசைவுபார்த் தேயிருந்த,
சுத்திசொல்லும் மாறன்செஞ் சொல்.
96

7. செஞ்சொற்கவிகாள்
எம்பெருமான் தம்மிடத்தில் வைத்திருந்த பெரும்பற்றை ஆழ்வார் பாராட்டுதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3849
செஞ்சொற் கவிகாள்* உயிர்காத்தாட்
    செய்மின் திருமா லிருஞ்சோலை,
வஞ்சக் கள்வன் மாமாயன்
    மாயக் கவியாய் வந்து,என்
நெஞ்சு முயிரு முள்கலந்து
    நின்றார் அறியா வண்ணம்,என்
நெஞ்சு முயிரும் அவையுண்டு
    தானே யாகி நிறைந்தானே.#
1
3850
தானே யாகி நிறைந்தெல்லா
    உலகும் உயிரும் தானேயாய்,
தானே யானென் பானாகித்
    தன்னைத் தானே துதித்து,எனக்குத்
கேனே பாலே கன்னலே
    அமுதே திருமா லிருஞ்சோலை,
கோனே யாகி நின்றொழிந்தான்
    என்னை முற்றும் உயிருண்டே.
2
3851
என்னை முற்றும் உயிருண்டென்
    மாய ஆக்கை யிதனுள்புக்கு,
என்னை முற்றும் தானேயாய்
    நின்ற மாய அம்மான்சேர்,
தென்னன் திருமா லிருஞ்சோலைத்
    திசைகை கூப்பிச் சேர்ந்தயான்,
இன்னம் போவே னேகொலோ*
    என்கொல் அம்மான் திருவருளே?
3
3852
என்கொல் அம்மான் திருவருள்கள்?
    உலகும் உயிரும் தானேயாய்,
நன்கென் னுடலம் கைவிடான்
    ஞாலத் தூடே நடந்துழக்கி,
தென்கொள் திசைக்குத் திலதமாய்
    நின்ற திருமா லிருஞ்சோலை,
நங்கள் குன்றம் கைவிடான்
    நண்ணா அசுரர் நலியவே.
4
3853
நண்ணா அசுரர் நலிவெய்த
    நல்ல அமரர் பொலிவெய்த,
எண்ணா தனகள் எண்ணும்நன்
    முனிவ ரின்பம் தலைசிறப்ப,
பண்ணார் பாடல் இன்கவிகள்
    யானாய்த் தன்னைத் தான்பாடி,
தென்னா வென்னும் என்னம்மான்
    திருமா லிருஞ்சோ லையானே.
5
3854
திருமா லிருஞ்சோ லையானே
    ஆகிச் செழுமூ வுலகும்,தன்
ஒருமா வயிற்றி னுள்ளேவைத்
    தூழி யூழி தலையளிக்கும்,
திருமா லென்னை யாளுமால்
    சிவனும் பிரம னும்காணாது,
அருமா லெய்தி யடிபரவ
    அருளை யீந்த அம்மானே.
6
3855
'அருளை ஈயென் அம்மானே*'
    என்னும் முக்கண் அம்மானும்,
தெருள்கொள் பிரமன் அம்மானும்
    தேவர் கோனும் தேவரும்,
இருள்கள் கடியும் முனிவரும்
    ஏத்தும் அம்மான் திருமலை,
மருள்கள் கடியும் மணிமலை
    திருமா லிருஞ்சோ லைமலையே.
7
3856
திருமா லிருஞ்சோ லைமலையே
    திருப்பாற் கடலே என்தலையே
திருமால் வைகுந் தமேதண்
    திருவேங் கடமே எனதுடலே,
அருமா மாயத் தெனதுயிரே
    மனமே வாக்கே கருமமே,
ஒருமா நொடியும் பிரியானென்
    ஊழி முதல்வன் ஒருவனே.#
8
3857
ஊழி முதல்வன் ஒருவனே
    என்னும் ஒவன் உலகெல்லாம்,
ஊழி தோறும் தன்னுள்ளே
    படைத்துக் காத்துக் கெடுத்துழலும்,
ஆழி வண்ணன் என்னம்மான்
    அந்தண் திருமா லிருஞ்சோலை,
வாழி மனமே* கைவிடேல்
    உடலும் உயிரும் மங்கவொட்டே.
9
3858
மங்க வொட்டுன் மாமாயை
    திருமா லிருஞ்சோ லைமேய,
நங்கள் கோனே* யானேநீ
    யாகி யென்னை யளித்தானே,
பொங்கைம் புலனும் பொறியைந்தும்
    கருமேந் திரியும் ஐம்பூதம்,
இங்கிவ் வுயிரேய் பிரகிருதி
    மானாங் கார மனங்களே.
10
3859
மானாங் கார மனங்கெட
    ஐவர் வன்கை யர்மங்க,
தானாங் கார மாய்ப்புக்குத்
    தானே தானே யானானை,
தேனாங் காரப் பொழில்குருகூர்ச்
    சடகோ பன்சொல் லாயிரத்துள்,
மானாங் காரத் திவைபத்தும்
    திருமா லிருஞ்சோ லைமலைக்கே.#
11
நேரிசை வெண்பா
செஞ்சொற் பரன்றனது சீராரு மேனிதனில்,
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சைதனில்,-விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கைவிடுவித் துக்கொண்ட,
திண்டிறல்மா றன்நம் திரு.
97

8. திருமாலிருஞ்சோலை மலை
திருமாலிருஞ்சோலை மலை என்று சொல்
கலி விருத்தம்
3860
திருமாலி ருஞ்சோலை மலையென்றே னென்ன,
திருமால்வந் தென்னெஞ்சு நிறையப் புகுந்தான்,
குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்,
திருமால்சென் றுசேர்வி டம்தென் திருப்பேரே.#
1
3861
பேரே யுறைகின்ற பிரானின்று வந்து,
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்,
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்,
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே.
2
3862
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன்,
மடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை,
கொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான்,
அடிச்சேர்வ தெனக்கெளி தாயின வாறே.
3
3863
எளிதா யினவாறென் றென்கண்கள் களிப்ப,
களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன்,
கிளிதா வியசோலைகள் சூழ்திருப் பேரான்,
தெளிதா கியசேண் விசும்புதரு வானே.
4
3864
வானே தருவா னெனக்காயென் னோடொட்டி,
ஊனேய் குரம்பை யிதனுள் புகுந்து,இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்,
தேனே பொழில்தென் திருப்பேர் நகரானே.
5
3865
திருப்பேர் நகரான் திருமா லிருஞ்சோலைப்,
பொருப்பே யுறைகின் றபிரா னின்றுவந்து,
'இருப்பேன்'என் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்,
விருப்பே பெற்றமுத முண்டு களித்தேனே.
6
3866
உண்டு களித்தேற் கும்பரென் குறை,மேலைத்
தொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன்,
வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான்,
கண்டு களிப்பக் கண்ணுள்நின றகலானே.
7
3867
கண்ணுள்நின் றகலான் கருத்தின்கண் பெரியன்,
எண்ணில்நுண் பொருளே ழிசையின் சுவைதானே,
வண்ணநன் மணிமாடங்கள் சூழ்திருப் பேரான்,
திண்ணமென் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றே.
8
3868
இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத்தான்,
அன்றென்னைப் புறம்போகப் புணர்த்ததென் செய்வான்?
குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான்,
ஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே.
9
3869
உற்றே னுகந்து பணிசெய் துனபாதம்
பெற்றேன், ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய்,
கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு,
அற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே.#
10
3870
நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்,
நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்,
சொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும்
வல்லார், தொண்டராள் வதுசூழ்பொன் விசும்பே.#
11
நேரிசை வெண்பா
திருமால்தன் பால்விருப்பஞ் செய்கின்ற நேர்கண்டு,
'அருமாயத் தன்றகல்விப் பானென்?,-பெருமால்நீ
இன்றென்பாற் செய்வானென்?' என்னவிடர் உற்றுநின்றான்,
துன்றுபுகழ் மாறனைத்தான் சூழ்ந்து.
98

9. சூழ்விசும்பு
(இது கோயில் திருவாய்மொழி)
பரமபதத்தில் தமக்குக் கிடைத்த நல் வரவேற்பை ஆழ்வார் அனுபவித்துப் பாடுதல்
கலி விருத்தம்
3871
சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின,
ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின,
ஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன்,
வாழ்புகழ் நாரணன் தமரைக்கண் டுகந்தே.#
1
3872
நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில்,
பூரண பொற்குடம் பூரித்த துயர்விண்ணில்,
நீரணி கடல்கள்நின் றார்த்தன, நெடுவரைத்
தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே.
2
3873
தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை
பொழிவனர், பூமியன் றளந்தவன் தமர்முன்னே,
'எழுமின்'என் றிமருங் கிசைத்தனர் முனிவர்கள்,
'வழியிது வைகுந்தற் கெ'ன்றுவந் தெதிரே.
3
3874
எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்,
கதிடிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர்,
அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த,
மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே.
4
3875
மாதவன் தமரென்று வாசலில் வானவர்,
'போதுமின் எமதிடம் புகுதுக' என்றலும்,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்,
வேதநல் வாயவர் வேள்வியுள் மடுத்தே.
5
3876
வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை,
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்,
'ஆளுமின்கள் வானகம் ஆழியான் தமர்'என்று,
வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே.
6
3877
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்,
தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர், தொடுகடல்
கிடந்தவெங் கேசவன் கிளரொளி மணிமுடி,
குடந்தையெங் கோவலன் குடியடி யார்க்கே.
7
3878
'குடியடி யாரியர் கோவிந்தன் றனக்கெ'ன்று,
முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள,
கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்,
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே.
8
3879
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்,
'வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகு'கென்று,
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்,
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே.
9
3880
'விதிவகை புகுந்தனர்' என்றுநல் வேதியர்,
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்,
நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும்,
மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே.
10
3881
வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து,
அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை,
கொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபன்,சொல்
சந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே.#
11
நேரிசை வெண்பா
சூழ்ந்துநின்ற மால்விசும்பில் தொல்லை வழிகாட்ட,
ஆழ்ந்ததனை முற்றும் அனுபவித்து,-வாழ்ந்தங்
கடியருட னேயிருந்த வாற்றiயுரை செய்தான்,
முடிமகிழ்சேர் ஞான முனி.#
99

10. முனியே
(இது கோயில் திருவாய்மொழி)
திருமாலை தாம் அடைந்த பான்மையை ஆழ்வார் உரைத்தருளுதல்
கலி நிலைத்துறை
3882
முனியே* நான்முக னே*முக்கண்
    ணப்பா,என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கட்கரு
    மாணிக்கமே* என்கள்வா,
தனியேன் ஆருயிரே* என்தலை
    மிசையாய் தவந்திட்டு,
இனிநான் போகலொட் டேன்ஒன்றும்
    மாயம்செய் யேலென்னையே.#
1
3883
மாயம்செய் யேலென்னை உன்திரு
    மார்வத்து மாலைநங்கை,
வாசம்செய் பூங்குழ லாள்திரு
    வாணைநின் னாணைகண்டாய்,
நேசம்செய் துன்னோடென் னையுயிர்
    வேறின்றி ஒன்றாகவே,
கூசம்செய் யாதுகொண் டாயென்னைக்
    கூவிக்கொள் ளாய்வந்தந்தோ*
2
3884
கூவிக்கொள் ளாள்வந்தந் தோ*என்பொல்
    லாக்கரு மாணிக்கமே,
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால்
    அறிகின்றி லேன்யான்,
மேவித் தொழும்பிர மன்சிவ
    னிந்திர னாதிக்கெல்லாம்,
நாவிக் கமல முதற்கிழங்
    கே*உம்பர் அந்ததுவே.
3
3885
உம்ப ரந்தண் பாழேயோ*
    அதனுள்மிசை நீயேயோ,
அம்பர நற்சோதி* அதனுள்
    பிரமன் அரன்நீ,
உம்பரும் யாதவரும் படைத்த
    முனிவன் அவன்நீ,
எம்பரம் சாதிக்க லுற்றென்னைப்
    போரவிட் டிட்டாயே.
4
3886
போரவிட் டிட்டென்னை நீபுறம்
    போக்கலுற்றால், பின்னையான்
ஆரைக்கொண் டெத்தையந்தோ*
    எனதென்பதென் யானென்பதென்,
தீர இரும்புண்ட நீரது
    பேலவென் ஆருயிரை
ஆரப் பருக,எனக் காரா
    வமுதா னாயே.
5
3887
எனக்கா ராவமு தாய்என
    தாவியை இன்னுயிரை,
மனக்கா ராமைமன்னி யுண்டிட்டா
    யினியுண் டொழியாய்,
புனக்கா யாநிறத்த புண்டரீ
    கக்கட் செங்கனிவாய்,
உனக்கேற்கும் கோல மலர்ப்பாவைக்
    கன்பா*என் அன்பேயோ*
6
3888
கோல மலர்ப்பாவைக் கன்பா
    கியவென் அன்பேயோ,
நீல வரையிரண்டு பிறைகவ்வி
    நிமிர்ந்த தொப்ப,
கோல வராகமொன் றாய்நிலங்
    கோட்டிடைக் கொண்டஎந்தாய்,
நீலக் கடல்கடைந் தாயுன்னைப்
    பெற்றினிப் போக்குவனோ?#
7
3889
பெற்றினிப் போக்குவ னோவுன்னை
    என்தனிப் பேருயிரை,
உற்ற இருவினையாய் உயிராய்ப்
    பயனாய் அவையாய்,
முற்றவிம் மூவுலகும் பெருந்
    தூறாய்த் தூற்றில்புக்கு,
முற்றக் கரந்தொளித் தாய்*என்
    முதல்தனி வித்தேயோ*
8
3890
முதல்தனி வித்தேயோ* முழுமூ
    வுலகாதிக் கெல்லாம்,
முதல்தனி யுன்னையுன்னை எனைநாள்
    வந்து கூடுவன்நான்,
முதல்தனி அங்குமிங்கும் முழுமுற்
    றுறுவாழ் பாழாய்,
முதல்தனி சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த
    முடிவி லீயோ*
9
3891
சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த முடிவில்
    பெரும்பா ழேயோ,
சூழ்ந்தத னில்பெரிய பரநன்
    மலர்ச்சோ தீயோ,
சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான
    வின்ப மேயோ,
சூழ்ந்தத னில்பெரிய என்னவா
    அறச்சூழ்ந் தாயே*#
10
3892
அவாவறச் சூழ்அரியை அயனை
    அரனை அலற்றி,
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்
    சடகோபன் சொன்ன,
அவாவிலந் தாதிகளால் இவையா
    யிரமும், முடிந்த
அவாவிலந் தாதியிப் பத்தறிந்
    தார்பிறந் தார்உயர்ந்ததே.#
11
நேரிசை வெண்பா
முனிமாறன் முன்புரைசெய் முற்றின்பம் நீங்கித்,
தனியாகி நின்று தளர்ந்து,-நனியாம்
பரமபத்தி யால்நைந்து பங்கயத்தாள் கோனை,
ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து.#
100
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com